Friday, April 9, 2010

எண்ணங்கள் ஊர்வலம் -04





சரித்திரம் தேர்ச்சி கொள்


பழங்கதை தெரிந்து கொள்வதில் அர்த்தமென்ன இருக்கின்றது?

பின் பாரதி உள்ளிட்டப் பல பெரியவர்கள் எதற்காக இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்?

சிந்திக்க ஒரு கேள்வி!

வேர்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற அனுபவசாலிகளின் கூற்று பொருளற்றதா?


தெரிந்து கொண்டதில் நல்லன ஏற்று அல்லன ஒதுக்க அது ஒரு குறிப்பேடு என்றும் எடுத்துக் கொள்ளலாமே! வாழ்க்கை செம்மையாகவும், செழுமையாகவும் அமைய அது ஒரு வழிகாட்டி. இக்கருத்தை எனக்குள் புதைத்தவர்கள் என் தாயும் தந்தையும் ஆவார். தாய் மூலம் சேய் அறிந்து கொள்வதில் பல உணர்ச்சிபூர்வமானவை.

கல்கியையும் பாரதியையும் அடையாளம் காட்டியவர் என் தந்தை.பாரதி சிறிது காலம் வாழ்ந்த இல்லத்தில் நானும் சிறிது காலம் வாழ்ந்தது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு, அதுவே என் வாழ்க்கை அமைவுக்கு ஓர் அஸ்திவாரமாகி விட்டது. அந்த வீடு ஓர் கற்பனைக்கருவூலமாக உணர்ந்தேன். வீட்டில் இருக்கும் பொழுது எனக்குச் சொல்லப்பட்டவைகளை மனத்தில் அசைபோட்டுக்கொண்டு கற்பனையில் மூழ்கும் பழக்கம் தொடங்கியது.

பல்ளியில் இருந்து திரும்பியபின் விளையாட என் வயதுப் பிள்ளைகள் அந்தத் தெருவில் எனக்குக் கிடைக்கவில்லை. அதே தெருவில் இருந்த பாரதியார் இல்லத்திற்குச் சென்று விடுவேன். பாரதியின் தாய்மாமன் சாம்பவசிவ அய்யர் இருப்பார். அவரிடம் போய்ப் பேசிக் கொண்டிருப்பேன்.அப்பொழுது சுதந்திரம் கிடைக்காத காலம். பாரதியும் காலமாகி விட்டார். சாம்பு மாமா என் ஆர்வத்தைப் பார்த்து கதை சொல்லுவார். பாரதியைப் பற்றிப் பேசுவார். பெரியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்பொழுது தூணைக் கட்டிக் கொண்டு நின்று கேட்பாராம். சட்டென்று அவருக்குத் தோன்றியதைத் தயங்காமல் கூறுவாராம். பாரதியின் துணிச்சலைப் புகழ்வார். மாமாவைப் பாடச்சொன்னாலும் அவர் அடிக்கடி என்னிடம் பாடிக்காட்டிய பாடல்:

ஜய பேரிகை கொட்டடா!” - உரத்துப் பாடுவார்.

“கொட்டடா” என்பதை ஏற்றத்தில் ஒருமுறை இறக்கத்தில் ஒரு முறை பாடுவார். அவர் உடல் முழுவதிலும் துடிப்பு இருக்கும். மாமாவே இப்படியென்றால் மருகன் எப்படி இருந்திருப்பார்? அந்தக் காலத்தில் பாரதியின் பாடல்களைப் பாடும் பொழுது உடலெல்லாம் உணர்ச்சி வெள்ளம். அடிமையராய் வாழ்ந்த காலம். ’ஆடுவோமே பள்ளு பாடுவோமே!’ என்று அப்பொழுதே பாடிவிட்டான் பாரதி. அவன் ஓர் தீர்க்கதரிசி.

மாமா பாட நான் ஆடுவேன்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை

இந்த வீரவரிகள் என் இரத்தத்துடன் கலந்துவிட்ட வரிகள்.

துணிச்சல்காரி என்ற பட்டம் கிடைக்க நான் கற்ற முதல் வரிகள்.

இதனைச் செய்தவர் பாரதியின் தாய்மாமன்.

என் துணிச்சல் பிறந்த இடம் பாரதி பிறந்த இல்லம்

பாரதியைப் பார்க்க முடியாமல் போய் விட்டதற்கு அழுகையாக வரும். குழந்தைப் பருவத்தில் இழப்பின் துயரை முதலில் எனக்கு உணர்த்தியது பாரதியின் மரணம்.

பாப்பா பாட்டைப் பாடிக் காண்பிப்பார்.

நல்ல எண்ணங்களைப் பிஞ்சுப் பருவத்தில் பதிய வைப்பது பலன் உண்டு என்பதைப் புரிந்தவர் பாரதி.

ஓடி விளையாடு பாப்பா! "அருமையான பாட்டு. ஒவ்வொரு குழந்தைக்குத் தெரிந்திருக்க வேண்டிய பாட்டு.

பொய் சொல்லக் கூடாது பாப்பா
புறஞ்சொல்லக் கூடாது பாப்பா

பெற்றவள் தன் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பாட்டு.

அர்த்தமில்லா பாட்டு பாடும் பிள்ளைகளை ரசிக்கும் பல தாய்மார்களைக்காணும் பொழுது மனம் வருந்துகின்றது.

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்
பயங் கொள்ளக்கூடாது பாப்பா

அப்பப்பா, இந்த வார்த்தைகள் எனக்குள் புதைந்து, சூறாவளிச்சுருளில் நான் சுருண்ட பொழுதிலும் தலை நிமிர்ந்து நடக்க வைத்த மந்திரச் சொற்களாய் வாழ்ந்து வருகின்றன.

பாரதியின் துணிச்சல் பிடித்திருந்தது. இன்றுவரை என்னை அறிந்தவர்கள் என்னைப்பற்றிக் குறிப்பிடுவது

துணிச்சல்காரி!"

எனக்குள் பாரதி இருக்கின்றான்.

இன்னும் நினைவில் இருக்கும் வரிகள்

“குன்றென நிமிர்ந்து நில்”
“கொடுமையை எதிர்த்து நில்”
“புதியன விரும்பு”

பாரதியார் தெருவில் சாம்பு மாமாவால் கற்றுக் கொடுக்கப் பட்டவை.

பாரதி உயிருடன் இருக்கும் பொழுது அவர் பெருமையை, அவரின் சக்தியைப் பெரும்பாலோர் புரிந்து கொள்ளவில்லை. அவர் பிறந்த மண்ணில், அரண்மனையில் பெரியவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டவர். எட்டையபுரம் சமஸ்தானம் கலைஞர்களுக்கு ஒரு தொட்டில். பாரதி பட்டமே கிடைத்தது அங்கேதான்.

இளசை என்ற பெயர் ஊரின் எழிலுக்காக வந்த பெயர். ஆனால் நான் பார்த்த எட்டையபுரம் தண்ணீர்ப் பஞ்சமுள்ள ஊர். இரண்டு குளங்கள் உண்டு. ஒன்று நல்ல தண்ணீர்க் குளம். இதிலிருந்துதான் குடிதண்ணீர் எடுக்க வேண்டும். குளம் வற்றும் பொழுது வடிகட்டித்தான் தண்ணீர் குடிக்க முடியும்.இங்கே கவிஞர்களும், கலைஞர்களும் வாழ்ந்தது கலையுள்ளமும் கருணை மனமும் கொண்ட எட்டயபுரம் சமஸ்தான மன்னர்கள் புரவலர்களாக அமைந்தது தான்.

பாரதி இந்த ஊரை விட்டு வெளிச்சென்று விட்டார். ஒரு ஊருக்கு மட்டும் சொந்தமானவரல்லவே.அவர் இறுதி ஊர்வலத்திற்கு பதினைந்து பேர்கள்தான் சென்றனர் என்ற செய்தி மனத்தைக் காயப் படுத்தாமல் இருக்க முடியாது.

நெஞ்சு பொறுக்குதில்லையே!” என்று பாடத் தோன்றுகிறது.

குழந்தைகளுக்குக் கதை கேட்கப் பிடிக்கும். கதைகள் சொல்லவும் பிடிக்கும். அவர்களின் கற்பனை வேடிக்கையாக இருக்கும். நானும் கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன். ஆம். பாரதி வாழ்ந்த வீட்டில் ஓர் எழுத்தாளன், பேச்சாளன் உதயமாகிவிட்டான்.

பாரதியார் தெருவை விட்டு மேலவாசலில் உள்ள ஒரு வீட்டிற்குக் குடிபோக நேர்ந்தது. என் தந்தை அரண்மனை வேலை விட்டு, மேலவாசலில் ஒரு ஹோட்டல் ஆரம்பித்தார். கடைக்கு அடுத்து இருந்த வீட்டில் குடும்பம் இருந்தது.

பத்திரிகைகள், புத்தகங்கள் நிறைய வாங்கிப் போட்டார். நான் படிக்க ஆரம்பித்து விட்டேன். இக்காலத்தில் குழந்தைகள் படிப்பதற்கென்று புத்தகங்களும் வருகின்றன. எங்கள் காலங்களில் குழந்தைப் பருவத்தில் புத்தகங்கள் படிக்கச் சொல்லுவதில்லை. தொடர்கதைகளும் படித்தேன். கல்கியை எழுத்தில் ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

எல்லோருடைய வாழ்க்கையிலும் பள்ளி வாழ்க்கை மறக்க முடியாது. என்னை உருவாக்கிய பள்ளி சாதாரணமானதல்ல.பாரதியும், ஸ்வாமி சிவானந்தரும் படித்த பள்ளி. பல பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும், சமுதாயப் பணியாளர்களையும் உருவாக்கிய பள்ளி.

“ராஜா உயர் நிலைப்பள்ளி"

(ஊர்வலம் தொடரும்)

1 comment:

எல் கே said...

நல்ல நினைவுகள்