Thursday, June 17, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு- ஜெயகாந்தன் 10

சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா சென்று ஏறத்தாழ ஓராண்டு காலம் வசிக்க நேர்ந்தது. சிட்னியில் தங்கி இருந்தேன். சிட்னி-ஒரு காலத்தில் திறந்தவெளி சிறைச்சாலை!

பல்லாயிரக் கணக்கான பெண் கைதிகள் இறக்குமதி செய்யப்பட்டனர். அங்கே பணி செய்ய மட்டுமல்ல, வேலை செய்பவர்கள் முதல் கைதிகள் வரை அங்கே இருந்த ஆண்களின் இச்சையைத் தீர்க்கவும் பணிக்கப்பட்டு விபச்சாரிகள் என்ற ஒரு புதிய சமூகத்தையும் உண்டு பண்ணிய வரலாற்றுச் செய்தியை சிட்னி பெற்றிருக்கின்றது. இச்செய்தியை மறுப்பவரும் உண்டு. பெண்களை அதற்காகத் தருவிக்கவில்லை என்ற கூற்றும் உண்டு. எதுவானால் என்ன, வந்த பெண்களின் வாழ்க்கை மாறியதென்னவோ உண்மை. கலங்க வைக்கும் கதைகள் நிறைய உண்டு.

ஓர் நாட்டை அடைந்தவுடன் நான் போக விரும்பும் இடம் நூலகம். அந்த நாட்டின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள முயல்வேன். சமுதாயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வரலாற்றில் தெளிவு வேண்டும் என நினைப்பவள் நான்.

வழக்கம்போல் சிட்னியிலும் நூலகம் சென்றேன். புத்தகங்களைப் பார்த்து வரும் பொழுது என்னைக் கவர்ந்து இழுத்தது ஓர் புத்தகம். அதன் தலைப்பு என்னைத் திடுக்கிட வைத்தது. புத்தகத்தை கையில் எடுக்கவும் சட்டென்று நான் அக்கம் பக்கம் பார்த்தேன்.

சே, நானும் அவ்வளவுதானா?

இது ஒரு அனிச்சை செயல் என்றாலும் என் செயல் எனக்குப் பிடிக்கவில்லை. சில நேரங்களில் சிலரில் நானும் ஒருத்தியாய் உணர்ந்தேன்.

கையில் உள்ள புத்தகத்தைப் பார்த்து சிலர் மதிப்பீடு செய்வார்கள்.

அமெரிக்காவிற்கு முதன் முறையாகச் சென்ற பொழுது அங்கிருந்த நூலகம் சென்றேன். அங்கிருந்த பொறுப்பாளர் என்னை அழைத்துச் சென்ற இடம் இறைவன், தத்துவங்கள் பற்றிய புத்தகங்கள் இருக்கும் பகுதிக்கு. என் வயதைப் பார்த்து நான் படிக்க வேண்டியவைகளை அந்த அம்மா தீர்மானித்தது.

ஒரு பார்க்கிற்கு என் மருமகள், பேரக் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நான் எடுத்துச் சென்றிருந்த புத்தகத்தைப் பார்ப்பதும், கொஞ்சம் வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தேன். அப்பொழுது என்னருகில் ஒரு பெண்மனி வந்து உட்கார்ந்தார். என் கையில் இருந்த புத்தகம் டேனியல் ஸ்டீல் எழுதிய புத்தகம். அதைப் பார்க்கவும் அந்த அம்மாளின் முகத்தில் புன்னகை. தொடர்ந்து டேனியல் ஸ்டீல் பற்றி ஒரே புகழாரம்.

இன்னொரு இடத்தில் வேறு புத்தகம் எடுத்துச் சென்றிருந்தேன். யாரும் அந்த புத்தகம்பற்றி எதுவும் பேசவில்லை. நம்மூர் எழுத்தாளர் லட்சுமி போல் குடும்பக் கதைகளால் பெண்கள் மனத்தைக் கவர்ந்தவர் டேனியல் ஸ்டீல். ஆக உலகத்தில் எப்பகுதியாயினும் அவர் வாசிக்கும் புத்தகத்திலிருந்து ஒருவரை மதிப்பீடு செய்யும் புத்தி மட்டும் பொதுவாக இருப்பதைப் பார்த்தேன். அந்த நினைப்பில் தான் சிட்னியில் புத்தகத்தை கையில் எடுக்கவும் என்னையும் அறியாமல் அக்கம் பக்கம் பார்க்கத் தோன்றிவிட்டது.

அந்தப்புத்தகம் தான் GODS CALL GIRL

வீட்டிற்கு எடுத்துச் சென்றவுடன் படிக்க ஆரம்பித்தவள் அதனில் அப்படியே ஆழ்ந்து போனேன்.

கார்லா என்ற ஓர் விலைமாதின் சுய சரிதை. தங்கு தடையின்றி நடை சென்றது. சொல்லியிருந்த விதம் எவரையும் ஈர்க்கும். கொச்சையாக எதையும் எழுதவில்லை. சரியா தவறா என்று வாசகர்களைக் கூட நினைக்க விடாமல் சேர்ந்து பயணம் செய்ய வைத்து முடிவில் அவளுடன் உட்கார வைத்துவிடுகின்றாள்.

கதையின் சுருக்கம் பார்ப்போம்.

கான்வென்ட்டிலுருந்து பாலியல் தொழிலுக்குச் செல்லும் ஓர் பெண்ணின் பயணம். ஹாலண்டில் பிறந்து பன்னிரண்டு வயதில் மெல்பர்ன் வந்த ஒரு பெண்ணின் கதை.

உடன்பிறந்தவர்கள் பலர். தாய் ஒரு ஆசிரியை. கத்தோலிக்க மதம். அவளுடைய ஆறுவயதில் அவளைப் பெற்றவனால் அவள் கெடுக்கப்படுகின்றாள். கெடுத்தபின் அவளிடம் “யாரிடமும் சொல்லாதே! ஜீசஸுக்குப் பிடிக்காது. “என்று கூறி பயமுறுத்தினான். இது ஒரு நாள் கூத்து இல்லை. இது தொடர்ந்து நடந்தது.

பெற்றவள் வாழ்ந்த உலகம் வேறு. அவளுக்கு அவள் கணவனைத் திருப்திப் படுத்த வேண்டும். அதுதான் கடவுளுக்குப் பிடிக்கும் என்று அவளுக்குச் சொல்லப் பட்டிருந்தது. குழந்தைகள் கூட பாவத்தின் சின்னங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கணவனைத் திருப்தி படுத்துவது ஆண்டவனுக்குப் பிடித்தமான ஒன்று. அவள் அம்மா வாழ்ந்த வழி அது.

நாம் தமிழ் கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் என்று சொல்வது உலகத்தில் பெண்ணுக்குப் பொது விதி. காலம் மாற மாற பல இடங்களில். அவள் நிலையில் மாற்றங்கள் சிறுகச் சிறுகத் தோன்றி விட்டன.

இப்புத்தகத்தில் எழுதப் பட்டிருந்த இன்னொரு செய்தி கூட வியப்பை அளித்தது. ஆண், பெண்ணின் கூடல் பிள்ளை பெறுவதற்காக மட்டும் என்ற கொள்கைபற்றியும் எழுதியிருக்கின்றாள். அமெரிக்காவிற்குப் பின் தான் ஆஸ்திரேலியாவின் உதயம். புலம் பெயர்வது என்பது மனிதனுக்கு மட்டுமல்ல; அவன் வரும் பொழுது அவன் தங்களிடம் உண்டாக்கிய கலாச்சார மூட்டைகள், நம்பிக்கை எல்லாம் கொண்டு சென்றிருக்கின்றான்.

கார்லாவின் அம்மாவைப் பார்க்கலாம் அம்மாவின் அன்போ அரவணைப்போ இல்லை. தன் கணவன் தான் உலகம் என்ற வாழ்க்கை. இத்தனைக்கும் படித்தவள். பள்ளி ஆசிரியை.

சின்ன வயதில் சீரழிக்கப்பட்ட பெண் கார்லா. படிக்கப் போன இடம் கான்வென்ட். அங்கும் அவளுக்கு கிடைத்த அனுபவம் கசப்பானது.

கண்டிப்பு நிறைந்த ஆசிரியை. அவரும் ஓர் கன்னியாஸ்த்ரி. வகுப்பறையில் சில கண்கள் வரையப் பட்டிருந்தன. ஜீசசின் கண்களாம், பாவம் செய்கின்றார்களா என்று பார்க்கும் கண்களாம்..கடவுளின் பார்வை கூட அவளுக்கு அச்சமளித்தது. அன்பே உருவான கடவுளை அச்சப்படுத்துபவராக அவளுக்கு அடிக்கடி காட்டப்பட்டது.

முத்தமிட்டால் கர்ப்பம் தரித்துவிடும் என்றார் ஒரு சிஸ்டர்.

கார்லா தன்னைக் குற்றவாளியாக நினைத்தே ஒவ்வொரு வினாடியையும் கழித்தாள். அச்ச உணர்வில் அமைதி இழந்தாள்.எதற்காக ஈடன் தோட்டத்தையும் தோற்றுவைத்து, அங்கு சாப்பிடக் கூடாத கனியையும் ஏன் இறைவன் தோற்றுவித்தான்?. அத்தனை கேள்விகள் பிறந்தன. பதில் கிடைக்கவில்லை. கேள்விகள் மட்டும் கூடிக் கொண்டிருந்தன.

அன்பையும் அமைதியையும் தேடி அவள் கன்னி மாடத்தில் சேர்ந்தாள். அங்கும் அமைதி கிட்டவில்லை. அந்த வாழ்க்கையில் ஒட்டவில்லை.

அங்கிருந்து ஓடுகின்றாள். புகலிடம் தந்தவனை மணக்கின்றாள். ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகின்றாள். இந்த நிலையில் அவளுக்கு ஒருவனிடம் காதல் பிறக்கின்றது. கணவனைப் பிரிந்து காதலனுடன் வாழ்கின்றாள். அந்த வாழ்வும் நிலைக்கவில்லை. ஓர் விபத்தில் காதலன் மரிக்கின்றன். மனமுடைந்து போகின்றாள்.

விபச்சாரத் தொழிலில் இருக்கும் ஓர் ஏஜண்டிடம் வேலைக்குச் சேர்கின்றாள். நாளடைவில் அவளும் அத்தொழிலில் இறங்கி விடுகின்றாள். அதன் பின் அவள் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. வயதாகும் வரை அத்தொழிலில் இருந்து பின்னர் தன் மகள் குடும்பத்துடன் தங்கி இருக்கும் ஊருக்கே வந்து வாழத் தொடங்குகின்றாள்.

எச்சூழ்நிலையிலும் அவள் மனம் மட்டும் கேள்விகள் கேட்பதை நிறுத்தவில்லை.

அவள் உணர்வுகளை அவள் சொல்லுவதிலிருந்து பார்ப்போம். அவள் விரும்பிய அன்பு அவளுக்குக் கிடைக்கவில்லை

“நான் இயல்பானவளாக மாறுவேனா? என்ன முயன்றும் என் உணர்வுகளை மூளையிலிருந்து விடுவிக்க முடியவில்லை. அது எலாஸ்டிக் போன்று திரும்பத் திரும்ப வந்து ஆட்டிப் படைக்கின்றது.”

ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுக்க அறிவுரைகள் கிடைக்கின்றன.

அவளும் மனத்தைத் திருப்ப நினைக்கின்றாள். ஆனால் மனமோ அவள் கட்டுப்பாட்டில் இல்லை.

தன்னை ஏதோ ஒர் கெட்ட சக்தி இப்படி இழுத்து வந்ததாக நினைக்கின்றாள்.சிறுவயதில் ஏற்பட்ட கசப்பு அனுபவங்களின் தாக்கம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது. அவள் பயணத்தில் இறைவனின் எண்ணத்தையும் உடன் சுமந்தாள்.

உள்ளுக்குள் இருக்கும் சின்னப் பெண் எழுந்து அவளுக்கு ஆறுதல் கூறுகின்றாள்.இந்த மனப் போராட்டத்தில் காலம் ஓடிவிடுகின்றது. ஆனால் எப்படியோ பக்குவம் வந்துவிடுகின்றது. எழுத ஆரம்பிக்கின்றாள்.

ஜெயகாந்தனின் ராசாத்திக்கு இத்தகைய ஆராய்ச்சிகள் கிடையாது. ஒரு பிடி சோறு வேண்டும். வேலை கிடைத்த நேரம் கல்லைச் சுமந்தாள். அது கிடைக்காத போது மனிதனை நாடினாள். அவள் ஒரு குடிசை வியாபாரி. தத்துவங்கள் அவள் நினைவில் தோன்றாது. அது ராசாத்திக்கு வியாபாரம்.

கிரிஜாவின் நிலை வேறு. கொஞ்சம் படித்தவள். செங்கல் வீட்டில் குடியிருக்கின்றாள். அவளுக்குத் தேவையான பொழுது மட்டும் போதும். அவள் மனம் அவளுக்குக் கட்டுப்பட்டது. சிந்திக்க முடிகின்றது. சிந்தனைச் சிதறல்கள் பார்க்க முடிகின்றது.

கார்லாவின் வாழ்க்கை வித்தியாசமனது. சின்ன வயதில் பெற்றவனே கெடுத்து அவள் மனத்தைக் குதறிவிட்டான். அரவணைக்க வேண்டிய அம்மாவோ அவள் கணவனே உலகம் என்று இருந்துவிடுகின்றாள்.
ஒதுங்கிய கன்னி மாடமும் உதவவில்லை. எனவே அவள் தன் உணர்வுகளுக்கு இடமளித்து ஓட ஆரம்பித்தாள்.

ஆசிரியையின் மகள். ஆஸ்ரமத்தில் படித்தவள். கொஞ்ச நாட்கள் துறவி வேஷங்கட்டியவள். அதனால் மனம் அலைபாய்கின்றது. அவள் எழுத்துக்களில் அவளைக் காண முயல்வோம்.

உள்ளமும் ஆத்மாவும் வேறானவை. அவற்றின் அதிர்ச்சி அலைகள் வெவ்வேறான‌வை. உள்ளத்தின் கட்டமைப்புகள் அவள் வாழ்க்கைப் போக்கில் நேரிய முறையில் பேணப்படவில்லை. இந்த உணர்ச்சிகளின் ஈடுபாட்டில் திருப்திப்படும் ஆசையை அவள் தவிர்த்தால், கடவுளோடு அவள் ஐக்கியமாக முடியும்.

ஷேக்ஸ்பியர் சொன்னது நினைவிற்கு வருகின்றது

வாழ்வில் தனிமை உணர்ச்சியின்றி எப்போதும் எதுவும் நல்லதும் அல்ல, தீயதும் அல்ல. சிந்தனைதான் அப்படி எண்ண வைக்கிறது” என்று சொல்கிறார்.

காலம் ஓடுகின்றது

"உண்மையை நீ அறிந்து கொள்ளும் போது உனக்கு விடுவிப்புக் கிடைக்கிறது." - ஏசு கிறிஸ்து.

முதுமையில் இந்த வலையினின்றும் விடுபட்டு மகள் தன் குழந்தைகளுடன் வசிக்கும் இடம் புறப்பட்டு விடுகின்றாள். அப்பொழுது அவளிடம் எந்த குற்ற உணர்ச்சியும் கிடையாது. மெய்யான பாடத்தைக் கற்றுக் கொண்டாள் அவள்.

சுயத்தன்மையை ஏற்றுக் கொள்வது (நேர்மைப் பண்பே தீயவற்றை முற்றிலும் நீக்க வல்லது). கடவுளின் (படைப்புப்) பெண்ணைக் காண‌‌ அவள் கடவுளின் அழைப்புப் பெண்ணை நோக்கினாள்.

அவள் வாழ்க்கை வண்டி, நிலைக்கு வந்து அமைதியாக நின்றுவிட்டது. இப்பொழுது எழுதுவதில் இன்பம் காண்கின்றாள்.

ஒரே செயல்; அதற்கு எத்தனை கோணங்கள்!

குடிசைவாழ் பாலியல் தொழில் பெண்களைச் சந்தித்திருக்கின்றேன். பம்பாய் சிவப்புவிளக்கு ஏரியாப் பெண்களைச் சந்தித்துப் பேசி இருக்கின்றேன். தொழில் செய்யும் பொழுது சட்டத்தின் பிடியில் மாட்டிக் கொண்டு தண்டனை அனுபவிக்க அவர்கள் வைக்கப் பட்டிருக்கும் சிறைகளுக்குப் போய் பேசி இருக்கின்றேன். உளவியல் ரீதியாக அவர்கள் உணர்வுகளை, அவர்கள் வாழ்க்கையினைக் கண்டேன்.அவர்களை எப்படி வழி நடத்துவது?

1990 ல் தமிழக அரசு பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கான பெண்களை விடுவித்து வந்து புனர்வாழ்வு கொடுக்க முயன்றது. எத்தனை பிரச்சனைகள்! எத்தனை சிக்கல்கள்!! விமர்சனம் எளிதாகச் செய்துவிடலாம். பாலியல் பிரச்சனை உலகியலில் நிரந்தரமாக இருக்கின்றது.

அப்பப்பா, இந்த மனம் மனிதனைப் படுத்தும் பாடு!

கார்லா கதை சொன்னதற்கு முக்கியக் காரணம் ஒன்றுண்டு. அதனைக் கூறியாக வேண்டும். ஓய்வுக்கு ஒதுங்கிய நிலையிலும் எழுபது வயதான காலத்திலும் அவளைச் சில வாடிக்கைக்காரர்கள் வந்து பார்ப்பதும் சில நாட்கள் தங்கிச் செல்வது பற்றியும் எழுதி யிருக்கின்றாள்.

அப்பொழுது அவள் ஆண்மனத்தைப் பற்றி கூறுகின்றாள். அவளைத்தேடி வருகின்றவர்கள் உடல் சுகத்தைத் நாடியல்ல; மனத்திற்கு இதம் தேடி வந்திருக்கின்றார்கள். அந்த நம்பிக்கை எப்பொழுது உதயமானது.? உடலுறவுக் காலங்களில் உள்ளம் எங்கே, எப்படி இயங்குகின்றது? சில பெண்களிடம் இருக்கும் அந்த அலைவரிசயை ஆண் புரிந்து கொண்டு விட்டால் அவளை எப்பொழுதும் ஆண்மனம் நாடுகின்றது. சரியா தப்பா, எப்படி என்ற வாக்குவாதத்தில் இப்பொழுது இறங்க விரும்பவில்லை.

கார்லாவின் கதையின் முடிவில் ஆண்மனத்தை ஓரளவு தொட்டுக் காண்பிக்கின்றாள்.

ஜெயகாந்தன் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. கூறவும் மாட்டார்.

கார்லா ஆண்மனத்தை, குணத்தை படம்பிடித்துக் காட்டுகின்றாள். அவளே கதையின் நாயகி. அவளே கதையின் ஆசிரியை. அவளால் முடியும்.

மனம் விட்டுப் பேச ஓர் தோழமை வேண்டும். ஏன் ஆணைத் தேடிப்போகக் கூடாதா? பெண்மையுடன் கூடிய தோழமை வேண்டியிருக்கின்றது. பெண் என்ன செய்வாள்? அவளுக்கு ஆறுதல் வேண்டாமா? தாய்மையின் சுகம் ருசித்தவள். அது அவளுக்குத் தெம்பு கொடுக்கின்றது. ஏற்கனவே மூளைச் சலவை செய்யப்பட்டவள். குடும்பத்துடன் கட்டிப் போடப் பட்டவள். அது அவளுக்குப் பழகிப் போய்விட்டது.

இது இந்தக் காலத்துக்குப் பொருந்துமா? சொல்ல முடியாது.

வீட்டுப் பறவைக்கு இப்பொழுது சுதந்திரம் கிடைத்துவிட்டது. அவளும் ஆறுதலைத் தேடி வெளியில் செல்லலாம்; அத்தகைய கதைகளும் வரும். வர ஆரம்பித்துவிட்டன.

நல்ல குடும்பத்தில் பிறந்தவள், வசதியானவள் ஏன் விலைமாதாக மாறினாள்? அவள் உள்ளுணர்வு மட்டும் காரணமா? அந்த உணர்வைத் தூண்டியது , அவளை அந்த முடிவிற்கு ஓட்டியது எது?

படித்த தாய். அதுவும் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியையின் மகள். பல சகோதர சகோதரிகள். கிறிஸ்தவ பள்ளி அதுவும் கன்னியாஸ்த்ரீகள் ஆசிரியைகள். கன்னி மாடத்தில் துறவியாகவும் ஒண்டுகின்றாள். ஏன் இந்தத் தொழிலில் தள்ளப் பட்டாள்? அவள் எழுத்தைப் பார்த்தால் முட்டாள் பெண்ணாகத் தெரியவில்லை. பெற்ற தகப்பன் ஆரம்பித்து அவள் போன இடங்களில் எல்லாம் சொல்லாலும் காட்சிகளாலும் அவள் அச்சப்படுத்தப் பட்டாள்.

சூழ்நிலைத் தாக்குதலில் தடம் புரண்டு போய்விட்டாள்

"சில நேரங்களில் சில மனிதர்களி"ல் கங்கா முதலில் அப்பாவிப் பெண் ஆனால் பின்னால் படித்து நல்ல உயர் நிலைக்கு வந்துவிடுகின்றாள். அந்தஸ்துள்ள உத்தியோகம். அப்படியிருந்தும் கெடுத்தவனை ஏன் தேடுகின்றாள்? அவனுடன் பழகுவதால் வாழ்வு கிடைக்காது என்று தெரிந்தும் பழகுகின்றாள் ஏன்?


அடுத்து நாம் கங்காவை அலசுவோம்.

(தொடரும்)

நன்றி -திண்ணை

No comments: