Wednesday, February 27, 2013

நினைவலைகள் 24


நினைவலைகள்  -24

 நாடகம் மிகவும் சக்தி வாய்ந்தது.
இன்னொரு சம்பவமும் கூற வேண்டும்.

உலக வங்கி ஊட்டச் சத்துதிட்டம் மதுரை மாவட்டத்தில் தான் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப் பட்டிருந்தது. அந்தப் பணியைச் செய்யும் பொறுப்பில் உதவி இயக்குனர்களாக நானும் வசந்த குமாரியும் இருந்தோம். மதுரையில் நான், தலைமை அலுவலகத்தில் வசந்த குமாரியும் உதவி இயக்குனர்களாக இருந்தோம்.

அமெரிக்காவிலிருந்து தணிக்கைக் குழு வந்தது. அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் பெயர் ஜிம். மிகவும் கெட்டிக்காரர். அவரிடம் மாவட்ட வரை படத்தைக் கொடுத்துவிடவேண்டும். எங்கு போக வேண்டுமென்று ஜீப்பில் ஏறும் பொழுதுதான் கூறுவார். போய்க் கொண்டிருக்கும் பொழுதே பாதையை மாற்றுவார். ஊருக்குள் சென்றாலும் மையத்தை பார்வையிட்ட பின் ஆங்கிலம் தெரிந்த ஒருவரைக் கூப்பிட்டுக் கொண்டு ஊருக்குள் சென்று குடும்பங்களைப் பார்த்துப் பேசுவார்

அப்படிப்பட்டவருடன் போய்க் கொண்டிருக்கும் பொழுது வாடிப்பட்டி வட்டாரத்தில் ஒரு கிராமத்தில் மையத்தைப் பார்வையிட்டார்.
அங்கிருந்த பணியாளர் அவ்வளவு திருப்திகரமாக மையத்தை வைத்திருக்கவில்லை.

என்னிடம் ஒரு குணம் உண்டு. உண்மைகளை மறைக்க மாட்டேன். அதே நேரத்தில் பலஹீனங்களின் காரணங்களைத் தெரிந்து வைத்திருப்பேன். முயற்சி செய்யும் பொழுது சில திருந்தும் . சில திருந்தாது. இது உலகம் எங்கினும் பொதுவானதே.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கிராமத்துப் பெரியவர்களில் சிலர் வந்தனர். பணியாளரைப் பற்றியும் மையத்தைப் பற்றியும் குறைகள் கூறினர். பேசிக் கொண்டு வரும் பொழுதே அவர்கள் சொன்ன செய்தி ஒன்றுதான் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

“மேலதிகாரிங்க கொஞ்சம் அக்கறையுடன் பாத்துக்கிட்டா இப்படி இருக்காது. முன்னாலே எங்க ஊரிலே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்க மாதிரி இதுவரை யாரும் வரல்லே. எல்லார்கிட்டேயும் நல்லாப் பழகு வாங்க. எங்க சுத்துபட்ட கிராமங்கள்ளேயும் எல்லாருக்கும் அந்த அம்மாவைத் தெரியும். நல்ல பாடுவாங்க, நடிப்பாங்க, ஆடுவாங்க. எங்களுக்கு அவங்க பாட்டு, நடிப்பு ரொம்பப் பிடிக்கும் “

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவர்கள் யாரைச் சொல்லுகின்றார்கள் என்று புரிந்தது. மெதுவாக நான் வசந்த குமாரியிடம் விபரம் சொன்னேன்.
உடனே அவர்களோ ஊர்க்காரகளைப் பார்த்து “அவங்க பேர் என்ன?’
என்று கேட்டுவிட்டார்கள்

சீதாலட்சுமி அம்மா. எங்க ஊர் எஸ் ஈ .ஓ அம்மா

இங்கே நிக்கறாங்களே அவங்கதான் நீங்க சொல்ற சீதாலட்சுமி அம்மா

இப்பொழுது அவன் விழித்தான்

அவங்க நல்லா இருப்பாங்களே!

கடவுளே, அவ்வளவு அசிங்கமாகவா ஆயிட்டேன் !
20 ஆண்டுகளில் நான் நிறைய மாறிவிட்டேன் என்பது புரிந்தது. அது சரி, வேலைகளைப் பற்றி புகழ்ந்தால் சரி, இவரோ நாட்டியத்தையும் நாடகத்தையும் புகழ்கின்றார்.

மனித மனத்தில் கூத்து எவ்வளவு ஆழமாகப் போய் உட்கார்ந்து கொள்கின்றது!

வசந்தகுமாரி ஊராருக்கு விளக்கிவிட்டு ஜிம்முக்கும் நடந்தவைகளைக் கூறினார்கள். பின்னர் ஜிம் அவரிடம் அந்தக்கால செய்திகளைப் பற்றியும் என்னைப் பற்றியும் விசாரித்தார். அந்தத் திட்டத்தில் “communication “
என்ற ஒரு பிரிவு உண்டு. என்னிடமும் விசாரித்தார். சுதந்திரம் கிடைத்தவுடன் விழிப்புணர்விற்காக இந்தியா மேற்கொண்ட திட்டங்களை விளக்கினேன். அதனைக் கேட்டபின்னர் இப்பொழுதும் அதே வேகத்துடன்
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் கூறினார். அவருக்கு நான் மிகவும் பிரியமானவளானேன்.

இருபது ஆண்டுகளுக்குப் பின்னும் ஒருவரின் நினைவைப் பசுமையாகத் தக்க வைக்கும் வல்லமை கூத்துக்கே உண்டு.

அப்பப்பா, கூத்து மனிதனை எப்படி தனக்குள் அடிமைப் படுத்திவிடுகின்றது! மக்கள் திலகம் மக்களுக்குத் திலகமானதே அவரின்
திரையுலகப் பாத்திரங்கள்தானே.

வாடிப்பட்டியில் என் மேடைப் பேச்சில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அடுக்குத் தொடர்ப் பேச்சு போய், பேச்சுத் தமிழில் பேச ஆரம்பித்து விட்டேன்.
என்னுடைய பேச்சில் கவரப்பட்டவர்கள் பலர். அதன் காரணமாக என்னை அரசியலுக்கு அழைத்தவர்கள் பலர். அப்பொழுது திருமதி .அனந்த நாயகி மேடைகளில் வேகமாகப் பேசுவார். என் பேச்சு அவரைவிட நன்றாக இருக்கின்றது என்று கூறுவர்.

நாடகம் ஒரு கூட்டு முயற்சி. சட்டென்று அரங்கேற்றிவிட முடியாது. ஓரங்க நாடகத்திற்கும் சில நியதிகள் உண்டு.

என் வாழ்க்கையில் என் பேச்சுத்திறன் தான் முக்கியப் பங்கு வகித்தது.
அதன் ஈர்ப்பிலேதான் பலருடைய மதிப்பையும் நட்பையும் பெற்றேன்.
பணிக்கால சோதனைகளில் எனக்கு உதவியாக இருந்தது பேச்சும் பத்திரிகையுலகமும்.

பத்திரிகை உலகம் என்றவுடன் எழுத்தாளர்களாக இருக்க வேண்டுமென்பதல்ல. மாவட்ட அளவில் அதிகாரியாகப் பணி யாற்றும் பொழுது ஊராட்சித் தலைவர் முதல் பாரளுமன்றத்தலைவர்கள் வரை எல்லாக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எங்களிடம் வருவார்கள். நாங்களும் போவோம். பல பிரச்சனைகள் வரும். அவைகள் பத்திரிரிகைகளில் மோசமான விமர்சனத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் பத்திரிகை நிருபர்கள் தொடர்பு மிக மிக முக்கியம்.

ஒரு மாவட்ட அதிகாரி நல்ல முறையில் பணியாற்ற, அமைதியுடன் செயல்பட மாவட்ட ஆட்சியாளரின் நன்மதிப்பையும் பத்திரிகை நிருபர்களின் நட்பையும் பாதுகாக்க வேண்டும். இதில் சுணக்கமாக இருப்பவர்கள் நல்ல பெயர் எடுக்க முடியாது. இது தொழில் தந்திரம்.

நம்மிடையே ஒருவர் சாட்சியாக இருக்கின்றார். அவர்தான் நம் தமிழ்த்தேனி அவர்கள். நான் சென்னைக்கு வரும் பொழுது என்னுடன் வந்து கொண்டிருந்த தமிழ்த் தேனியுடன் ஓர் இல்லாம் சென்றோம். அங்கே இருந்தவர் பெயர் சரோஜா.

என்னைப் பார்த்தவுடன் அழுது கொண்டே காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். உடனே தன் மருமகள் மூவரையும் அழைத்து நமஸ்காரம் செய்யச் சொன்னாள். “என்னை வாழ வைத்த அம்மா “ என்று அறிமுகம் செய்தாள். நான் இல்லாமல் போயிருந்தால் அவளோ அவள் பிள்ளைகளோ இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றாள். ஒரு காலத்தில் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தாள். இன்று பங்களா, மூன்று கார்கள் என்று மாம்பலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். 

இத்தனையும் தம்பி தமிழ்த் தேனிக்கு முன்னால் தான் நடந்தது.

அழிந்து போக இருந்த ஓர் குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது. எப்படி? என் பத்திரிகை பலம் மற்றவரைப் பயமுறுத்தியது.
அடுத்து விளக்கமாகக் கூறுகின்றேன்.

பத்திரிகை கத்தியைவிட கூர்மையானது.

அதன் கூர்மை அதன் சுதந்திரத்தில் இருக்கின்றது.

அதிகாரத்தில் இருந்தவர்கள் என்னிடம் காட்டிய மரியாதை, அது எனக்கல்ல. என் பின் நின்ற பத்திரிகை உலகமே காரணம். .அடுத்து அதனையும் விளக்குகின்றேன்.

தெள்ளிய நீரோடையாகப் போய்க் கொண்டிருந்த நினவலைகள் இனி வெகம் எடுக்கும். சில நேரங்கலில் சுனாமி அலைகளையும் பார்க்கலாம்.
பால்யூவின் ஆசையை அவர் மறந்த பின் நிறைவேற்றுகின்றேன். .அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்.

தொடரும்



No comments: