Monday, May 17, 2010

பெண்ணே அனும்மா, பறந்துவிட்டாயே!

அனும்மா, அனும்மா என்று கூப்பிட்டுப் பழகியவர்கள் எல்லோரையும் புலம்ப வைத்துவிட்டு விண்ணுலகம் பறந்து சென்றுவிட்டார் அனுராதாரமணன்.

"சீதா, என் அனு போய்விட்டாள்!"என்று என் பிரேமா எழுதிய கடிதமே அழுதது. என்னையும் அழவைத்தது. என்னால் உடனே அஞ்சலிக் கடிதம் எழுத முடியவில்லை. என் உள்ளமும் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

எழுத்தாளர் என்பதற்கு மேலாக ஒரு பெண்ணாய் அவர்களை உணர்வேன்.

அந்தப்பெண்மணி இந்த சமுதாயத்தில் எத்தனை சோதனைகள் வந்த பொழுது ஒடிந்து விடாமல் வாழ்ந்து காட்டியவர்.

அவரைப்பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவரைப்பற்றி எழுத எனக்கு எப்படித்தெரியும்?

அதிக நாட்கள் நெருங்கிப் பழகாவிட்டலும் அவருடன் பழகிய சிறிது காலத்திலேயே என்னை மிகவும் கவர்ந்துவிட்டவர். என் தோழி பிரேமா; சிறுகதை உலகில் பிரமிளா கார்த்திக் என்று அழைக்கப்பட்டவரின் அருமைத் தோழி அனுராதா ரமணன். அடையாரில் பலராம் தெருவில் இருவரும் வசித்துவந்தனர். மனம் விட்டுப்பேசும் தோழிகள்.பிரேமா எனக்கு அறிமுகப்படுத்திவைத்தாள். என் மகன் திருமண வரவேற்பிற்கு வந்த எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்.

இளவயதில் விதவையானார். இரு பெண் குழந்தைகள் . அவர் வாழ்க்கையில் போராடிய வினாடிகள் அதிகம். ஆனால் என்றைக்கும் தன்னம்பிக்கை இழக்காது தலைநிமிர்ந்து நின்றார். பிறரை ஏமாற்றத் தெரியாதவர். ஆனால் சீக்கிரம் ஏமாந்து போகின்றவர். குழந்தையைப்போல் பழகுவார். மிகவும் எளிமையாய் வாழ்ந்தவர். உயர்வு தாழ்வு பார்க்கமாட்டார். எளிதில் நண்பராகிவிடுவார்.

நல்ல உயரம். களையான முகம் பேசும் விழிகள். ஒய்யார நடை. "நிமிர்ந்த நன்னடயும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தோற்றம்," எல்லாவற்றிகும் சொந்தக்காரி அனும்மா.

லட்சுமிகரமான தோற்றம். ஓர் விதவைப்பெண் அப்படி இருக்கலாமா? சாதிக்கட்டுப்பாடுகளைப்பற்றி கவலைப்படவில்லை.

அவரின் எழுத்து உயிருள்ளவை. அவர் எழுத்தும் வாழ்வும் கம்பீரமானவை.

அவர் எழுத்துலகில் கலந்து கொண்ட ஓட்டப்பந்தயத்தில் அப்பொழுது பிரபலமாக இருந்த பெண்மணிகள் சிவசங்கரி, இந்துமதி, வாசந்தி ஆகியோர் இருந்தனர். டாக்டர் லட்சுமியின் கதைகள் பெண்னைப்போல் அடக்கமானவை. ராஜம் கிருஷ்ணன் அவர்கள் பெண்ணியம் கொள்கை உடையவராயினும் சமுதாய வாழ்க்கையை, மரபினை எழுதியவர். பின்னர் வந்த இந்தப் பெண்மணிகள் தான் வித்தியாசமாக எழுத ஆரம்பித்தனர்.

சிறை என்ற கதை மூலம் தனித்து அடையாளம் காணப்பாட்டார்

ஒரு பிராமண வைதீகக்குடும்பம். அமைதியாக இயங்கிவந்த அந்த குடும்பத்தில் ஓர் நச்சுப்பாம்பு நுழைந்தது. பாவம், அந்த அப்பாவிப் பெண்ணை அந்த நாகம் தீண்டிவிட்டது. இது அவள் குற்றமா? அக்கினி வலம் வந்து காலம் பூராவும் காப்பாற்றுகின்றேன் என்று மந்திரங்களை உச்சரித்தவன் ஆச்சாரம் போய்விட்டது என்று அவளைத் துரத்துகின்றான். விறகுகள் போட்டிருக்கும் இடத்திலாவது ஒதுங்கி வாழ்கின்றேன் என்று கெஞ்சியும் அவள் வீட்டை விட்டு விரட்டப்படுகின்றாள்.

கெடுத்தவன் வீட்டிற்கே போகின்றாள். அங்கே தான் இனி வாழப் போவதாக் கூறிவிட்டு ஒரு அறைக்குள் ஒதுங்கிவிட்டாள். லட்சுமணன் கோட்டைத்தாண்டினாள் அன்றைய சீதை. ஆனால், அவள் மானசீகமாகப் போட்ட கோட்டைத் தாண்டி அந்த முரடன் அவளிடம் நெருங்கவில்லை.

ஊர்வம்பு கேட்டு புருஷன் வந்து கூப்பிடுகின்றான். ஆனால், இவளோ தன்னைத் துரத்தியவனைக் கணவனாகப் பார்க்கவில்லை.

கணவன் என்றால் காதலன் மட்டுமல்ல,அவன் காவலனும்கூட!

ஆனால், தன் கடமையினின்றும் வழுவிவிட்டான் அவளுக்குத் தாலி கட்டியவன். கெடுத்தவனோ அவளைக் கவுரமாக நடத்தி, அவள் பக்கம் கூட வராமல் அவள் பெண்மையை வணங்குகின்றான்.

வாழ்க்கையில் திருந்தி அவள் நன்மதிப்பைப் பெற்றவன் மாண்ட பொழுது அவள் உடைந்து போகின்றாள். தாலியின் அர்த்தம் என்னவென்று இக்கதையில் எழுதப்பட்டதைப்போல் எந்த ஆணும், எந்தப்பெண்னும் எழுதவில்லை.

பாவம் அனும்மா! இந்தக்கதையை எழுதியவுடன் அவர்களுக்கு எத்தனை போன்கால்கள் வந்தன? எத்தனை மிரட்டல்கள்? எதற்கும் அஞ்சவில்லை.

பெண்கள் அனைவரும் அந்தப் பெண்ணிற்கு அஞ்சலி செலுத்தக்கடமைப்பட்டவர்கள்.

இதைவிட பெண்ணியம் பேச முடியுமா?

உயிரில்லா வார்த்தைகளை அவர்கள் எழுதவில்லை. அவர்கள் எழுத்தில் பிரச்சனைகளைக் கூறுவது மட்டுமல்ல, ஓர் தீர்வும் காட்டுவார். யாருக்கும் அஞ்சாது அவர் எண்ணங்களை வெளியிடுவார்.

பத்திரிகைகளில் மட்டும் எழுதி யாரும் இங்கு செல்வந்தராக முடியாது. கணவரின் பணத்தில் ஓர் வீட்டை பலராம் தெருவில் வாங்கினார். கடன் பளுவால் அந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டிற்குப் போனார். அவருக்கு ஆசை ஏற்பட்டு வளையோசை என்ற ஓர் இதழ் ஆரம்பித்தார். இரு மாதங்கள் நடந்தன; நிறுத்தினார். இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கினார். மேலும் இரு மாதங்கள் நடத்தினார்ர்.பொருள்வசதி இல்லை;பத்திரிகையை நிறுத்திவிட்டார்.

எப்படியோ இரு பெண்களையும் படிக்க வைத்தார். பெரிய படிப்பு என்று கூறமுடியாது. ஆனால் பெண்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். ஒரு பெண் அமெரிக்காவிலும் இன்னொரு பெண் கானடாவிலும் இருக்கின்றனர். தாய்க்கு உதவி செய்த தங்கக் குழந்தைகள்.அவர் எழுத்தால் பொருள் சேர்த்து வாழவில்லை.

எழுத்தாளர்களின் நிலை இதுதான்.

எவ்வளவு பணம் கொடுத்து கள்ள டிக்கட்டாவது வாங்கி சினிமா பார்ப்போம் ஆனால் சில பத்துகளைச் செலவழித்துப் புத்தகங்கள் வாங்கிப் படிக்க மாட்டோம். இச்சைக்கு இசையும் எழுத்துக்களின் வசீகரத்தால் அர்த்தமுள்ள எழுத்துக்களுக்கு வரவேற்பில்லை.

எல்லாம் தெரிந்தும் இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். பத்திரிகைகளும் கதைகளைப் போடுவதை குறைத்துவிட்டது. தொலைக்காட்சியுடன் போட்டி போட முடியவில்லை. எனவே பத்திரிகைகளும் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன. படிக்கின்றவர்களை வைத்துத்தான் புத்தகங்களும் வெளியிடுவார்கள். இந்தப்பந்தயத்தில் பல சிறந்த எழுத்தாளர்கள் இருந்த அடையாளமே தெரியவில்லை!

அனுராதாவின் அந்தரங்கம் தினமலரில் தொடராக வந்து கொண்டிருந்தது. சிறுகதை எழுதி, நெடுங்கதை எழுதி, பல படமாக்கப்பட்டு புகழ்பெற்ற ஒருத்தி கடைசியில் எங்கோ எப்பொழுதோ எழுதும் நிலைக்கு ஆளானது வருத்தத்தைக் கொடுக்கின்றது.

இடையில் ஒரு முறை உடல் பாதிக்கப்பட்டு அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்ட்து. மீண்டும் அவர் பேசினார். எப்படி அவரால் பேச முடிந்தது என்று அவர் சொன்ன பொழுது நோயாளிகள், முதியோர் எல்லோருக்கும் ஓர் முன்மாதிரியாக, நம்பிக்கை விளக்காகத் தெரிந்தார்

மூளைசெல்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டும். மீண்டும் சக்தி பெற வேண்டும்.எழுத்தாளர் மூளை இன்னும் சாகவில்லை.

நினைவுகளில் கதைகள் தோன்றின. அங்கு வந்த டாக்டர், நர்ஸ் இவர்களை ரசிக்க ஆரம்பித்தார். விரல்களை, கைகளை, முகம், பார்வை இவைகளை இப்படி ஒவ்வொன்றாய்ப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்.

ரசித்தவைகளை அவர்களிடம் சொல்லவும் தொடங்கினார். வார்த்தைகள் வரவில்லை. முதலில் சப்தம் மட்டும் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உளர ஆரம்பித்தார். அவர் முயற்சிகளைக் கண்ட மற்றவர்களும் அவரை ஊக்கப்படுத் தினார்கள். உளரலும் திருந்த ஆரம்பித்து பழையபடி நன்றாகவே பேச ஆரம்பித்தார்.

தனக்கேற்பட்டுவிட்ட ஊனத்தை, தன்னம்பிக்கையால், முயற்சியால் போக்கியவர் அனும்மா!

எனக்கு உடலில் வலி வரும் பொழுது அவரை நினைப்பேன். ஏதோ சிந்திக்க ஆரம்பித்தேன். 75 வயதில் ஏதோ எழுத ஆரம்பித்தேன்.இன்று ஏதோ சுமாராக எழுதுகின்றேன். இத்தனையும் என் நோயை மறக்க நான் செய்யும் முயற்சிகள்.

இந்தப்பாடம் எனக்குக் கற்றுக் கொடுத்தவர் அனுராதா ரமணன்.

அனுராதா ரமணன் அவர்களின் சிந்தனைகள் எனக்குப் பிடித்திருந்தன. அவர் கதைகள் எழுதிய முறைகள், அவைகளில் அவர் கொடுத்த தீர்வுகள், அவைகள் எனக்கு கொடுத்த சக்தி இவைகளால் என் மனத்தில் அவர் ஓர் தனி இடத்தில் அமர்ந்துவிட்டார்.

இன்று அவர் நம்மைவிட்டுப் பறந்து போய்விட்டார். சாவு கூட மறைந்திருந்து அவரைக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும். கொஞ்சம் தெரிந்திருந்தாலும் சாவை விரட்டியிருப்பார்.

எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தவர் அனுராதா ரமணன்!

அவர் உடல் மறைந்தாலும் அவர் எழுத்துக்கள் துடிப்புடன் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

அன்பே உருவான அனும்மாவுக்கு இந்த மூதாட்டி அஞ்சலி செலுத்துகின்றேன்.

அவர் ஆத்மாவிற்கு சாந்தி கிடைக்கட்டும்.

17 comments:

KarthigaVasudevan said...

செய்தி அறிந்த போது மிக்க வருத்தமாக இருந்தது.அனுராதாரமணனின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் சீதாம்மா .

Chitra said...

May her soul rest in peace.

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க...

அனுராதா ரமணனிற்கு அஞ்சலிகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவர்களுக்கு என் அஞ்சலிகள் ..

பிரபாகர் said...

ஆழ்ந்த இரங்கல்கள்...

பிரபாகர்...

கோமதி அரசு said...

அனுராதாரமணனின் குடும்பத்தாருக்கும்,அவரை பிரிந்து வாடும் அவர் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபாங்கள்.

தன்னம்பிக்கையோடு வாழ்ந்து மறைந்த
அனும்மாவுக்கு அஞ்சலிகள்..

கலகலப்ரியா said...

ஓ... மிகப் பெரிய இழப்பு... அனுராதா ரமணன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்... நீங்க சொன்னது போல துணிச்சல் அதிகம்.. ரொம்ப வருத்தமா இருக்கு சீதாம்மா..

Unknown said...

நானும் அனுராதாரமணனின் தீவிர ரசிகை அவரை பிரிந்து வாடும் அவர் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபாங்கள்
tamilkudumbam.com

ராமலக்ஷ்மி said...

அனுராதா ரமணனுக்கு என் அஞ்சலிகள்!

அவர் மறைவால் தவிக்கும் குடும்பத்தினருக்கும், ரசிகர்கள் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்!

Unknown said...

anuradha vin maraivu, oru eedu seiya mudiyatha elappu. en kanneer thuligalal avarukku anjali.

Kasaly said...

அனுராதா ரமணனுக்கு என் அஞ்சலிகள்....
அவர் எழுத்துகள் நம்மிடையே எப்பொழுதும் வாழ்ந்து கொன்டிருக்கும்

Sabarinathan Arthanari said...

மிகப்பெரிய எழுத்தாளர். தமிழ் எழுத்துலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

IKrishs said...

Penn yeluthathalargalil nagaisuvai yeluthil thani munthirai pathithavar anuradha ramanan avargal.Vinnulaga anubavangalaiyum comedy ai neengal yeluthi kondu irupeergal yendra nambikkayudan..
Krish Kumar

ஹுஸைனம்மா said...

//அவரின் எழுத்து உயிருள்ளவை. அவர் எழுத்தும் வாழ்வும் கம்பீரமானவை.//

ஆமாங்க, அவரைப் படித்தாலே நமக்கும் ஒரு தைரியம் வரும்.

ஸாதிகா said...

ஒரு அருமையான மனுஷியைப்பற்றி அழகாக பகிர்துள்ளீர்கள் சீதாம்மா.அனுராதாவின் மறைவு மூலம் உங்கள் வலைத்தளமும் காணக்கிடைத்தது.இனியும் தொடர்வேன்.நானும் எழுதி உள்ளேன் .இங்கு வந்து பாருங்கள் நேரம் கிடைக்கும் பொழுது.http://shadiqah.blogspot.com/2010/05/blog-post_18.html

Jaleela Kamal said...

ஆமாம் அவஙக் இல்லை என்றாலும் அவங்க எழுத்துக்களுக்கு என்று உயிர் உள்ளது.
ரொம்ப கம்பீரம்.பார்த்ததும் அவர்களுடைய பேச்சு நமக்கே ஒரு தைரியம் வரும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தவர் அனுராதா ரமணன்!//

மிக விளக்கமான அஞ்சலி இடுகை!
'துணிச்சல்' என்ற வார்த்தைக்கு
அவர் ஒரு விளக்கமாகத்
திகழ்ந்தார்.