Sunday, March 28, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-01

"அம்மா, அப்பா எங்கே?"

இந்தக் கேள்விக்கு ஏதேதோ பதில் சொல்லி வந்தாள் சுப்புலட்சுமி.மகள் பாப்பாவிற்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். நான்கு வயதுக் குழந்தைக்கு எப்படி புரிய வைப்பது?அவள் கணவர் காந்தியைத் தேடிப் புறப்பட்டுவிட்டார். சுதந்திரப் போராட்டம். ஜெயில்வாசம். போய் இரண்டு ஆண்டுகளாகி விட்டன. அவர் எங்கிருக்கிறார் என்று அவளுக்கே தெரியாது. பக்கத்து வீட்டு சீமாச்சு தான் அவரை ஜெயிலுக்குப் பிடிச்சுண்டுபோய்ட்டதாகச் சொன்னான். நம்பிக்கையில் தாலியைக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறாள்.

“அம்மா!“ மீண்டும் குரல் கொடுத்தாள் குழந்தை பாப்பா.

நினைவுகளிலிருந்து தொப்பென்று கீழே விழுந்தாள்.

“உன் அப்பா ஜெயிலுக்குப் போயிருக்கார்.“

“அப்பா திருடினாரா?“ அவள் நிறைய கதைகள் கேட்டிருக்கிறாள்-தப்பு பண்ணினா ஜெயிலுக்குப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள்!

பாப்பா கையில் ஒரு பொம்மை இருந்தது. பதில் கூறாமல் சட்டென்று அந்தப் பொம்மையைப் பறித்தாள். பாப்பா ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

"ஏன் அழறே?"

"என் பொம்மை. நீ புடுங்கிட்டியே, அது என்னுடையது."

"உன்னோட சாமானை யாராவது எடுத்தா கோபம் வர்றதே. நாம தங்கியிருக்கிற வீடு, இதெல்லாம் சேர்ந்தா நம்ம நாடு. அதை வெள்ளைக்காரன் புடுங்கிண்டு உக்காந்திருக்கான். அவனைப் போகச் சொன்னா ஜெயில்லே போட்டுடறான். உன் அப்பாவும் அதுக்காகக் காந்திக்கட்சியிலே சேர்ந்துண்டிருக்கார்.

பாப்பாவுக்குச் சரியா ஒண்ணும் புரியலே. அப்பா ஏதோ நல்லதுக்காக ஜெயிலுக்குப் போயிருக்கார் என்ற வரை புரிந்து தலையை ஆட்டியது.

அன்று முதல் தினமும் காந்திக்கட்சிபற்றி கேட்க ஆரம்பித்தாள். அந்தக் கதை அவளுக்குப் பிடித்திருந்தது. தாயார் அவளுக்குச் சோறு மட்டும் ஊட்டவில்லை, சொந்த நாட்டைப் பற்றிய செய்திகளையும் அவளுக்குத் தெரிந்த அளவில் கூற ஆரம்பித்தாள்.

பாலபாடம் ஆரம்பமாகிவிட்டது.


ஒருநாள் சுப்புலட்சுமி தன் மகளைக் கூட்டிக் கொண்டு மீனாட்சி அம்மனைக் காணச் சென்றாள்.சிங்காரிக்கப்பட்ட பந்தலில் மீனாட்சி அம்மன். அது மீனாட்சி அம்மன் கோவில் அல்ல.

மதுரை வைத்தியநாதர் தலைமையில் ஹரிஜன மக்கள் திரண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தனர். அவர்கள் நுழைந்ததால் கோவிலின் ஆசாரம் போய்விட்டது என்றும் மீனாட்சி வெளியேறிவிட்டாள் என்றும் கூறித் தனியாகப் பந்தல் அமைத்து மீனாட்சி அம்மன் விக்கிரகத்தை அங்கே வைத்துப் பூஜைகள் நடத்தினார் நடேச அய்யர். ஆசாரம் பேசும் மக்கள் அங்கே போக ஆரம்பித்தனர்.

ஆலயப் பிரவேசம் முன்னின்றி நடத்தியவனும் பிராமணன். ஆசாரம் பேசி ஹரிஜன் நுழைந்ததால் ஆண்டவன் அங்கிருந்து போய் விட்டான் என்று சொன்னவனும் பிராமணன்.

பந்தலுக்கு நுழையும் பொழுது பாப்பா கேட்டாள் “அம்மா, கோவிலுக்குப்
போகாம இங்கே ஏன் வந்திருக்கோம்?"

“மீனாட்சி கோவில்லே ஹரிஜனங்கள் நுழைஞ்சுட்டாளாம். அதனாலே மீனாட்சி கோபிச்சுண்டு இங்கே வந்துட்டாளாம்."

"ஹரிஜனம்னா யாரு?"

"அது ஒரு ஜாதி."

"ஜாதின்னா என்ன?அவாளும் மனுஷாள்தானே கடவுள் ஏன் கோவிச்சுக்கணும்?"

எவ்வளவு பெரிய கேள்வியைக் கேட்டு விட்டாள். தாயார் பூரித்துப் போய் மகளைக் கட்டி அணைத்துக் கொண்டு, “கோந்தே, எனக்கும் புரியல்லே. அம்மனத் தரிசுட்டுப் போகலாம்.“ என்றாள்.

பாப்பா அதற்குமேல் கேள்வி கேட்கவில்லை. “தப்பு” ன்னு மட்டும் அந்தக் குழந்தைக்கு அப்பொழுதே தெரிந்தது.

பாப்பாவிற்கு ஆறுவயது முடிந்து விட்டது.

என்னைப் பெற்றவள் அலுக்காது அடிக்கடி சொன்ன நிகழ்வுகள். மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டவை

( குறிப்பு. சில நாட்களுக்கு முன்னால் தினமணியில் ஓர் செய்தி.
ஆலயப்பிரவேசம் முன்னின்று நடத்திய வைத்தியநாதருக்கு ஓர் சிலை வைக்கப் பட்டிருந்தது. அவர்சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமும் பல முறை சிறைக்குச் சென்றது. கையில் இருக்கும் காலணாக் காசைக் கூட நாட்டு விடுதலைப் போராட்டத்தில் செல்வழித்தவர். அரசியல் பேசி கோடிக் கணக்கில் சொத்து சேர்த்தவரல்ல.இன்று அவர் சிலை பறவைகளின் கழிப்பிடம். சிலைகளுக்கே இந்த கதிதானே என்று நினைப்பு தோன்றும். வருடத்திற்கு ஒரு நாளாவது மரியாதை கிடைக்கும். அந்த நினைவு நாளில் கூட கேட்பாரற்று கிடந்தது அந்தச் சிலை. ஒரு காங்கிரஸ்காரனும் கூட வந்து பார்க்கக் கூட இல்லை. தியாகத்திற்கு மதிப்புக் கொடுக்காதவர்களால் நாட்டிற்கு என்ன நல்லது செய்திட இயலும்?!. மனம் நொந்து போகின்றது. சரித்திர நிகழ்வின் பொழுது மதுரையில் இருந்தவள். எழுச்சியைப் பார்த்தவள். பிஞ்சு மனத்தில் நியாய விதையை ஊன்றிய நிகழ்ச்சி. சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல. )

(தொடரும்)

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்...
( ம் கொட்டறனாம்.)

பனித்துளி சங்கர் said...

{{{"ஜாதின்னா என்ன?அவாளும் மனுஷாள்தானே கடவுள் ஏன் கோவிச்சுக்கணும்?"}}}}}


குழந்தைக்கு புரிகிறது,,,பெரியவர்களுக்குதான் புரியவில்லை இன்னமும்..

pushparag60 said...

சிறு வயதில் குழந்தைகளுக்கு ஊட்டும்
சோறும்,போதனைகளுமே அவர்களை
உருவாக்குகிறது.
அன்புடன்
ராகவன்.வ