Wednesday, April 21, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 04

நெஞ்சக் கொதிப்பு இன்னும் அடங்கவில்லை!

குமுறல்களைக் கொட்டிவிட்டால் எழுத்திலும் சிந்திப்பதிலும் தெளிவு இருக்கும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இன்னும் இரு சம்பவங்களைக் கூறிவிட்டு தொடரில் தொடர்வேன்.

ஓர் ஆசிரியர் செய்த சைட் வியாபாரம். மாணவர்களுக்கும் உடன் வரும் இளைஞர்களுக்கும் ப்ளூ பிலிம் போட்டுக் காட்டி சமபாதிப்பது. ஒரு நிருபர் என்னிடம் சொன்ன பொழுது நான் நம்ப வில்லை. நானும் என் தோழியும் அவருடன் சென்றோம். என் மனம் கொதித்தது..அந்த மனிதருக்கு அது ஒரு வியாபாரம். படம் தொடங்கியவுடன் கத்தினேன். என்னை அங்கிருந்து கூட்டிவருவதற்குள் நிருபர் கஷ்டப்பட்டுபோய்விட்டார். அந்த ஆசிரியர் வெட்கித் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார்.

தெய்வத்திற்கு முன் வைத்துப் போற்றிவரும் தொழில் ஆசிரியத் தொழில்.எனக்கு நாட்டுப்பற்றையும் துணிச்சலையும் கற்றுக் கொடுத்தவர் என் ஆசிரியர். பாரதியை எனக்குள் புதைத்தவர் எங்கள் ஆசிரியர் கே.பி.எஸ் நாராயணன் அவர்கள். இன்றும் எட்டயபுரத்தில் அவரிடம் படித்த மாணவர்கள் அனைவரும் அவரை நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

எனக்கு மிகவும் பரிச்சயமான மனிதர். ஒருவர், தரகரிடம் குடும்பப் பெண் கேட்டு வீட்டிற்கே அழைத்துச் செல்லப் பட்டார். இவர் உள்ளே நுழையும் பொழுது வீட்டிற்குள் இருந்து ஓர் ஆண் வெளியில் சென்றிருக்கின்றான். கூடத்தில் ஒரு கிழவி சுவற்றின் பக்கம் முகம் திருப்பி படுத்துக் கொண்டிருக்கின்றாள். இவர் உள்ளே போய் உடலுறவு கொண்டிருந்த பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்டு உடனே அந்தப் பெண் இவரைப் பிடித்து தள்ளிவிட்டு எழுந்திருந்திருக்கின்றாள். பால் குடிக்கும் குழந்தை.

அதன் பின்னர் அவர் விசாரித்த பொழுது அழுதது அவள் குழந்தை; வெளியில் சென்றது புருஷன்; கூடத்தில் படுத்திருப்பது மாமியார் என்று சொல்லி இருக்கின்றாள். ஒன்றும் பேசாமல் பணம் கொடுத்துவிட்டு வந்து விட்டார்.

என்னிடம் சொன்ன பொழுது ஓங்கி அடித்துவிட்டேன். அந்த மனிதனுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர். சிறுவயது முதல் அவர்கள் குடும்பம் எனக்குப் பழக்கமானது. அவருக்குள் இப்படி ஒரு மிருகம் இருந்தது அன்றுதான் தெரியும்.

கள்ள உறவுக்கு எதுக்கைய்யா குடும்பப்பொன்ணும் கல்லூரி மாணவியும்?

நான் இத்தனை சம்பவங்கள் கூறினால் எதை எழுதுவார், எதைவிடுவார்? இவைகளைக் கூறியதற்கு நான் எத்தகைய பணியில் இருந்தேன் என்பதைப் புரிய வைக்கவும் நம்மைச் சுற்றிக் கொட்டிக் கிடக்கும் குப்பைகளையும் கொஞ்சம் அடையாளம் காட்டவும் தான்.

ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்க வருகின்றவர்கள் போல் அவரிடம் நிறைய பேச விழைகின்றவர்களும் வருவார்கள். சாதாரணமாகப் பார்க்க வருவார். அவர் பார்வை, அவர் சிரிப்பு, நம் நெஞ்சுக்குள் புதைந்திருக்கும் செய்திகளைத் தானே கொத்திக் கொண்டுவந்துவிடும்.

கோயிலுக்குப் போகின்றோம். கடவுளிடம் நிறைய புலம்புகிறோம். உடனே அவர் காட்சியளித்து நம் கவலைகளைப் போக்கி விடுவதில்லை. நம் கவலைகளைச் சொல்லும் பொழுது மனத்தை அழுத்தும் பாரம் குறையும்.

இப்படி எழுதுவதால் ஜெயகாந்தனைக் கடவுளாக்கிவிட்டார் சீதாலட்சுமி என்று நினைத்துவிட வேண்டாம்.

குறைகளும் நிறைகளும் கலந்த ஓர் மனிதர் ஜெயகாந்தன்.


ஆனால் அவரிடம் மனம் விட்டுப் பேசும் பொழுது ஓர் ஆறுதல் கிடைக்கின்றது.

சில மனிதர்களிடம் சில மின் அதிர்வுகள் இருக்கும். சிலர் மீது ஈர்ப்பு தோன்றுகின்றது. சிலரை வெறுக்கின்றோம்; நமக்கே காரணம் தெரியாது

அரசியல்வாதிகள் கால்களில் விழும் கலாச்சரத்தைப் பார்த்துக் கேலி செய்கின்றவள் நான். ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா?

1986ல் நான் வெளி நாட்டிற்கு முதல் பயணம் செல்லவேண்டி வந்தது. அதுவும் மகளிர் நலன் பேசும் ஓர் கருத்தரங்கில் கலந்து கொள்ளப் போக வேண்டும். முதல் அமைச்சர் அவர்களிடம் சொல்லிவிட்டுப் போக நினைத்து கோட்டைக்குப் போனேன். அப்பொழுது முதல்வராக இருந்தவர் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர் அவர்கள். அவரைப் பார்க்க நான் நுழையும் பொழுது அவர் வெளியில் செல்ல எழுந்து நின்று கொண்டிருந்தார். அவரை வணங்கிவிட்டு நான் செல்லப் போவதைக் கூறினேன். அவரும் சில விபரங்கள் கேட்டார். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு விடை அளித்து வந்தவள் திடீரென்று அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். இது ஒரு அனிச்சை செயல்.

ஜெயகாந்தனிடம் அவர் தங்கி இருக்கும் இடத்தில் போய்ப் பார்த்தால் சிலரால் உணர முடியும். இப்படி எழுதுவதால் கிண்டல் செய்யத் தோன்றும். உங்கள் சிலரிடமும் அந்த சக்தி இருக்கலாம். உங்களை அறியாதவர்கள், புதியவர்கள் கூட உங்களைப் பார்க்கவும் விரும்பலாம். சிலருக்கு வெறுப்பு தோன்றலாம். நாம் இவைகளை உணர்வதில்லை.

ஜெயகாந்தனிடம் உளவியலை தர்க்க ரீதியாகப் பேசும் திறமை உண்டு. அந்தப் பேச்சுதான் பாதிக்கப் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கும். இங்கே நான் அவர் மேடைப் பேச்சைப் பற்றிச் சொல்ல வில்லை.

எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது. சங்கீதத்தை எடுத்துக் கொள்வோம். சிலருக்கு தோடி ராகம் பிடிக்கும். சிலருக்கு பைரவி பிடிக்கும். ரசனைகள், ருசிகள் தனிப்பட்டவை. ஒரு காலத்தில் ஜி.என்.பி. அவர்கள் சுத்த கர்நாடகத்தில் கலப்பு கொண்டு வருகின்றார் என்று கிசுகிசுத்தனர். டி.கே.பட்டம்மாள் மாதிரி எம்.எஸ்.சுப்புலட்சுமி இல்லை;பட்டம்மாள் பாடும்பொழுது ராகத்திற்காக சொற்களைப் பிரிக்காமல், அர்த்தம் பிரிந்து நிற்காமல் பாடுவார் என்பார்கள்.

ஜெயகாந்தனைப் பற்றியும் பல விமர்சனங்கள் இருப்பதை அறிவேன். நான் ரசித்ததை, நான் உணர்ந்தவைகளைக் கூறுகின்றேன். அவர் இல்லம், அவர் மற்றவர்களைப் பார்க்கவும், பேசவும் எடுத்துக் கொண்ட ஆழ்வார்பேட்டைக்குடில், இரண்டிற்கும் போயிருக்கின்றேன்.அவருடன் கிராமங்களுக்குப் போயிருக்கின்றேன்; பயணங்கள் செய்திருக்கின்றேன். அவரின் பரிமாணங்களைப் பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. என் அனுபவங்களைக் கூறுகின்றேன், அவ்வளவுதான்.

மாற்றுக்கருத்துக்களை மதிப்பவள் நான் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உண்டு.

எழுத்தாளர்கள் எதனையும் விருப்பம் போல் வளைத்து எழுத முடியும்.ஆனால் செயலாற்றுகின்றவர்கள் நிலை அப்படியல்ல. பிரச்சனைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவைகளைச் சீராக்க வழி வகைகள் காண வேண்டும். செயல்படுத்தும் பொழுது வெற்றியும் கிடைக்கலாம்; தோல்வியுற்றும் திரும்பலாம். விருப்பம் போல் அவ்வளவு எளிதில் முடிக்க முடியாது.

ஒரு காலத்தில் நானும் கதைகள் எழுதிக் கொண்டிருந்தவள். எனவே இரண்டின் பலமும் பலஹீனமும் தெரியும்!

(தொடரும்)

நன்றி -திண்ணை

3 comments:

எல் கே said...

//உங்களை அறியாதவர்கள், புதியவர்கள் கூட உங்களைப் பார்க்கவும் விரும்பலாம். சிலருக்கு வெறுப்பு தோன்றலாம். நாம் இவைகளை உணர்வதில்லை.//
100% sarithan

vasu balaji said...

Interesting.:).

பனித்துளி சங்கர் said...

மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது . பகிர்வுக்கு நன்றி !