Friday, December 30, 2016

எழுத்துலகப்  பயணத்தில் நீண்ட  இடைவெளி

முதுமையின் கொடுமை

ஓடித் திரிந்த கால்கள் வலுவிழந்தன

உடல் வலிமைக்கு இத்தனை சக்தியா?

ஆனால் மனம் மட்டும் இத்தனை வலிமை கொண்டு ஓடிப் புரள்கின்றதே

அதன் ஓட்டத்தில்  முதுமை  உணரும் வலி மிக மிக அதிகம்

நான் தோற்க மாட்டேன்.

மனப் பேழை திறந்தது

மனச்சிமிழும்  மலர்ந்தது

மீண்டும்  பயணம்

Thursday, December 25, 2014

நினைவலைகள்

                               நினைவலைகள் 

அலையோசையின்றி எங்கும் அமைதி
ஏன்?
சுழலா அல்லது சூழலா?
எண்ணங்கள் ஊர்வலம் புறப்பட்டது.
நினைவலைகள் தொடர்ந்தது.
அலைகள் புரட்டிப் போட்ட பக்கங்கள் கணக்கிலடங்கா
ஜெயகாந்தன் முந்திக் கொண்டார். 30 வாரங்கள் தொடர்ந்தார்.
அடுத்து வருபவரைப் பார்த்தால் --  கண்ட கூட்டம் மயக்கியது
இடையில் கடமை இழுத்தது
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள்தான்   ஐம்பது வாரங்களாகியும் விட்டு விலகவில்லை
கணினி கண்சிமிட்டி அடங்கிவிட்டது
பல குரல்கள் மனப் பேழையைத் திறக்க முயன்றது
ஆழ்மனசக்தி பீடத்தில் இருந்த மனப்பேழையை , அதன் ஒப்புதலின்றி திறக்க முடியுமா?

காலம் கனிநதால் மனப் பேழையும் திறக்கும். அதனுள்ளிருக்கும் மனச் சிமிழையும்பார்க்கலாம்

Thursday, March 28, 2013

நினைவலைகள் -26


நினைவலைகள் -26

கதை எழுதுதல்

கற்பனை உலாவில் ஒரு இன்பம்

முதல் கதை நான் எழுதிய பொழுது என் வயது 14

கதையின் பெயர் ‘கதிரேசன் மலை”

இராஜா, இராணி, மாறு வேடங்கள் , துப்பு துலக்குதல் இப்படி ஒரு கதை நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன். கல்கியின் கதைகள் படித்ததின் தாக்கமாக இருக்க வேண்டும். இப்பொழுதும் அந்த நோட்டுப் புத்தகம் இருக்கின்றது. அடுத்து பதினாறு வயதில் ஒரு நீண்ட கதை.

கல்லுரியில் இருக்கும் பொழுது கண்ணகி, வீரத்தாய்  ஓரங்க நாடகங்களுக்கு வசனம் எழுதினேன். நானூறு பக்கங்களில் மனச் சுழல் என்ற கதை எழுதினேன். நிறைய படங்களும் அதில் வரைந்திருக் கின்றேன். அக்காலத்தில் கல்கியில் வினு, சந்திரா ஓவியங்கள் வந்தன. என் படங்கள் சந்திராவின் படங்களை ஒத்து இருக்கும். அந்த நோட்டுப் புத்தகமும் என்னிடம் இருக்கின்றது.

படிக்கும் பொழுது எனக்குப் பிடித்த வரிகள், புற வாழ்வில் மனத்தைப் பாதித்தவைகள் எல்லாவற்றிற்கும் குறிப்புகள் எடுக்கும் பழக்கம் உண்டு இப்பொழுதும் குறிப்புகள் எடுப்பேன். பழையன எல்லாம் இல்லா விட்டாலும் இன்னும் சில அழியாமல் இருக்கின்றன. எண்ணுவதிலும் எழுதுவதிலும் அத்தனை ஆசை. ஆனால் பத்திரிகைக்கு எழுதியவைகளை அனுப்ப ஆரம்பித்தது வாடிப்பட்டியில் இருந்த பொழுதுததன்.

வாடிப்பட்டியில் எழுதிய உயிர்மேல் ஆசைதான் முதலில் பிரசண்ட விகடனில் வெளியாயிற்று. 58ல் எழுத ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் எழுதினேன். 63 சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவந்திரூகின்றன.என் கதைகள் அதிகமாக வெளிவந்த பத்திரிகை சுதேசமித்ரன் வாரமலர்.  என் குருநாதர் ருத்ர துளசிதாஸுக்கே அந்த பெருமை சாரும்.

என்னுடன் எழுத ஆரம்பித்த ஓ.எஸ்.கே அவர்களின் கதைகளும் நிறைய வந்திருக்கின்றன. என்னை விட அதிக முத்திரைகள் விகடனில் வாங்கியவர் அவர்தான். சோமமகாதேவன் எப்பொழுதும் போல் நிறைய எழுதினார். மற்றவர்கள் ஓரளவுதான்.

அடிக்கடி மதுரைக்குச் சென்று அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்திப்போம். நா.பா வீட்டிற்குப் பல முறை போயிருக்கின்றேன். அவரும் எங்கள் மதுரை வட்டத்தில் ஒருவர். என் குறும்புத்தனமும் வாயாடித்தனமும் அவருக்குத் தெரியும். அப்பொழுது அவர் எழுதிய “குறிஞ்சிமலர்”
தொடர் வந்து கொண்டிருந்தது. ஓ.எஸ்.கே அவர்கள் தன் மகளுக்கு பூரணி என்று பெயர் வைத்தது அதன் தாக்கமே.

எங்களில் முன்னணி எழுத்தாளர்களும் உண்டு முன்னுக்கு சென்று கொண்டிருந்தவர்களும் இருந்தனர். ஊக்கப்படுத்தினார்களே தவிர ஒதுக்கிவைக்கமாட்டார்கள். எங்களுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை இருந்தது.

நாங்கள் எல்லோரும் சேர்ந்து அதாவது மதுரை மாவட்ட எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு சிறுகதைத் தொகுப்பு பிரசுரிக்க விரும்பினோம். தலைப்பு
என்ன வைக்கலாம் என்று யோசித்து எங்கள் எல்லோருடைய கதைகளின் தலைப்புகளையும் சின்னக் காகிதத்தில் எழுதி குலுக்குச் சீட்டு முறையில் குலுக்கிப் போட்டோம். ஓ.எஸ்.கே கதையின் பெயர் “பஞ்சும் நெருப்பும்”
வந்தது. எங்களிடையே நா.பார்த்தச்சரதி, சோமமகாதேவன், ருத்ரதுளஸிதாஸ் இருந்தும் அவர்கதையின் பெயரைத்தான் போட்டோம். நாங்கள் எழுதி வெளிவந்த கதைகளின் தொகுப்பு.அந்த அளவு எங்களுக்கிடையில் புரிதல் இருந்தது. புத்தகம் அச்சிட்டு விழா நடத்தி வெளியிட்டோம்.

துளஸி எனக்கு மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். என்னுடன் ஓ.எஸ் கே அவர்களும் மாணவனாகச் சேர்ந்தார். இந்தக் கட்டுப்பாடுகள் இலக்கண வடிவத்தில் வந்தாலும் எனக்குப் பிடிக்காது.
இலக்கணத்தை நினைத்துக் கொண்டு வார்த்தைகளைக் கோர்க்க முடியவில்லை. வெண்பா எழுதவே வரவில்லை. எப்படியோ விருத்தப்பா
எழுத முடிந்தது.

கவிதை என்பது தானாக வரும் நீரூற்றுப்போல் இருக்க வேண்டும். அல்லது நயமிருக்காது. என் கவிதைகள் சிலவும் பத்திரிகைளில் வந்திருக்கின்றன. ஆனாலும் கவிதைப் பெண் என்னுடன் ஒட்டவில்லை. இந்த லட்சணத்தில் பிற்காலத்தில் நூறு விருத்தப்பாக்கள் எழுதி புத்தகமும் வெளியிட்டேன்.

ஓ.எஸ். கே யால் அருமையான கவிதை எழுத முடிந்தது. ஆரம்பித்தில் அவர் அதற்காகப் போட்ட ஒரு கண்டிஷனைக் கேட்டு எங்கள் வட்டம் சிரித்தது. ஆனால் நான் தயங்காமல் ஒப்புக்கொண்டேன். கவிதை எனக்கு எழுத வரவில்லையே தவிர கவிதையைக் காதலிக்கின்றவள்.

எனக்கு “சுடர்விழி” என்று பெயர் வைத்தார். தினமும் அலுவலகத்தில் மாலையில் ஒரு ரோஜாப்பூ கொடுப்பதைப் போல ஒரு கவிதையைக் கொடுப்பார். நானோ எல்லோர் முன்னிலையிலும் வாசிப்பேன்.
அநேகமாகக் காதல் கவிதையாக இருக்கும். எல்லோரும் ரசிப்பார்கள். அந்த அளவு ஆரோக்கியமான நட்பு வட்டம்.

ஓ.எஸ் கே அவர்கள் திருமணமானவர். அவர் மனைவி பெயர் சுந்தரா. சுந்தரமானவள். எனக்குக் கொடுத்த கவிதையை தினமும் அவரிடம் வாசித்துக் காட்டுவேன். அவர் என்ன சொல்வார் தெரியுமா?

“டபிள்யூ, கவிதை நன்னா இருக்குல்லே. அவரைத் தப்பா எடுக்காதீங்கோ
உங்களைப் பாக்கும் போதுதான் இன்ஸ்பிரேஷன் வருது.கவிதைக்கு அது முக்கியம் இல்லியா?”

இந்த வரிகள் எழுதும் பொழுது இப்பொழுதும் அழுகின்றேன். புருஷன் ஒரு பெண்னைப் பார்த்தாலே மனவிக்குத் தாங்காது. இத்தகைய பெண்மணிகள் எத்தனைபேர்களைப் பார்த்திருப்போம்.?! நான் நேசித்த என் சுந்தரா இப்பொழுது இல்லை.
என் உத்தியோகத்தின் பெயர்ச் சுருக்கம் S.E,O,W. சுந்தராமட்டும் என்னை டபிள்யூ என்று கூப்பிடுவார்களேயொழிய பெயர் சொல்லி அழைத்ததில்லை.

கடைசி முறையாக சென்னைக்கு சென்ற பொழுது ஓ.எஸ்கே வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்பொழுதும் ஒரு கவிதை மலர் கொடுத்து வரவேற்றார்.

என்னுடன் கவிஞர் நிலாரசிகனும் கவிஞர் சஹாராத் தென்றலும் இருந்தார்கள். கவிஞர்களையே மலைக்க வைத்துவிட்டார். இப்பொழுது அவருக்கு வயது எண்பத்து இரண்டு. கவிஞர்களை முதுமை அண்டாது. இளமையின் இன்பத்தை அவர்களால் எப்பொழுதும் அனுபவிக்க முடியும்.

“சீதா அப்பொழுது அழகாய் இருந்தார்கள் இப்பொழுதுதான் இப்படி ஆகிவிட்டார்கள்”

அய்யோ, எங்கு போனாலும் இந்தப் பாட்டைக் கேட்டு அலுத்துவிட்டது.

ஓ.எஸ். கே அவர்கள் மிகவும் நகைச் சுவையுடன் பேசுவார். ஒரு முறை அவர் சென்னைக்கு வந்த பொழுது சில இடங்களுக்குக் கூட்டிச் சென்றேன்

விகடன் அலுவலகம் சென்ரிருந்தோம். மணியன் எங்களை உட்கார வைத்துவிட்டு சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிப் போனார். போகும் பொழுது, “காபி, டிபன் வரும் , சாப்பிடுங்கள்” என்றும் சொல்லி விட்டுப் போனார் ஓ.எஸ்.கே அப்பொழுது பேசியது இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கின்றது.

சீதாலட்சுமி. மனத்தைத் தேற்றி வைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது நாம் அனுப்பிய கதைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றன

என்ன சொல்லுகின்றீர்கள்

இப்பொழுது பலகாரம் வருமே அதைச் சுற்றி வரும் காகிதங்கள் எல்லாம் நாம் கதை எழுதிய பேப்பர்கள் ஆனால் நீங்கள் கவலைப் பட வேண்டாம். உங்கள் கதையில் ஸ்வீட் இருக்கும். என் கதையில்தான் மிக்சர் இருக்கும் என்றார்

நான் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன். மணியன் வந்த பொழுது நடந்ததைச் சொன்னேன். அவரும் சிரித்தார்
வந்தவர்களுக்குக் காகிதப் பொட்டலமாகவா கொடுப்பார்கள். பிளேட்டில் வந்தன.

மாலா என்று ஒரு பத்திரிகை அப்பொழுது இருந்தது.வைஜயந்திமாலாவின் ஆதரவில் நடந்து வந்த பத்திரிகை. அங்கு சென்ற பொழுது ஆசிரியர், என்னை அவர்கள் பத்திரிகையில் எழுதச் சொல்லி வற்புறித்தினார்கள்.  ஓ.எஸ்.கே அங்கே ஒன்றும் பேசவில்லை வெளிவரவும் அவர் பேசியது

இதென்ன கூத்து. தமிழ் நாட்டில் உங்களைத் தவிர எழுத்தாளர்கள் கிடையாதா? போகும் இடங்களில் எல்லாம் உங்களைக் கெஞ்சுகின்றார்கள். தமிழ் நாட்டிற்கு என்னமோ ஆய்டுத்து. அது சரி அய்யர் பத்திரிகை களுக்குக் கதை எழுத என்ன கஷ்டம் பிராமண பாஷயில் மாமியின் கலாட்டான்னு எழுதுங்களேன். எத்தனை எத்தனை சொன்னார். நடுத்தெருவில் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்தார்.

இயல் இசை நடகம் மூன்றிலும் எங்கள் வாடிப்பட்டி வட்டாரம் கோலோச்சியது. மறக்க முடியாத நாட்கள்

என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. கதைகள் படித்து பிடித்துவிட்டால் உடனே கதாசிரியருக்குக் கடிதம் எழுதிவிடுவேன். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்னை சென்று எழுத்தாளர்களை, பத்திரிகை அலுவலங்களைப் பார்ப்பேன்.
இப்பொழுது கூட குழும நண்பர்களுக்குத் தனி மடல் போடத் தயங்குவதில்லை. ஏனோ இப்பழக்கம் சிறு வயது முதல் தொடர்ந்து வருகின்றது. இதை எழுதும் பொழுது ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது.
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ பத்திரிகை பார்த்து ஒரு பேனா நண்பரைக் கண்டு பிடித்தேன். அவர் காஷ்மீர்ப் பகுதியில்
மிலிட்டரியில் வேலை பார்த்து வந்தார். என் கடிதத்திற்குப் பதில் போடும் பொழுது தன் போட்டோவையும் அனுப்பியிருந்தார். என் அப்பாவின் கையில் அக்கடிதம் கிடைத்துவிட்டது. கண்டவன் போட்டோ அனுப்பும் அளவு நான் கெட்டுப் போய்விட்டேன் என்று  கத்திவிட்டு பிரம்பாலும் அடித்தார். எழுதியவன் யாரென்றே என்று எனக்குத் தெரியாது. அது ஒரு சாதாரணக் கடிதம். 60 ஆண்டுகளுக்கு முன் எங்கள் சூழல் அப்படி இருந்தது.

பழமையை உடைப்பதில் அப்படி ஒரு தைரியம்.சரியோ தவறோ என் குணம் அப்படி இருந்தது. என்ன அடிபட்டாலும் பயம் வரவே இல்லை.

என் கடித அணுகுமுறையும் என் பேச்சும் பலரையும் ஈர்த்தன. எனவே நட்பு வட்டம் நாளுக்கு நாள் வளர ஆரம்பித்தது.

மனிதர்கள் எட்ட இருந்து பார்க்கும் மனிதர்களை கிட்ட இருந்து என்னால் பார்க்க முடிந்தது.

தொடரும்.

Sunday, March 10, 2013

நினைவலைகள் -25


நினைவலைகள் -25

சரோஜாவின் கதை
எங்கள் துறையில் ஓர் கிளை அலுவலகத்தில் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் கணவரும் அரசுப் பணியாளராக இருந்த போதினும் ஓர் நோயாளி. அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு மூன்று பையன்கள். எல்லோரும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஏழைப் பெண்.

இந்த நிலையில் அவள் கணவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. ராயபேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை. அபாயக் கட்டத்தைத் தாண்டியிருந்தாலும் உடல்நிலை திருப்திகரமாக இல்லை. இந்த சூழ்நிலையில் அவளை திடீரென்று காஞ்சிபுரத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர். சரோஜா பதறிவிட்டாள். செய்தி அறிந்த அவள் என்னிடம்தான் ஓடி வந்தாள். அவளால் இப்பொழுது கணவரையோ, குடும்பத்தையோ விட்டு எங்கும் போக முடியாது. அவள் சூழ்நிலை அறிவேன்.
அவள் என்னிடம் கதறினாள். அவளிடம் ” கவலைப் படாதே, ஆவன செய்கின்றேன்” என்று உறுதி அளிக்கவும் நம்பிக்கையுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். சுலபமாக நான் வாக்குறுதி கொடுக்க மாட்டேன். நியாயமானவைகள் என்றால் அதைச் செய்து முடிக்கும்வரை ஓய மாட்டேன்.  என் துறையில் பெண்களுக்கு அந்த நம்பிக்கை என் மேல் இருந்தது.

பிரச்சனையை ஆராய்ந்தேன். சரோஜாவிற்குப் பதிலாகப் போடப்பட்டவளுக்குப் பெரிதாக பிரச்சனை கிடையாது. குறுக்கு வழியில் முயன்று உத்திரவு பெற்றிருக்கின்றாள். சில நிமிடங்களில் உண்மையைப் புரிந்து கொண்டேன்.

என் இயக்குனர் அறைக்குச் சென்று வாதாடினேன்.

காஞ்சிபுரம் தொலைவா?

ஏன் மேடம், கணவன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கின்றார். காங்சிபுரம் போனால் எப்படி அவசரத்திற்கு வர முடியும்? குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள்? இந்தச் சூழ்நிலையில் மாறுதல் கூடாது. தயவு செய்து ரத்து செய்யுங்கள்

பென்கள் என்றல் பிரச்சனைதான். லீவு எடுத்துக் கொள்ளட்டுமே

வருகின்றவளுக்கு அவசரமில்லை. சரோஜாவிற்கு இருக்கும் லீவும் குறைவு. சம்பளத்தை நம்பி குடும்பம் வாழ்கின்றது
எங்கள் வாக்குவாதம்தான் வளர்ந்தது. நான் பொறுமையை இழந்தேன்

“பெண்களுக்கு இது வெல்பேர் டிப்பார்ட்மென்ட்..அவர்கள் விதவையாகக் காரணமாகிவிடக் கூடாது(கடுமையான சொல்லை உதிர்த்தேன். எழுத முடியவில்லை).”

இது கொஞ்சம் அல்ல, மிகவும் அதிகமாக உதிர்த்த சொற்கள். என் மீது நடவடிக்கை எடுக்கலாம். என் அதிகாரிக்குக் கோபம் வந்து சத்தம் போட்டார்கள்.

 நான் முழுமையாகப் பொறுமையை இழந்தேன்

மேடம், என்னை மன்னித்து விடுங்கள். இந்த மாறுதலுக்குப் பின் யார் என்ன, ஏது என்று உங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரியும். மாறுதல் ரத்தாக வில்லையென்றால் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருப்பேன். பத்திரிகைகளுக்குச் செய்தி தருவேன்

இப்படி பேசியதற்கு என்னைப் பணியிலிருந்து நீக்கிவிடலாம். அத்தகைய தவறு இது. மேலதிகாரிகள்கிட்டே இப்படி பேசக் கூடாது. மேலும் நானும் ஒரு அதிகாரி. பேச்சுக்களுக்கு ஒரு வரன்முறை உண்டு. ஆனால் நான் அதைத் தாண்டிவிட்டேன்.கோபமாகப் பேசிவிட்டு வெளியில் வந்து
விட்டேன். நேராக நிர்வாக அறைக்குச் சென்றேன். அங்கே இத்தனைக்கும் காரணமானவர் உட்கார்ந்திருந்தார். அங்கும் போய்க் கத்தினேன். நான் பத்திரிககளுக்கு அறிக்கை கொடுப்பேன் என்று சொல்லவும் அவர் முகத்தில் அதிர்ச்சி. (எனக்கு இருந்த பத்திரிகை பலம் யாவரும் அறிவர்)

இந்த நேரத்தில் இயக்குனரிடமிருந்து சரோஜாவின் கோப்பை எடுத்துவரச் சொல்லி ஆள் வந்து சொன்னான். நடக்கப் போவதைப் புரிந்து கொண்டேன். அவள் மாறுதல் உத்திரவு இனி ரத்தாகிவிடும். என் மேல் நடவடிக்கை எடுக்கலாம்.

என்னை இருக்கச் சொல்லிவிட்டு கோப்புடன் அவர் நகர்ந்தார். திரும்பி வரவும் , “சரோஜாவின் மாறுதல் உத்திரவு ரத்தாகிவிட்டது. இயக்குனர்
கையெழுத்து போட்டுவிட்டார்கள் “ என்றார்.
இப்பொழுது நான் செய்த தவறு உறுத்திய்து. மீண்டும் நேராக அதிகாரியின் அறைக்குச் சென்று மன்னிப்பு கேட்டேன். அவர்கள் சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்துவிட்டு. “இப்படியா உணர்ச்சிவயப்பட்டு பேசுவது?”என்றார்கள். மீண்டும் மன்னிப்பு கேட்டேன்.

‘’சீதாலட்சுமி, ஒரு பெண்ணுக்குக் கஷ்டம் என்றால் எப்படி துடித்துப் போகின்றீர்கள்? அது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் உங்களுக்கு ஒரு அறிவுரை. நிதானம் இழக்காதீர்கள். உங்கள் உத்தியோகம் போனால் உங்கள் குடும்பநிலை என்னவாகும்? வேகம் இருக்கலாம். கொஞ்சம் விவேகத்துடனும் நடங்க’

அவர்கள் சொன்ன அறிவுரைகள் சரியானவை. எனக்கு நேரில் அறிவுரை கூறியதுடன் சரி. வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

எந்தப் பணியில் இருந்தாலும் ஒருவர் உணர வேண்டியது. உண்மையாக உழைக்க வேண்டும். அதற்கு எப்பொழுதும் மதிப்புண்டு.

சரோஜாவின் பிள்ளைகள் நன்றாகப் படித்து இப்பொழுது மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்த சரோஜா இன்று மாம்பலத்தில் பங்களா வாசம் செய்கின்றாள். அவள் என்னை நினைப்பதில் அர்த்தமுண்டு.

பத்திரிக்கை
அதென்ன அப்படி அதன் மேல் நம்பிக்கை
வாடிப்பட்டியில்தான் அதற்கு விதையூன்றப்பட்டது.
பத்திரிகையுலகில் என்னுடைய உலாவைப் பார்ப்போம்.

ருத்ரதுளஸிதாஸ்

சமூகக்கல்வி அமைப்பாளராக வந்து சேர்ந்தார்.
இவர்தான் என்னைப் பத்திரிகையுலகத்துக்கு முதலில் அழைத்துச் சென்றவர். இவர் எழுதிய கதைகள், கவிதைகள் அப்பொழுது பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன.

இவரின் இன்றைய நிலை தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று. 47 புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். இப்பொழுது இரண்டு தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏழு மொழிகள் தெரியும். மொழிபெயர்ப்பு நூல்கள் நிறைய எழுதியிருக்கின்றார். சாகித்ய அக்காடமி ,முதல் பல பட்டங்கள் பெற்றிருக்கின்றார். இப்பொழுது புதுச்சேரியில் இருக்கின்றார்.

எங்கள் வட்டத்தில் மாறாது நின்று கொண்டிருப்பவர் இவர் ஒருவர்தான்

வாடிப்பட்டியைப் பார்க்கலாம்
துளசி ஓர் காந்தீயவாதிக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை ருத்ரப்பசாமி அவர்கள் அக்காலத்திலேயே பேரும் புகழுடன் இருந்தார். ஓர் மாவட்ட கல்வி அதிகாரி. எளிமையாக இருப்பார்

ஒரு முறை பள்ளிக்குத் தணிக்கைக்காகப் பள்ளிக்குச் சென்றிருக்கின்றார்.
பள்ளியில் ஒரே பரபரப்பு. இவர் எளிமையாகச் சென்றவுடன் பியூன் இவரை யாரோ என்று நினைத்து , “ஹெட்மாஸ்டர் வேலையாக இருக்கின்றார். உட்காருங்கள் “ என்று ஒதுக்குப்புறமாக உட்கார வைத்துவிட்டான். தலைமை ஆசிரியர் வெளியே வந்தார். எப்பொழுதும் சரியான நேரத்தில் செயல்படும் மாவட்ட அதிகாரி வரவில்லையே என்று
வெளியில் பார்க்க வந்தார். இவரைக் கண்டவுடன் பதறிப்போனார். பியூனைத் திட்டத் தொடங்கவும், “அவன் அவனுடைய கடமையைச் செய்தான் என்னை நான் அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை இது என் தவறு” என்று தன் குற்றத்தைக் கூறினார். வீட்டிலும் வெளியிலும் வாழும் இன்னொரு காந்தியாக இருந்தார்.

அவருடைய பிள்ளை என்பதற்குத் தப்பாமல் துளசியும் காந்தீய வாதியாக அமைதியான தோற்றத்துடன் இருப்பார்.

வாடிப்பட்டியில் நான் புயல் என்றால் அவர் தென்றலாக இருந்தார்.
ஏற்கனவே நூற்றுக் கணக்கன கதைகள் எழுதிய சோம மகாதேவன் இருந்தார். ஆனால் இவர்தான் என்னைக் கட்டாயப் படுத்தி எழுத வைத்து, அக்கதையினை என்னிடம் வாங்கிப் பத்திரிகை அலுவலகத்திற்கும் அனுப்பிவைத்தார்

என் முதல் கதை பிரசுரமானது
உயிர்மேல் ஆசை
வெளிவந்த பத்திரிகை பிரசண்டவிகடன்
அக்காலத்தில் பல பெரிய எழுத்தாளர்கள் உட்பட எழுதும் முயற்சியில் முதல் நுழைவாயில் பிரசண்ட விகடன்.
என் முதல் குழந்தையைப் பார்க்கவும் மெய் சிலிர்த்துப் போனேன்.
என் எழுத்துலகப் பயணம் தொடங்கியது
எனக்கு மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. ஆனால் கவிதைகள் அதிகம் எழுதவில்லை. ஆனாலும் ஒரு சில பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன.
என்னைப்போல அவரால் உருவாகப்பட்ட எழுத்தாளர் ஓ.எஸ். கிருஷ்ணமூர்த்தி. அருள்சுடர் என்ற பெயர்களில் கதைகள் எழுதி வந்தார். இன்னொருவரும் சேர்ந்தார். சங்கரசுப்பு, இராசமாரப்பா என்ற பெயரில் எழுதிவந்தார். அடுத்து பாலுரெட்டி என்பவர் ஒரே ஒரு கதை மட்டும் எழுதிக்  எங்களுடன் ஒட்டிக் கொண்டார். ஆக வாடிப்பட்டியில் நாங்கள் ஆறு பேர்கள் எழுத்தாளர்கள். தேனாறு என்ற கையெழுத்துப் பத்திரிகையும் ஆரம்பித்தோம்.

மாவட்ட அளவில் எங்கள் வட்டத்தில் நா. பார்த்த சாரதி இருந்தார்.
சுவாரஸ்யமான பல செய்திகள் இருக்கின்றன. அடுத்துப் பார்க்கலாம்

தொடரும்