Saturday, April 10, 2010

மரத்தடியில் முக்கனிகள்-01

மரத்தடியில் முக்கனிகளும் அமர்ந்திருந்தனர்.மா, பலா, வாழை.வாழையிடம் ஒரு வாட்டம். மேலும் மாங்கனியைப் பார்த்த பார்வையில் நேசமில்லை. பலா அதனைக் கவனித்துவிட்டது.

“என்ன வாழையம்மா, வாடிப்போயிருக்கீங்க ?மனதிலே ஏதோ ஒண்ணு உங்களை உருத்திக்கிட்டு இருக்கு. வெளி வந்துடட்டும். பாரம் போய்டும்” என்று சாமர்த்தியமாக விசாரித்தது பலாக்கனி.

“நன்றி கெட்ட ஜனங்கள். காலம் பூராவும் அவங்களுக்குக் கிடைக்கற மாதிரி இருக்கேன். குறைச்ச காசுக்குக் கிடைக்கும்.பழங்கள் வரிசை போடறப்போ என் பேரையில்லே முதல்லே போட்டிருக்கணும்.
நீங்க ரெண்டு பேரும் சீசன் பழங்க. மாம்பழத்துப் பேரை முதல்லே போடலாமா ?” கேள்வியை ஆத்திரத்துடன் கேட்டது வாழை. மாங்கனி சிவந்து விட்டது.

“முதல்லே பேரைப் போட்டுட்டு மொத்து மொத்துனு அடிக்கறாங்களே அது கண்ணுக்குத் தெரியல்லியா?” என்று வருத்ததுடன் கேட்டது மாங்கனி. பலாக்கனிக்கு சுவாரஸ்யம் வந்துவிட்டது.

“ஆஹா, இன்னிக்குப் பொழுது போகும். கதை கிடைச்சிருச்சு. “என்று மனத்திற்குள் நினைத்தது. அதன் தோற்றத்திற்கேற்ற புத்தி. உள்ளும் புறமும் வித்தியாசம்.

“அதென்ன மாங்கணி, உன்னை யாரு மொத்தறாங்க” என்று கனிவான குரலில் கேட்டது பலா.

வாழைக்கனி மவுனமாக நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தது.

மாம்பழத்தின் கதை

நாரதர் ஒரு மாம்பழத்தைக் கைலாயத்திற்கு எடுத்துச் சென்றது அவர் தவறு.மகேசனே ஆனாலும் மனைவி மக்களை விட்டுச் சாப்பிடுவாரா ? குழப்பத்தை உண்டு பண்ணவே ஒற்றைக் கனியைச் சிவனிடம் கொடுத்தார்..வந்து தொலைந்தது பரிசோதனை.

உலகைச் சுற்றி முதலில் வரும் பிள்ளைக்கு மாங்கனி.

இது குசும்புதானே. உடனே சுட்டிப் பிள்ளை முருகன் மயிலில் பறந்துவிட்டான். பாவம் விநாயகர். பார்த்தார். அப்பா, அம்மாவைச் சுற்றினால் யோசனை சொல்லுவார்கள் என்று நினைத்து ஒரு வலம் வந்தார். அவ்வளவுதான். அவரை உற்சாகப் படுத்த எல்லோரும் கை தட்டினார்கள். பிள்ளையார் மேல் இரக்கங்கொண்டு, அப்பா அம்மாவைச் சுற்றினால் உலகம் சுற்றியதற்குச் சமம் என்று சொல்லி விட்டார் ஒருவர்.

பிள்ளையார்குட்டியும் உடனே அதையே சொல்லிவிட்டது. குழந்தைகள் சில நேரம் கிளிப் பிள்ளைகள் மாதிரி சொன்னதைத் திருப்பிச் சொல்லுவார்கள்..மாம்பழம் அவர் கைக்கு வரவும் அப்பாவியாய்த் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார்.

பொடிப்பைய்யன் வந்துவிட்டான். பார்த்தான். எல்லோரும் ஏமாற்றிவிட்டதை உணர்ந்தான்/ காரமான பொடியன். அவ்வளவுதான்.ஆடைகளைத் தூர எறிந்தான். ஆபரணங்களையும் வீசி எறிந்தான். கட்டிய கோவணத்துடன் பழனி மலைக்குப் பறந்து விட்டான்.(அக்காலத்தில் ஜட்டி கிடையாது. அதுதான் கோவணத்துடன் பறந்தான். கோவணத்தாண்டி என்ற பட்டம். (ஜட்டி போட்டிருந்தால் ஜட்டி ஆண்டி என்று பெயர் வந்திருக்கும்)

இத்தனைக்கும் நாரதர்தான் மூலகாரணம். மாம்பழம் வாங்கினா ஆண்டியாய் விடுவான்னு கேலி பேசினா வருத்தம் வராதா?

மாம்பழத்துக்குச் சிவன் மேலும் கோபம்.அவர் இன்னொரு இடத்திலும் விளையாடியதால்தான் கேலி நிலைத்து விட்டது.

நம்ம சாலமன் பாப்பைய்யா பட்டி, மன்றத்தில் ராஜா கேலி பண்ண ஆரம்பிச்சுடுவார்னு கவலை வேறு.
பலாக்கனி கேட்டுக் கொண்டதால் இன்னொரு கதையயும் மாங்கனி சொல்லிற்று.

காரைக்காலில் புனிதவதின்னு என்று ஒரு அம்மா. நல்லவங்க. பசின்னு யார் வந்தாலும் சோறு கொடுப்பாங்க. அவங்க புருஷன் ஒரு வியாபாரி. அடிக்கடி வெளியூர் போய்டுவான். ஒருதபா ரெண்டு மாம்பழம் வாங்கிக்கிட்டு வந்து பொண்ஜாதியிடம் கொடுத்தான்.

கைலாயத்தில் ஒரு மாம்பழம். காரைக்காலில் ரெண்டு மாம்பழம். இந்த சிவனுக்கு எப்படி குசும்பு.எல்லாம் அவரோட விளையாட்டு. (நம்ம சிவனை நம்ம நாட்டுக்குப் பிரதம மந்திரியாக்கிடலாமான்னு பலா மெதுவாக் கேட்டது. மாவோ கதை சொல்லுவதிலே கவனம். கதை தொடர்ந்தது)

புனிதம்மா புருஷன் வெளியிலே போயிருந்தப்போ ஒரு சாமியார் “பசி” ன்னு வந்தார். சோறு இல்லை. ஒரு மாம்பழத்தை அவருக்குக் கொடுத்தாங்க.பசிக்கு அதாவது கிடச்சதேன்னு சாப்பிட்டுட்டு சாமியார் போய்ட்டார்.

போன புருஷன் வீட்டுக்கு வந்தான். நல்ல வேளை சாமியார் போனவுடன் அந்த அம்மா சமையல் முடிச்சிட்டாங்க. (இந்தக் காலம்னா ரெஸ்டாரண்ட்டுக்குப் போகலாம்னு சொல்லிடுவாங்க, புருஷனும் பயந்து போய் கூட்டிட்டு போவான். இந்த ஆம்புள்ளங்களுக்கு வேணும். என்னமா ஆட்டிவச்சாங்க. காலம் மாறிடுச்சுடோய்ய்ய்ய் .பயந்து நடங்க!மாம்பழ மனத்தில் இடையில் இப்படி ஒரு நாதம்)

சாப்பிட உட்கார்ந்தார் அய்யா. சாப்பாட்டு இலையில் ஒரு மாம்பழம் கொண்டு வச்சாங்க. பழத்தை ருசி பார்த்தவன் இன்னொரு மாம்பழத்தையும் கேட்டுட்டான்.பொண்டாட்டி சாப்பிட இருக்கட்டும்னு புருஷன் நினைக்கல்லே. விவஸ்தைகெட்ட மனுஷன்.

அவள் சாமியார் விஷயத்தைச் சொல்லியிருக்கலாம். ஒண்ணும் பேசாம உள்ளேபோய்ட்டு சிவன் அய்யாவை நினச்சு அழுதா. (ஆமாம் , இந்தப் பொம்பளைங்களுக்கு எப்படி பொசுக்குன்னு அழுகை வருது. அமெரிக்காவிலே பிரிசிடெண்டுங்க பொண்டாட்டிங்க மேடையிலே புருஷன் ஜெயிச்சா அழுதுடுவாங்களாம் ஆனால் கிளிண்டன் பொண்ஜாதி அழமாட்டாங்களாம்ஆனால் அவரு அழுதுடுவாராம். அவருக்கு நல்ல மனசுய்யா)

சிவன் அய்யாவுக்கும் இரக்கம் வந்து ஒரு பழம் கொடுத்தாரு. (அது இரக்கமா, இல்லே புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கட்டும்ங்கற நினைப்புதான். கைலாயத்திலே அண்ணன் தம்பிச் சண்டை இங்கே புருஷன் பொண்டாட்டி சண்டை.கடவுளுக்குக் கூட fighting பார்க்க ஆசைதான்.)

(அடுத்ததில் முடிவு)

No comments: