Wednesday, April 7, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் 02

சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?"

என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை.. அதற்கு ஓர் தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன்.

எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான்.

என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டும் உதிர்த்தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

He is a good listener

அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள்.

சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?

என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள் எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்களுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன். சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.

அவர் பார்வையை என் பார்வை சந்தித்த பொழுது அவர் கூற்றின் உண்மையை நான் உணர முடிந்தது.

ஆம், என்னைப்பற்றி யாரும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.

ஒரு ஆண்மகனிடம் புலம்பி என்னைக் கோழையாக்கிக் கொண்ட அவமானத் துடிப்பு சிறியதாக உணர்ந்தேன். மனக்குரங்கு குதிப்பதை அடக்கினேன்.அதே நேரத்தில் உளவியல் தெரிந்த ஒருவரிடம் பேசியதில் ஒரு திருப்தியும் தோன்றியது. எனக்கு ஒரு நண்பன் கிடைத்துவிட்டான் என்று மனம் குதியாட்டம் போட்டது

எங்கள் நட்பு இத்தனை ஆண்டுகாளகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எங்கள் சந்திப்புகளில் நான் வெளிப்படுத்திய செய்திகள் எத்தனை எத்தனை!. ஆனால் அவர் எழுத்தில் என் செய்திகளின் சாயல் கூட வந்ததில்லை. சொன்ன வாக்கின்படி நடக்கின்றார்.

He is a gentleman of words

அவரைப்பற்றி, அவர் எழுத்துக்களைப் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். நம்மில் ஒருவராக அவரைப்பற்றி எழுத விரும்புகின்றேன். அவரை நான் கண்ட கோணங்களில் காட்ட விரும்புகின்றேன். ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றிய கருத்து இருக்கும். அது அவர்கள் சுதந்திரம். நான் எழுதுபவைகள் அவருடன் பழகிய பொழுது நான் உணர்ந்தைவைகள். .எல்லாவற்றையும் எழுதினால் நீண்ட தொடராகிவிடும். சில காட்சிகளாவது பார்க்கலாம்.

அப்படி என்னைப்பற்றி எழுத நான் என்ன தனித் தகுதி படைத்தவளா? அவர் பாத்திரங்கள் சாதாரணமானவர்கள். ஆனால் ஒருவருக்கு ஒன்று, அல்லது சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பிரச்சனைக் குவியலில் வாழ்ந்த ஒருத்தி, சமுதாயத்துடன் மோதிய ஓர் போராளி.! உருண்டு புரண்டு, மீண்டும் எழுந்து நிமிர்ந்து நின்றவள் நான்.

எழுத்தாளர் டாக்டர் லட்சுமி அவர்களும் என்னிடம் ஒரு விருப்பம் தெரிவித்தார்கள்.

சீதாலட்சுமி, ஒருவாரம் நாம் இருவரும் மகாபலிபுரம் போய்த் தங்குவோம். உங்கள் அனுபவங்கள் எல்லாம் கூறுங்கள் நான் எழுத விரும்புகின்றேன்."

அவர்கள் மென்மையானவர்கள். ஆப்பிரிக்கவிலிருந்து திரும்பிய பின், பத்திரிகைகளைப் படித்துவிட்டு அதிர்ந்தார். மாற்றங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

உலகம் யாரையும் பொருட்படுத்தாது மாற்றங்களில் உருண்டு ஓடிக்கொண்டிருக்கும்.

உங்கள் எழுத்துக்கு நான் பொருந்தமாட்டேன். நான் அடக்கமில்லா ஒரு பெண். பிரச்சனைகளைக் கூட முரட்டுத்தனமாகவே சந்திக்கின்றவள். ஒரு காலத்தில் என்னைப்பற்றி ஜெயகாந்தன் எழுதவேண்டுமென்று விரும்பினேன். பின்னால் யாரும் எழுதுவதை நான் விரும்பவில்லை. என் ஓட்டம் நின்று களைத்துப்போய் உட்காரும் பொழுது நானே எழுதுவேன்."

ஜெயகாந்தன் எழுத மறுத்த கதையின் நாயகி நான்.

அவளே பேச வந்துவிட்டாள்

கதைப் பாத்திரமும் கதாசிரியனும் சந்தித்துப் பேசுவது கதையில் கண்டிருக்கலாம்.

இப்பொழுது வாசகர்களும் பார்க்கப் போகின்றார்கள். விசித்திரமான, வேடிக்கையான சந்திப்பு. இனி கற்பனைக் குதிரைகளுக்கு கிராக்கி வந்துவிடும். விமர்சனங்கள் பறக்கலாம்.சுவையான பயணம் மட்டுமல்ல சூடான விருந்தும் உண்டு.

அவரிடம் செய்திகளைக் கூறும் பொழுது சில கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் இருக்கும். சில கேள்விகளுக்கு நீண்ட விளக்கம் கிடைக்கும். ஆனால் பல கேள்விகளுக்குப் பதில்களாகக் கிடைத்தது ஒன்று சிரிப்பு அல்லது மவுனம்.

அடுத்து எழுதப் போகும் இரு சம்பவங்களுக்கு உளவியல்ரீதியாக ஜெயகாந்தன் கொடுத்த விளக்கங்ககளை எழுதுவேன்.

(தொடரும்)

நன்றி -திண்ணை

4 comments:

தோழி said...

vaazhthukkal. Thiru Jayakanthan avargalaip patri padikka aavaloda kathirukkiren

Dr.Rudhran said...

interesting

பனித்துளி சங்கர் said...

என்னை மிகவும் கவர்ந்துவிட்டது . ஒரு புதுமை . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் .
மீண்டும் வருவேன் !

பனித்துளி சங்கர் said...

சிறப்பான பதிவு !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள்.,
மீண்டும் வருவேன்