Friday, August 27, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 18

ஜலப்பிரவாகத்தில் வலம் எது? இடம் எது?

வாழ்க்கையும் அப்படித்தானே! கவனமாக இருக்கின்றவனுக்கு சோதனைகளைத் தாண்டுவது சுலபம். ஆனால் தன்னை மறந்து, தன்னை இழந்து போகின்றவனுக்கு வாழ்க்கையில் சுனாமியைச் சந்தித்துதானே ஆக வேண்டும்? ’தத்துவங்களைக் குப்பையில் போட்டு விடு,’ என்று சொல்லவும் ஒரு கூட்டம். மனிதன் அமைதியை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு அவனே காரணியாகும்.

ஆற்றிலே நீந்திக் கொண்டிருந்த சங்கரனுக்கு ஆதியின் குரல் கேட்டும் திசை தெரியாமல் போகக் கூடாத பக்கமே சென்று கொண்டிருந்தான். ஒரு சுழல் அவனை இழுத்து முறுக்கிற்று. மேலே தலை தூக்க முடியாமல் அழுத்தி எங்கோ இழுத்துக் கொண்டு போயின.

சங்கரனுக்கு அம்மா சொன்ன மார்க்கண்டேயன் கதை அப்போது நினைவுக்கு வந்தது:

ஈசனை இறுகப்பற்றிக் கொள்வாரை எமன் நெருங்குவதற்கு அஞ்சுவான்

ஈசன் எங்கே?அவன் எங்குதான் இல்லை?நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவன்; இந்த நீர்ச்சுழலில் இல்லாமல் போய்விடுவானோ?

நம்பிக்கை! இறை நம்பிக்கை- இந்த நம்பிக்கை சொல்லைச் சரியாகப் புரிந்திருக்கின்றோமா?

இறை நம்பிக்கையுள்ளவன் அவன் வாழ வேண்டிய மனத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; இறை நம்பிக்கையுள்ளவன் அவன் படைத்த உயிர்களிடம் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.

பிள்ளைப்பருவத்தில் சங்கரன் தாயின் வார்த்தைகளைப் பெரிதும் மதிப்பவன். அந்தத் தாயும் தன் மகனுக்குச் சொல்ல வேண்டியவைகளை நல்ல கதைகள் வடிவில் சொல்லி இருக்கின்றாள்.

இன்றைய காலத்தில் தாய்க்குக் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த நேரமில்லை. பல வேலைகள் இருப்பது உண்மைதான். ஆனால் தொலைக்காட்சிக்கு அடிமையாகி மூன்று வயது குழந்தையைக் கூட ட்யூஷன் என்ற பெயரில் அனுப்பிவிடும் கொடுமையைப் பார்க்கும் பொழுது வேதனை எழுகின்றது.

சங்கரனின் தாயாரால் ஒரு ஞானி உதயமாகின்றார். பல தாய்மார்களின் சினிமா மோகத்தால் சாத்தான்கள் உருவாகின்றனர்.

நல்லவை கடவுள்; கெட்டவை சாத்தான்கள்!

சுழலில் அகப்பட்டு நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் சங்கரனுக்கு அம்மா சொன்ன மார்க்கண்டேயன் கதை நினைவிற்கு வந்தது. சங்கரன் நம்பிக்கை ஆழமானது. அர்த்தமுள்ளது.

இரு கரங்கள் அவனைத் தழுவின. மரணத்திலிருந்து இரண்டு உயிர்களும் தப்பிக் கரை ஏறின.

ஒரு உயிர் இன்னொன்றைச் சுமந்தது; அங்கே பிரிவினைகள் கிடையாது. உயிருக்கு ஆண் என்றோ பெண் என்றோ பேதம் கிடையாது. உடலை விட்டு உயிர் நீங்கின் அது எங்கு வேண்டுமானாலும் மீள் குடியேறும். அது புழு, பூச்சியாகக் கூட இருக்கலாம்.

பிறப்பில் உயர்வு தாழ்வு என்பது குணத்தால், அவன் வாழும் முறையால் வருவது. மனக்கோயிலில் சாத்தானைக் குடியேற்றினால் அதற்குக் கொத்தடிமையாகி நாமும் கூத்தாட வேண்டியதுதான்.

சங்கரனின் உயிரை மீட்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தான்ஆதி. சாதி பார்த்துக் கொண்டு தொலைவில் நின்றிருந்தால் ..?

பிழைத்து எழுந்த சங்கரன் எதிரே வந்து நின்ற ஆதியைப் பார்க்கின்றான், மரணத்திலிருந்து மீட்ட சிவனைப்போல் ஆதி தோன்றினான்.தூரத்தில் அக்கரையில் தெரிகின்ற அக்ரகாரத்தையும், சிவன்கோயில் கோபுரத்தையும் சங்கரனின் கண்கள் வெறித்தன.

ஆதி, உன் கையால் அந்தத் துணிகளை ஜலத்திலே போட்டுடேன். நான் பிழிஞ்சு எடுத்துண்டுறேன்,“என்றான் சங்கரன்.

சில நேரங்களில் சில சம்பிரதாயங்களை விட்டு விட முடிவதில்லை. ஒதுக்குவது, ஒதுங்குவது என்பதெல்லாம் மனம் செய்யும் கூத்து.

சங்கரனும் ஆதியும் அன்பிலே கட்டுண்டவர்கள். தங்கள் எல்லைகளைப் புரிந்து கொண்டே அவர்களால் அன்பு செலுத்த முடிந்தது. எனவே யார் மனமும் காயப்படவில்லை.

அன்றிரவு அம்மாவிடம் நடந்த அனைத்தும் கூறுகின்றான் சங்கரன்.

அதைக் கேட்டுவிட்டு சங்கரனுக்கு ஆதி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார் அவன் தாயார். பரமேஸ்வரனே ஓர் புலையனாக வந்த சம்பவத்தைக் கேட்கவும் நம் சங்கரனுக்கு அவன் உயிரைக் காப்பாற்றிய ஆதியும் அந்த ஈஸ்வரனாகத் தோன்றுகின்றான்.

ஒரு தீண்டத்தகாத சிறுவனை தெய்வமாக வணங்கத் தோன்றியது என்று கதாசிரியர் எழுதுவது சம்பிரதாயங்களில் ஊறியவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். பரம்பொருள் இல்லாத இடம் ஏது? எல்லா உயிர்களிலும் அவன் உறைகின்றான். முழுப் பொருளை உணர்ந்தவர்கள் முணங்க மாட்டார்கள்.

நியதிகள் எப்பொழுதும் நிர்ப்பந்தமல்ல. எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.

இந்துமதம் ஒரு கடல். அங்கே காணும் தத்துவங்கள் அர்த்தமுள்ளவை. ஆனால் தோலை மட்டும் காட்டித் திரிந்தால் சக்கையாகத்தான் பார்ப்பார்கள். கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்துமதம்“ பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் அது மட்டும் போதாது. வேதம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் சொந்தம் என்பதில்லை.வாழ்க்கையின் வழி நூல். இது கேள்வி யுகம். இக்காலத்து மக்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் விரிவான விளக்கங்கள் நிறைய எழுதப் படவேண்டும்.

இறைவன் எல்லோருக்கும் சொந்தம். அவன் ஒரு ஏகன். யாரும் அவரவர் விருப்பப்படி பெயர் வைத்து அழைத்துக் கொள்ளட்டும். எல்லாப் பெயர்களும் அந்தப்பரம் பொருளைத்தான் குறிக்கின்றன. காழ்ப்புணர்ச்சி விடுத்து மனித நேயம் வளர்ப்போம அன்பில்லாத இதயத்தில் ஆண்டவன் இருக்க மாட்டார். "அன்பே சிவம்."

ஜெயகாந்தன் சொல்லுவதைப் பார்ப்போம்.

ஒரு தீண்டதகாத சிறுவனை வணங்குகின்றான் சங்கரன்.

ஈஸ்வரனே புலையனாக வருவான் என்கிறாள் அம்மா
.

அந்தப் புலையனை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்கிறார் சித்தப்பா.

அதை எதிர்த்து உயிரைக் கொடுத்தேனும் தடுப்பேன் என்று உறுதியாக நிற்கின்றார் அப்பா.


சங்கரன் ஆதியுடன் மனம் விட்டுப் பேசுகின்றான். தான் கோயிலுக்குள் போகப் போவதில்லை என்று கூறுகின்றான் ஆதி. அவன் கொடுக்கும் விளக்கம்தான் புதுமையானது. சிந்திக்க வைப்பது

என்னைத் தொடறதுக்கு உனக்கு எவ்வளவு கூச்சம் இருக்கோ அதேமாதிரி உன்னைத் தொடறதுக்கும் எனக்குக் கூசுது சாமி

உரையாடலில் ஜெயகாந்தன் சிறந்தவர் என்பதற்கு ஒரு சான்று.

ஊரில் குழப்பம் நீடிக்கின்றது. மகாலிங்க அய்யர் சங்கரனைக் கூட்டிக் கொண்டு ஸ்ரீமடத்திற்குப் புறப்பட்டு விட்டார்.

ஸ்ரீமடத்தில் ஆச்சார்ய ஸ்வாமிகள் முன் நிற்கும் பொழுது குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார் மகாலிங்க அய்யர்.

என்ன நடந்துவிட்டது?என்னதான் நடந்துவிடப்போகின்றது?எதைத் தடுத்துவிட முடியும்? எது தடுக்கத் தக்கது? என்றெல்லாம் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டாயா?ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கால எல்லை உண்டு. சநாதன தர்மத்துக்கு இவற்றாலெல்லாம் ஏதும் பங்கம் நேர்ந்து விடாது.ஓர் அத்வைதி சடங்குகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதை அறிவாய் , அல்லவா?அப்படி என்றால் உனது சமஸ்காரங்களும் சடங்குகளும் கூட ஒரு கால எல்லைக்கு உட்பட்டவையே .எங்கும் நிறைந்திருக்கும் ஈசன் எவருடைய எந்தச் செய்கையால் எங்கிருந்து எங்கு போய்விடுவான்? எல்லாவற்றையும் ஈஸ்வரார்ப்பணம் என்று கருதிக் கொண்டு உனது கடமைகளை மகிழ்ச்சியோடு செய்

ஜெயகாந்தனின் இந்த வாசகங்கள் என்னைக் கடந்த காலத்துக்கு அழைத்துச் சென்று சங்கர மடத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

அன்று நான் மணியனுடன் மடத்திற்குச் சென்றிருந்தேன். யாரிடமும் தயங்காமல் பேசும் நான் மணியனிடம் முணங்கினேன். அவர்தான் எனக்காக ஸ்வாமிகளிடம் பேசினார்.

மற்றவர்கள் பல கேள்விகள் எழுப்புவதும் கேலி செய்வதும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது.

என் பயத்தை மணியன் கூறவும் மகாப்பெரியவர் என்னைப் பார்த்தார்.

"மனுஷாள் தானே பேசறா. ஈஸ்வரன் தன்னைப் பாத்துப்பான். நீ கவலைப்படாதே."

எப்பேர்ப்பட்ட உண்மை! அன்று அதன் முழு அர்த்தம் தெரியவில்லை. ஆனால் இன்று அமெரிக்காவில் வாழும் பொழுது புரிகின்றது. உலகெங்கும் யோகா என்றும் தியானம் என்றும் பரவி சகல மதங்களும் அவரவர் இஷ்ட தெய்வங்களை நினைத்து நிஷ்டையில் உட்காருவதைப் பார்க்கின்றேன். பல இடங்களில் "ஓம்" என்றும் ஒலிக்கின்றது.

யோகாவும் தியானப் பயிற்சியும் மனிதனின் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகின்றது என்று மருத்துவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர். உறக்கத்திற்கு வேறு எதையும் நாட வேண்டியதில்லை. உடல் ஆரோக்கித்திற்கு இந்த இரண்டும் பெரிய உதவியாக இருக்கின்றன என்று மருத்துவ உலகத்தின் ஒப்புதல் ஒலிக்கின்றது.

இந்த யோகாவும் தியானமும் எப்பொழுது தோன்றின? நாட்டுக்கு நாடு வெவ்வேறு பெயரில் இயங்கினாலும் இதன் மூலக்கரு உதித்த இடம் எது? பெயர் எதுவானால் என்ன, இறைவன் தன் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றான்.

ஆம், அவனுக்கு அவனைப் பார்த்துக் கொள்ளத் தெரியும்.

மேடையில் கடவுள் இல்லை என்று கர்ஜித்தவனும், பத்தி பத்தியாய் எழுதுகின்றவனும் மரண பயம் எட்டவும் மனத்திற்குள் இறைவனை நினைக்காமல் இருக்க முடியாது. அவன் வீட்டுப் பெண்கள் அவனுக்காகக் கோயிலுக்குப் போகும் பொழுது “இது வீட்டு விஷயம்” என்று சொல்லிவிடுகின்றார்கள். அப்படியென்றல் இவர்கள் யாருக்காகச் சொல்லித் திரிகின்றார்கள்.?

தியானத்தில் முதல்படி அவர்கள் பிரபஞ்ச சக்தியை நினைக்க வேண்டும். ஆங்கிலத்தில் energy என்று சொல்லித் தரப்பட்டுள்ளது. அந்த பிரபஞ்ச சக்தி பெயரில் தியான மையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த பிரபஞ்சசக்தி எது?

மஹாப்பெரியவரின் வார்த்தைக்கு அர்த்தம் இப்பொழுது புரிந்தது.

வளைந்தால் என்ன? நிமிர்ந்தால் என்ன?இந்த மதம், இந்த மார்க்கம் , இந்த நெறி , இந்த கலாச்சாரம் , இந்த நம்பிக்கை - காலமாற்றத்துக்கும் அவரவர் பாண்டியத்துவத்திற்கும் ஏற்ப என்ன பெயரில் அழைத்தாலும் - இது சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருகின்றது! வாழும்

இது ஜெயகாந்தன் தன் தொடரில் அன்றே எழுதியது.

வேத வித்து சக்தி வாய்ந்தது. பெயர் எதுவானால் என்ன? தத்துவம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீமடத்தில் ஆச்சார்ய ஸ்வாமிகளின் உரை மகாலிங்க அய்யரை நோக்கிக் கூறப்பட்டாலும் அந்த வாசகங்களைக் கேட்டுக் கொண்டு நின்ற சங்கரன் பரவசம் கொண்டு நின்றான்.

சில மனிதர்களின் வாழ்க்கையில் திடீரென திருப்புமுனை வந்துவிடும்.

மகாலிங்க அய்யர் தன் மனைவியுடன் காசிக்குப் போய் வாழ ஆசி கிடைக்கின்றது. சங்கரனின் மேல் ஸ்வாமிகளின் பார்வை விழுகின்றது. இனி சங்கரனை அவன் இவன் என்று பேச முடியாத உயரத்திற்குக் கொண்டு போய்விடுகின்றது . இனி சங்கரனின் வாழ்க்கை ஸ்ரீமடத்தில் தான்; பீடத்திற்குரியவராகிவிடுகின்றார்

துறவியாவது எளிதல்ல. அதற்கும் ஆண்டவனின் அருள் வேண்டும்.

இந்த எளியவளின் அனுபவத்தை இங்கிடுவதைப் பொறுத்தருள வேண்டுகின்றேன். நான் சாமான்யமானவள். என்னைப்போன்ற சாமான்யமானவர்களுக்காக எழுதிக் கொண்டிருக்கின்றேன். எனவே என் முயற்சி பிழையல்ல.

நான் படித்த கல்லூரி தூய மேரி அன்னை கல்லூரி. விடுதியில் தங்கிப் படித்தேன். சுற்றிலும் கிறிஸ்தவ சன்னியாசினிகள். அதிலே எங்களுக்குத் தமிழ் ஆசிரியையாக இருந்தவர் சிஸ்டர். எமெரென்சியாமேரி அவர்கள். அவர்களுக்கு ஒரு ஆசை. நானும் அவர்களைப் போல் துறவறம் பூண்டு கன்னிமாடத்திற்கு வர வேண்டுமென்று எப்பொழுதும் ஏசுபிதாவிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் அவர்களிடம் கேலியாக, “என் முருகனுக்கும் ஏசுபிரானுக்கும் இடையில் போட்டியை உருவாக்கியிருக்கின்றீர்கள் யார் வெல்லுகின்றார்கள் பார்க்கலாம்” என்று கூறிவந்தேன். ஆனாலும் உள்ளத்தில் துறவியாகும் ஆசை மெதுவாக வளர ஆரம்பித்தது.

ஏற்கனவே ஓர் சூழலில் சுவாமி சிவானந்த மகரிஷிக்கும் எனக்கும் இடையில் கடிதத்தொடர்பு இருந்து வந்தது. அடிக்கடி கடிதங்கள் அனுப்புவதுடன் நிறைய புத்தகங்களும் அனுப்பிவந்தார். அவைகளைப் படிக்கப் படிக்க என் ஆர்வம் மேலும் வளர்ந்தது. ஆரம்ப காலத்தில் எனக்கு வரும் புத்தகங்களைச் சரியாகக் கொடுக்காமல் நிர்வாகத்தினர் வைத்துக் கொண்டனர்.

கல்லூரியில் நுழைந்த பொழுது தூத்துக்குடியில் இருந்த பிஷப் மேதகு உயர்திரு ரோச் அவர்கள் ஆனால் ஒருவருடத்திற்குப் பின் மேதகு உயர்திரு தாமஸ் பெர்னாண்டோ அவர்கள் வந்துவிட்டார். என்னை இருவருக்குமே பிடித்திருந்தது. என் புத்தகங்கள் பிரச்சனையைக் அவரிடம் கூறவும் எனக்கு வரும் புத்தகங்கள் தடை செய்யப்படவில்லை.

என் துறவற ஆசையை சுவாமிஜிக்குத் தெரிவித்தேன். ரிஷிகேசம் வருவேன் என்று அடம்பிடித்தேன். ஒரு அப்பாவிடம் உரிமையுடன் சண்டை போடுவதைப் போல் அவருடனும் சண்டை போட்டேன். ஆனால் சுவாமிஜி என்னைப் படிக்கச் சொன்னார். படித்து முடித்து வேலைக்குப் போக வேண்டுமென்று கூறிக்கொண்டே வந்தார்

எங்கள் பிஷப்பிடம் என் துறவற ஆசையைச் சொன்ன பொழுதெல்லாம் அவரும் என்னைப் படித்து வேலைக்குப் போகச் சொன்னார். இரு துறவிகளும் என்னை வழி நடத்தி பட்டதாரியாக ஆகும் வரை பக்கத் துணையாக இருந்து வந்தனர். பின் இரு வருடங்கள் என்னைப் படிக்க வைத்ததே நான் படித்த கிறிஸ்தவ நிர்வாகம் தான். என்னை யாரும் மதம் மாறச் சொல்லிக் கட்டாயப் படுத்தவில்லை. என் முருக வழிபாடு எல்லோருக்கும் தெரியும்.

எப்படியோ என் படிப்பு முடிந்து நான் படித்த பள்ளியிலேயே ஆசிரியையாகச் சேர்ந்தேன். அதே பள்ளியில் தான் சுவாமிஜி படித்திருந்தார். பாரதியும் அந்த பள்ளி மாணவர்தான். பணியில் சேரவும் சுவாமிஜிக்குத் தெரிவித்தேன். அவரிடமிருந்து பதிலும் வந்தது. ஏனோ அந்தக் கடிதத்தில் ஓர் மறை முகச் செய்தி இருப்பதாக உணர்ந்தேன். அந்தக் கடிதத்தில் இருந்த வரிகள் இதுதான்


31st july 1956


Blessed divinity, salutations. Om namo narayanaya.

Thy kind letter. I am very glad to know you have passed the B.A. and you have joined as a teacher, it is very good. Kindly be brave and fight the battle of daily life. Be strong in mind. Be joyful and calm at all times . Have faith in the Lord at any cost. He gives you some experiances to give you more strength and will to face the life more bravely. Be sure of His Divine Living presence at all times with you. Then you will be filled with joy and strength. Be sure of His grace and do your best. He will guide you and inspire your path


Sd sivananda

ஆம். நான் வேறு திசையில் பயணம் போகப் போகின்றேன் என்று அப்பொழுது தெரியாது

என் தந்தை என்னை அழைத்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜரைப் பார்க்க புறப்பட்டுவிட்டார். அப்பா ஒரு சுதந்திரப் போராட்ட தொண்டர். தன் தலைவரிடம் மகள் பட்டம் பெற்ற பெருமையைக் காட்ட அழைத்துச் சென்றார். அக்காலத்தில் ஒரு பெண் பட்டதாரியாவது பெரிய சாதனை. கர்ம வீரருக்கோ எல்லோரும் கல்வி கற்க வேண்டுமென்ற லட்சியம்.

அந்தப் பெருமகனார் ஆசிகள் கூறுவதற்குப் பதிலாகக் கோபத்துடன் பேசினார். அவரின் வார்த்தைகளைப் பாருங்களேன்.

“படிச்சவங்க எல்லாம் இப்படி சுகமான வேலைக்குப் போனா கிராமம் என்னாகறது. அங்கே இருக்கற ஜனங்களுக்கு ஒரு வசதியும் இல்லே. லைட் இல்லே. அவுக ஊருக்குப் போக சரியான ரோடு இல்லே. பள்ளிக்கூடம் இருந்தாலும் புள்ளங்களை அனுப்பறதில்லே. ஆஸ்பத்திரிக்குக் கூடப் போகத் தெரியல்லே. முதல்லே அவங்களுக்கு உலகம் போற போக்கு தெரியணும். அவங்களுக்கு வசதி செய்து தரணும். அவங்க புள்ளங்க பள்ளிக்கூடம் போகணும்.கிராமத்துலே போய் வேலையைப் பாரு. கட்டின துணி அழுக்குபடும்னு சொகுசு வேலை தேடாதே. மணிமகள் பார்க்க வேண்டிய வேலை அதுதான்

நானும் சரி என்று கூறிவிட்டு வந்தேன். என்ன வேலை, எப்படி கண்டு பிடிப்பது என்றெல்லாம் சொல்ல வில்லை. ஆனால் ஒரு மாதத்தில் பத்திரிகை விளம்பரம் எனக்கு இறைவன் பணித்த பணியைக் காட்டியது. சுவாமிஜியின் கடிததத்தின் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தமும் அப்பொழுது புரிந்தது.

நான் விரும்பிய துறவற வாழ்க்கை எனக்கு அமையவில்லை.தெய்வத்தின் கட்டளை வேறு. மகான்களால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கேற்ப எனக்கு வழிகாட்டினர்கள்.

சமுதாயப்பணிக்குச் சென்றேன். பல வருடங்கள் கழித்து இன்னொரு அனுபவம் கிடைத்தது.

நான் உதகை மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஊட்டிக்கு ஒரு மகான் வந்தார். அவர் தியானப்பயிற்சி கொடுக்க வந்தார். நானும் அப்பயிற்சியில் சேர்ந்தேன். எனக்கு முதன் முதலில் குண்டலினி எழுப்பியவர் அந்த மகான் தான். பயிற்சி வகுப்பு முடியவிட்டும் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு வார காலத்தில் அவரின் நன்மதிப்பைப் பெற்றென். அவர் பல ஊர்களுக்குச் செல்கின்றவர். அவர் பணியில் என்னைச் சேரச் சொன்னார். என் இயலாமையைக் கூறி மறுத்துவிட்டேன். அந்த மகான் பெயர் உயர்திரு பரஞ்சோதி அடிகளார். சமீபத்தில்தான் ஒரு உண்மை அறிந்தேன். அவர்தான் வேதாத்ரி மகரிஷியின் குருநாதர் என்று!

மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தது. சுவாமி சச்சிதானந்த அடிகள் சென்னைக்கு வந்திருந்தார். அப்பொழுது அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஹிப்பிகளை நேர்வழிக்கு மாற்றி சிறப்பு பெயர் பெற்றிருந்தார். அவர் சென்னைக்கு வரவும் பத்திரிகையாளர்கள் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. என் நண்பர் பகீரதன் அவர்கள் தான் ஏற்பாடு செய்திருந்தார். என்னையும் வரச் சொன்னார். அன்றைய கூட்டத்தில் அவர் செயல்பாடுகளைக் கண்டு பிரமித்தேன். கூட்டம் முடிந்தும் அவருடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவருடன் அமெரிக்கா வந்து சேவை செய்யச் சொன்னார். என் இயலாமை கூறி மறுத்தேன்

துறவற வாக்கையை நான் தேடினேன். எனக்குக் கிடைக்கவில்லை. ஆன்மீகப் பனிகளுக்கு அழைப்பு வந்தன நான் மறுத்துவிட்டேன்.

இறைவன் எனக்கென்று ஒதுக்கிய பணி, வாழ்க்கையில் நலிந்தவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது. வரும் பிரச்சனைகளை எதிர் நோக்கி, நல்ல முறையில் செயல்பட என் குருந்தார் சிவானந்த சுவாமிஜியின் கடித வரிகள் எனக்கு வலிமை கொடுத்துவந்தது. இப்பொழுதும் அக்கடித்தத்தை என் குருநாதராக மதித்துப் பாதுகாத்து வருகின்றேன்.

எல்லாம் இறைவன் சித்தப்படிதான் நடக்கும். என் தாயார் கூறுவார்கள்: "திருப்பதி கோயிலுக்குப் போக வேண்டுமென்று வேண்டினாலும் அவர் கூப்பீட்டால்தான் போக முடியும்," என்று.

என் வாழ்க்கையில் அவர் திருவிளையாடலால், பல முறை கோபித்து அவரை நிந்தித்திருக்கின்றேன். ஆனாலும் அவர் இல்லை என்று எப்பொழுதும் நான் நினைத்ததில்லை. சொல்லப் போனால் அவர்தான் நிச்சயம், உண்மை என்பதையும் என் மனம் அறியும்..

தெய்வத்தின் அருளால் நம் சங்கரன் ஸ்ரீமடத்தின் ஆச்சாரியரானார். ஜெய ஜெய சங்கர கதையினைப் பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி: "திண்ணை"

No comments: