Tuesday, April 17, 2012

நினைவலைகள்-12

நினைவலைகள்-12

வாடிப்பட்டி வட்டரத்தில் சோழவந்தான் பகுதி எழில் நிறைந்த பகுதி.பச்சை பசேலென்று வயல் வெளிகள். காற்றிலே சிலிர்க்கும் நெல் பயிர்கள் நம் மனத்தை வருடி அங்கே உட்காரச் சொல்லும். வரப்புகளில் உட்கார்ந்து அவைகளுடன் பேசுவேன். பாரதி பாடல்களைப் பாடிக் கொண்டிருப்பேன். அக்கரையில் தென்கரை. தென்னை மரங்கள் உயர்ந்து நின்று நம்மை வரவேற்கும். இந்த வேலை கிடைத்ததில் நான் அதிருஷ்டசாலி. என் ரசனைகளுக்கேற்ற பணி. என் திறமைகள் அனைத்தும் பயன்படுத்த முடிந்த அற்புதமான பணி. ஒவ்வொருவருக்கும் தன் வேலையில் திருப்தி இருக்க வேண்டும்.அப்பொழுதுதான் பணிகளும் சிறக்க முடியும். சிலருக்குத்தான் விரும்பியவை கிடைக்கும்.

வயலில் புதுமுறை நடவு; ஜப்பானீய முறை நடவு. முதல்நாளே சோழவந்தான் சென்று கிராம நல ஊழியர் முத்தையா வீட்டில் தங்கினேன். அதிகாலையில் நானும் அவரும் புறப்பட்டு வயலுக்குச் சென்றோம்.

நான் வயலில் இறங்க வேண்டும். இந்த சேலைக் கட்டில் இறங்கி வேலை செய்ய முடியாது. இதனை அறிந்து மாற்றுடை எடுத்து வந்திருந்தேன். ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் மரத்தின் பின் சென்று சேலைக் கட்டை மாற்றிக் கொண்டேன். கிராமத்துப் பெண்கள் என்னை வியப்புடன் பார்த்தனர். இப்பொழுது அவர்களில் நான் ஒருத்தி.

வயலில் இறங்கும் பொழுது கொஞ்சம் கஷ்டம். பிடித்து இறக்கி விட்டனர். ஏற்கனவே கிராம நல ஊழியர் இன்னொரு பக்கம் இருந்தார். நாங்கள் நாத்தை எடுத்து வரிசையாக நட ஆரம்பித்தோம். எங்களைப் பார்த்து மற்றவர்களும் செய்தார்கள். இரு வரிசை முடியவும் நான் மேலே வந்து விட்டேன். மற்றவர்களுக்கு இப்பொழுது சுலபமாக நட முடிந்தது.

அவர்களை நடவுப் பாட்டு பாடச்சொன்னேன். அவர்கள் பாடிக் கொண்டே அசைந்து அசைந்து நாத்து நடுவதும் எனக்கு நாட்டியமாகப் பட்டது. நாட்டுப்புறப்பாடல்கள் எத்தனை வகைகள்!. வேலையின் கடினம் தெரியாமல் இருக்க ஏற்றப்பாட்டு முதல் ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு பாட்டு. மனிதன் இசையுடன் இசைந்து வாழ்ந்திருக்கின்றான். ஆனால் இப்பொழுது அந்த இசை எங்கே? பாட்டுப் பெட்டிக்குள் அடங்கி விட்டது. தாலாட்டு நாம் ரசிப்போம். தாலாட்டைவிட ஒப்பாரிப் பாட்டு மிகவும் அருமை. தாலாட்டில் வம்சத்தின் பெருமைகளும் பிள்ளை மேல் கொண்ட ஆசையும் வரும். ஒப்பாரியில் இவைகளும் வரும். அத்துடன் வயிற்றெரிச்சல் முதல் எண்ணுகின்ற எல்லாம் கொட்டலாம். நான் பார்த்த பணியில் ஒவ்வொரு வினாடியும் உயிரும் உணர்வும் கலந்து வாழ்ந்தேன்.

அங்கிருந்து நானும் முத்தையாவும் புறப்பட்டு புதிதாகக் கட்டி முடித்திருந்த ஹரிஜன காலனிக்குச் சென்றோம். ஹரிஜனங்களுக்குப் புதிய குடியிருப்பு வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வந்த திட்டம். பல திட்டங்கள் சிறந்த நோக்கத்துடன் தீட்டப்படும். எக்கட்சி ஆட்சிக்கு வரினும் அவர்கள் காலங்களில் சில புதிய திட்டங்கள் வரும். ஆனால் நடை முறைப்படுத்தும் பொழுது சில குறைகள் நேர்ந்துவிடுகின்றன. அவைகளில் சில பார்ப்போம். நம் குறைகளைப்பற்றிப் பேசுவதில் தவறில்லை. அவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாமே.

அன்று ஹரிஜன காலனி கட்டும் பொழுது ஊருக்கு ஒதுப்புறமாக இருந்த புறம்போக்கு நிலங்களில் கட்டடங்கள் அமைந்தன. இருக்க இடம் கொடுக்கும் நோக்கமாக அப்பொழுது இருந்தது. ஆனாலும் அவர்களை சமுதாயத்தை விட்டு நாமும் தள்ளியே வைத்தோம். ஊருக்குள் அவ்வளவு பெரிய இடம் இருக்காது, அல்லது ஊரார் விரும்பார். இப்பொழுது சமத்துவபுரம் வீடுகள் வருகின்றன. எனக்கு முழுமையாகத் தெரியாது. ஆனாலும் தெரிந்த மட்டில் அற்புதமான திட்டம். இதில் அக்கறை குறைந்தால் நோக்கம் சிதறிவிடும். உயர் ஜாதியுடன் பல ஜாதி மக்களும் கலந்து வாழும் திட்டம். முதலில் குழந்தைகள், பின்னர் பெண்கள் சேர்ந்து வாழும் இடம். சாதி காழ்ப்புணர்ச்சி மாற வாய்ப்புள்ளதிட்டம். ஆனால் சில ஜாதிகளில் குடி வராமல் இருந்தாலோ, அல்லது இடம் மாறிச் சென்றாலோ , பின்னர் இஷ்டம் போல் குடிவைக்க ஆரம்பித்து விட்டால் நோக்கம் சிதறிவிடும்.

கட்சி எதுவாயினும் அவரவர் காலத்தில் நல்ல நோக்கத்துடன் சில திட்டங்கள் ஆரம்பிக்கின்றார்கள். அவைகளை அரசுப் பணியாளர்களும் அக்கறையுடன் கண்காணிக்க வேண்டும். அவ்வப்பொழுது ஆய்வு செய்து குறைகளை நீக்க வேண்டும். சத்திரத்து சமையல்காரர்கள் போல் ஆகிவிடக் கூடாது. நாட்டுப்பற்று எல்லாத் தரப்பினர்களிடமும் குறைந்து வருவதை மறுக்க முடியாது. அரசியல்வாதிகளையே குறை கூறிக் கொண்டிருக்கின்றோம். சுயநலமும் சுரண்டலும் எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் எல்லோரும் சேர்ந்துதான் வீழ்ந்துமடிவோம்.

இன்னொரு உதாரணமும் காட்டுகின்றேன். சென்னையில் குடிசைகள் நீக்கி கட்டடங்கள் கட்டி குடியிருப்பு செய்கின்றோம். கொத்தவால்சாவடியிலும், கப்பல்களிலும் கூலி வேலை செய்கின்றவர்களை ஆதம்பாக்கம் போன்ற தூரத்தில் குடியிருப்பு வைத்தால் அவர்கள் தொழில்கள் செய்ய முடியாது. குற்றங்கள் மலியும். எனவே புதுக்குடியிருப்புகள ஏற்படுத்தும் பொழுதும் கவனம் தேவை.

பயணத்துடன் ஆங்காங்கே இது போன்று கொஞ்சம் மாறிச்செல்ல வேண்டியிருக்கின்றது. உடனுக்குடன் ஒத்த விஷயங்களைப் பேசினால்தான் அதற்குரிய நல்ல பலன் கிடைக்கும். நான் கதை சொல்ல வில்லை. ஒரு ஊரில் ராஜா இருந்தார் என்று ஆரம்பித்து கல்யாணம், பிள்ளைப் பேறு என்று வரிசையாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், இது சமுதாய வரலாறு. குறைகளைக் காட்டி, முடிந்தமட்டும் சில ஆலோசனைகளையும் அவ்வப்பொழுது சொன்னால் பலன் கிடைக்கும். குறை கூறுதல் எளிது. ஒருவர்மேல் ஒருவர் குற்றம் கூறுவதும் சுலபம். ஆனால் இது கூட்டுப்பொறுப்பு. அரசியல்வாதிகள் திட்டம் தீட்டுகின்றனர். அரசுப் பணியாளர்கள் செயல்படுத்த ஆவன செய்கின்றர்கள். ஆனால் பணிகள் களத்தில் செய்வது யார். மக்கள், காண்டிராக்டர்கள். தவறு காணும் பொழுது மக்கள் உடனுக்குடன் கேட்க வேண்டும். இதைப் படிக்கவும் உங்கள் முணுமுணுப்பு கேட்கின்றது. நாங்கள் சொன்னால் யார் கேட்பார்கள் என்றுதானே. நம் சக்தி நமக்குத் தெரியவில்லை.நமக்குள் ஒற்றுமையில்லை. சின்ன ஆதாயம் கிடைத்தால் நாம் பிரிந்து விடுகின்றோம். தப்பு இல்லையா? அதனால்தான் கூறுகின்றேன். நடக்கும் தவறுகளுக்கும் எல்லோரும் பொறுப்பு. வாய்பேசாமல் ஒதுங்கி இருப்பவர்களுக்கும் பொறுப்புண்டு. யாரும் தங்கள் கடமையைத் தட்டிக் கழிக்கக் கூடாது.

பயணம் தொடருவோமா?

அன்று மாலை மகளிர் மன்றம் சென்றேன். ஏதோ அதற்குத் தனிக்கட்டடம் என்றோ, பெரிதாகக் கூட்டம் என்றோ இல்லை. ஒரு விட்டீல் கூடிப் பேசுவோம். அந்த மகளிர் மன்றத்தில் எல்லோரும் ஏதோ கூலி வேலை செய்கின்றவர்கள். நான் சென்றால் அங்குள்ளவர்களுக்கு மகிழ்ச்சி. பல பிரச்சனைகளைக் கொண்டு வருவார்கள். கூலி வாங்கும் இடத்தில் பிரச்சனைகள். என்னிடம் சொன்னால் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று பிரச்சனைகளைத் தீர்ப்பேன். குடும்பச் சண்டை என்றால் புருஷன் ,பொண்டாட்டியை கூட்டி வைத்துப் பேசுவேன். ஒரு வீட்டுக் குப்பையைப் பக்கத்து வீட்டும் பக்கம் போடும் சண்டையும் வரும். நோய்கள்பற்றியும் வரும். வாரம் ஒரு முறை தவறாது அங்கு போவது என்று வைத்துக்கொண்டிருந்தேன். அர்த்தமற்று பக்கத்து வீட்டுக் காரியுடன் போடும் சண்டைகளுக்கு பஞ்சாயத்து வைப்பது ஒவ்வொரு வாரமும் நடக்கும்.

வாழ்க்கையில் எத்தனை கோணங்கள்? எல்லாம் படிப்பினைகள்!

மேலக்கால் கிராமம் போக வேண்டிய வேலை வந்தது. அங்கு சென்று வேலையை முடித்துவிட்டு முனியம்மாவின் வீட்டிற்குச் சென்றேன். அவ்வூர் போனால் மதியச்சாப்பாடு அங்கேதான். அன்று போன பொழுது அவள் வீட்டில் புதிய இளைஞன் ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான். அவன் யார் என்று விசாரித்தேன்.

என் மவன் பெரிய கருப்பன்

இதுவரை பார்த்ததில்லையே!

ஆமாம் அவன் ஜெயிலுக்குப் போய்ட்டு இப்போத்தான் வந்தான். ஆறு மாசமா ஜெயில்லேதான் இருந்தான்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆனால் முனியம்மாள் சாதாரணமாகச் சொன்னாள். வாடிக்கையாகிப் போன ஒரு விஷயம்போல் பேசினாள். இதுவரை தன் மகனைப்பற்றி எதுவும் சொன்னதில்லை.

ஏன் ஏதாவது திருடினானா?

இல்லேம்மா, எங்க எசமான் ஒருத்தரை வெட்டச்சொன்னாரு. இவனும் போய் வெட்டினான். சாட்சி சரியில்லைனு விட்டுட்டாங்க

நான் பேசமுடியாமல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். முதல் அனுபவம். அதைப்பார்த்து அவளே தொடர்ந்து பேசினாள்.

எங்க ஊர்ப்பக்கம் இது சாதாரணம். எங்க முதலாளிங்க என்ன சொன்னாலும் செய்வோம். சாப்பாட்டுக்கு அய்யா ஒரு குறவும் வைக்கமாட்டாருங்க, எங்களுக்கு எல்லாம் எங்க எஜமான்தான்.

இதுதான் கொத்தடிமை வந்த வழி; இவர்கள் ஹரிஜனங்களில் ஒரு பிரிவினர்.

முனியம்மா மகனை எழுப்பினாள். அவனும் தள்ளாடிக் கொண்டே எழுந்திருந்தான். குடித்துவிட்டுப் படுத்திருந்திருக்கின்றான். முணுமுணுத்துக்கொண்டே எழுந்தவன் ஒரு புதியவளைக் கண்டதும் விழித்தான். முனியம்மாதான் பேசினாள்.

கருப்பா, கடைக்குப் போய் ரெண்டு வடை வாங்கிட்டுவாடா அவங்க சாப்பிடணும்

ஹூம்கொட்டிவிட்டு வீட்டுக்குப்பின்னால் சென்றான். என்னைவிட நான்கு அல்லது ஐந்து வயது பெரியவனாக இருப்பான். குழந்தை முகம். இவன் அம்பு. எய்கின்றவன் எவனோ!?. கொலைகாரனாக்கப் பட்டவன். அவன் தொழில் அது. இந்தப் பெரியகருப்பன் என் வாழ்க்கையில் இன்றியமையாதவனாகப் போகின்றான் என்பது அப்பொழுது நான் உணரவில்லை.என் நினைவில்லத்தில் முக்கியமானர்களுடன் இவன் இருக்கின்றான். இன்றும் எனக்குள் வாழ்கின்றவனை உங்களுக்கு இப்படி அறிமுகப் படுத்த வேண்டி வந்துவிட்டதே என்று வருந்துகின்றேன்.

கருப்பன் வடை வாங்கி வந்ததும், சாப்பிடும் பொழுது அவனுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன்,. அவ்வளவுதான். அக்கா,” என்று கூப்பிட்டான். ஏனோ அவன் மீது ஓர் பாச்ம் பிறந்தது. சில உணர்வுகளுக்கு நமக்கே அர்த்தம் தெரியாது. வயதில் மூத்தவன். ஆனால் எனக்கு அவன் தம்பி. இனி அவன் என்னைத் தொடர்ந்து சில காலம் வருபவன் அப்பொழுது நீங்களும் அவனைப் புரிந்து கொள்வீர்கள்.

வாடிப்பட்டியில் என் வீட்டில் உட்கார்ந்திருந்தேன். என் தோழி சரோஜா வந்தாள். அவள் முகத்தில் கலவரம். ஏதோ சொல்லத் துடிக்கின்றாள். ஆனால் தயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தாள்.

என்ன சரோ, சொல்ல நினைப்பதைச் சொல்லு. எதுவானாலும் சொல்லு

சரோ மெதுவாகச் சொன்னாள். செய்திகளைக் கேட்டவுடன் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டேன். அவளுக்கோ அதிர்ச்சி. அவள் சொன்னது. என்னைபற்றியது. பெரிதாக இரு வதந்திகள். அசிங்கமாகப் பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். அதைச் சொல்லத்தான் அவள் தயங்கி இருந்திருக்கின்றாள். செய்தி கேட்டால் நான், பயப்படுவேன், அழுவேன் என்று நினைத்திருக்கின்றாள். நானோ சிரித்தேன்.

திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்

தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்

எனக்குள் பாரதி குரல் கொடுத்துக் கொண்டிருந்தான்

(அலைகள் மீண்டும் வரும்)

Tuesday, April 3, 2012

எட்டயபுரம் வரலாறு-07

வரலாறுக்கும் பல முகங்கள் உண்டு. ஒரே நிகழ்வை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதுண்டு.

உதாரணமாக, நரசிம்மவர்மனின் வாதாபி படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம். காஞ்சியை நோக்கிப் படையெடுத்து வந்த புலிகேசி மன்னர் காஞ்சி கோட்டையை முற்றுகையிட முடிந்ததே யொழிய உள்ளே புக முடியவில்லை. எனவே சுற்றி இருந்த கிராமங்களை அழித்துவிட்டுச் சென்றார். பழி வாங்கப் புறப்பட்ட நரசிம்ம வர்மர் வாதாபியைத் தீவைத்துக் கொளுத்தி புலிகேசியையும் கொன்றார். தமிழகத்தில் இதனைப் புகழ்ந்து எழுதியிருக்கின்றோம். ஆனால் கர்நாடகாவில் நரசிம்ம வர்மனைக் கொடியவனாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. புலிகேசி காஞ்சியை வென்றதாகவும், தன் நகரைக் காப்பாற்றப் போராடி வீர மரணம் அடைந்ததாகவும் எழுதபட்டுள்ளது. அதனால் வரலாற்றைப் படிக்கும் பொழுது பல விஷயங்கள் ஒப்பு நோக்க வேண்டும்.

எனக்குச் செய்திகள் கிடைத்த விபரங்களைக் கூறி, சம்பவங்களைத் தொகுத்தும் கொடுக்க விரும்புகின்றேன்.

எட்டயபுர மன்னனுக்கும் ஏற்பட்டது சூழ்நிலைச் சறுக்கல்.அப்பொழுது துண்டுதுண்டாக நாடுகள் இருந்தன. எங்கும் குழப்பம். இதற்கிடையில் எட்டயபுர சமஸ்தான எல்லைகளில் கட்டபொம்மனால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர். ராஜா போராடியும் வெற்றி கொள்ள முடியவில்லை.

தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டி உதவி கிடைக்கவும் அதனை ஏற்றுக் கொண்டார். திட்டமிட்டு நடந்தது அல்ல.

டபிள்யூ.இ.கணபதியாபிள்ளை எழுதியுள்ள எட்டயபுரம் வரலாறு (Ettayapuram-Past and Present) என்ற புத்தகத்தில் மிகவும் விரிவாககக் கூறப்பட்டுள்ளது. இப்புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியவர் தமிழுலகம் நன்கறிந்த பிஷப்.கால்டுவெல். யாஹூவில் உள்ள பொன்னியின் செல்வன் குழுமமும் ‘Forum Hub’ குழுமமும் இதுபற்றி விவாதங்கள் நடத்தியிருக்கின்றனர்.தற்போது நான் வசிப்பது அமெரிக்காவில். என்னிடம் இந்தப் புத்தகங்கள் கிடையாது. இருப்பினும் கணபதியாபிள்ளை புத்தகம் மட்டும் என் நண்பர் வாங்கி நான் கேட்கும் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றார். சில தகவல்களை தொலைபேசி மூலம் பேசி பெற்றுவருகின்றேன். கணிணி வலைகளில் பல தகவல்கள் இருக்கின்றன.

எட்டயபுரம் ஊர்ப்பெயர் காரணப்பெயர்.

இப்பொழுது இன்னொரு செய்தியும் கிடைத்தது. அங்குள்ள சிவன் கோயிலில் இருக்கும் ஆண்டவரின் பெயர் எட்டீஸ்வரர். எட்டப்பன் என்பதை அன்பு, கனிவு என்று கொண்டு, ஊர்ப்பெயர் முதல் கோயிலில் குடிகொண்டிருக்கும் ஈஸ்வரன் வரை எட்டப்பன் பெயரை இணைத்துள்ளார்கள். என்று அந்த ஊர் உருவானதோ அன்றே வைத்த பெயர்கள். இப்படி இருக்கும் பெயரானஎட்டப்பன்”, நம்மிடையே நமக்குத் தெரியாமலேயே சிதைக்கப்பட்டது வருத்தத்தைக் கொடுக்கின்றது.

நான் சிறு பெண்ணாய் எட்டயபுரத்தில் வாழும் பொழுது நடந்த ஓர் சம்பவம் கூற மறந்துவிட்டேன். ராஜா அவர்கள் ஹரிஜனங்களை ஆலயப் பிரவேசம் செய்ய விரும்பினார். அப்பொழுது ராஜாஜி அவர்கள் அந்த நாளில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினார். ராஜாவின் பிறந்த நாளன்று ராஜாஜி, கல்கி இருவரும் எட்டயபுரத்திற்கு வந்து ராஜாவுடன் ஹரிஜனங்களுடன் ஆலயப் பிரவேசம் செய்தார்கள் என் நினைவு சரியா என்பதை ராஜாவின் மூத்தமகன் துரைப்பாண்டியனிடம் விசாரித்தேன். உறுதி செய்துவிட்டு இதனை எழுதுகின்றேன்.

காட்டிக் கொடுக்கப்பட்ட பரம்பரையென்றால் மூதறிஞர் ராஜாஜி கலந்து கொண்டிருப்பாரா? பாரதி பட்டம் கொடுத்தது எட்டயபுரம் ராஜா. நாட்டைக் காட்டிக் கொடுத்தவன் பரம்பரை கொடுக்கும் பட்டத்தைத் தூக்கி எறிந்திருப்பான். கட்டபொம்மன் தேசீயப் போராட்ட வீரர் என்றால் பாரதி பாடியிருக்கமாட்டனா? யாருக்கும் பயப்பட மாட்டான். அச்சமில்லை, அச்சமில்லை என்று கர்ஜிப்பவன்.

கட்டபொம்மன் செயல்களால் ஆங்கிலேயர்கள் எடுத்த நடவடிகைகள், கட்டபொம்மனை எங்கே, யாரால் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டார் என்பதுபற்றி முழு விபரங்கள் பல வரலாற்றுப் புத்தகங்களில் சான்றுகளுடன் இருக்கின்றன. பின்னர் எவ்வாறு அவைகள் மாற்றப்பட்டன, எந்த சான்றுகள் அடிப்படையில் மாற்றப்பட்டன என்பதனை வரலாற்று ஆய்வாளர்கள் மீள்ஆய்வு செய்து தயக்கமின்றி உண்மைகளை எடுத்துக் காட்ட வேண்டும். வரலாற்றில் குழப்பம் இருத்தல் கூடாது.

நாயக்க அரசால் அவர்களுக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையத்துக்காரர்கள், ஆட்சியில் ருசி கண்டபின் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டனர். தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் முனைந்தனர். அச்சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டனர் ஆங்கிலேயர்கள். அங்கு நடந்த போராட்டம் சொந்த நன்மைக்கா அல்லது சுதந்திரப் போராட்டமா என்ற கருத்தாடல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

சினிமாவுடன் போட்டி போட முடியுமா? பெருமாளாய், திருமாலாய் நடித்த என். டி. ஆர் அவர்களை ரசிகர் பார்க்கப் போகும் பொழுது தேங்காய், பழம், சூடத்துடன் சென்று அவர் முன்னிலையில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி வழிபடுவார்களாம். சினிமாவின் தாக்கம் மக்கள் மனத்தில் ஆழ்ந்து பதிந்து விடுகின்றது. இனியாவது பிழையைத் திருத்திக் கொள்ளலாமே.

மக்கள் திலகம் தான் பெற்ற தங்க மோதிரம்பற்றி விகடனில் எழுதிய அவர் சுயசரிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். பார்த்துக் கொள்ளலாம். படித்த நினைவில் எழுதியிருக்கின்றேன். சம்பவம் உண்மை ஆனால் ராஜாவின் பெயர் நான் குறித்ததுபோல் காசி விஸ்வநாதனாக இருக்கலாம் அல்லது பிதாமாஹாராஜாவாக இருக்கலாம். எட்டயபுர ராஜாக்களில் ஒருவர்தான் அவருக்கு மோதிரம் அளித்தது. என்னிடம் அப்புத்தகம் இல்லை.காசிமகாராஜா பற்றி தினமணியில் ராஜாமணி எழுதியிருக்கின்றார். கணிணியில் வலம் வந்தால் பல செய்திகள் காணலாம்.ஆனால் தனித் தனியாக எழுதப்பட்டுள்ளது. என் நினைவுகளை மட்டும் வைத்து எழுதா மல் அதுபற்றிய தகவல்கள் விசாரித்தபொழுது, விபரங்கள் தந்தவர்கள் ராஜாவின் புத்திரர்களும் என் நண்பர்களும்தான்.மன்னர் ஆட்சி முடியும் முன் அங்கு வாழ்ந்து ராஜாவின் ஆட்சியைப் பார்த்தவள் நான்.

வரலாறு யூகங்களில் எழுதப்படக்கூடாது.ஆனால் சான்றுகள் கிடைக்கும் பொழுது பலகோணங்களில் ஒப்பிட்டுப் பார்த்து முடிவிற்கு வரவேண்டும். வரலாற்று விஷயத்தில் நம் அணுகுமுறையில் ஒரு குறையுண்டு. இதனை பிரிட்டிஷ் நாட்டு வரலாற்று அறிஞர் திரு டேவிட் கீஸ் குறிப்பிட்டிருக்கின்றார். இவர் 60 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் செய்தவர்.மாமன்னர் இராஜ இராஜன் புகழ்பாட உடனே தஞ்சைப் பெரிய கோயிலைக் காட்டுவோம். கட்டடக்கலையில் உன்னதமானது மறுக்கவில்லை. ஆனால் அது முழுமையான வரலாறாகுமா? ஆனால் அதை மட்டுமே கூறி வருவது சரியல்ல. அந்த வரலாற்று ஆசிரியர் கூறுவதைப் பார்ப்போம்.

நிர்வாகச் சீரமைப்பு, ஒழுக்கக் கட்டுப்பாட்டின் விதிமுறைகள், வரவு செலவுக்ககணக்குகள்பற்றி வெளிப்படையான கல்வெட்டு சாசனங்கள், ஒரு காசு கொடுக்கப் பட்டாலும் அவனுடைய பெயரைக் கல்வெட்டில் பதிந்த நாகரீகம் உலக அரங்கிற்குச் சொல்லப்படவில்லை. சோழ நாடுமட்டும் எங்கள் ஐரோப்பாவில் இருந்திருந்தால் உலகப் புகழ் பெற்றிருக்கச் செய்திருப்போம் என்று கூறியுள்ளார்.

மன்னரிடம் அவர் நன்மைக்காக கோயிலில் விளக்கு போட ஓர் கிராம அதிகாரி அனுமதி கேட்கின்றான். மன்னரோ ஊர் மக்கள் நன்மைக்காக விளக்குப் போடச் சொல்கின்றார். அதிகாரி ஊர் நன்மைக்கு ஓர் விளக்கும், ஊர் மக்களின் நலனையே நினைத்து வாழும் மன்னர் நலத்திற்கு ஓர் விளக்கும் போடுகின்றான். இது கல்வெட்டில் பதிக்கப் பட்டிருக்கின்றது. ஆட்சி செய்பவனுக்கு நேர்மையும் மனித நேயமும் முக்கியம். இது உலகம் முழுவதிற்கும் பொதுவானதல்லவா? எதிரியைக்கூட நயமாகச் சுட்டிக் காட்டும் உயர்ந்த உள்ளம் படைத்தவன் மன்னன் இராஜராஜன். எப்பொழுதும் விரோதியாக இருந்த சிங்கள நாட்டாரை, முரெட்டெழு சிங்களவர் என்று குறிப்பிடுகின்றான். அவனல்லவோ மாமன்னன். நாம் இவைகளை ஒருங்கிணைத்து உலக அரங்கிற்கு கொண்டு போகவில்லை.

நடந்தவைகளைத் தனி தனியாகப் பார்ப்பதில் புகழ் பாதிப்பது மட்டுமல்ல; இகழ்ச்சியும் ஏற்பட்டு விடுகின்றது. எட்டயபுரம் வரலாறு இதற்குச் சான்று.

வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து முடிந்து அறிக்கை கொடுப்பதுடன் அவர்கள் கடமை முடிந்து விடுகின்றது. பாதுகாக்க வேண்டியது சமுதாயத்தின் கடமை. உண்மைகள் மாறாமல் இருக்க விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். அல்லது உண்மை அழிந்துவிடும்.

எட்டயபுர வரலாற்றிலும் கட்டபொம்மன் சம்பவம் ஓர் நிகழ்வு. பாரதத்தில் தர்மர் சூதாடினார். தன் உடன் பிறந்தவர்களையும்,தன் மனைவியையும் பணயம் வைத்தான். ஆனாலும் பாரதம் போற்றப்படும் நூல். காரணம் பல நல்ல செய்திகள் இருக்கின்றன.

எட்டயபுரம் என்றால் பாரதி மட்டும் தான் பலருக்கும் தெரியும். நான் எழுதியவைகளை விட இன்னும் நிறைய செய்திகள் இருக்கின்றன. அவைகள் தொகுக்கப் பட வேண்டும். பெருமைக்குரிய ஓர் சிற்றரசைக் காணலாம். நான் இதை எழுதி வரும் பொழுது என் நண்பர் ஒருவர் ஓர் வலைச்சுட்டியின் பெயர் அனுப்பினனர். அதைப் படிக்கவும் எனக்கு வியப்பேற்பட்டது. உங்கள் பார்வைக்கும் அதனை வைக்கின்றேன்.

For starters, here's an article I found on the web, which may interest you

http://historicalleys.blogspot.com/2008/12/cat-ettappa-dumby.html

இதைப்பற்றி நான் அலசப் போவதில்லை. என் நோக்கம் எட்டப்பன் என்ற சொல்லை அவச்சொல்லாகப் பேசுவதை நிறுத்திடக் கோரிக்கை வைப்பதே யாகும். ஆனாலும் ஒரு கருத்தைமட்டும் முன் வைக்க விரும்புகின்றேன்.

வரலாற்றை விருப்பம்போல் மாற்றி எழுதுதல் கூடாது. இதனை நான் பொதுப்படையாகக் கூறுகின்றேன். எதனையும் குறித்தல்ல.

சமீபத்தில் மின் தமிழுக்குஒருவர் அனுப்பிய மடல் பற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். தமிழகத்தில் விருப்பம் போல் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் அதிகம் இருப்பதால் சரியான வரலாற்று நூல்களைப் பார்க்க முடியவில்லையென்று தெரிவித்துள்ளார்., மேலை நாட்டு மாணவன் ஒருவன் நம் நாட்டு வரலாற்றைக் கற்க விரும்யிருக்கின்றான்.அதற்கான சரியான நூல்களைப் பரிந்துரைக்க வேண்டிக் கொண்ட மடலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நம்மைப்பற்றி நாம் பெருமை பேசிக் கொள்வதைவிட பிற நாட்டார் நம் பெருமை பேச வேண்டும். நாம் நம் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்தால் ஒரு நாள் ஆய்வாளர்கள் உண்மை காண நேரிடும். அது நமக்குப் பாதகமாகாதா? வரலாற்று ஆர்வலர் என்ற முறையிலும், நாட்டுப்பற்றின் காரணமாகவும் என் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றேன். யாரையும் குறை சொல்லும் நோக்கில் இவைகளை எழுதவில்லை.

இன்றைய இளைஞர்கள் கற்பூரப் புத்தி கொண்டவர்கள். மேலோட்டமாகப் பார்ப்பதில்லை. குழுமங்களில் அரட்டைகளும் உண்டு. விருப்பு வெறுப்பின்றி ஒரு விஷயத்தை அலசுபவர்களும் உண்டு. அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் உண்மைகளைக் கோண்டு வர அவர்கள் போதும். நான் வயதான ஒரு மூதாட்டி. வருங்கால சந்ததிகளுக்கு தங்கள் ஆணிவேர்களைக் காட்டத்துடிக்கும் இவர்களைக் காணும் பொழுது மனம் சமாதான மடைகின்றது.

யாராக இருந்தாலும், குறிப்பாக சக்தி வாய்ந்த ஊடகங்கள், வரலாற்றைத் தொடும்பொழுது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குற்றவாளி தப்பலாம் ஆனால் நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்று நமக்குத் தெரியும். அதனால் தான் இந்த வேண்டுகோளை சமுதாயத்தின் முன் வைக்கின்றேன்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய வரிகள்.

விழிப்புணர்வுக்கு நாடகம், சினிமா போன்றவைகளின் பங்கைக் கூறுமிடத்து அவைகளால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பதற்குச் சான்றாக எட்டயபுரம் வரலாறு இருக்கின்றது.