Tuesday, February 21, 2012

நினைவலைகள்-07

அடிக்கடி நம் மூதாதயரை நினைக்க வேண்டிவருகின்றது. காரணம், சில பழக்கங்கள் ஏதோ ஒரு வடிவில் ஒட்டிக் கொண்டே வருகின்றது.

.காட்டிலே திரியும் பொழுது இரைதேடி வெளிச் செல்வான். உடல் பசிவந்துவிட்டால் பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு பெண்ணிடம் இச்சையைத் தீர்த்துக் கொள்வான். தாய், தாரம். உடன் பிறந்தோர் என்ற உறவுகள் அப்பொழுது கிடையாது. வரலாறு படிக்க வேண்டும். மனிதன் தோன்றி லட்சக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டது. அந்த அளவு கால ஆராய்ச்சி வேண்டாம். வால்கா முதல் கங்கை வரை என்ற புத்தகம் இருக்கின்றது. அதையாவது படித்துப் பாருங்கள்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை வருமாம். ஆண்மகனுக்கு ஒருத்திமட்டும் போதவில்லை. இடையில் மனிதனைச் செம்மைப்படுத்த கதைகளும் காவியங்களும் வந்திருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் அவன் தன் பலஹீனத்தைவிட முடியாமல் திண்டாடுகின்றான். ஆண்களுக்குச் சலனங்கள் தோன்றுவது இயல்பு. ஆன்மபலத்திலும் பயிற்சியிலும் அடக்குகின்றான். காலப் போக்கில் சிலருக்கு இத்தகைய சலனங்கள் தோன்றாத நிலை வரலாம். சிலர் சலனத்தில் மட்டுமல்ல சபலத்தில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.

இராமாயணம் இன்றும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றால் ராமனே காரணம். தொலைக் காட்சியில் எத்தனை முறை வந்தாலும் அலுக்காமல் பார்ப்பவரின் கூட்டம் இருப்பதாலேயே மீண்டும் மீண்டும் இராமாயணம் வருகின்றது.

அக்காலத்தில் இராமகதையால் ஆண்களுக்கு ஏற்பட்டது வியப்பு.

சிந்தையாலும் பிற மாதரைத் தொடேன்!இது முடிகின்ற காரியாமா என்ற திகைப்புஆணுக்கு. அப்படி இருக்க முடியாவிட்டாலும் கொஞ்சமாவது சீரா இருக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுபவர் இராமன்.

பெண்ணுக்குத் தன் கணவன் தன்னைத் தவிர வேறு யாரிடமும்செல்லக்கூடாது என்ற ஆதங்கம் அதிகம். அவள் கண்களுக்கு இராமன் மிக உயர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார்.

இன்னொரு காரணமும் உண்டு. மனிதன் குடும்பம் என்ற கோட்பாட்டைக் கொண்டுவந்தபின் அதன் அருமையை உணர்ந்தான். பின்னர் முதுமை வரும் பொழுது அவன் மனத்தில் இன்னொரு ஏக்கம் வளர ஆரம்பித்தது. தான் தேடிய சொத்துக்களைப் பராமரிக்க மட்டுமின்றி தன்னை அன்புடன் பாதுக்கும் பிள்ளகளாக இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தான். தனக்குக் கட்டுப்பட்டவனாக இருக்க வேண்டுமென்று விரும்பினான்.. தந்தை சொல்லைத் தட்டாத இராமன் அவனுக்குத் தெய்வீக புருஷனாகத் தெரிந்தார்.

காட்டுக்குப் போ, என்ற செய்தி கேட்டாலும் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை முகத்தினைக்கொண்ட இராமனைப் போன்ற பிள்ளை தனக்கு வேண்டும் என்று நினைக்காத தந்தைமனம் உண்டோ?

காக்காய்க் கதை, நரிக்கதை என்று குழந்தைகளிடம் கதைகள் சொல்லுகின்றோம். நீதிக் கதைகள். நல்லது கேட்டல், நல்லது பார்த்தால் நல்லதாக இருக்கத் தோன்றும். இது உளவியல். இத்தனை முயற்சிகளிலும் திருந்த முடியாத மனங்களும் உண்டு.

1956 - இந்த ஆண்டில், கிராமங்களில் சில காட்சிகள் காணலாம்.

பணக்காரன் வில்வண்டியில் ஒரு வைப்பாட்டி வீட்டிற்குப் போவது அவனுக்குப் பெருமை. அப்படி வெளிச்செல்லும் கணவனிடம் பெண் முகம் தூக்கி வைத்துக்கொள்வாள்; அழுவாள்; இரண்டு நாட்கள் பேசாமல் இருப்பாள். ஏதாவது கணவன் வாங்கிக் கொடுத்து விட்டால் சமாதானம் ஆகிவிடுவாள். கணவன் நிரந்தரமாகப் பெண்ணை வைத்துக்கொள்ளும் பொழுதுதான் போராட்டம் வரும்; பெரும் சண்டையும் நடக்கும். எளியவர் வீடுகளில் நடக்கும் சண்டைகள் வீதிக்கு வரும். கணவனின் அடியும் மிதியும் கிடைக்கும்.

கண்ணகியால் அன்று பேச முடிந்ததா? கடவுளிடம் கூடக் கணவனைப் பற்றிக் குறை கூறினால் கற்பு பாதிக்கப் படும் என்றல்லவா எழுதி வைத்துவிட்டார்கள். காதல் பரத்தைகூட, தலைவன் வர சில நாட்களானால் பொறாமையிலும் ஆத்திரத்திலும் பேசுவதைச் சங்கப் பாடல்களில் காணலாம். தாலி கட்டாத மனைவியும் பெண். அப்படி பொறாமைப்படுவது உரிமையில்லா விட்டாலும் அது பெண்ணின் இயல்பு. எனவே இரு நிலையிலும் பாதிக்கப் பட்டவர்கள் பெண்கள்.

பெண்ணுக்கு மட்டும் கற்பை வைத்தான். நிச்சயம் அது ஆண்டவனின் சட்டம் இல்லை. ஒரு பெண் கர்ப்பமாகி இத்தனை மாதங்கள் கருவை வயிற்றில் சுமக்க வேண்டுமென்பது பொது விதி. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்துப் பெண்ணுக்கும் அமெரிக்காவின் நியூயார்க்கில் வாழும் பெண்ணுக்கும் ஒரே விதி. இதுதான் இயல்பானது. உயர்குலப் பெண்டிற்கு மட்டும் கற்பு என்று கூறுவது ஆண் வகுத்த சட்டம். அவனுக்குச் சலுகைகள் உண்டு. பல பெண்களிடம் அவன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். அன்று அவன் அதற்குச் சில காரணங்களை நினைத்திருக்கலாம். அக்காலத்தில் வாணிபத்திற்காக ஆண் வெளிச் செல்ல வேண்டும். வெளியில் செல்லும் ஆணுக்கு வீட்டுக்குத் திரும்ப நாட்களாகும்.எனவே உடல் பசியை அவனால் ஒத்திப்போட முடியாது. அதுசரி, அவன் வர நாட்களாகும் பொழுது பெண்ணிற்குப் உடல்பசி ஏற்படாதா? அவள் மூளைச் சலவை செய்யப்பட்டாள். அவள் கணவனுக்குக் கட்டுப் பட்டவள். அவனுக்கு இன்பம் கொடுப்பது, பிள்ளைகளைத் தருவது, அவன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது அவள் கடமைகள். அவள் வீட்டுக்குள் இருந்தால்தான், பிறக்கும் குழந்தைகள் தன்னுடையது என்பதற்கு உத்திரவாதம் இருக்கும்.

இது ஆரம்பத்தில் ஆணாதிக்கம் என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப் பட்டாலும் ஆண் அந்த குடும்ப அமைப்பில் அமைதி கண்டான். பெண்ணின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. மற்ற பெண்களிடம் காணாத அமைதியை உரிமையுள்ள மனைவியிடம் கண்டான். அவள் தன்னை விட்டுப் போகக் கூடாது என்பதற்கு பெண்ணுக்கு இன்னும் கூடுதலாகக் கட்டுப்பாடுகளை விதித்தான். இதுதான் சமுதாய வரலாறு. அன்பிலும் அச்சத்திலும் விளைந்தது அடக்குமுறை.

பெண் விடுதலைக்கு நானும் போராடியவள். சொல்லப் போனால் நான் சமுதாயத்தில் ஓர் போராளியாகவே வாழ்ந்தேன். உலகம் தோன்றிய நாள் முதலாய் மனிதன் வாழ்ந்த விதத்தை, மனித இயலை ஆழ்ந்து படிக்கப் படிக்க ஓர் புதிய எண்ணம் தோன்றுகின்றது. அந்தக் காலத்தில் பெண் வீட்டை விட்டு சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாது.அப்படி வரும் பெண்கள் சிதைக்கப்படலாம். பலரிடம் வதை பட்டு அழிவதை விட அக்காலத்தில் ஒருவனிடம் அடங்கி இருந்தது அவளுக்குப் பாதுகாப்பாகவும் இருந்திருக்கலாம். இந்த என் எண்ணத்தைத் தாக்கிப் பேசுவார்கள் என்று தெரிந்தே இதனை எழுதுகின்றேன்.

குடும்பத்தின் அருமையை ஆண் உணர்ந்து கொண்டான்.எனவே, பெண்ணைப் போற்றிப் பாட ஆரம்பித்தான்.இயற்கையில் கூட அவன் பெண்ணைக் கண்டான். சாந்தமான கடவுள் உருவங்களைப் பெண் வடிவில் செய்தான். ஒரு பிரச்சனையை ஆராயும்பொழுது அந்தக் காலம், அக்காலச் சூழல், அப்பொழுது மனிதன் தனக்கு வைத்துக் கொண்டிருந்த விதிகளையும் நோக்க வேண்டும். அவன் செய்த தவறு அந்த விதிகளை எக்காலத்திலும் நிலை நிறுத்த நினைத்ததுதான். சோடாபாட்டில் அடக்குமுறை என்று சொல்வார்கள். பெண்ணும் படித்து ஆணுக்குச் சரியாக வெளியில் சென்று வேலை பார்ப்பவர்களிடம், கட்டுப் பாடுகளை விதிக்கும் பொழுது சீறுகின்றார்கள். அக்காலச் சலுகைகளை இக்கால ஆண்கள் இன்னும் விரும்பி நடத்தினால் வீட்டுப் போராட்டம் தவிர்க்க இயலாது. பின்னால் மாறிய காலமும் சமுதாயமும் பற்றிப் பேசும் பொழுது உதாரணங்களுடன் நிறைய பேசலாம்.

இப்பொழுது கிராம வாழ்க்கையைப் பார்க்கலாம்.

கிராமத்தினரின் அன்றைய உணவுப் பழக்கம் சத்து நிறைந்தது. எண்ணையில் வதக்கி உண்பது மிகமிகக் குறைவு. பச்சைக்காய்களைப் போட்டு ஒரே குழம்பாய் வைப்பார்கள். கம்பு, சோளம், கேழ்வரகு, அதிகமாகச் சேர்க்கப்பட்டது. சக்கி அரிசி என்று கைகுத்தல் அரிசியை நாங்கள்அறிமுகப் படுத்தினோம். ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள். சத்தான சாப்பாடு, தூய்மை கெடாத காற்று, சுறுசுறுப்பான வாழ்க்கை அவர்களைப் பலம் மிகுந்தவர்களாக வைத்திருந்தது. இத்துடன் பெரும்பாலும் பேராசைகள், தீய எண்ணங்கள், சுயநலங்கள் அப்பொழுது அதிகம் கிடையாது. தலைவனுக்குப் பேராசை இருக்கும். அது உலகம் தோன்றிய நாள் முதலாய் இருந்து வருகின்றது.

பல ஆண்களிடம் ஒரு பழக்கம் இருந்து வந்தது. கள் குடிப்பது. கள்பற்றி ஒரு செய்தி கூற விரும்புகின்றேன். இந்தச் செய்தியை எங்காவது பதிய நினைத்து வந்தேன். தமிழர்களின் வரலாறு எழுத முடியவில்லை என்று மதிப்பிற்குரிய மதன் அவர்கள் கூறினார்கள் அதற்கு அவர் கூறிய காரணம் கள் கொடுத்துப் புலவர்களை மன்னர்கள் பாட வைத்தார்கள். கள் குடித்த மயக்கத்தில் பாடிய புகழ்ப்பாக்கள் வரலாற்று உண்மைகளைக் காட்டாது என்றார். தமிழ் வரலாற்று ஆய்வு செய்பவர்களும் , வரலாற்றின் மீது பற்று கொண்டவர்களும் மறுப்பு கொடுத்தார்கள். வரலாறு டாட் காம் மின்னிதழில் கமலக்கண்ணன் முதலில் மறுப்புக் கட்டுரை எழுதினார். டாக்டர் கலைக்கோவன் அவர்கள் நீண்டதொரு அழகான கட்டுரையே எழுதி விட்டார். அந்தக் கள் பற்றிய ஓர் செய்தி எனக்குக் கிடைத்தது. சுவையான தகவல்

அலைகள் தொடரும்

No comments: