Thursday, September 9, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 20

"ஜெய ஜெய சங்கர" - இந்தத் தலைப்பில் கதை எழுதத் தொடங்கிய ஜெயகாந்தன் அப்படியே பயணம் சென்று “மனவெளி மனிதர்கள்” காணச் செல்கின்றார். பின்னர் “எந்தையும் தாயும்” மகிழ்ந்து குலாவிட முயல்கிறார். அவர் ஆரம்பித்த பயணம் “மகாயக்ஞம்” நடத்தி நிறைவுறுகின்றது. ஆம்! இத்ததனையும் "ஜெய ஜெய சங்கர"வின் தொடர்ச்சிகள்!

“ஒரு கிராமம்,ஆ! எப்பேர்ப்பட்ட கிராமம்! ஒரு குடும்பம், எவ்வளவு உன்னத ஆரிய லட்சியக் குடும்பம்! அதன் உறவுகள் என்னும் சரட்டில் ஒரு அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினை அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கோர்த்து ஆரமாக்குகிற உத்தியில் அறுந்து போவதற்கோ, முடிந்து போவதற்கோ இடமில்லாமல் போயிற்று”

ஜெயகாந்தன் தன் முடிவுரையில் வெளிப்படுத்தும் கூற்று. கதையாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்ந்து கொண்டே வரலாற்றை வட்டமிட ஆரம்பித்துவிட்டது. அக்காலத்திற்கே சென்று விட்டார் ஆசிரியர்.

எத்தனை பாத்திரங்கள்! எத்தனை சம்பவங்கள்! ஆசிரியரின் கனவுலகம் படிப்பவரை மிரள வைக்கின்றது. ஆன்மீகம், காந்தீயம், அரசியல், வரலாறு, இன்னும் பல கோணங்களில் தன் எண்ணங்களைப் பதிந்திருக்கின்றார். நாமும் முடிந்த மட்டும் தொடர்வோம்.

ஆதி தன் மகனை வீட்டைவிட்டுப் போகச் சொன்னதைக் கேட்ட ஆசாரிய ஸ்வாமிகள் ஒரு நீண்ட பிரசங்கமே செய்கின்றார்:

“சமூகவிஷயம் என்பது எதுவுமே ஓர் நல்ல தனி மனுஷ்யனுக்கு அப்பாற்பட்டது அல்ல; உலகில் உள்ள ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் பேரண்டம் அடங்கியிருக்கிறது. நமது சமூகங்கள் என்று நாம் நினைக்கிற அவை நம்மிலிருந்து விலகி நிற்கின்றன என்பதால் நாமும் அவையும் வேறாகிவிட முடியுமா? அதன் நடுவில்தான் நாமும் இருக்கிறோம். எவ்வளவு பற்றற்று, அல்லது தனிநெறி வகுத்துக் கொண்டு நாமிருந்த போதிலும் அதன் நடுவில்தான் அதன் ஒரு அங்கமாகவே நாமும் இருக்கிறோம். நாம் வேறு அதுவேறு என்று என்றாகிவிட முடியுமா? உன் தலையில் உனக்குகந்தது என்கிற ஒரு நெறியைச் சுமந்து திரிகிறாய். இப்படித்தான் ஒவ்வொருவரும்! பறவையின் சுதந்திரத்தை அங்கீகரித்து மகிழ்ச்சி அடைகிற மனத்தை வளர்த்த மனிதர்கள், தங்களுக்குச் சொந்தமான மக்கள் விஷயத்தில் இழந்துவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. “

ஓர் ஆத்மாவின் சுதந்திரத்தைப் புரிய வைக்கிறார்;மீண்டும் தொடர்கிறார்:

“முரண்பாடுகளும்,மோதல்களும் தவிர்த்த வாழ்க்கை, கோபமற்று குளிர்ந்த மனத்தோடு அவரவர் கொள்கையில் பொருந்தி நின்று போரிட்டுக் கொள்வது...ஆமாம்; போரிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் கொள்கையும் நெறியும் என்னாவது? போரிடலாம்; வாதிடலாம்; கோபமும் ஆத்திரமும் எந்தப் போராட்டத்திற்கும் உதவா .”

சத்தியமான வார்த்தைகள்! மாறுபட்ட கருத்துக்கள் வரலாம்;வாதிடலாம். தங்கள் கொள்கைகளுக்காகப் போரிடலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிடக் கூடாது. அது சமுதாய அமைதியைக் கெடுத்துவிடும்.

ஆதி மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிடுகின்றது. மகனைப் பார்க்கும் ஆவல் துளிர்க்கின்றது.பாசத்திற்கும் குரோதத்திற்கும் இடையில் ஒரு சிறு கோடுதான் இருக்கிறது. அதை நீக்கிவிட்டால் எல்லாம் அன்பு மயம். அன்பு இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும். அமைதியை இழக்கும் வழிகளில் செல்லலாமா?

ஆதியின் அமைதிக்குடிலில் பிறந்து வளர்ந்தவன் மகாலிங்கம். அவன் ஓர் அச்சமற்ற ஆண்மகன். அவன் எண்ணங்கள் போன பாதை வித்தியாசமானது

“ஒரு குடும்பத்தின் அடிமையாக நடைவண்டி பிடித்து நடந்து கொண்டிருப்பதைவிட இந்த சமூகத்திற்கோர் அடிமையாகித் தன்னிச்சையாய்க் கைகளை வீசி நடக்கலாம் என்று தோன்றுகிறது.”

புதிய தலைமுறை தோன்றிவிட்டது. பிறரிடம் வேலைக்குப் போவது அடிமைத்தனம் என்று கூறும் தந்தைக்கு இந்தப் பேச்சு பிடிக்காமால் மகனை வீட்டைவிட்டு அனுப்பச் செய்துவிட்டது. ஸ்வாமிகளின் பேச்சு ஆதியின் மனக் கண்களைத் திறந்துவிட்டது. சுதந்திர வாழ்க்கையில் சுற்றித் திரியும் மகனைக் காண முடிவு செய்துவிட்டார்

மனவெளி இல்லம் நோக்கிப் புறப்படுகின்றார் ஆதி. அவர் மகன் மகாலிங்கம் சென்றிருக்கும் இடம்பற்றி அவர் மனைவி தேவியிடம் விசாரித்து அறிந்து கொண்டவுடன் தாமதிக்காது புறப்பட்டு விட்டார். ஸ்வாமிஜியின் அன்புக் கட்டளைக்காக மட்டுமல்ல, தன் மகனைக் காண வேண்டுமென்ற துடிப்பும் அவரைத் தூண்டிவிட்டது. மனவெளி மனிதர்களுடன் அவர் மகன் மகாலிங்கம் வசிக்கின்றான்.

தலைப்பைப் பாருங்கள்! மனவெளிமனிதர்கள்! அந்த வீட்டின் பெயர் மனவெளி இல்லம்.

அங்கே ஒளிவு மறைவு கிடையாது. போலித்தனமில்லா புனித இடம். அவரவர் கொள்கையுடன் சுதந்திரமாக வளைய வர முடிந்த இடம். கொள்கைகள் வேறாயினும் அன்பும் பண்பும் கலந்த ஓர் குடில். மாற்றுக் கொள்கையென்றால் மற்றவரைத் தாக்கித்தான் ஆக வேண்டுமென்ற தற்கால குணக்கேடு அங்கே இல்லை. புரட்சிக்காரனும் புன்னைகையுடன் தன் உறுதியில் எப்படி நிற்க முடியும் என்று காட்டும் ஓர் உன்னதமான இடம்.

நாமும் அந்த அன்புக் குடிலுக்குள் செல்வோம். குடிலுக்குச் சொந்தக்காரர் சிங்கராயர்.ஒரு காலத்தில் ஓர் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அவரின் தோற்றம் தாடி இல்லாத தாகூர் போலவும், தலைப்பாகை இல்லாத பாரதி போலவும் பிறருக்குத் தோன்றும். சுதந்திரம் பெற்ற பின் திருமணம் என்றிருந்து கொஞ்சம் வயதாகவிட்டு செல்லம்மாளை மணக்கின்றார். அவருடைய ஒரே மகன் சத்தியமூர்த்தி ஓர் புரட்சிக்காரன். அவன் ஓர் ஆசிரியராக இருந்தான் என்றாலும் மகாலிங்கத்தைவிட வயது வித்தியாசம் அதிகமில்லை. மகாலிங்கம் புரட்சிக்ககரன் இல்லாவிட்டாலும் இருவரையும் நட்பு பிணைத்திருந்தது. சத்தியமூர்த்தி புரட்சிகரமாக புத்தகம் எழுதுகிறான் என்றும் சில காரியங்கள் புரட்சிகரமாய் செய்து வருகின்றான் என்று கைது செய்யப்பட்டு இப்பொழுது சிறையில் இருக்கின்றான்.

சிங்கராயரின் பேச்சுக்கள் மூலம் அக்காலச் சூழல், சிந்தனைகள், செயல்பாடுகளை படம்பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

மகனைப்பற்றி பேசும் பொழுது மாணவர்களைப் பற்றி விளக்குகின்றார். மாணவர்கள் இந்தக் காலத்தின் அடையாளங்கள்.அவர்கள் நம்பிக்கைகளும், லட்சியங்களும் மிக உயர்ந்தவை.அதைப் புரிந்து கொள்ளளதவர்களை, அவர்கள் அலட்சியப் படுத்துகிறார்கள்.அது தப்பு என்று பெற்றோர்கள் புலம்புகின்றார்கள்.

புலம்புகிற மனிதர்களை ஒரு போதும் இளைஞர்கள் மதிப்பதில்லை. தனி நபர் சத்தியாகிரகம், காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டம் இவைகளில் ஈடுபட்டவர்களைப்பற்றியும் பேசுகின்றார்

“அந்தக் காலத்தில் தாயும் தகப்பனும் பெற்றோராகவே நமக்குத் தெரியவில்லை. .. காந்திஜியும் கஸ்தூரிபாயும் தான் நமக்கெல்லாம் சொந்தத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார்கள் ?"

இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அந்தக் குடும்பத்தில் என் தந்தையும் ஒருவராக இருந்தாரே ! எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு இந்த நிலை!

வீட்டை மறந்து, சொந்த உறவுகளின் நினைப்பின்றி போராடிப்பெற்றது சுதந்திரம். தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது இருப்பதையெல்லாம் நாட்டு சுதந்திரத்திற்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள். அவர்கள் அரசியல்வாதிகளல்ல. இந்த மண்ணின் மைநதர்கள். சுயநலமற்ற மனிதர்களைக் காண்போமா என்று மனம் ஏங்குகின்றது.

அந்தத் தியாகியின் மனைவி செல்லம்மளும் மற்றும் சோசப்பு என்ற ஓர் உதவியாளரும் அவ்வீட்டில் வசித்து வந்தனர். சிங்கராயர் காந்தீயவாதியென்றால் அவர் ஒரே மகன் சத்திய மூர்த்தி ஓர் புரட்சிக் காரன் . மார்க்ஸிய சித்தாந்தக் கொள்கையுடையவன்.சத்தியமூர்த்தி சிறைக்குச் செல்லவும் மகாலிங்கம் இவர்களுடன் தங்க ஆரம்பித்து விட்டான்.

ஜெயகாந்தன் அவர் இளமைக் காலத்தில் கம்யூனிசத்தில் இருந்தவர். எனவே காந்தீயமும் கம்யூனிசமும் அவர் எழுத்தில் கைகோர்த்துக் கொண்டு வருகின்றது. கதை என்பதைவிட உரையாடல்களே அதிகம்.

மகன் தீவிரவாதியாக இருப்பதைப் பற்றிப் பேசுகின்றார் சிங்கராயர்.

“இவர்கள் மட்டும் காந்திஜி சொன்னதைக் கேட்க மாட்டார்கள். இளைஞர்கள் மட்டும் கேட்க வேண்டும் என்றால் இது என்ன நியாயம் ? ..இளைஞர்கள் பலாத்காரத்தை நம்புகிறார்கள்.அதை எப்படி தடுக்க முடியும்? “

நிறைய பேசுகின்றார்கள். இனி பேச்சு பேச்சு பேச்சு தான்

பாரதியுடன் பழகிய காலத்து நடந்தவைகளையெல்லாம் விவரிக்கின்றார். பாரதிதான் சமதர்மம், பொதுடமை ஆகிய கருத்துக்களை பரிச்சயம் செய்துவைத்த முதல் புரட்சியாளர் என்கிறார்.

காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை எழுத்தில் படிக்கும் பொழுது இப்பொழுதும் மனம் கலங்குகின்றது. அந்தக் காலத்திற்கு மீண்டும் பறந்தேன். அந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பொழுது நானும் என் தந்தையும் ஒரே அறையில் தான் இருந்தோம். செய்தி கேட்டவுடன் என் தந்தை மயக்கம் போட்டு விழுந்தார். நானோ ஓவென்று கத்தி அழுதேன். அங்கே இருந்த மற்றவர்கள் என் தந்தையைக் கவனித்தார்கள். ஏனோ மரணச் செய்திகள் கேட்கும் பொழுதெல்லாம் நான் அதிர்ந்து போய்விடுவேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மையம் ஒன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான் திருமதி இந்திராகாந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து துடித்துப் போனேன். மாரடைப்பு வந்து கைகால்கல்கள் அசைவின்றி இருந்த என் தாயாரைக் கவனித்துக் கொண்டு பங்களூரில் வாழும் பொழுது முன்னால் பிரதமர் திரு ராஜீவ் காந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்தேன்.

இந்த மண் எத்தனை உயிர்களைக் காவு வாங்கி இருக்கின்றது.

ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர் தொடர் என்னைப் பல வகையிலும் ஆட்டி வைத்தது.

மனவெளி இல்லத்திற்குச் செல்வோம். இவர்கள் குடும்பத்தில் சேர்ந்தவள் இன்னொருத்தியும் கூட. அவள்தான் உமா. அந்தப் பெண்ணும் ஓர் புரட்சியாளர். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஒருத்தி புரட்சி கொடி பிடித்து பெற்றோரையும் விட்டு வெளிவந்து இந்த இல்லத்தில் குடிபுகுந்துவிட்டாள். சத்தியமூர்த்தியின் கொள்கை ஈர்ப்பில் வந்து மனவெளி இல்லத்தில் ஒட்டிக் கொண்டவள்.

மனவெளி இல்லத்தில் வெவ்வேறு கொள்கைகள் உள்ளவர்கள் இருந்தனர். கொள்கைப் பிடிப்பிலும் இருந்து கொண்டு பிறர் மனத்தைக் காயப்படுத்தாமல் ஒன்றி வாழும் தன்மையுடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

காந்திஜியும் பாரதியும் அதிகமாகப் பேசப்பட்டார்கள். அரசியல் அதிகமாகப் பேசினார்கள். இந்த உரையாடல்கள் பற்றி எழுதாமல் கதையைத் தொடர விரும்புகின்றேன்.

ஸ்வாமிகளைப் பார்க்கப் போவதாக மகாலிங்கம் ஒப்புக் கொள்ளவும் ஆதிக்கு மகிழ்ச்சி. மனவெளி மனிதர்களிலிருந்து “எந்தையும் தாயும்” போகின்றார் ஆசிரியர்.

மனவெளி இல்லத்திலிருந்து புறப்படும் பொழுது சிங்கராயர் ஒரு புத்தகம் ஆதிக்குக் கொடுக்கின்றார். ஆதியின் வீட்டில் படிப்பதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு.ஆதிக்குப் புத்தகங்கள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம்.

“ஒரு மனிதனால் சாப்பிடாமலும் தூங்காமலும் கூட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக முடியும் என்றால் உணவின் மூலமும் , ஓய்வின்மூலமும் அவனுக்குக் கிடைக்க வேண்டிய சக்தியும் போஷாக்கும் அந்தப் புத்தக்த்திலிருந்தே கிடைத்துவிடும். படிப்பதும் , தியானம் செய்வதும் வேறு வேறு அல்ல ..“

ஆதியின் வாயிலாக வரும் ஆசிரியரின் கருத்து.

புத்தகங்களைப் படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவையும் நானும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். முதுமையில் முடங்கிக் கிடக்கும் எனக்கு நண்பர்கள் புத்தகங்கள்தான்.

மகாலிங்கமும் உமாவும் ஆதியின் வீட்டிற்கு வந்தார்கள். உமாவும் வேதமும் சீக்கிரம் தோழிகளாகிவிட்டனர். அங்கும் ஒரே உரையாடல்மயம். மகாலிங்கம், உமா, வேதம் மூவரும் ஆசாரிய ஸ்வாமிகளைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார்கள்.

மகாலிங்கத்தின் வாழ்க்கை ஒருவிதமாக அமைந்துவிட்டது. தந்தையுடன் இருக்கும் பொழுது கட்டுப்பாடுகள் அதிகம். பின்னர் சத்தியமூர்த்தி தொடர்பினால் பல புத்தகங்கள் படித்து, தன்னை ஒரு நாஸ்திகன் என்று பிரகடனம் செய்து கொள்ளும் அளவுக்கு நவீன மனிதனாய் வளர்ந்திருந்தான். அந்தவிதத்தில் எள்ளளவும் குறைவில்லாதவள் உமா. அதே உமா இப்பொழுது கையில் பிரசாதத்தட்டுடன் நெற்றியில் குங்குமம் திகழ நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் வேஷதாரிகளல்ல. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்புடையவர்கள்.

ஆசாரிய ஸ்வாமிகளை மூவரும் சந்தித்தனர். எல்லோரைப்பற்றியும் விசாரித்துவிட்டு அவர் கூறிய அறிவுரை ஒன்றுதான். ஆதி விரும்பும் ஆஸ்ரமப் பணிகளில் அவர்களும் பங்கு கொள்ள வேண்டும். தனித்தன்மையை இழக்காது ஒருங்கிணந்து சேவைகள் புரியலாம்

அந்தப் பரபிரம்மம் இல்லாத இடம் ஏது ? அவன் படைத்த உயிர்களுக்குத் தொண்டு செய்வது அவனுக்குச் செய்யும் ஆராதனை அங்கே எந்த விவாதங்களும் நிகழவில்லை.

மூவருக்குள்ளூம் ஏதோ ஓர் மன நிறைவு. அங்கே அர்த்தங்களை அனர்த்தமாக்கும் மனிதக் கூட்டம் இல்லை. சுதந்திரமாகச் சிந்திக்க முடிந்தது. இன்றைய இளைஞர்களுக்கும் வேண்டியதும் அதுதானே!

கடந்த காலத்திற்கு என் மனம் பயணம் சென்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரை அறிந்தவர்களுக்கு நான் சொல்வது தெரிந்த விஷயம். அவருக்குத் தன் ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களீல் தொழில் வளர்ச்சி வேண்டும் என்று விரும்பினார். கூட்டுறவுச் சங்கங்கள் நிறைய தொடங்க வழி காட்டினார். சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள் அனைவரையும் கூட்டி விருந்தளித்து உட்காரவைத்து என்னென்ன நலத் திட்டங்கள் இருக்கின்றன என்று விசாரிப்பார். பள்ளிக்கூடங்கள் முதல் பல வசதிகளைப் பற்றிப் பேசுவார்.வெறும் பேச்சுடன் இருக்கவில்லை. அவரால் குன்றக்குடியைச் சுற்றி இருந்த பல கிராமங்களுகு நன்மைகள் கிடைத்தன. முக்கியமாக தொழில் மையங்களும் கூட்டுறவு மையங்களும் ஏற்பட வழி செய்து கொடுத்தார்.

காவியுடை உடுத்தியவராயினும் அவருக்குள்ளும் கம்யூனிச சித்தாந்தக் கொள்கைகள் இருந்தன. “மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்ததை நான் அனுபவத்தில் பார்த்திருக்கின் றேன். இப்பொழுது பலரும் சமுதாய நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வழி நடத்துகின்றனர். எனவே நம் கதையில் ஆஸ்ரமம் ஆரம்பித்து சமூக நலப் பணிகள் செய்வதை ஆசாரிய ஸ்வாமிகள் ஊக்குவிப்பது ஆச்சரியமில்லை. காஞ்சி மடத்தின் கீழ் பல சேவை இல்லங்கள் இயங்கி வருகின்றன.

இதுவரை சந்தித்தவர்களை விடுத்து சத்திய மூர்த்தியிடம் கூட்டிச் செல்லுகின்றார். சத்தியமூர்த்தி தற்போது வாழும் இடம் ஓர் சிறை. அங்கும் பல மனிதர்கள், பல சிந்தனைகள் என்று கதையை நகர்த்துகின்றார். சிறை சீர்திருந்தவேண்டும், அதன் நிலை மேன்மைப்படவேண்டுமென்று நினைக்கின்றான். அங்கும் வாழ்பவர்கள் மனிதர்கள் தானே. அவர்கள் விஷயத்தில் கொடுமையாக இருப்பவர்கள் மனுஷ குலத்தின் வெறுப்புக்கும் ,நிந்தனைக்கும் ஆளாகத்தகுந்தவர்களே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அவன் எங்கிருந்தாலும் மனிதர்களின் நலனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவன்.

அங்கே ஒரு சிறைக் கைதி, அதாவது தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் ஒருவரைக்காட்டி அங்கும் ஒரு காட்சியை வரைந்துவிடுகின்றார் கதாசிரியர். சுதை மண்ணிலிருந்து சிற்பம் செய்யத் தெரிந்தவன். அவனுக்கு ஒரு விருப்பம். தூக்கில் தொங்க இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதற்குள் சுதை மண் கிடைத்தால் காந்தி சிலையொன்று செய்துவிட முடியும் என நினைக்கின்றான். அவன் ஆசையை சத்திய மூர்த்தியிடம் கூறுகின்றான். சாகும் வரை மவுன விரதம் காத்து மகாத்மா காந்திக்கு ஓர் சிலை எடுக்க விரும்பும் சிறைக் கைதியைக் காட்டுகின்றார் ஆசிரியர்.

சாவு நெருங்கும் பொழுதும் நினைப்பில் காந்தி வருகின்றார் என்றால் அக்காலத்தை நினைக்கும் பொழுது இப்பொழுதும் சிலிர்க்கின்றது. காந்திஜி .. காந்திஜி ..காந்திஜி.

ஏனோ இத்தொடரில் வரும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக, சில கொள்கைகள் உள்ளவர்களாகக் காட்டிச் செல்லுகின்றார் ஜெயகாந்தன். அவர் கற்பனையுலகு அமைதியும் ஆனந்தமும் கலந்த ஓர் சுவர்க்க பூமி. ஆசைப்படுவதாவது அர்த்த முள்ளதாக இருக்கட்டுமே! பிறக்கும் பொழுது மனிதன் கெட்டவன் இல்லை.

அந்தக் கைதியின் கோரிக்கையைக் கேட்டவுடன் சத்தியமூர்த்திக்குப் பாடத் தோன்றுகின்றது

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

இந்தப்பாடலைப் பாடிக் கொண்டே தன் இருப்பிடம் செல்லுகின்றான் சத்தியமூர்த்தி. இங்கிருந்து பயணம் “மகாயக்ஞம்” நோக்கிச் செல்லுகின்றது.

(தொடரும்)

நன்றி: "திண்ணை"

No comments: