Sunday, November 14, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 25

ஜெயகாந்தன் எழுதிய "சுந்தரகாண்டம்"


ஓ சீதே!


ஒரு அலறலுடன் துவங்குகிறது இந்த நாவல். ஆரம்ப காலத்திலேயே ஒரு புரிதலுடன் எழுதிக் கொண்டிருந்த ஓர் மாபெரும் எழுத்தாளன் காலவெள்ளத்தில் நீந்திவந்து, மாறிவரும் சூழலில் எழுதிய ஓர் நவீனம் இந்த சுந்தர காண்டம்!


குங்குமத்தில்’ தொடராக வந்த காலத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்று, அது முடிவடைந்த பின்னர் அதே வீச்சுடன் கேள்வி-பதில் மூலமாகப் பல வாரங்கள் விவாதிக்கப்பட்டு, அத்தனை கேள்விகளுக்கும் ஜெயகாந்தன் பதிலிறுத்தார். பின்னர் இது புத்தகமாக வெளிவந்தபொழுது, வழக்கம்போல் அவர் எழுதிய முன்னுரையைப் பார்ப்போம்.


இந்தக்கதையின் மூலம் நான் நமது பெண்களுக்கு என்னென்னனவோ சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகளல்ல.அவற்றால் ஏதும் பயனிராது என்பதை நான் அறிவேன்.ஆயினும் நமது பெண்கள் அறிய வேண்டிய நம்மைப்பற்றிய உண்மைகள் நிறைய உள்ளன.


அதாவது பெண் என்பவள் அவளே சில சமயங்களில் எண்ணி மயங்குவது போல அவள் தனிப்பிறவி அல்லள்; அவள் ஆணின் பாதி. அவள் காதல் வயப்பட்டிருந்தாலும் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தாலும் , இந்தத் தளைகளில் தன்னைப் பிணைத்துக்கொள்ளாத சுதந்திரப் பறவையாக வாழ நேர்ந்தாலும், அவள் நமது சமூகப் பதுகாப்புக்கு உட்பட்டவள்தான். காதலும், கல்யாணமும், குடும்ப வாழ்க்கையும் ஏதோ தான் சம்பந்தப்பட்ட தனி விவகாரம் என்று எண்ணுகிற பெண்தான் பேதை. அது சமூகம் சம்பந்தப்பட்டது என்று அறிவிப்பதே இந்தக் கதையின் முதல் நோக்கம்.


பெண்களே !


நீங்கள் உங்கள் தந்தையென்றும், காதலன் என்றும், கணவன் என்றும் நம்பி உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்களே அவர்கள் யார் ? அவர்களே இந்த சமூகத்து மனிதர்கள். அவர்கள் கொடுமைக்காரர்கள். பெண்ணை மதிக்கத் தெரியாத மிருகங்கள். பெண்ணை மண்ணுக்கு இணையாக மதித்து உழுது மிதித்து அகழ்ந்து தூர்க்கிறவர்கள்.உங்களை அவர்கள் வேண்டாத சுமையாக எங்கேயேனும் தள்ளிப் போடவே விரும்புகிறார்கள். தலையில் வந்து விடிந்துவிட்டதாக இறக்கிப் போட்டு ஏற்றி எறிகிறவர்கள். மாட்டை வணங்குகிற மரபு போல் உங்களை லட்சுமீகரமாக்கி அவர்கள் தொழுவார்கள்.நேரம் வரும் பொழுது தெரியும், இந்த கசாப்புக் காரர்களின் காதல் லட்சணம்.


மதிப்புக்கும் அன்புக்கும் உரிய உங்கள் இனிய பாதியான ஆண்மகன் இந்த வசை எய்து வாழ்வது எதனால்?வசைக்குரிய ஒரு சமூகத்தின் அடிமையாக வாழ்கிறானே! அதுபற்றிய ப்ரக்ஞையற்று தான் ஒரு எசமானன் என்று உன்னிடம் வந்து ஒரு அடிமை அதிகாரியைப் போல், சுரண்டல் வியாபாரியைப் போல் நடந்து கொள்கிறானே! அதற்கெல்லாம் காரணம் அவனது சமூகத் தொடர்பேயாகும்.


சமூகம் என்பது ஏதோ தனித்துத் தெருவில் திரிவது மட்டுமல்ல, அது தந்தையாய், சகோதரனாய்,சக்தி வாய்ந்த பெரிய மனிதனாய், காதலனாய், கணவனாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வந்து ஆரோகணித்துச் செய்யும் அட்டகாசங்களைத் திமிர்ந்த ஞானச்செருக்குடைய பெண்களேயன்றி வேறு யார் அறிவார் ?"


இளம்பெண்களே ! காதல் என்ற பெயரிலும் கல்யாணம் என்ற பந்தத்திலும் இந்த சமூக மனிதனிடம் மோசம் போய்விடாதீர்கள் என்று எச்சரிக்கிறது இந்தக் கதை. அப்படிப்பட்ட பந்தங்கள், ஒரு சமூகவிரோதியோடு ஏற்படுத்திவிடுகிற பட்சத்தில் அது உங்களைக் கட்டுப்படுத்தலாகாது என்று உங்கள் சார்பில் அனைவரையும் போராடச் சொல்கிறது இந்தக் கதை. உங்களை அந்த சமூகவிரோதிகள் சிறையெடுப்பினும், சீர்கெடுப்பினும் உங்களின் நிறையை அழிக்க அவர்களால் ஒண்ணாது என்று இக்கதை எடுத்து ஓதுகிறது.”


ராவணன்,’ என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்-பலவித உத்திகளுடன் சொல்லப் புகுந்த ஒரு கதை. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னமே இந்த மாபெரும் எழுத்தாளனால் கையாளப்பட்டது என்பதே இதன் பெருமை. ஒருவேளை என்றோ இக்கதை படிக்கப்பட்டு விழுந்த விதை அப்படி ஓர் மரமாகியும் வந்திருக்கலாம். சில நேரங்களில் வெவ்வெறு மனிதர்களிடம் வெவ்வேறு காலங்களில் ஒத்த கருத்துள்ள படைப்புகளும் தோன்றலாம். ராஜ ராஜ சோழன் விருது இக்கதைக்குக் கிடைத்தது பெண்ணியத்துக்குப் பெருமை.

இனி கதையினைப் பார்ப்போம்!


நீ எங்கிருக்கிறாய்?”என்ற சோகமான அலறல் பூமியிலிருந்து கிளம்பி ஆகாசத்திலும் பூமியிலும் மோதி எதிரொலிக்க “மூர்ச்சையானான்“ என்று ஆரம்பமாயிற்று அந்தக் கதை.


அவள் கண்களில் கொப்பளித்துச் சுரந்த கண்ணீர்த் திராவகத்தில் அந்த எழுத்துக்கள் மறைகின்றன. காவிய சோகம் திரையிடுகிறது. மீண்டும் தொடர்ந்து படிக்கின்றாள்


அவன் மூர்ச்சை தெரியாமல் வெறித்த விழிகளுடன் திசைகளை அளந்த பார்வை நிலைக் குத்திப் போக, விழுந்து புலம்புகின்றான்.


’வைதேகி! உன் அணிகலன்களெல்லாம் இந்த மண்ணில் விழுந்து கிடக்கின்றன. இரத்தினங்களும் முத்தும் வேண்டாமென்று உதறி, பெண்மையின் அணிகலன்களை மட்டும் தரித்துக் கொண்டவளே, நீ எங்கிருக்கிறாய் ?’


துயரமும் அச்சமும் கண்ணீரும் அவமானமும் கண்களில் தேங்க வானத்தை நோக்கித் தீனமாய், அவலமாய்ப் பெருமூச்செறியும் கோடானு கோடிப் பாரதப் பெண்களில் நீ யாராக, எந்த காராகிருகத்தில், எவர் காவலில் எங்கு கட்டுண்டு கிடக்கிறாயோ?


ஏ, பூமியின் புதல்வியே, உனக்குத் தாயில்லை, தந்தையில்லை, உடன்பிறப்பில்லை, உற்றாருறவினர் இல்லை, உனக்கு சாதி இல்லை, மதம் இல்லை, குலம் இல்லை, கோத்திரம் இல்லை, நாடு இல்லை மொழி இல்லை, எல்லையற்ற துன்பமே! நீயே சீதை !இறுதி காணாச் சோகமே, நீயே சீதை!

புலம்பல் தொடர்கின்றது. தாயின் குரல் கேட்கவும் அவள் சுயநிலை அடைகின்றாள். காவியக் காட்சிகள் மறைந்து கண்ணீர் கொட்டுகின்றது. இவள் தான் கதையின் நாயகி சீதா.


ஒரு ஜன ரஞ்சகப் பத்திரிகையின் தலைமை ஆசிரியரின் பெண் சீதா. கல்லூரிப் படிப்பு படிக்கும் இவள் முற்போக்கான எண்ணம் கொண்டவள். பெண்கள் ஏதோ ஆண்களின் போகப் பொருள் அல்லள் என்பதில் உறுதியாக இருப்பவள்.


பகலில் ஆசாரம், மாலையில் மது, என இரட்டை வாழ்க்கை வாழும் தந்தையின் பணத்தாசைக்குப் பலியாகி மனைவியை இழந்த ஒரு தொழில் அதிபருக்கு மணமுடிக்கப்படுகிறாள் சீதா. முதலிரவன்றே “என் அனுமதியின்றி என்னைத் தீண்டினால் நான் தற்கொலை செய்து கொள்வேன்," எனச்சொல்லிய அவள் முடிவை நாட்பட நாட்படச் சரியாகும் எனச் சிரித்துக் கொண்டே அனுமதித்து விட்டு மது அருந்திவிட்டு, தன் வயதானத் தாய்க்கு நர்ஸாகப் பணிபுரியும் இளம் விதவையுடன் வழக்கம் போலப் படுக்கச் சென்று விடுகின்றான்.


சீதாவுக்கு ஒரு சில மாதங்கள் கழித்தே இது தெரிய வருகிறது. கணவனுடன் விவாதங்கள், அதன் பின்னர் அப்பா ஏற்று நடத்திய பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்த ஆரம்பித்துவிடுகின்றாள்.

கதைக்குள் கதையாக இன்னொரு கதை வேறு. ருஷ்ய நாட்டில் ஒரு கிராமத்துப் பெண் காதலனால் வஞ்சிக்கப் பட்டு ஓடி ஓடிக் களைத்து உயிரைவிடுவதும் வருகின்றது. சோகப் புலம்பல்.


கதையில் சில பகுதிகள்


“பொதுவாகவே நமது பெண்களை அசோக வனத்துச் சீதைகள் என்றுதான் நினைக்கிறான் கிரிதரன் . அதிலும் உங்களைக் குறிப்பாக இராமனில்லாத சீதை என்று இன்றைக்குக் கூடப் பேசும் பொழுது சொன்னான்” என்றான் ராமதாஸ்.


ராமன் யார் என்று கேட்ட சீதையே தொடர்ந்து ராமனைப்பற்றிப் பேசுகின்றாள்


“ஆயிரம் பிரதாபங்கள் இராமனுக்கு உண்டு ஆயினும் சீதைச் சிறை மீட்பவனே இராமன். அது ஏதோ ஒரு தனி மனித சாதனையல்ல. இக்காலச் சமூகப் பொருளில் “சீதை சிறை மீட்சி “ என்பது பெண்விடுதலையே ஆகும்.


ராமதாஸுடன் அடிக்கடி விவாதிக்கிறாள். ராமதாஸ் கிரிதரனைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பான். இராமாயணத்தில் இராமனின் குணம் என்ன என்ற புதிர்க் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்த சீதை தனக்கான இராமன் யார் என்பதை உணரவும் அவனை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகிறாள். அது என்னவாயிற்று என்று சொல்லாமலேயே கதையை முடித்து விடுகின்றார். வாசகர்களின் முடிவிற்கு விட்டு விடுகின்றார்.


என்றோ எழுதப்பட்ட கதை. கொடிய கணவன் அமையுமானால், காலில் கற்பு என்ற கயிறு கட்டப்பட்டு வதைப்பட்டுக் கொண்டிருந்த பெண், விடுதலைப் பயணம் தொடங்கி விட்டாள் என்பதற்கு அடையாளம். இந்தக் கதை. தாலிக்ககயிற்றின் மதிப்பு, அதைக் கட்டியவன் வாழும் ஒழுக்கத்தைச் சார்ந்தது. அவன் சரியில்லையென்றால் தாலி வெறும் கயிறுதான். அந்த பந்தம் பலஹீனமாகி அறுந்து வீழும்.


தந்தை பெரியாரின் கடுமையான சாடல், ஜெயகாந்தன் எழுத்திலே காட்டும் தீவிரம், பல ஆண்களின் மனங்களை வருத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.


குடும்பத்தில் அன்பு கொண்டு பண்புடன் வாழும் ஆண்களை நான் மரியாதையாக வணங்குகின்றேன். உங்களைச் சுற்றிப்பாருங்கள். எங்கள் வேதனைக்கொதிப்பைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வெளிப்படையாக சில தகவல்கள் மட்டும் சொல்ல விரும்புகின்றேன்.


ஆண்மையின் சக்தி ஆணின் மனத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் சார்ந்திருக்கின்றது. பலஹீனம் அடையும் பொழுது மனைவியைப் பக்குவமாகக் கையாளவேண்டியவர்கள் கொடூரமாக அடிப்பதுவும் கடிப்பதுவும் தாங்கிக் கொள்ளக் கூடியவைகளா? இதுவா செக்ஸ் இன்பம்?. எத்தனை பெண்கள் என்னிடம் அழுதிருக்கின்றார்கள் தெரியுமா?


“நன்றாக இருந்தாரே, ஏனம்மா இப்பொழுது இப்படி நடந்து கொள்கின்றார். அவர் அருகில் வந்தாலே பயமா இருக்கு“


சிகரெட், மெழுகுவர்த்தி இவைகளைக் கொளுத்தி அந்த மென்மையான உடம்பில் சூடு போடுவதில் என்ன இன்பம் கிடைக்கின்றது?.


பெண்ணை அடித்து அவள் துடிக்கும் பொழுது உடலுறவு கொள்வதில் என்ன மகிழ்ச்சி?


இவைகள் வக்கிரமாகத் தெரியவில்லையா?


வேலை செய்ய மாட்டான். ஆனால் குடிப்பான். தெருவோர தேவதைகள் வேண்டும். இதற்கு காசு வேண்டி தன் மனைவியை அடிக்கும் ஆணை எதில் சேர்க்கலாம்? படித்தவனும் வித்தியாசமாக பெண்ணைக் கையாள்கின்றான். சில சலுகைகளுக்கும், பதவி உயர்வுக்கும் கட்டியவளைக் கட்டாயப் படுத்தி பிற ஆண்களுக்குப் பலிகடாவாக அனுப்புவனை என்னவென்று சொல்வது? தன் ஆடம்பர வாழ்வுக்குத் தன் மகளையே பலியாக்கத் தயங்குவதில்லை சில அப்பன்கள்.


அப்பனுக்கு ஆசைக் கிழத்தி அக்காவென்றால், அவன் மகனுக்கு அவள் தங்கையுடன் உறவு. என்னைய்யா வக்கிர வாழ்க்கை?


கடவுள் பெயரைச் சொல்லி பெற்ற மகளையே, பதின்மூன்று வயதுச் சிறுமியை ஊருக்கு தாசியாய் அனுப்பும் அப்பனை என்ன சொல்வது?


ஆண்மட்டுமா பெண்ணுக்கு எதிரி?


பணியிடங்களிலும், பொது வாழ்விலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவிப் பெண்களை பலிபீடம் அனுப்பும் பெண்களை என்ன சொல்வது? ஆக பாதிக்கப்படுவது பெண்


இத்தகைய மிருகச் செயல்களுக்கு நீண்ட பட்டியலே என்னால் கொடுக்க இயலும். இவைகள் பத்திரிகைகளில் படித்து எழுதவில்லை. நான் கவுன்ஸ்லிங் செய்த பல குடும்பங்களில் பெண்களின் வலியைக் கேட்டறிந்ததில் சிலமட்டும் எழுதியுள்ளேன்.


என் வாழ்நாளில் லட்சக்கணக்கான குடும்பங்களைப் பார்த்துவிட்டேன். இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சுமார் 17000 கிராமங்கள், மூவாயிரத்துக்கு மேலான நகரச்சேரிகளுக்குச் சென்றிருக்கின்றேன். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கிராமங்களைப் பார்த்திருக்கின்றென். நம் நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகள் போயிருக்கின்றேன். உலகில் பல பகுதிப் பெண்களிடம் பேசிருக்கின்றேன். ஆய்வும் செய்திருக்கின்றேன்.

தமிழ் மண்ணில் மட்டுமல்ல, உலகில் பெண் எங்கிருந்தாலும் வதைப்படுகின்றாள்.


எங்காவது போர், அல்லது ஒரு சிறு கலாட்டா வந்தாலும் ஒரு பெண்ணைப் பலபேர் குதறி அழிக்கின்றார்களே, இந்த நிலை ஆணுக்கு உண்டா? நாங்கள் வெறும் சதைப்பிண்டங்களா? உணர்வும் உயிரும் உள்ள மனிதப் பிறவிகள்!


கஷ்டம், பாதிப்பு இரு பாலாருக்கும் வரும். ஆனால், பெண்ணுக்கு நடக்கும் இந்தக் கொடுமை ஆணுக்கு உண்டா?


வெளியில் காணும் சில வளமான காட்சிகளை மட்டும் வைத்து பெண் நிலை உயர்ந்துவிட்டது என்று மதிப்பிடுதல் கூடாது. அதனால்தான் உண்மைகளைப் புரிந்த சில ஆண்கள் குரல் கொடுக்கின்றார்கள்.


லட்சக்கணக்கான வருட வாழ்க்கையின் அனுபவத்தில் அவன் விதித்துக் கொண்ட விதிகள் தளர ஆரம்பித்துவிட்டன. ஊடகங்களிலும் சூழலிலும் வன்முறைகள் வலுத்துவிட்டன. பாலியல் கொடுமை விளையாட்டாய்க் கருத ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை அதிவேகத்துடன் கூடி வருகின்றது.


இந்த சமுதாயத்தில்தான் நாம், நமது சந்ததியினர் வாழ வேண்டும். நம் குழந்தைகள் வாழும் சுற்றுப் புறத்தைப் பாருங்கள். சட்டம் தடுக்கவில்லையென்றால் நிர்வாணக் காட்சிகளை எங்கும் காணலாம். பெரியவர்களின் பேச்சு, அறிஞர்களின் எழுத்து இவைகளைக் கண்டு கோபப்படுவதைவிட நல்ல சிந்தையுடன் எண்ணிப் பார்ப்போம் சீர்திருத்த முயல்வோம்.


ஆணென்றும் பெண்ணென்றும் பிரித்திடல் வேண்டாம். இரு சக்திகளும் இணைந்து நடத்தும் இல்லறமே நல்லறமாக அமையும்.


குடும்பம் எனும் கோயில் அழிந்துவிடக் கூடாது. ஆணாதிக்கம், பெண்ணின் சம உரிமையென்று பேசித் திரிவதைவிட குடும்பத்தை எப்படி சேர்ந்து காப்பாற்றுவது என்ற சிந்திக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.
.
மனிதர்களுக்குத் துன்பம் வருமானால் “சுந்தரகாண்டம்” படியுங்கள் என்பார்கள். தொல்லைகள் நீங்குமாம். என் தொடரில் இறுதியில் ஜெயகாந்தனின் சுந்தர காண்டத்தை இணைத்தது தற்செயல் நிகழ்வு.


அதுசரி, இராமாயணத்தில் அந்தப் பகுதிக்கு ஏன் சுந்தரகாண்டம் என்ற பெயர் வந்தது? அசோகவனத்தில் அரக்கனாலும் அரக்கிகளாலும் அல்லல் படுத்தப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப் படுகின்றாள் சீதை. ஆபத்பாந்தவனாக அனுமன் வருகின்றான். அனுமனின் வருகையில் தனக்கு சிறை மீட்சி வரும் என்ற நம்பிக்கை சீதைக்கு உண்டாகின்றது.


ஏனோ, என் மனம் இன்னொருவரையும் இதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தூண்டியது, எனக்கு தேவ் என்று ஒரு நண்பர். அவரிடம் கேட்க முடிவெடுத்தேன். ரிஷிமூலமும், சுந்தரகாண்டமும் கொடுத்துதவிய டாக்டர் சங்கரைப் போன்று தேவ் அவர்களும் அதுபற்றிய ஓர் அரிய விளக்கமே எழுதி அனுப்பினார். என்னால் அவரைப் போன்று எழுத முடியாது. எனவே அவர் எழுதியதை அப்படியே வாசகர்களுக்குத் தருகின்றேன்.


“ஸுந்தரே ஸுந்தரம் சர்வம்" -சுந்தரகாண்டத்தில் எல்லாம் சுந்தரம்


அனுமன் தன் ஆற்றலை உரிய தருணத்தில் வெளிப்படுத்தும் அழகு. பதறாமல் சிந்தித்து முடிவெடுக்கும் அழகு. மெல்லிய குரலில் சிம்சுபா விருட்சத்தில் மறைந்து கொண்டு எளிய நடையில் இராமர் காதை கூறும் அழகு. நம்பிக்கை குலையும் நிலையில் இருந்த பிராட்டியை அடையாளம் கண்டு அடையாளமான கணையாழியை சமர்ப்பிக்கும் அழகு. பண்டிதர் பாணியில் சீதையோடு உரையாடாமல் பாமரர் மொழியில் பேசுவது. சுத்த சம்ஸ்கிருதத்தில் பேசினால் ராவணன்தான் மாறுவேஷத்தில் நய வஞ்சமாக அணுகுகிறான் என்று சீதை சந்தேகப்படுவாள். ஏனெனில் ராவணன் மஹாப்பண்டிதன்.


பின்னர் அரக்கர் படையை சவால் விட்டு அழைத்து அநாயாசகமாக அதை அழைக்கும் அழகு. ராவணனைச் சந்திக்க உபாயம் தேடும் அழகு. அரக்கனை எச்சரித்து சீதை அனாதையல்லள் என்று அச்சுறுத்தும் அழகு. சுருதிநாயகன் பெருமையை தாமஸர்களான அரக்கர் அவையில் நிறுவும் அழகு. உரிய தருணத்தில் இவர் கொடுக்கும் “jolt” ராவணன் கடைசிவரை தாயாருக்கு தொல்லை தராமல் இருக்கக் காரணமாகிறது.


அனுமனைத் தலைசிறந்த ஒற்றனாக, இராமபிரானின் நம்பிக்கைக்குரிய தோழனாக, சிறந்த தூதுவனாக, சொல்லின் செல்வனாக, மேலான தொண்டனாக, வேதாந்தக் கண்ணோட்டத்தில் தலை சிறந்த ஓர் ஆச்சாரியனாகக் காட்டும் பகுதியாதலால் “ஸுந்தரகாண்டம்” என்று பெயர்.

தேவ் ஒரு இராமபக்தர். அவரின் பக்தி அவர் எழுத்திலும் தெரிகின்றது.


பெண்கள் துயர் துடைக்க யார் வருவார்?


பேசத்தெரிந்த பெரியவர்கள் பேசுகின்றார்கள். எழுதமுடிந்தவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.


நல்லிதயம் படைத்த நல்லவர்களுக்குப் பெண்ணுலகம் நன்றி செலுத்துகின்றது.


கல்வியும் பொருளாதார நிலையில் உயர்வும் அவளுக்கு உதவும். ஆனால், எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்புகள் இல்லையே! அதுமட்டுமல்ல, இன்னும் பல இன்னல்கள் அடியில் ஓடும் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருக்கின்றதே அதனை எப்படி அழிப்பது?


நானும் புலம்புகின்றேன். என்னைத் தேடிவந்து என் தோள்களில் சாய்ந்து அழுத பெண்கள் எத்தனை பேர்கள்? அவர்களைக் காப்பாற்ற முயன்ற எனக்குத்தான் எத்தனை சோதனைகள் ?


சீதாம்மாவின் குறிப்பேடு முழுமையாக வந்தால் இதிகாசத்தைவிடப் பெரிதாக இருக்கும். அத்தனை மனிதர்கள் ! அத்தனை சம்பவங்கள் !


ஜெயகாந்தனின் எழுத்து, அவர் சிந்தனை, அவர் நட்பு இவைகள் என் பணிக்கு ஊன்று கோலாய் உதவியதால் என் அனுபவங்களுக்கு அவர் கதைகளில் சில பகுதிகளையும், உரையாடல்களையும் எடுத்துக் காட்டுகளாக உபயோகித்தேன்.

என் குறிப்பேட்டில் இருப்பவர்களைப் பார்த்தால் ஓர் திருவிழாக் கூட்டம் போல் இருக்கும். எழுத நினைக்கவும் அவர்களில் முதலாக முன் வந்தவர் ஜெயகாந்தன். என் மனம் எப்பொழுதும் சமுதாயத்தின் நன்மையைத் தான் சுற்றி வரும். எனவே அதற்குதவும் ஜெயகாந்தனின் படைப்புகளை இத்தொடரில் கையாண்டேன். முடமாகி ஒதுங்கி யிருக்கும் முதுமையில் என்னால் முடிந்தது இந்த எழுத்து. இதையாவது செய்ய முடிகின்றதே !

நான் இலக்கியம் படைக்கவில்லை. நான் ஒரு சாமான்யமான பெண்மணி. என் எழுத்தும் சாமான்யமானவைகளாகவே இருக்கும். கிராமத்தாருடன், எளியவர்களுடன் பேசிப் பேசிப் பழகிவிட்டது. இலக்கியம் படித்தவளாயினும் எழுத்து எளிமையாகவே இருக்கும்.


வாழ்க்கையில் போராளியாக வாழ்ந்தேன். ஊதியம் பெற்றுத்தான் பணி செய்தேன். ஊதியம் வாங்கியதால் என் கடமைகள் இரட்டிப்பு உணர்ச்சியுடன் செய்தேன். வயதாகிவிட்டபடியால் பணியிலிருந்து ஓய்வு கொடுத்திருக்கலாம். ஆனால் சமூக சேவைக்கு ஓய்வு கிடையாது. இன்னும் முடிந்த அளவு ஏதோ செய்துவருகின்றேன்.


என் அனுபவங்களை, எண்ணங்களை எழுதி வருவதற்கும் ஓர் காரணம் உண்டு. இன்றைய இளைஞர்களுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நான் வழங்குவது இந்தக் குறிப்பேடு. ஜெயகாந்தன் பற்றிய தொடர் நிறைவுக்கு வரலாம். ஆனால் என் குறிப்பேட்டின் பல பக்கங்கள் அவ்வப்பொழுது பார்வைக்கு வரும். இப்பொழுது சில பக்கங்களையாவது பதிய முடிந்ததே என்பதில் மனத்தில் நிறைவு. அந்த மன நிறைவுடன் இத்தொடரை முடிக்கின்றேன்.


அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்,
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா !
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா !
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் ;
கலிய ழிப்பது பெண்க ளறமடா !
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம். .
பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறிகொரு தாழ்வில்லை ;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காதலின்பத்தைக் காத்திடு வோமடா !


இத்தொடரைப் பிரசுரித்த திண்ணை இதழுக்கும், என் எழுத்தினைப் பொறுமையுடன் வாசித்த வாச்கர்களுக்கும் நன்றி


சீதாம்மா

Sunday, October 31, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 24


காஞ்சியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். ஒரு அறையில் நான் உட்கார்ந்திருந்த பொழுது, அங்கே திடீரென்று சிலர் வந்து அமர்ந்தனர். வந்தவர் ஒரு பிரமுகர் என்று அருகில் இருந்தவர் கூறீனார். என்னை அந்த பிரமுகருக்கு அறிமுகம் செய்து வைத்தார் ஒரு அதிகாரி.

”இந்த அம்மா பெயர் திருமதி சீதாலட்சுமி. நம்ம மாவட்டத்துக்குப் புதுசா வந்திருக்கற மகளிர் நல அதிகாரி.”


நான் அவருக்கு வணக்கம் செலுத்தினேன்.


பிரமுகர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்

“உங்க டிபார்ட்மெண்டுலே பொம்புள்ளங்க ஒழுங்கா வேலை பாக்க மாட்டாங்களா?”

”ஏன் அப்படி சொல்றீங்க?”

”எங்க ஊர்லே ஒருத்தி இருக்கா; அவ செய்யற வேலை என்ன தெரியுமா? பிராத்தல் ஹவுஸ் நடத்தறா! எங்க ஊருக்கு வந்து பாருங்க.”

அங்கிருந்தவர்களில் சிலர் கொல்லென்று சிரித்தனர். எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும். அப்பொழுது நான் என்ன பேசினேன், அதன் தொடர்ச்சி என்ன என்பது தனிக்கதை.

ஐந்து கணவர்களுக்கு முன்னிலையில், நடுச்சபையில் அன்று திரெளபதி அவமானப்படுத்தப்பட்டாள்.

அன்னிய மண்ணில் ஊர் கூடியிருக்க, தேவர்களும் பெரியவர்களும் கூடியிருக்கக் கட்டிய கணவரே தீச்சொற்களை வீசி அக்கினிக்கு விரட்டப்பட்டாள் சீதை

அய்யா, பெண்னை அவமானப்படுத்துவது இதிகாச காலத்தில் இருந்து வரும் தொடர் நிகழ்வு. பெண்ணாய்ப் பிறந்தது எங்கள் குற்றமா? இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றா இரண்டா? மனம் வலிக்கும் பொழுது நான் ஓடித் தஞ்சம் புகும் இடம் தேனம்பாக்கம் அல்லது கலவை.


தேனம்பாக்கம்


இறைசக்தியை, தவத்தின் அருமையை உணரவைக்கும் அற்புதமான இடம். அங்கே ஆடம்பரம் கிடையாது. சத்தங்கள் இல்லாத ஒரு சத்திய பீடம். அங்கே தரிசிப்பதும் அமைதி; உணர்வதும் அமைதி. காஞ்சியில் இருக்கும்வரை நான் அடிக்கடி அங்கு போய் அமைதியாக உட்கார்ந்து விட்டு வருவேன். யாருடனும் பேச வேண்டியதில்லை. அங்கே நடமாடிக் கொண்டிருக்கும் மகாப்பெரியவரை தரிசித்தால் போதும்; எங்கும் கிடைக்காத நிம்மதி கிடைக்கும். சிலசமயம் கலவைக்கும் தரிசனத்திற்குச் சென்றிருக்கின்றேன்.

என்னுடைய பணியில் சோதனைகள் அதிகம். ஆத்மார்த்தமாகப் பணியாற்றுபவர்களுக்கு போராட வேண்டிவரும். சாதாரணப் பிரச்சனையென்றால் ஜெயகாந்தன் குடில் போவேன். என் மனத்தையே ஆட்டி வைக்கும் நிலை வரும் பொழுது தவக்குடிலுக்குச் சென்று விடுவேன். உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் கேள்விகள் கேட்பேன்

இறைவா ஏன் பெண்ணைப் படைத்தாய்? மனித உணர்வுகளுடன் படைத்ததற்குப் பதிலாக ஓர் இயந்திரமாகப் படைத்திருக்கக் கூடாதா? வலியில்லாமல் இருப்போமே!

மனம் புலம்பிக்கொண்டே இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதி பிறக்கும். அத்துடன் எதிர்த்துப் போராட புதுசக்தியும் பிறக்கும். இதனை உணரத்தான் முடியுமே தவிர வார்த்தைகளில் வடிக்க முடியாது. இது எப்படி என்ற கேள்வி எழலாம்; தவறல்ல. என் அனுபவத்தைக் கூறுகின்றேன்- அவ்வளவுதான்.

மகாப்பெரியவர்!

சில நேரங்களில் உட்கார்ந்திருப்பார்; சில நேரங்களில் நடந்து கொண்டிருப்பார்; சாதாரணத்தரையில் துணிவிரித்துப் படுத்துமிருப்பார்; அங்கே போகின்றவர்கள் இந்தக் காட்சிகளைக் காணலாம். ஏதோ கூண்டுக்குள் அவர் இருப்பது போன்று தெரியும். சில விநாடிகள் பார்த்துக்கொண்டு நாம் நின்றால் நாம் தான் உலகச் சிறைக்குள் இருக்கின்றோம் என்பதை உணர்வோம். பாசவலையில் கட்டுண்டு ஏதோ ஒரு வாழ்க்கையை ”நிலை” என்று கருதி வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

சில நேரங்களில் பெரியவர் அங்கே வந்திருப்பவர்களைப் பார்த்துப் புன்னகைப்பார்; அருகில் வரச் சொல்லி கையசைப்பார்; நம்மைப்பற்றி விசாரிப்பார்; குழந்தையைப் போல் சிரிப்பார்; அந்த தரிசனம், அந்த சில நிமிடங்களில் மனம் லேசாகிவிடும். அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.

யாராவது ஒருவர் நம்மை உற்று நோக்கிக் கொண்டிருந்தால் நமக்கு குறுகுறுவென்று உணர்வு தோன்றும். கூட்டம் இருந்தால், அங்கே அமைதி இருக்காது. அங்கே வருகின்றவர்கள் யார், என்ன பேசுகின்றார்கள் என்ற சிந்தனையின்றி ஓர் மாமனிதர் அமர்ந்திருக்கின்றார். அவருடைய புலன்கள் அவரின் கட்டுப்பாட்டில்! மனம் அந்த முனிவரின் கட்டுப்பாட்டில் இருப்பதை நாம் நேரில் உணரலாம். நாமோ நம் மனத்திற்கு அடிமையாகி குரங்காட்டம் ஆடுகின்றோம். அதனால் எத்தனைத் தப்புத்தாளங்கள்!

விமர்சனத்திற்கு வீழ்ந்துவிட்டால் நாளை புகழுக்கும் அடிமையாக வேண்டிவரும். கடமைகளைச் செய்யும் பொழுது பற்றற்று செயலாற்ற வேண்டும். இதுதானே கீதையும் சொல்கின்றது! அந்த தவச்சாலையில் சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டால் சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மறைந்துவிடும். இதனை ஒருவர் அனுபவத்தால்தான் உணர முடியும்.

மறைந்த இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் மகாப்பெரியவரை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். அங்கே பேச்சில்லை. கண்மூடி தியானம் செய்தார்கள். பல பெரியவர்கள் அவர் முன் உட்கார்ந்து எதுவும் பேசாமல் தியானம் செய்துவிட்டுப் போவதைப் பார்த்திருக்கின்றேன்.

திரு.மணியனுடன் மடத்திற்குப் போவோம். அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் நிறைய பேசுவார்கள்.

இந்துக்களின் மனங்களில் உயர்ந்த பீடத்தில் இருப்பவர். அவர் விரும்பியிருந்தால் அவருக்கு அத்தனை வசதிகளையும் செய்து தந்துவிடுவார்கள். ஆனால் அவரோ துவராடைக்குள் பொதிந்து, எளிய உணவு உண்டு , படுப்பது கூட ஒற்றைத் துணிவிரித்துத் துயில் கொள்ளும் அவரைப் பார்க்கும் பொழுது சன்னியாசத்தின் அர்த்தம் தெரியும். சில நாட்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். என் வாழ்க்கையில் அந்த மணித்துளிகள் கிடைத்ததைப் பெரிய பாக்கியமாகக் கருதுகின்றேன்.

குரோம்பேட்டையருகில் ஒரு கோயிலில் இருந்த அன்னபூரணி விக்ரஹம் சிதிலமடைந்தது. பக்தர்கள் மகாப்பெரியவரை அணுகித் தெரிவித்த பொழுது அதனைக் கடலில் இட்டு விட்டுப் புதியதாக ஒரு சிலை செய்துவரச் சொல்லிப் பணித்தார். பக்தர்களும் அவ்வாறே செய்து புதிய சிலையுடன் காஞ்சிக்குச் சென்றனர். ஆனால் மகாப்பெரியவர் அங்கில்லை. இரவாகிவிட்டது. எப்படியும் அவரைத் தரிசிக்க விரும்பி அவர்கள் போன பாதையைக் கேட்டு பக்தர்கள் விரைந்தனர். நள்ளிரவாகிவிட்டது. ஆனாலும் கார் ஓடிக் கொண்டிருந்தது. ஆட்கள் அரவமில்லா இடமாக இருந்தது. தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. அங்கே சென்ற பொழுது மகாப்பெரியவரின் சிஷ்யர்கள் இருப்பதைக் கண்டனர். சின்ன விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

அங்கே ஓரிடத்தில் இருந்த பல்லக்கில் பெரியவர் உறங்கிக் கொண்டிருந்தார். சூழ்நிலையைப் புரிந்து கொண்ட பக்தர்கள் அமைதியாக நகர ஆரம்பித்தனர். ஆனால் அதற்குள் பல்லக்கிலிருந்து மகாப்பெரியவர் வெளிவந்து அருகில் வந்துவிட்டார். யாரும் பேசக் கூட இல்லை. பக்தர்கள் மெய்மறந்து போய் பிரமித்து நின்றுவிட்டனர். ஸ்வாமிஜி அருகில் வந்து விபரம் கேட்டு புதிதாக செய்து கொண்டு வந்த அன்னபூரணி சிலையைப் பார்த்தார். பிறகு தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் முகம் பூவாய் மலர்ந்தது. கோயிலில் கொண்டு போய் இனி பிரதிஷ்டை செய்யலாம் என்று அருள் கூர்ந்தார்.

இதனால் நாம் என்ன தெரிந்து கொள்ளமுடிகின்றது?

திருமாலின் அனந்தசயனமும் சிவனின் மோனத்தவமும் காட்சிகள் தான். எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கும் சக்திகள். சிறிய அசைவு கூட அவனின்றி எதுவும் இல்லை. நமக்குத் தெரியாததால், உணர்ந்து கொள்ள முடியாததால் தவவலிமையைப் பொய் என்று கூறுதல் சரியாகாது.

ஜெயகாந்தனின் "ஜெய ஜெய சங்கர “ தொடர் சாதாரணமான கதையல்ல. ஆன்மீகம், காந்தீயம், கம்யூனிசம் என்று அவர் ஆன்மாவின் விருப்பங்களை அருவியாய் ஓடவிட்டிருக்கின்றார். அன்பே சிவம்; மனிதநேயமே அறம்; அங்கே ஆதியின் வாழ்க்கை, அவர்கோட்பாடு இவைகள் மூலம் வாழும் தத்துவத்தைக் காட்டி இருக்கின்றார்..


ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

காஞ்சியில் எனக்குக் கிடைத்த இன்னொரு அனுபவத்தையும் கூறவேண்டும். மனிதன் என்றால் எல்லோருக்கும் சின்னச்சின்ன ஆசைகள், பெரிய ஆசைகள், ஏன் பேராசைகள் கூட இருப்பது இயல்பு. எனக்கும் ஒரு பேராசை இருந்தது. அது ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு

திரு.கே.எம். ராஜகோபால் - காஞ்சிபுர ஊராட்சி ஒன்றியத்தலைவர்; சட்டமன்ற உறுப்பினர்; திராவிடக்கழகத்தின் தீவிர உறுப்பினர். இலக்கியம் தெரிந்தவர். கம்பராமாயணம், பெரியபுராணம் புத்தகங்கள் கையில் இல்லாத நிலையிலும் எந்த கேள்விகள் கேட்டாலும் இடத்தையும் மேற்கோள்களையும் காட்டிப் பேசும் புலமை மிக்கவர். என் அண்டை வீட்டுக்காரர் என்று சொல்லும் அளவு அருகில் வசித்தவர்.

முப்பத்தெட்டு வயதில் கல்லூரியில் சேர்ந்து தமிழ் படித்து வந்தவுடன் காஞ்சிக்குத் தான் மீண்டும் பணிக்கு வந்து சேர்ந்தேன். என் இலக்கியப் பசிக்கு உதவியவர். எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது அவர் இல்லத்திற்குச் செல்வேன். அவர் வீட்டிற்கு முன் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து காரசாரமான விவாதம் நடத்துவோம். வெவ்வேறு கொள்கைகள் உடையவர்கள். ஆனால் எங்களுக்குள் மனக்கசப்பு வந்ததில்லை. ஒரு நாள் நடந்த உரையாடலைப் பதிய விரும்புகின்றேன்.

”உங்கம்மா ஏன் காலையிலே எழுந்திருந்து லொங்கு லொங்குன்னு கோயிலுக்கு நடக்கறாங்க? பாவம் கிழவி, வீட்டுக்குள் இருக்கக் கூடாதா?”


அவரைச் சில வினாடிகள் பார்த்துவிட்டு அவரை ஒரு கேள்வி கேட்டேன்.

”ஆமாம், நீங்க இப்படி தொடர்ந்து சிகரெட் குடிக்கிறீங்களே, ஏன்?”

”எனக்கு சிகரெட் புகைக்கப் பிடிக்கும்.”

”சிகரெட் புகை நுரையீரலைக் கெடுக்குமே; வியாதிவரும். இப்படி உடம்பைக் கெடுத்துக் கொள்ளலாமா?”

”எனக்குப் பிடிச்சிருக்கு; பழகிப் போச்சு. விட முடியாது. அதுசரி, நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலியே?”

”சொல்றேன். எங்கம்மா அதிகாலையிலே எழுந்திருப்பாங்க, குளிப்பாங்க. அப்புறம் கோயிலுக்கு நடப்பாங்க. இதெல்லாம் உடம்புக்கு நல்லது.”

நான் இதைச் சொல்லிவரும் பொழுது அவர் ஏதோ சொல்ல வந்தார் அதனைக் கையசைத்து நிறுத்திவிட்டு என் பேச்சைத் தொடர்ந்தேன்

”எங்கம்மா, கோயில்லே சாமி கும்பிடுவாங்க. கடவுளைக் கும்பிட்டால் கஷ்டம் குறையும்னு நினைச்சு செய்யறாங்க. கஷ்டம் குறையுதோ என்னமோ, நம்பிக்கை இருப்பதால் மனசு லேசாகும். மன அழுத்தம் குறையும். B.P வராது. உடம்புக்கு எல்லா வகையிலும் ஆரோக்கியம். உடம்பைக் கெடுக்கற இந்த புகையைவிட உடம்புக்கு நல்லது செய்யற அந்த கல்லைக் கும்பிடப் போறதில் என்ன தப்பு.”


”அது மூடப் பழக்கம்.”

”நீங்கப் புகைக்கறது கெட்ட பழக்கம். அவங்க பழக்கத்துலே அவங்களுக்கு நல்லது கிடைக்குது. உங்க பழக்கத்துலே உடம்புக்கே கெட்டது நடக்குது. உங்க குடும்பத்திலே யாரோ கோயிலுக்குப் பொங்கல் வைக்கப் போனாங்களே, அப்போ நீங்க என்ன செய்துகிட்டிருந்தீங்க?”

”இந்தப் பொம்புள்ளங்க எங்கே பேச்சைக் கேட்கறாங்க?”

”உங்க வீட்டைத் திருத்த முடியல்லே. ஊருக்கு உபதேசம். சாதியப்பத்திப் பேசினா ஒரு சாதியைத்தான் திட்டறீங்க. மூடப்பழக்கம்னு தாக்குதலும் ஒரு மதத்தில் மேல்தான். என்னய்யா சீர்திருத்தம் இது? முதல்லே உங்க வீடுகள்ளே சொந்த சாதியிலே கட்டாதீங்க. உங்க வீட்டு மனுஷங்களைக் கோயிலுக்குப் போக விடாதீங்க.”

”பேசத் தெரிஞ்சவங்க பேசறீங்க.”

”பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிச்சவங்க நீங்க. உங்களுக்குத் தெரியும் எனக்கு சாதிகள் பிடிக்காதுன்னு. நான் கடவுளை நம்பறவ. கோயிலுக்கும் போவேன். சர்ச்சுக்கும் போவேன். எந்த மதத்தையும் திட்ட மாட்டேன்.”

அவரால் பதில் கூற முடியவில்லை. கோபப்படவும் இல்லை. எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். நல்ல மனிதர். நாங்கள் இருவரும் வெளிப்படையாகப் பேசுகின்றவர்கள்.

அவரிடம் என் ஆசை ஒன்றைக் கூறியிருந்தேன். தந்தை பெரியார் அய்யாவைப் பார்க்க வேண்டும். பெரிய மனிதர்களைப் பார்ப்பது என் போன்ற அதிகாரிகளுக்குக் கஷ்டமில்லை.சாதாரண அறிமுகமும் ஓரிரண்டு வார்த்தைகளும் பேசிட முடியும். நான் விரும்பியது அதுவல்ல. என்னைப் பற்றி தெரிந்து, பின்னர் அய்யா அவர்களைப் பார்க்க வேண்டும்.அவர் என்னை என்ன கேள்வி கேட்பார், நான் என்ன பதில் சொல்வேன் என்று பார்க்க வேண்டும். எப்பேர்ப்பட்ட பேராசை பார்த்தீர்களா?

என் ஆசையை நிறைவேற்றி வைத்தார் திரு கே.எம்.ஆர் அவர்கள்.
காஞ்சிக்கருகில் இருந்த ஒரு கிராமத்தில் ஓர் திருமணம் அய்யாவின் தலைமையில் நடப்பதாக இருந்தது. எனக்கும் அழைப்பிதழ் வந்தது. அய்யாவைப் பார்க்கும் ஆவலில் அங்கு சென்றேன். திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில் சேர்மன் என்னிடம் வந்து அய்யாவைப் பார்க்க அழைத்துச் சென்றார்

அப்பப்பா, என்ன கம்பீரம்.! அந்த வெண்தாடிக் கிழவரை வணங்கினேன்.

என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே,“ஆமாம் நீ கோயிலுக்குப் போவியாமே, ஏன் போறே?“ என்று எடுத்த எடுப்பில் கேள்விக் கணையை வீசி விட்டார்.

ஏனோ பயமோ தயக்கமோ வரவில்லை.பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அய்யாவின் குரலை ரசித்துக் கொண்டிருந்தேன். பதில் சொல்ல வேண்டுமே, சொன்னேன்.

“எனக்குப் பிடிச்சிருக்கு; போறேன்.”

அவ்வளவுதான், என் பேச்சைக் கேட்கவும் பலமாகச் சிரித்தார்.

“பாருய்யா, இவளுக்குப் பிடிச்சிருக்காம்.” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூர்ந்து பார்த்தார்

“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு, பொம்புள்ளைங்க இப்படித்தான் துணிச்சலாப் பேசணும். பயப்படக்கூடாது. பொண்ணுங்க படிக்கணும். துணிச்சலா இருக்கணும் “

அங்கே பாரதியின் நினைவு வந்தது. அய்யா அவர்கள் பாரதியைவிட பெண் விடுதலைக்கு உரத்த குரல் கொடுத்தவர் .பெண்ணியம் பேசும் எனக்கு எப்படி அய்யாவைப் பிடிக்காமல் இருக்கும்!

இந்தப்பதிவைப் படிக்கின்றவர்களுக்கு எழும் சந்தேகங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஒரே இடுகையில் காஞ்சி பரமாச்சாரியார் அவர்களைப் பற்றியும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் எழுதி இருவரையும் எனக்குப் பிடித்திருக்கின்றது என்று சொல்லி இருக்கின்றேன்.
எங்கெங்கு சமுதாயநலனுக்கு, பணிசெய்ய ஊக்கம் கிடைக்கின்றதோ அவைகளை ஏற்றுக் கொள்கின்றேன். மதிக்கின்றேன். எனக்கு முக்கியம் ஒவ்வொரு குடும்பமும் சண்டை சச்சரவின்றி அமைதியாக வாழ வெண்டும். இது பேராசையா? இந்த விஷயத்தில் நான் ஒரு செக்கு மாடு போன்றவள். படித்தாலும், பார்த்தாலும், பழகினாலும், எழுதினாலும் என் நோக்கம் ஒரே குறிக்கோளுடன் சுற்றிக் கொண்டிருக்கும். வயதாகி ஒடுங்கிப் போன காலத்திலும் என்னால் முடிந்ததைச் செய்துவருகின்றேன்.

அய்யா அவர்களை இன்னும் கொஞ்சம் அவசியம் பார்க்க வேண்டும். அவருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர் பேசியவைகள் அனைத்தும் எழுத முடியாவிட்டாலும் ஒன்ரிரண்டாவது பார்க்கலாம்.

"ராஜாரம்மோகன்ராய் பெண்களுக்கு ஒரு துரோகம் இழைத்துவிட்டார். செத்த புருஷனோடே பொண்டாட்டியயும் கொளுத்திட்டா அப்புறம் அவளை இந்த சமுதாயம் வதைக்க முடியாதே. தாலி அறுத்த பொண்ணுக்கு சுகம் ஏது?. எங்கேயோ சொர்க்கம் இருக்காமே அங்கேயே இருந்து தொலைக்கட்டும். ஐந்து நிமிட வலியுடம் கஷ்டம் முடியும்."

அப்பப்பா, என்ன ஆத்திரம் ?

”புள்ளை உண்டாயி கஷ்டப்படறதைக் காட்டிலும் கருப்பையை அறுத்து தூர எறியணும்”

“பெண்கள் மதிப்பற்று போவதற்கும் அவர்கள் வெறும் போகப் பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கிய காரணமே பெண்கள் ஆபாசமாகத் தங்களைச் சிங்காரித்துக் கொள்வதேயாகும் “

(குடியரசு இதழ் 15-6-1943)

இப்படி கூறுவதால் பெண் சுதந்திரம் பாதிக்கப் படுகின்றதா? ஜெயகாந்தன் சொன்ன சுதந்திர அடிமைகள் இதுதான். பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு வேண்டுமென்று பெண்களைவிட ஆண்கள் வரிந்து கொட்டி எழுதுகின்றார்கள். இதனால் அதிகப்பயன் யாருக்கு?

சுதந்திரம் என்ற பெயரில் வாழ்க்கையில் சீக்கிரம் சக்கையாகிவிட வேண்டுமா?

அய்யா அவர்கள் சொல்வதைப் பாருங்கள்.

“புருஷன் கள்ளத்தனமா ஒருத்தியை வச்சுக்கிட்டா பெண்ணும் மூணு பேரை வச்சுக்கட்டும். அப்பொத்தான் இவனுக்கு புத்திவரும்.”

இதுவரை இப்படிச் சொன்னவர் யார்? அதற்காகப் பெண்களை அழிந்துவிடச் சொல்லவில்லை. அவருடைய் ஆத்திரம் எரிமலையாக வெடிக்கின்றது.
அய்யாவைப் பின்பற்றுகின்றவர்களின் பேச்சில், அவருக்கு மிகவும் பிடித்தமான “பெண்விடுதலை” அதிகம் தொனிக்கவில்லை. அதுமட்டுமல்ல; மேடையில் பெண்களைக் கேவலமாகப் பேசுவதைத் தடுப்பதும் இல்லை.

பண்பாடு பற்றி நாம் நிறைய பேசுகின்றோம். எனவே வாழ்க்கையில் ஒழுக்க விதிகளை முன் மாதிரியாக பின்பற்ற வேண்டும்.
எங்களுக்கு வெற்றுப்பேச்சும் வெறும் புகழ்ப்பாட்டும் வேண்டாம். எங்களை மரியாதையுடன், மனிதப்பிறவிகளாய் நடத்துங்கள். இதுவே என் வேண்டுகோள்.

சில நலத்திட்டங்களைத் தீட்டுவது மட்டும் போதாது. முதலில் அவரவர் குடும்பங்களில் பெண்கள் கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் யாரையும், எக்கட்சியினரையும் தனிப்பட நினைத்து இதனைக் கூறவில்லை. சமுதாயத்தில் ஒரு சக்தியாக இயங்கும் அரசியல் அமைப்புகளூக்கு இந்தக் கிழவியின் வேண்டுகோள்.

மதங்களிலும் நன்னடத்தை பேசப்படுகின்றது. நாங்கள் இறைபக்தியுள்ளவர்கள் என்று கூறுபவர்களும் தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் பார்க்கக் கூடாது என்று முடிவு எடுக்கட்டும்.

ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகளும் நன்னடத்தைக்கு வழிகாட்டிகளாக இருப்பதைக் கண்டிப்பாக்கினால், எங்களின் பல குறைகள் குறையும். முற்றிலும் போகாது என்று தெரியும். ஏனென்றால் நாம் மனிதர்கள். சஞ்சலப் புத்திக்காரர்கள்.

பெண்ணைக் கெடுக்கின்றவன் கெட்டிக்கரத்தனமாகத் தப்பிக்கின்றான். அறையில் பட்ட அவலத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் வக்கீலின் வாதங்களில் அவமானப்பட வேண்டும். அங்கம் அங்கமாக நடந்ததை விசாரிப்பார். என்ன கொடுமையடா ?

அனுராதா ரமணனின் “சிறை“ கதை நினைவிற்கு வருகின்றது. அற்புதமான கதை. நெஞ்சக்கொதிப்பை அப்படியே தத்ரூபமாகக் காட்டியிருப்பார்.

இன்று பெண்ணின் நிலையென்ன?


கருவிலேயே கொலை.

பிறந்த பின்பும் கொலை

பெண் குழந்தையென்றால் பெற்றவள் கூட சோற்றைக் குறைத்துவிடுகின்றாள்.

இது பத்திரிகை செய்தில்ல. நான் ஆய்வு செய்திருக்கின்றேன்.

பள்ளிக்குச் செல்லும் பெண் வீடு திரும்புமா என்ற நிலை.

பெண் என்றால் மனைவி படும் கஷ்டம், அவள் ஆடையலங்காரம் போன்றவைகள் தானா?

ஒரு சில பெண்கள் கல்வி, உயர்ந்த உத்தியோகம் என்றால் பெண் சமுதாயமே விடுதலை பெற்ற தாகுமா?

பெண்ணுக்கு ஆண் மட்டும் சோதனை கொடுக்கவில்லை. பெண்ணே பெண்ணுக்குத் தீங்கிழைக்கின்றாள்.
சுதந்திரக்காற்றின் மணத்திலே மயங்கி எத்தனை பேர்கள் தடம் மாறி அவலநிலைக்குப் போயிருக்கின்றார்கள்?

தனக்குத்தானே அறியாமல் தீங்கு செய்து கொள்கின்றாள்.

“பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி “
என்று பாடினானே பாரதி. அதுதான் உண்மை.
பெண்ணாகப் பிறந்தாலே ஏற்படும் சோதனைகள், வேதனைகள் உலகம் முழுவதும் பொதுவானது.

இந்தத் தொடர் அடுத்த பதிவுடன் முடிய இருக்கின்றது. துன்பம் நீங்க “சுந்தர காண்டம்” படிக்கச் சொல்லுவார்கள். நானும் இப்பொழுது படிக்கலாம் என நினைக்கின்றேன்

ஜெயகாந்தன் எழுதிய சுந்தர காண்டம் பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி: திண்ணை

Saturday, October 16, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 23



"நகரேஷு காஞ்சி" - சொன்னவன் ஓர் வடமொழிப்புலவன். கல்விச்சாலையாக, கலைக்கோயிலாக,பல்சமயத்தலமாக, அத்துடன் அரசியலிலும் பெருமைபெற்று தொன்றுதொட்டு விளங்கும் நகர் காஞ்சி.

அந்தக் காஞ்சியில் நான்கு வருட வாழ்க்கை. என் சில தேடல்களுக்கு விடைகள் கிடைத்த இடம்; சில ஆசைகள் நிறைவேறிய இடம்; வாழ்க்கைப் பயணத்தில் ஏற்றம் கண்ட இடம்; இன்றும் என் நினைவில் வாழும் இடம்

காஞ்சியில் வாழ்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் ஓர் கலைஞன். எழுத்தாளன். அவன் எழுதிய நகைச் சுவை நாடகம் போற்றி புகழப்பட்டது. கல்லை கலைவண்ணங்களாக்கி, புதுமை படைத்தவன். எதிரியையும் மயக்கிப் பரிவை ஏற்படுத்தி , பரிசளிக்க வைத்த கைலாசநாதர் கோயிலை கட்டுவித்த இராசசிம்மன் வரலாற்றில் புகழ் படைத்தவன். தமிழுக்கு ஓர் தண்டி மட்டுமல்ல, கலம்பகம் கேட்கத் தன்னுயிரைத் தந்த நந்திவர்மன கதையும் வரலாற்றில் பேசப் படுகின்றன. காஞ்சியில் இன்றும் வரலாற்று நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்திய நாட்டு சுதந்திரத்திற்காகப் போராடி வெற்றி கண்ட காங்கிரஸ் ஆட்சியை மாற்றி, அரியணையில் முதலில் ஏறிய அறிஞர் அண்ணா தோன்றியதும் காஞ்சியில்தான்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கமும் காஞ்சி மண்ணில்தான். அறிஞர் அண்ணாவின் ஊரில்தான் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று விரும்பிய மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் காஞ்சியில் பஜார் தெருவில் தேர்முட்டிக்கருகில் அறிவிப்பு செய்தார்.

காஞ்சிப்பட்டின் அழகுபற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அப்பேர்ப்பட்ட காஞ்சியில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்தது எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு!

பிள்ளைப் பருவ முதல் இன்று வரை மாறாது இருக்கும் ஓர் குணம் - “தேடல்”. படிப்பது, அறிஞர்களைச் சந்தித்து கேள்விகள் கேட்பது, இடங்களைப் பார்ப்பது, விஷயம் தெரிந்தவர்களிடம் விவாதிப்பது, இவைகள் என் தேடலுக்காக நான் கடைப்பிடித்த முயற்சிகள்.

ஒரு கேள்வி! கடவுள் உண்டா இல்லையா?

ஷஷ்டி விரதம் இருந்து சங்குப்பால் குடித்து விரதமிருந்து என்னைப் பெற்றார்களாம் என்னைப் பெற்றவர்கள். எனவே குழந்தை மனத்தில் முருகனை விதைத்து ஆலயம் கட்டியது என் அம்மா. இன்று வரை அந்த ஆலயத்தில் முருகன் அழகாக வீற்றிருந்து புன்னகைக்கின்றார் .

பின் என்ன பிரச்சனை? எனக்குள் நிறைய சந்தேகங்கள்! புராணங்கள் உண்மையா?

பிள்ளைப் பருவத்தில் படிக்க ஆரம்பித்தவுடன் நான் படித்தவைகளில் தந்தை பெரியாரின் உரைகளும், சின்னப் புத்தக வடிவில் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளும் அடங்கும். எங்கள் காலத்தில் அண்ணாவின் அழகுத் தமிழில் ஓர் மயக்கம். கடவுளைப்பற்றியும், ,புராணங்களைப் பற்றியும் அவர் செய்த விமர்சனங்கள் இளம் உள்ளாங் களை ஈர்த்தன. முருகனை நெஞ்சிலே ஏந்திக் கொண்டு நானும் அந்த விமர்சனங்களைப் பேசிக் கொண்டிருந்தேன்

நான் படிக்கச் சென்ற கல்லூரி கன்னியாஸ்திரீகளால் நடத்தப்பட்ட ஒன்று.

அவர்களின் அன்புக்குரலிலும் மெய்மறந்தேன்.ஏற்கனவே சுவாமி சிவானந்த மகரிஷியுடன் கடிதத் தொடர்பு இருந்துவந்தது. அவர் அனுப்பி வைத்த புத்தகங்கள் அனைத்தும் படித்தேன். ரிஷிகேஷம் போய் துறவறம் பூண வேண்டுமென்ற ஆசையும் வளர்ந்தது.

கடந்த கால நினைவுகளில் புரளும் பொழுது ஒரு கதையின் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. ஜெயகாந்தன் எழுதிய கதை “துறவு “.

இளவயது அதிலும் குறிப்பாக “டீன் ஏஜ் “ என்று சொல்ல கூடிய இரண்டுங்கெட்டான் காலத்து உணர்வுகளை அப்படியே படம் பிடித்துக்கட்டுகின்றது. நாமும் காட்சிகளுடன் நகரலாம். ஜெயகாந்தன் வரிகளில் காண்பதுதான் சரியாக இருக்கும்.

சோமுவுக்கு வயது பதினைந்துதான் .அதுதான் மனிதனுக்குப் பித்துப் பிடிக்கும் பருவம். சோமுக்குவுக்கு அங்க வளர்ச்சிகளும் , ஆண்மை முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. உடலிலும் மனசிலும் சதா ஒரு துடிப்பும் வேகமும் பிறந்தது.மனம் சமபந்தமில்லாத ஸ்தாயிகளிலெல்லாம் சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.உலகையும் வாழ்வையும் அறிய உள்ளம் பரபரத்தது. ஏதோ ஒரு இடத்தைத் தொட்டவுடனே எல்லா இடத்தையும் தொட்டுவிட்டதாக எண்ணி இறுமாந்தது.

சோமுவும் எதை எதையோ நினைக்க ஆரம்பித்தான் உற்றார், உறவினர், வாழ்வு அனைத்திலும் வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. தனிமையை நாடினான். வீடே வெறுத்தது. சோமுவுக்கு வந்தது வேதாந்தப் பித்து. சுவாமி அருளானந்தரின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேட்டதில் சோமுவுக்கு ஞானம் பொழிய ஆரம்பித்தது.

“ஆமாம்,தாய், தந்தை,உடன்பிறந்தார்,சுற்றம்,செல்வம்,உலகம் எல்லாம் பொய்தானே? சாவு வரும். அதுமட்டும் தான் உண்மை.அந்தப்பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய். படிப்பு ஏன்? சம்பாதனை ஏன்? முடிவில் ஒரு நாள் செத்துப் போவேனே .. அப்பொழுது இவற்றில் ஏதாவது ஒன்று, யாரவது ஒருவர் என்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியுமா, என்ன எல்லாம் வெறும் பொய். மரணத்தை மனிதன் வெல்ல முடியாது. ஆனால், ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் கடவுளை அடையலாம். “

கடவுளைக் காண கைலாயம் புறப்பட்டுவிட்டான். வீட்டில் சொல்லவில்லை. அழகு சுருட்டை முடியைத் துறந்தான். நடந்தான் நடந்தான்.நடந்தான். கால்கள் வலித்தன. பசியை அடக்க முடியவில்லை. போகும் பாதையில் காணும் நாவல் கனியைக் கூட ஆசையுடன் பார்க்க ஆரம்பித்தான். உடம்பு தளர தளர அவன் வைராக்கியமும் தளர ஆரம்பித்தது. அவன் நிலையைக் கண்ட ஓர் முதியவர் அவனிடம் பரிவுடன் நெருங்கினார். கனிவுடன் பேசி அவன் நிலையைப் புரிந்து கொண்டார். சுமைகளை உதறிவிட்டு வந்த சோமுவுக்கு சோறில்லாமல் வெற்றுடல் சுமையாக் கனக்கிறது. அவரிடம் அழுது கொண்டே பேசினான்.பக்தி வெறியும் வேதாந்தப் பித்தும் பிடிதளர்ந்தன. வீடு திரும்பவேண்டும் என்று சொன்னான்.

பந்தங்கள் இருந்தால்தான், பாசம் கொழித்தால்தான் பக்தியும் நிலைக்கும்” என்ற உண்மையை உணர்ந்தான். வீடு நோக்கித் திரும்பினான்.

சாதாரண கதையாகத் தெரியலாம். ஆனால் எப்பேர்ப்பட்ட தத்துவத்தை ஓர் சின்னப் பிள்ளையின் மூலமாகக் காட்டுகின்றார் ஆசிரியர்.

ஒரு சின்னப் பெண்ணின் வாழ்க்கையில் இருபது வயதுக்குள் எத்தனை எத்தனை சிந்தனைக் குவியல்கள் , குழப்பங்கள். நான் அனுபவபூர்வமாக அனுபவித்தவை. நல்ல வேளையாக நான் படிப்பைவிட்டு ஓடவில்லை. நினைப்புடன் நின்றுவிட்டேன்.

இக்காலமாக இருந்திருந்தால் துறவறத்திற்குப் பதிலாக வெள்ளித் திரையில் அல்லது சின்னத் திரையில் நடிக்கும் ஆசையில் ஓடிப் போயிருக்கலாம். இன்று நடப்பதைத்தான் கூறுகின்றேன்.

காலம் என்னை சமுதாய வீதிக்குக் கொண்டு சென்றது. அதற்குப் பிறகு இது போன்ற சிந்தனைகள் எதுவும் இல்லை. எப்பொழுதும் முருகன் மட்டும் என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் காஞ்சிக்கு வந்த பின்னர் என்னுடைய தேடல் என்னைத் தேடி வந்து ஒட்டிக் கொண்டது.

அன்று பிரிக்கப்படாத செங்கை மாவட்டத்தின் தலை நகர் காஞ்சி. நான் மாவட்ட சமூக நல அலுவலராக இருந்தத்தால் மாவட்டம் முழுவதும் பயணம் செல்ல வேண்டும். பல இடங்கள் சென்னை சென்று அங்கிருந்து போவதும் உண்டு.

தமிழ்ப் பித்து காரணமாக இரண்டாண்டுகள் விடுப்பு எடுத்து ராணி மேரி கல்லூரியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றேன். அக்காலத்தில்தான் பல இலக்கிய மேதைகள், எழுத்தாளர்கள்,பத்திரிகை நிருபர்களின் நட்பு கிடைத்தது. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர்

மயிலாப்பூர் கற்பகாம்பிகா கோயிலில் உதவி ஆணையாளராக திரு. நாகராஜன் பணியாற்றி வந்தார். என் நண்பர்கள் வட்டத்தில் அவரும் ஒருவர். நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களிலும் சொற்பொழிவுகள் உண்டு. என்னையும் ஒருநாள் பேச்சாளாராகக் குறித்து அழைப்பு விடுத்தார்.

தலைப்பு “காஞ்சி காமாட்சி - காசி விசாலாட்சி “

இப்பொழுது நான் புராணங்கள் பற்றிப் பேச வேண்டும். ஸ்தல புராணங்கள் படித்தேன். பல கேள்விகள் என்னை முட்டித் தள்ளின. சங்கர மடத்தை சேர்ந்த ஒருவரை அணுகி என் சந்தேகங்களைக் கேட்டேன். என்னை முறைத்துப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.

கேள்விகளில் இருவகை உண்டு. ஒன்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் பிறக்கும் கேள்விகள். இன்னொன்று கேலியாக் கேட்பது.

என் தேடல் முயற்சியில் ஒர் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டேன். உபநிஷதமடம் என்று சொன்னார்கள். அது ஒரு அழகான நந்தவனம். அங்கே வயதான ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் போய் என் சந்தேகங்களைக் கேட்கச் சொன்னது ராஜம்மாள் என்ற ஒரு பெண்மணி. அவர் ஆன்மீகப்பற்று கொண்டவர்.

அந்தப் பெரியவரிடம் என் தவிப்பைக் கூறீனேன். அவரோ முகம் சுளிக்காமல் பொறுமையாகக் கேட்டு என் எல்லாக் கேள்விகளும் பதில் கொடுத்தார். பல ஆண்டுகளாக எனக்குள் இருந்த பல குழப்பங்கள் நீங்கின. பின்னர் நம்பிக்கையுடன் கோயிலுக்குப் பேசச் சென்றேன். எல்லோரும் பேச்சு நன்றாக இருந்தது என்றார்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு என் அணுகுமுறை பிடித்திருந்தது. கூட்டம் முடிந்தவுடன் என்னிடம் வந்து பேசினார்கள். அடுத்த வருடமும் பேசப் போனேன். மூன்றாவது முறை கூப்பிட்ட பொழுது நயமாக மறுத்துவிட்டேன். காரணம் என் குறை எனக்குப் புரிந்து இருந்ததால் ஒதுங்கிக் கொண்டேன்.

என் சொற்பொழிவு அர்த்தமுள்ளதாக இருக்கலாம். ஆனால் உருக்கமில்லை. ஆன்மீகச் சொற்பொழிவுகளில் உருக்கமும் இருக்க வேண்டும். எல்லோர் மதிப்பையும் பெற்ற உயர்திரு வாரியார் அவர்களின் பேச்சைக் கேட்டு மெய்மறப்பவள். அவர் ஒரு கடல். ஆன்மீக மேடைக்கு நான் பொருந்தாதவள் என்று என்னை உணரவைத்தவை வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுகள்தான்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். இயலாமை என்பது பெரிய குற்றமல்ல. நமக்குத் தெரியாததைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் போலிதனம் தான் குற்றமானது.

சுயதரிசனம்” என்று ஓர் கதை எழுதியுள்ளார் நம் ஜெயகாந்தன். அதில் வரும் கணபதி சாஸ்திரிகளீன் பாத்திரப்படைப்பு தனித்தன்மை வாய்ந்தது.

எதையுமே சொல்றதுக்கு ஒரு தைரியம் வேணும். என் அனுபவத்திலே செய்யறது கூட சுலபம். ஆனா சொல்றதுதான் கஷ்டமா இருக்கு

கண்பதி சாஸ்திரிகளின் கடித்ததின் வாசகங்கள் இது. அவர் யார்? எதைச் சொல்ல கஷ்டப்பட்டார்? அவருக்கு மகன், மருமகள், பேரக்குழந்தைகள் எல்லோரும் உண்டு. ஆனால் அவரோ யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் ஊரைவிட்டுப் ஓடிப்போய்விட்டார். ஏன்? வேதம் கற்றவர். பெரிய சாஸ்திரிகளின் மகன். அவரின் ஓட்டம் உணர்ச்சியால் உந்தப்பட்டாலும் நடந்த அவமானத்தை விவேகத்துடன் எடுத்துக்கொண்டுவிட்டார். அப்படியென்ன நடந்துவிட்டது.?

கனபாடிகள் அன்று அவரை மிகவும் கேலிசெய்து திட்டிவிட்டார்.

“மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லத் தெரியாத நீ பிராமணனா?” என்று பலர் முன்னிலையில் கேட்டுவிட்டு மேலும் கடும் சொற்களை வீசிக் காயப்படுத்திவிட்டார்.

கணபதி சாஸ்திரிகளை அந்தக் கேள்விகள் அப்படியே ஆட்டிப் படைத்தன. அவருக்கு அர்த்தம் சொல்லத் தெரியவில்லை. பூணூலை எறிந்துவிட்டு “நான் பிராமணன் இல்லை.“ என்று சொல்லிக் கொண்டு அந்த ஊரையேவிட்டு ஓடிப்போய் விட்டார்.

முதல் சில நாட்கள் அவருடைய மகன் அவர் இல்லாததைப் பொருட்படுத்தவில்லை. மருமகளும் அசட்டையாக இருந்தாள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர் இல்லாதது உறுத்த ஆரம்பித்தது. அந்த தருணத்தில்தான் அவரிடமிருந்து கடிதம் வந்தது. சாஸ்திரி என்ற சொல்லை விடுத்து வெறும் கணபதியாக எழுதியிருந்தார்.

அவரின் சுய தர்சனம்.

“மந்திரங்கள் தெய்வீகமான, புனிதமான,பவித்திரமான விஷயங்களைப் பத்திப் பேசறதுங்கற நம்பிக்கையிலே அதை நான் மனனம் பண்ணிட்டேன். “தாய்ப்பால்லே என்னென்ன வைட்டமின் இருக்குன்னு தெரிஞ்சுண்டா குடிக்கிறது ! அது அவசியம் இல்லையா? நோயாளிக்கு மருந்துதான் முக்கியமே ஒழிய ஒவ்வொரு மாத்திரையிலேயும் என்னென்ன ரசாயனம் கலந்து இருக்குங்கற ஞானம் அவசியமா என்ன? அது போல்தான் மந்திரம். உனக்கு அது தேவை .அதை ஜபிப்பதன் மூலம் அதற்குரிய பலன்கள் உன்னை வந்தடையும் “னு ஒரு பெரிய மேதை எழுதியிருந்தார். அதைப்படிச்சப்பறம்தான் எனக்கு ஆறுதல் பிறந்தது. ஆனால் அந்த ஞானியின் இந்த வாதமும் எனக்குத் தக்க சமயத்துலே கைகொடுக்கல்லே. அறுபது வருஷமா அர்த்தமில்லாம பேத்திண்டே வாழ்ந்திருக்கேன் ..நான் இப்ப சாஸ்திரி இல்லே.எனக்கு, என் மனச்சாட்சிக்குத் துரோகம் செஞ்சுக்காத ஒரு நேர்மையான மனுஷன் நான் .”

தன் பெயருடன் இணைந்த சாஸ்திரி பட்டத்தைத் துறந்து சாதாரண மனிதராக வாழத் தொடங்கிவிட்டார். தன் மாற்றங்களை, உலகப் போக்குகளை விரிவாக எழுதியிருந்தார். அவர் மகனும் மருமகளும் உருகிப்போய் நின்றனர்.

அவருக்குக் கற்றுக் கொடுத்தவர் கோபக்காரர்.பயந்து கொண்டே அவரிடம் எந்தக் கேள்விகளும் கேட்க மாட்டார். அவர் சொன்னதைக் கேட்டு கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டுவந்து விட்டார். இருந்தாலும் தன் குறை உணர்ந்த பொழுது பொருந்தாத சாஸ்திரிகள் பட்டத்தைத் துறந்தார்.. இப்பொழுது அவரிடம் எந்தக் குற்ற உணர்வும் இல்லை.

ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் ஏதாவது சின்னச் சின்ன சலனங்கள், சம்பவங்கள் இல்லாமல் இருக்காது. பெரிய பிரச்சனைகளில் உழலும் பொழுது இவைகளின் நிறம் மங்கிவிடும். அவ்வளவுதான்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இன்னொரு செயலை நான் கேலி பேசியிருக்கின்றேன். கிறிஸ்தவர்கள் பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு கேட்பதுபற்றித்தான்.

“பாவங்கள் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் போய்விடுமா? “ என்று கேட்பேன்.

ஆனால் காலம் செல்லச் செல்ல அனுபவங்களில் நான் பக்குவப்பட்ட பொழுது பாவமன்னிப்பின் பலனை உணர முடிந்தது. மனிதன் தன் குறைகளை, குற்றங்களை எண்ணிப்பார்க்க மாட்டான். அவைகளை அவன் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் கூட அவன் தவறுகள் செய்யும் பொழுது தயக்கம் ஏற்படும். வாய்விட்டு இன்னொருவரிடம் தன் தவறுகளைச் சொல்ல முடிந்தால் அவன் செய்யும் தவறுகளும் குறைய ஆரம்பிக்கும்.

மனிதனைச் செம்மைப்படுத்த, நல்வழிப்படுத்தத்தான் மதங்கள் தோன்றின. சரியான அர்த்தம் கூறப்படவில்லையென்றால் அது மூடப் பழக்கமாகக் கருத வழி வகுக்கும். அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசன் விவேகத்துடன் நம்பிக்கைகளை விளக்கியிருக்கின்றார். அவர் ஓர் நாஸ்திகராக இருந்தவர். ஆத்திகராக மாறவும் தான் கிளப்பிய கேள்விகளுக்குத் தானே விடைகளை அருமையாக விளக்கிச் சொல்லுகின்றார்.

காலம் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றது. சின்னக் குழந்தைகள் கூட ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். இன்றைய இளைஞர்கள் கற்பூர புத்தியுடையவர்கள். அவர்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தயங்கக் கூடாது.

பண்பாடுபற்றி பேசுகின்றவர்கள் வாழ்க்கையில் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து காட்ட வேண்டும். இரட்டை வாழ்க்கை வாழ்பவரின் வார்த்தைகளை இக்காலப் பரம்பரை மதிக்காது. போலித்தனமும் பகட்டும் வெகுநாட்கள் நிலைக்க முடியாது. வெறும் எழுத்தில், பேச்சில் மட்டும் ஒழுக்கம் இருந்தால் போதாது. வழி காட்டுகின்றவர்கள் நெறியுடன் வாழ்ந்தால்தான் வழிகாட்டும் பொழுது இன்றைய தலைமுறை அவர்களை ஏற்றுக் கொள்ளும்

காஞ்சியில் எனக்கு இன்னொரு அனுபவம் கிடைத்தது. மகாப்பெரியவர் சன்னிதானத்தில் நான் உணர்ந்தவைகளை அடுத்துக் கூறுகின்றேன்

(தொடரும்)

நன்றி -திண்ணை

Monday, October 4, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் 22

ரிஷி மூலம்

தினமணிக் கதிரில் வெளிவந்த நேரத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் சந்தித்த குறுநாவல் ரிஷிமூலம். கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் வாசகர்களிடையே இன்றளவும் மதிப்புள்ளதாக இருக்கின்றது.

ஆசாரமான ஒரு வசதியான குடும்பத்தில் வளர்ந்த ஒரு பையன் மனநிலை மாறுதல்களால் பிறரிடம் சொல்ல முடியாத, தன்னையே குறுகுறுக்கின்ற உணர்வலைகளில் சிக்கித் திண்டாடி, தான் யார் என்பதை தான்மட்டும் உணர, அதனை மற்றவரெல்லாம் கேலியாகப் பார்ப்பதை லட்சியம் செய்யாமல் எங்கெங்கோ திரிந்து அலைந்து, தாடி மீசை வளர்த்துக் கொண்டு, கஞ்சா திணித்த பீடியை மட்டுமே புகைத்துக் கொண்டு, இக்கரையில் அமர்ந்துகொண்டு அக்கரையில் எரிகின்ற பிணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, ஒவ்வொரு பிரேதமுமே தானாக உணர்ந்து தன்னைத்தானே எரித்துக் கொள்வதாக உருவகப்படுத்திக் கொண்டு பீடியால் தன்னையே புகையாக்கி மகிழ்கின்ற ஒரு மனோதத்துவக் கதை

பலராலும் விமர்சிக்கப்பட்டதன் காரணம் அதில் அவன் கண்ட ,செய்த இரு காட்சிகளும் நிகழ்வுகளுமே.

குளித்துக் கொண்டிருந்த தாயை ஒளிந்திருந்து பார்த்துவிட்டு தாயால் கண்டு பிடிக்கப்பட்ட பின் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். தினமும் அவனுக்கு தன் தாய் தன்னைக் கட்டி அணைத்துக் கொள்வதாக கனவுகள்! படிப்பதற்காகத் தன் அப்பாவின் நண்பர் வீட்டிற்குச் சென்றவன் அந்த வீட்டு மாமியே இப்போது அம்மாவின் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறாள். நடக்கக் கூடாததும் நடந்துவிடுகிறது.

அன்று மாலை அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனவன் தான் இப்பொழுது ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டிருக்கின்றான்.

ஜெயகாந்தனின் எழுதுகோல் அழுத்தமாக எழுத்துக்களைப் பதிக்க ஆரம்பிக்கின்றது. சில வரிகளையாவது அங்கும் இங்கும் கூர்ந்து பார்க்கலாம்.

“எல்லாருமே..நானறிஞ்ச எல்லாருமே..ஒருமாதிரியான மிருகங்கள் தான். இந்த மிருகங்கள் ஆடை கட்டிக்கறதுனாலே இதுகளுக்கு மனுஷாள்னு பேரு..மனுஷனைத் தவிர மத்த மிருகங்களுக்கெல்லாம், நெறிகள், முறைகள் எல்லாம் கிடையாது அதனாலே அதுகளுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. மனுஷ மிருகங்களுக்கு நெறிகள் உண்டு. முறைகள் உண்டாம். .."

ஆத்திரம் காட்டாறாய் ஓடுகின்றது.

"மற்ற மிருகங்களைப் பாக்கறச்சே எனக்குப் பொறாமையா இருக்கு. பறவைகளைப் பாக்கறச்சே ஏக்கமா இருக்கு . அதுகளெல்லாம் இயற்கையோடு சல்லாபமா இருக்கு. மனுஷன் மட்டுந்தான் இயற்கையோடே சண்டை போட்டுண்டே இருக்கான். இதிலே இவனுக்குப் பெருமை வேறே! அசட்டுப் பெருமை, வக்கிரப் பெருமை , இதையெல்லாம் நினைச்சுப் பாக்கறச்சே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.”

“நான் “பற்றிப் பேச ஆரம்பித்துவிடுகின்றார் ஆசிரியர்.

“நான் விலகி நின்னு ராஜாராமனைகத் தனியா பார்க்கிற போதெல்லாம் எனக்கு சிரிப்புதான் வருது.நான் இவனை இப்படி பார்ப்பேன். இவன் போட்ட வேஷத்தையெல்லாம் ஒண்ணொண்ணா இவன் கலைச்சுப் போடறப்போ எல்லாம் “இது ஒரு ராஜாராமன், இது ஒரு ராஜாராமன்”னு நான் கணக்கு வச்சுண்டே வந்திருக்கேன்.என்னை மறைக்கத்தான் எத்தனை எத்தனை திரை போட்டான்! .. என்னை மறைக்க யாரோ கொடுத்ததை இவன் வாங்கிப் போட்ட திரைகள்! இதையெல்லாம் விலக்கி அவனுக்கே தெரியாமல் ஒளிஞ்சுண்டிருந்த என்னை “நான் “ பார்த்து பார்த்துச் சிரித்திருக்கேன் .”

தொடர்கின்றது

“நான் என்பது ஈகோ என்பாரும் , மாயை என்பாரும், பொய் என்பாரும், அநித்தியம் என்பாரும் .. என்னைப்பொறுத்தவரை நான் என்பது ஈகோ எனின், இந்த ஈகோதான் மாயை எனின் , இந்த மாயைதான் பொய் எனின் ,இந்த பொய்தான் அநித்யம் எனின் இந்த அநித்யம் தான் -சாசுவதமான, மெய்யான, உன்னதமான வாழ்க்கையின் அர்த்தமாகும் !

அஹம் பிரம்மாஸ்மி - நான்தான் பிரம்மம்

நான் என்று பேசும் பொழுது நான் உன்னையோ , நம்மையோ மறுக்கவில்லை.உன்னையும் நம்மையும் மறக்காமல் இருப்பதற்கே நான் என்னை நம்புகின்றேன். உன்னையும் நம்மையும் மதிக்கிறவன் என்பதனாலேயே உன்னோடு பேசுகிறேன். “

மனிதனின் தடுமாற்றத்தையும் காட்டி, தத்துவ மழை பொழிகின்றார் ஜெயகாந்தன்.

ஆடை கட்டிய மனுஷ மிருகங்கள் ! சுய பரிசோதனை செய்வோமா?

எங்கும் கொலைகள், வன்முறைகள் ! அப்பாவி ஜனங்கள் உயிர்ப்பலிகள் !

மிருகம் கூட பசித்தால் அல்லது தற்காப்புக்காகக் கொல்லும். ஆனால் கொலைசெய்யப்படும் மனிதர்கள் என்ன தவறு செய்தார்கள்? யாருக்காக, எதற்காக இக்கொலைகள் செய்யப்படுகின்றன?

மிருகங்களைவிடக் கொடியவர்களாக ஏன் இருக்கின்றோம்?

கலாச்சாரம், பண்பாடு என்று வாய் கிழியப் பேசுகின்றோம்! ஒரு ஆண் முகச்சவரம் செய்ய உதவும் பொருளின் விளம்பரத்திற்கு ஏன் பெண் உருவம்? சட்டம் மட்டூம் இல்லையென்றால் இப்பொழுது இருக்கும் ஒட்டுத் துணியையையும் உருவி நிர்வாணக் காட்சிகளைக் காட்டத் தயங்குவோமா? பிஞ்சு உள்ளத்தில் நச்சுத் தன்மை வெறிக்கு வித்திடுபவர்களை மிருகங்களைவிட மோசமாகக் கூறுவது தவறா? இதற்குப் பெயர் ரசனையா? அப்படியென்றால் நம் அகராதியில் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்லுகின்றோமே அதற்குப் பொருள் என்ன? வரலாற்று உண்மைகளைப் புதைத்து, பல புனைந்துரைகள் புத்திசாலித்தனமாகாச் சேர்க்கத் தெரிந்த மனுஷ ஜன்மங்கள் இனிமேல் புதிதாக இவைகளுக்கும் பொருள் எழுதலாமே!

ஓடி விளையாடு பாப்பா என்று சின்னஞ்சிறு சிட்டுக்களாய்த் திரிந்து வரும் பெண் குழந்தைகளை பருந்துகளாய்க் கொத்திச் சிதைத்து தூர எறிகின்றார்களே அந்த மனிதர்கள் மனிதனா மிருகமா?

மகளையே சீரழிக்கும் தகப்பன் என்ற ஆண் மிருகம் ஏன் ஒரு நாள் தாயையும் ஒரு பெண் உடலாக நினைத்துக் கெடுக்க மாட்டான்?

விலங்கு உணர்வுகளை வளர்க்கும் காட்சிகளை, பேச்சுக்களை ஊக்குவித்து வந்தால் இக்கொடுமையும் நடக்கும்,

ஜெயகாந்தன் மீது ஆத்திரப்பட்டு என்ன பயன்? நாம் போகும் பாதை காணும் பொழுது அறிவுள்ள எந்த மனிதனுக்கும் இந்த அச்சம் வருவதில் என்ன தவறு இருக்கின்றது?

“சிரிப்பு , சிரிப்பாய் வருகின்றது “

ஆம், வேதனைச் சிரிப்பு.

ஆம், ஆத்திரச் சிரிப்பு!

ஆம், ஆதங்கச் சிரிப்பு!

சிரிக்கத்தான் முடிகின்றது. இப்படியே காலம் சென்றால் அந்தச் சிரிப்பும் செத்துவிடும்.

கடவுள் இருக்கின்றானோ இல்லையோ அந்த நம்பிக்கையில் ஒரு பலன் உண்டு. தவறுகள் செய்வது பாவம் என்று கருதி குற்றம் புரியத் தயங்குவான். கடவுளைக் கல்லாக்கிவிட்டோம். அது மூட நம்பிக்கை என்று குப்பையில் போட்டு விட்டோம்.

நம் சிறந்த அறிவில் புதுக் கண்டுபிடிப்புகள் நிறைய. மனிதர்களுக்குச் சிலைகள் வைத்து ஆலயம் அமைக்கின்றோம். நம்மை குளிரவைக்கும் பெண் உருவங்களுக்கும் கோயில் கட்டுகின்றோம். நம் ரசனைகளை மாயத் தோற்றங்களில் செலுத்தி மயங்கி இருக்கின்றோம்.

கணவன் மனைவி உறவின் போது கூட அவரவர் ரசிக்கின்ற வேற்று மனிதர்களை, பொய்த் தோற்றங்களை மனத்தில் சுமந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்திருக்கின்றோம். அந்த கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது!

இது தான் இன்றைய நாகரீகப் பண்பாடு. மனிதனைப் போதையில் வைத்தால்தான் அவனைச் சுரண்ட முடியும். ஒருவருக்கொருவர் இப்படி முயன்றால் எங்கே மனிதன் வாழ முடியும்? யாரை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் ?

நான் யார் என்பதை ஒவ்வொருவனும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது ஆன்மீகம். இன்றைய மக்கள் இதனைத் தவறாது கடைப் பிடிக்கின்றனர். அவன் தன்னைப் பற்றி யோசிக்கின்றான்.

“ஆஹா, நாம் இப்படி இருக்கலாமா? எப்படி கோடீஸ்வரனாவது? எப்படி வித விதமாகப் பெண்களை அனுபவிப்பது?”

சுதந்திரம் ஆணுக்கு மட்டுமா, பெண்ணுரிமை என்னாவது? பெண்களும் ஆண்களுடன் சம நிலைக்கு வர வேண்டாமா? பாலியல் சுதந்திரம் வேண்டும் என்பார் சிலர். திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பாரும் உண்டு. தொலை தூர நோக்கில் பார்த்தால் அதனால் பாதிக்கப்படப் போகின்றவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான். என் மீதும் ஆத்திரம் வரலாம். பெண்கள் முன்னேற்றத்தை விரும்புகின்றவள் நான். இது போன்ற வாழ்க்கை வாழ்பவர்களைப் பற்றிய ஆய்வு செய்தல் வேண்டும். அவர்களின் உண்மை நிலை கண்டறிய வேண்டும். பெண்களின் நிலை பாதுக்காக்கப் படவேண்டும். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவைகளை, முறியடிக்க வேண்டும்.முக்கியமாக பெண்கள் சுயதரிசனம் செய்து கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் வரும் செய்திகள் பயமுறுத்துகின்றன.

எந்த அளவு சுதந்திரம் பேசப்படுகின்றதோ , அதைவிட பிரச்சனைகளில் தவிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. அரசு, தொண்டு நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. இந்தத் தாயுள்ளத்தின் தவிப்பின் குரல் இது.

எத்தனை வகை ஏமாற்றுதல் உண்டோ அத்தனையும் கற்கத் தொடங்கி, சுயநலமும் சுரண்டலும் பெருக்கி, உச்ச நிலை அடைய போட்டிகள் வந்துவிடும். சரியான போட்டி ! இதுவா முன்னேற்றம்?

நான் யார் என்ற ஆராய்ச்சியில் நாம் எங்கே சென்று கொண்டிருக்கின்றோம்?

யாராவது ஓரிருவர் கண்களை இக்காட்சிகள் உறுத்துகின்றன. அவன் எழுது கோல் எடுத்தால் அவனையும் மீறி அது நெருப்பைக் கக்குகின்றது. ஒட்டு மொத்த சமுதாயமும் இன்னும் கெடவில்லை. ஆனால் மன வக்கிரம் வளர ஆரம்பித்திருப்பதை மறுக்க முடியுமா? நல்லவர்கள் நடுங்கிப் போய்ப் பதுங்குகின்றார்கள் .கோபத்தை விடுத்து நம்மைச் சுற்றி நடக்கும் காட்சிகளைப் பார்த்து , ஏதாவது செய்து நம்மை இந்த மிருகக்குணத்தினின்றும் காப்பாற முடியுமா என்று சிந்திக்க வேண்டும். செயல்படவேண்டும். ஒதுங்கக் கூடாது.

மனிதனின் தோற்றம் சில லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன். ஆனால் அவன் வகுத்துக் கொண்ட“உறவுகள் “ தோன்றியது சில ஆயிர வருடங் களுக்கு முன்னர்தான். குடும்ப அமைதிக்கு அவன் போட்ட விதிகளை அவனே உடைத்தெறிய ஆரம்பித்திருக்கின்றான்.

ஒவ்வொரு மனிதனிடமும் மிருகம் உறங்கிக் கொண்டிருக்கின்றது. சில விதிகளை , சில நியதிகளை வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றான் மனிதன். அதில் அடிபடும் பொழுது வலி தாங்காமல் புலம்புகின்றான். புலம்புவதை விடுத்து சிந்திக்க வேண்டும்.

இது ஒரு குடும்பத்தில், ஒரு இனத்தில் மட்டும் நிகழும் பிரச்சனையல்ல. இது ஓர் சமுதாயத்தில் நிகழும் அசிங்கம். சம்பிரதாயங்கள் உள்ள சூழ்நிலையில் வளர்ந்த பிள்ளைகளுக்கே இந்த மனச் சலனம் ஏற்படுவதென்றால் மற்றவர்களைப்பற்றிக் கேட்பானேண் ?! இது ஏதோ கதையென்று எழுதப் பட்டதல்ல. புனைந்துரையல்ல. ஓர் அடையாளம். சமுதாய நோயை அடையாளம் காட்டும் ஓர் அபாய விளைக்கு. ஒவ்வொரு மனிதனும் சமுதாய அக்கறை கொண்டு விழித்தெழ வேண்டும். அவன் சந்ததிக்கு மட்டுமல்ல அவனுக்கே விரைவில் வீழ்ச்சி வரும் ஆசிரியர் என்னைப் புலம்ப வைத்துவிட்டார்.

சமுதாயத்தில் எங்கெல்லாம் ஊனம் காணப்படுகின்றதோ அங்கே ஜெயகாந்தனின் பார்வை ஊடுருவ ஆரம்பிக்கும். படுக்கையறைக்காட்சிகளைக் கூட கொச்சையில்லாமல் காட்டும் திறன் படைத்தவர். அவர் காட்டும் விலை மகளிடம் கூட வெறித்தனம் காட்ட மாட்டார். ஒவ்வொருவரையும் தனிப் பரிவுடன் நடத்துவார்.

ரிஷிமூலம் எழுதியவரேதான் “ஜெய ஜெய சங்கர “தொடரையும் படைத்தார்.

அவர் எழுதிய கதைகள் அனைத்தும் நடைமுறை வாழ்க்கையின் பிம்பம். ஜெய ஜெய சங்கர அவரின் கனவுலகம். அது சத்திய பூமி. அங்குள்ளவர்கள் குணக்குன்றுகள். மனவெளி இல்லம் என்ற பெயரிலேயே அங்குள்ளவர்களின் வாழ்க்கையைப் புலப்படுத்துகின்றார். அங்கு வாழ்ந்திருந்த உமா ஓர் லட்சியப் பெண். ஒரு இளைஞனுடன் தனித்து வாழ்ந்தாலும் எவ்வித சலனமும் இன்றி வாழ்கின்ற மன உறுதி படைத்த ஓர் பெண்ணாகத் திகழ்கின்றாள்.

இந்த சமுதாயத்தில் ராஜாராமனும் உண்டு, உமாவைப் போன்றவர்களும் உண்டு.. இரு எதிர்த் துருவங்களில் நிற்பவர்கள்.

சமுதாயத்தில் எங்கே நோய் என்று தெரிந்தால்தான் சிகிச்சையளித்து மேன்மையுறச் செய்ய முடியும். வெறும் ஜன ரஞ்சகமாக எழுதி உல்லாசப்படுத்துவது மட்டும் போதாது. பயனுள்ள பாதையில் மனிதனைச் செல்ல வழி காட்ட வேண்டும். மகாப்பெரியவர் சொன்ன அறிவுரையும் இதுதான். எழுத்தாளருக்கும் மட்டுமல்ல எல்லோருக்கும் கடமையுண்டு.

இந்த இடத்தில் ஒருவரைப்பற்றிக் கூற விரும்புகின்றேன். டாக்டர் சங்கர் அமெரிக்காவில் மருத்துவத்தொழில் செய்பவர்.அவர் மனைவியும் ஓர் மருத்துவர். மனிதனின் உடல் நோய்கள் தீர்க்கும் மருத்துவர் மட்டுமல்ல, சமுதாய மருத்துவரும் கூட. சமுதாய நலனுக்கு நிறைய குழுமங்களில் எழுதி வருகின்றார். என்னிடம் ரிஷிமூலம் புத்தகம் இல்லையென்றவுடன் அவரிடமிருந்த புத்தகத்தைப் படித்து, அவர் கருத்துக்களுடன் எனக்கு ஒரு நீண்ட மடலே அனுப்பிவிட்டார். அதுமட்டுமல்ல. தொலை பேசியில் அழைத்து நீண்ட பிரசங்கமே செய்துவிட்டார். நானும் சமுதாயத்தில் உருண்டு புரண்டு முதுமையின் காரணமாக மகனிடம் அண்டிவாழும் ஓர் மூதாட்டி .எங்கிருந்தாலும் மனித நலனில் எங்களுக்கு அக்கறையுண்டு. தாய்மண்ணை நினைக்காத நாளுமுண்டோ!?.

அந்த மண்ணில் வாழும் மைந்தர்களுக்கு நாங்கள் செய்யும் சிறு தொண்டு. இருக்கும் சில நல்லவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி. எங்கள் பணி பத்திரிகைகளில் எழுதுவதல்ல. ஆனாலும் பலரையும் சேர்க்கும் பாலமாகக் கணினி இருக்கின்றது. எனவே எங்கள் குரலை அங்கே ஒலிக்கச் செய்கின்றோம். கோயில்களுக்குச் சென்று செய்யும் பூஜையைவிட இந்தப் பணியே நான் இறைவனுக்குச் செய்யும் ஆராதனை

ஜெயகாந்தனை இனி பார்க்கலாம். அவர் படைக்கும் பாத்திரங்களைப் பெற்ற குழந்தையைப் போல் நேசிப்பவர் ஜெயகாந்தன்..

“எனது நாவல்களில் வருகிற பாத்திரங்களெல்லாம் என் மூலமாய்ப் பிறக்கிறார்கள் என்பதனால் அவர்களை நான் சாமான்யர்களாகக் கருதவில்லை. அவர்கள் நான் வழிபடும் தெய்வங்களாகக் கூட உயர்ந்து விடுகிறார்கள். எனக்கு முன்னாலுள்ள அனுபவங்களை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். என்னோடு வாழ்கின்றவர்களாகவும் அவர்கள் இருக்கின்றார்கள். எனவே , அவர்கள் இறுதியில் என்ன ஆனார்கள் , என்ன ஆவார்கள் என்பதை என்னுடைய இறுதியைப் பற்றித் தீர்மானிப்பதில் எனக்கு எவ்வளவு இயலாமை உண்டோ அவ்வளவு இயலாமை ஏற்படுகிறது.ஆனால் அவர்கள் இறுதியை மற்றவர்களைப் போல் நானும் அனுமானிக்க முடிகிறது. அதுவும் இவ்விதமாக அவர்கள் ஓய மாட்டஎர்கள்; பணிய மாட்டார்கள் ; தோல்வி அடைய மாட்டார்கள் ! இலக்கிய வாழ்வு பெற்றுவிட்ட அவர்கள் இறப்பின்றி துலங்குவார்கள் “

“நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் உயர்த்தவேண்டும்’

மகாப்பெரியவரின் வாக்கை ஒவ்வொரு எழுத்தாளனும் பத்திரிகையாளரும் நினைத்துப் பார்க்க வேண்டிய பொன்னான வரிகள்.

வாழ்க்கையின் அவலங்களைக் காட்டும் பொழுது கண்களை மூடிக் கொள்வதைவிட அதற்கு காரணம் கண்டு மேலும் அந்தத் தீமை வளராமல் இருக்க முயல வேண்டும். இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு செயலிலும் எல்லோருக்கும் பங்குண்டு.

ஜெயகாந்தனின் எழுத்தில் ஆபாசம் கிடையாது. மன வக்கிரங்களைக் காட்டும் பொழுது கூட வேகம் இருந்தாலும் விவேகம் காணலாம். கதைகளிலும் உரையாடல்களை வலுவாக அமைப்பார். அவர் எழுதும் கதைகள், கட்டுரைகளைப்போல் அவர் எழுதும் முகவுரைகளும் முடிவுரைகளும் கூட தனித்தன்மை வாய்ந்தவை. அவைகளைக் கூடத் தொகுத்து புத்தகமாக்கி வாசகர்களுக்குக் கிடைக்க வசதி செய்திருக் கின்றனர் பதிப்பகத்தார்.

நம் காலத்தில் வாழும் அறிவு ஜீவிகள் சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர்.

மகாப்பெரியவர் என்ற பெயர் கேட்டாலே காஞ்சியை நினைக்காமல் இருக்க முடியாது. மேலும் என் பயணத்தில் காஞ்சிக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஐந்தாண்டு காலம் வாடிப்பட்டி வாழ்க்கை என் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்ததென்றால் காஞ்சியின் நான்கு ஆண்டு வாழ்க்கை, ஏற்றங்களையும், என்னுடைய தேடல்களில் பல கேள்விகளுக்கு விடைகளும் கொடுத்த இடம் ,

அன்றும் இன்றும் என்றும் வரலாற்றுச் சிறப்புகளைத் தாங்கி வருகின்ற காஞ்சிபற்றி சில செய்திகள் அடுத்துப் பார்க்கலாம்

(தொடரும்)

நன்றி -திண்ணை

Tuesday, September 21, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 21



தூக்கு மேடைக்குச் செல்ல இருக்கும் கைதியின் பெயர் நரசிம்மகாரு; ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருடைய ஆசை முழுமையாக நிறைவேற வில்லை. காந்திஜியின் உருவம் செதுக்கிய பொழுது தலை முடிக்கும்முன் அவன் வாழ்வு முடிந்துவிட்டது. அந்தத் தலையில்லா காந்திஜியின் சிலை சத்திய மூர்த்தியை உறுத்திக் கொண்டிருந்தது.

முழுமை பெறாதவைகள் சிந்தனைக்கு முள்வேலிகள்.

அந்தச் சிறையில் இன்னொரு மனிதரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.அந்தச் சிறையின் மேலதிகாரி மூர்த்தி, நம் சத்தியமூர்த்தியுடன் பள்ளியில் படித்தவன். இங்கே அந்த நட்பைப் பார்க்க முடியுமா? அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர், எனவே இருவரது சந்திப்புகளும் வினோதமாக இருக்கும். சில நேரங்களில் அனுசரணையுடன் இருக்கும். சில நேரங்களில் ஒதுக்கமும் இறுக்கமும் தென்படும். சத்தியமூர்த்தி சிரித்துக் கொள்வான்.

ஜெயகாந்தனைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுதே அவரின் தன்மைகளில் அவரின் உரையாடல் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, வலிமை வாய்ந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றேன். என் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் உரையாடலில் சிறந்தவர் அவர் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். கதைகளாயினும் கட்டுரையாயினும், அங்கே உரையாடலில் புகுந்து தன் எண்ணங்களைப் பதித்துவிடுவார். "ஜெய ஜெய சங்கர," தொடரில் உரையாடல்கள் அதிகம் இடம் பெறும்.

அதனை ஓர் கதை என்று சொல்வதைவிட வரலாற்றுச் சித்திரம் எனக் கூறலாம்.

சத்தியமூர்த்தி அந்தச் சிறைக்கு வரவிட்டுச் சூழலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது . தனி மதிப்பைப்பெற்று வலம் வந்து கொண்டிருந்தான். சிறையில் இருந்தாலும் மனிதர்கள், மனிதர்கள் தானே என்று நினைத்துக் கொள்வான்.

நாட்டில் நெருக்கடி நிலைமை; சுதந்திர நாட்டில் சுதந்திரக் காற்றில்லை. புழுக்கத்தால் மனிதர்கள் வெந்து கொண்டிருந்தனர். எங்கும் நிலவுகிற இருட்டுக்கும் இந்தச் சிறையில் நிலவுகிற இருட்டுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு .நாட்டில் நடக்கிற காரியங்கள் இந்தச் சிறையில் விஸ்தாரத்தைப் பெரிதாக்கி ஓரளவு தேசத்தையே சிறையாக்கி இருக்கின்றன.

சமீபத்தில் அரசியல் கைதிகள் அழைத்து வரப்பட்டு கொட்டடியில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து கேட்கும் முணங்கல்கள் அங்கே நடக்கும் சித்திரவதைகளின் கொடுமையை உணர்த்துகின்றன.

உமாவைப்பற்றியோ அவன் தந்தையைப்பற்றியோ எந்த செய்தியும் தெரியாது தவிக்கின்றான் சத்திய மூர்த்தி. அதிகாரவர்க்கத்தைக் கூலிப்படையென்று கடுமையாகச் சாடுகின்றான். சிறை அதிகாரி மூர்த்தியைச் சந்தித்து உண்மை நிலையை அறியத் தோன்றுகின்றது. சந்திப்பும் நிகழ்கின்றது. அங்கே நடக்கும் உரையாடல்கள் மனக் கொதிப்பின் வெளிப்பாடுகள்.

சத்தியமூர்த்தி எழுதிய புத்தகத்தைப் படித்துவருவதாகக் கூறும் மூர்த்தியைப் பார்க்கின்றான். அது தடை செய்யப்பட்ட புத்தகம். படித்து என்ன பயன்? ஒவ்வொருவரும் அவரவர் மனச்சாட்சியைக் கேட்க வேண்டிய கேள்வி.

“இங்கே துன்புறுத்தப்படும் அந்தக் கைதிகள் எல்லாம் எப்பேர்ப்பட்ட போராட்ட வீரர்கள் என்பதை நான் அறிவேன். அவர்களாவது போராடுவதாவது? ராத்திரியெல்லாம் ஒலிக்கிற அவர்களுடைய ஓலத்தில் வீரமோ ஆண்மையோ இல்லை. ஆட்டுக்குட்டிகள் மாதிரி அவர்கள் அடிபட்டு அலறுகிறார்கள். கடவுளைக் கையெடுத்துக் கும்பிட மறுக்கின்றவர்கள் எல்லாம் கான்விக்ட் வார்டன்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுகிறார்களாமே!இதெல்லாம் ஏன் நடக்கிறது? நாட்டில் நெருக்கடி என்றால் சிறையில் ஏன் இந்தக் கெடுபிடிகள் அதிகமாக வேண்டும் ?” தாழ்ந்த ஸ்தாயில் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தான் சத்திய மூர்த்தி

இதைப் படிக்கும் பொழுது என் மனப்பறவை கூச்சலிட்டது. நெருக்கடி நிலைமை காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலரை நான் அறிவேன். அந்த வலியின் வேதனையைப் பாதிக்கப்பாடவர்களாலேயே சொல்லப்பட்டு நேரில் கேட்ட அனுபவமும் உண்டு.

மனம்விட்டுப் பேச ஆரம்பித்தான் மூர்த்தி. சிறை அதிகாரிப் பதவி ஒரு வெட்டியானைப் போன்றது. மரண தண்டனை விதிப்பது நீதி மன்றம். ஆனால் அந்தக் கொலையைச் செய்ய வேண்டியது சிறையதிகாரி. தண்டனை விதித்த நீதிபதியே வந்து இந்தக் கொலையையும் செய்ய வேண்டும் என்று சலித்துக் கொண்டான்.

கைதிகளை அடித்துத் துன்புறுத்துவதை நிறுத்தும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறுகின்றான் சத்திய மூர்த்தி.

ஒவ்வொரு அதிகாரியும் தனக்குச் சம்பந்த மில்லாத ஓர் எஜமானத்துவத்துக்கு அடிமை என்று கூறத் துடிக்கிறான் மூர்த்தி. ஆனாலும் அதனைச் சொல்லாது “இனிமேல் அந்தக் கொடுமை நடக்காது. அதிகாரிக்கு என்ற சில உரிமைகளும் , கைதிக்கு என்று சில கட்டுப்பாடுகளும் உண்டு. தன் குறைகளைத் தீர்க்குமாறு கேட்க ஒரு கைதிக்கு உரிமை உண்டு. ஆனால் பிற கைதிகளுக்காகப் பரிந்து பேசும் உரிமை அவனுக்குக் கிடையாது “என்று கூறினான்.

அரசுப்பணியும் ஒருவிதக் கொத்தடிமை போன்று கட்டிப்போடுகின்றது. இது அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள் கூட சில நேரங்களில் அரசு நிர்ணயச் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டியிருக்கும். இத்தகைய கட்டுப்பாடுகளிலும் மனிதன் நேர்மையில் உறுதியாக இருக்கவும் வாய்புண்டு. மனித நேயமே குறிக்கோளாய் நேர்மையுடன் இருப்பவர்களிடம், நிர்ப்பந்தங்கள் வலிமையை இழந்துவிடுகின்றன.

ஒருவனை அவனது லட்சியங்களே சுதந்திர மனிதனாக்குகின்றன,“ என்ற சத்திய மூர்த்தியின் கூற்றை ஒப்புக் கொள்கின்றான் மூர்த்தி.

சில தினங்களில் மூர்த்தி மன வெளி இல்லம் போகின்றான்.அந்த வீட்டில் நெருக்கடி நிலமையை ஆதரிக்கும் ஒரு மனிதரையும் பார்க்கின்றான் . உமாவின் தந்தை பண்டிதர் அங்கு வந்திருந்தார். அவர்தான் நெருக்கடி நிலைமையில் நிர்வாகம் சீராக இருப்பதாகக் கூறிவருகின்றவர்.

கதாசிரியர் நிறைய கதா பாத்திரங்களைத் தோற்றுவித்து அவர்கள் வாயிலாகத் தன் எண்ணங்களைக் கொட்டியிருக்கின்றார். தாங்கள் பேசுவது நியாயமானது என்று ஒவ்வொருவரும் வலியுறுத்துகின்றனர். ஏனோ எல்லோரும் நல்லவர்களாக, மனிதர் நலனில் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிச் செல்லுகின்றார். எல்லோரும் தத்துவம் பேசுகின்றார்கள்.

"தேசம் என்னவானாலும், தனி மனுஷ்யர்களான நாம், நம்மை நெறியாக வைத்துக் கொள்வதுதான் முக்கியம் என்று நினைப்பவன் மகாலிங்கம்,” என்று அவன் தாயார் தேவி கூறுகின்றாள்.

உமாவுடன் அவன் தலைமறைவாகி வாழ்ந்து கொண்டிருக்கின்றான். உலகத்தாருக்கு அவர்கள் தம்பதிகள் ஆனால் நிஜ வாழ்க்கையில் அண்ணன், தங்கையாக வாழ்கின்றனர். ஏதோ ஒரு குறிக்கோளுக்காக வாழ்வதாகச் சொல்லுகின்றார்கள். ”மனிதன் சுயநல மகிழ்ச்சிக்காக வாழக் கூடாது “என்று அவர்கள் ஆசிரியர் சத்திய மூர்த்தி சொல்லிக் கொடுத்ததை ஏற்று, சமுதாய நன்மைக்காக திரைமறைவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆண்மகனுடன் ஓர் பெண் தனிமையாக வாழும் பொழுது மன உறுதியுடன் இருக்க முடியுமா? முடியும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்.

லட்சியப் போராட்டத்தில் ஈடு படுகின்றவர்கள் தனிப்பட்ட உணர்ச்சிக்கு அப்பாற்பட்டவர்களாகக் காட்டுகின்றார். இதுதான் உண்மை.. ஓர் குறிக்கோளுடன் மனிதன் இயங்கும் பொழுது அவன் நினைவெல்லாம் நிறைந்திருப்பது அந்த லட்சியங்களே. அங்கே சலனங்களுக்கு இடமில்லை.

மகாலிங்கம் கொடுத்தனுப்பிய கடித்தத்தின் சில வரிகள் பெற்றவர்களைப் பெருமையில் ஆழ்த்துகிறது.

நமது மக்கள் எந்த யுகமாற்றத்தினாலும் அழிந்து போய்விட முடியாத மகா சத்திய நெருப்பை வளர்த்து, இந்த பூமினியில் உள்ள எல்லா உயிர்களின் மேன்மை கருதிப் பாதுகாத்து வருகின்றார்கள். அந்த மகா யக்ஞத்தில் தோன்றியவர்கள்தான் எனது பெற்றோரும், எனது பிதுர்க்களும், நானும், நமது சந்ததியினரும் ஆசாரிய ஸ்வாமிகளின் பாஷையில் சொன்னால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடையில் பிரிவோ தனிமையோ இல்லை

ஜெய ஜெய சங்கர தொடரில் ஒரே தத்துவ மழைதான்; கதை என்றால் அதற்கு ஏதோ ஒரு முடிவு காட்ட வேண்டுமே.

ஆற்றங்கரையில் அவர்களின் எல்லைகளைத் தாண்டாமல் இரண்டு சிறுவர்களிடம் நட்பு பிறக்கின்றது. அப்பொழுது இனம் காரணமாக ஆதியால் கிராமத்திற்குள் வருவது முடியாது. ஆனால் கதை முடிவில் அதே ஆதி சங்கர புரத்தில் நுழைய முடிகின்றது. கால வெள்ளத்தில் சில நியதிகள் மாறத் தொடங்கிவிட்டன.

ஓர் சிறுகதையாய் இதனை முடித்திருக்கலாம்; ஆனால் மூன்று பாகங்கள் தொடர்ந்தன. அதற்கு அவர் கூறும் பதிலை அவர் வார்த்தைகளில் காண்போம்.

“ஓர் சிறுகதை என்று அழைப்பதே எனக்கும் விருப்பமாய் இருந்தது. அவ்விதமே அமைந்திருந்தால் இதன் கலைத் தன்மை உயர்ந்து நின்றிருக்கும் என்று உரைப்பாருமுளர். அவர்கள் அவ்விதமே நிற்கக் கடவர். இன்பம் எங்கெங்குண்டோ அங்கங்கே இருந்துவிடுதல் சிலரது இயல்பு. துன்பம் எங்கே எங்கே என்று துரத்திப் பிடித்து அத்துடன் துவந்தம் செய்வதே தர்மத்தின் இயல்பு.அப்படிப்பட்ட கால நிர்பந்தத்தால் தர்மங்களையே சார்ந்து நிற்கும் ஓர் அடிமையான வாழ்க்கையில், எப்படி அதன் சந்ததியினராலேயே பிரச்சனைகள் மூளும் என்றெல்லாம் எண்ணங்கள் மேலும் எழுந்த பொழுது மூன்று பாகங்கள் விளைந்தன. கட்டுக்கோப்பு கச்சிதமாக விழுந்துவிடுகிற பொழுது மேலே குவித்துச் சிகரம் கட்ட ஆசைபடுவதுதான் எழுதுபவனுக்கு ஏற்படுகிற பேராசை”

இந்த நாவலை எழுத ஆரம்பித்த காலத்தில் தேசிய வாழ்க்கையில் என்ன சூழ்நிலை இருந்ததோ அந்தக் காலக் கட்டத்தை இறுதியாக வைத்துக் கொண்டு அதற்கு முன்னாலும் பின்னாலும் சிந்தனைகளைப் படரவிட்டு இத்தொடரைப் படைத்திருக்கின்றார். அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்ட தொடர்.

இத்தொடரில் வரும் பாத்திரங்கள் நல்ல நோக்கம் படைத்தவர்களாக, லட்சியத்துடன் வாழ்கின்றவர்களாகக் காட்டப்பட்டுள்ளன. அதற்கும் அவர் கொடுக்கும் விளக்கத்தை அவர் எழுத்துக்களில் காண்போம்

“எனது புரட்சிக் காரன் எவ்வளவு உத்தமமானவனோ அந்த அளவு உத்தமமானவனே எனது போலீஸ்காரனும். நான் தீயவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேனேயொழிய அவர்களைக் கண்டதில்லை. அவர்களை இலக்கியக்கண் கொண்டு நான் கண்ட மாத்திரத்தில் அவர்கள்நல்லவராக மாறுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இதுதான் என்னிடமுள்ள மத நம்பிக்கை, இறை நம்பிக்கை என்று நம்புகிறேன்.

“வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும
தீமை இலாத சொலல் “

என்பது நமது இலக்கிய தர்மம்.அந்த நோக்கு நான் எழுதிய பலவற்றுள் இதில் நன்கு சமைந்தது. “

மகாப்பெரியவரின் அறிவுரைப்படி ஆன்மீகமும் சமுதாயநலனும் கைகோத்துக் கொண்டு எழுதும் பாக்கியத்தைப் பெற்றவராகப் பெருமை கொள்கின்றார் ஜெயகாந்தன்.

புரட்சியென்றால் அது வன்முறை நோக்கிச் சென்றுவிடும் என்ற அச்சம் பலருக்கும் உண்டு. காந்திஜியின் சத்தியாகிரஹப் புரட்சியை நாம் பார்த்திருக்கின்றோம். அவர் தன்னை வருத்தி இயக்கத்தினை முன்னின்று நடத்தினார். இன்றைய இயக்கங்களில் தொண்டர்களே மரிக்கின்றனர். தலைவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வதைக் காண்கின்றோம். எந்த ஒன்றையும் பொது நிலைப்படுத்த முடிவதில்லை

தொழிற்சங்கத்தில் 32 ஆண்டுகள் இருந்தேன். கீழே பணியாளராக நுழைந்து துறையின் மேலதிகாரியாக ஆனேன். இரட்டைக் குதிரை சவாரி செய்தேன். தொழில் சங்கத்தில் இருந்ததால் எத்தனை சாதிக்க முடிந்தது என்று அனுபவ பூர்வமாக அறிந்திருக்கின்றேன். இந்தத் தொடர் படிக்கும் பொழுது என் வாழ்க்கைப் பாதையை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.ஆனால் படிக்கின்ற எல்லோருக்கும் அனுபவங்கள் ஏற்படிட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே விமர்சனங்கள் பல திக்குகளிலிருந்தும் வந்தன.

இதற்கு விமர்சனங்கள் வந்த பொழுது அவர் கூறியவை:

“ஆர்வத்தின் காரணமாகவும், அவசரத்தின் காரணமாகவும் விமர்சகர் எனப்படுவோர் புகழ் குவிக்கவும், புழுதி இறைக்கவும் செய்வர் என்பது நாம் எதிர்பார்த்ததே. அவர்களுக்கு நன்றியல்லாமல் வேறு ஏதும் நாம் உரைப்பதற்கில்லை. இந்நூலுக்கு விமர்சனக்காற்று சற்று மிகைதான்.அந்தக் காற்றின் கதையிலேதான் எத்தனை லயங்கள் .. எத்தனைவிதங்கள் ..ரசித்தோம்,ரசிப்போம் “

விமர்சனக்காற்றுக்கு ஓர் கவிதையில் சில வரிகள்

தென்னையின் கீற்றுச் சல சல வென்றிட
செய்து வரும் காற்றே !
உன்னைக் குதிரை கொண்டு ஏறித் திரியுமோர்
உள்ளம் படைத்து விட்டோம் ..

ஜெயகாந்தனுக்கு விமர்சனங்கள் புதிதல்ல. சொல்லப் போனால் அவர் வளர்ந்ததே அந்தக் காற்றின் வேகத்தால்தான்.

அவர் எழுதிய பல கதைகள் கடும் விமர்சனத்திற்குள்ளானவை. அவைகளில் அவர் எழுதிய "ரிஷிமூலம்: பலரின் கோபத்திற்கும் கூட காரணமாயிற்று. சமுதாயமென்பது நல்லதும் கெட்டதும் கலந்ததே. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மிருகம் உறங்கிக் கிடக்கின்றது. அதனைப் பண்படுத்த சில நெறி முறைகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வர முயல்கின்றான். சிலரால் மட்டும் மனத்தை வெல்ல முடிகின்றது. பலர் அதன் வேகத்தில் அடிபட்டுப் போய்விடுகின்றனர்.

ரிஷிமூலத்தின் கதா நாயகன் மனவக்கிரம் கொண்டவன். இதைப்போன்று அவர் எழுதிய குருபீட நாயகனிடமும் இக்குறையைக் காணலாம். அவன் பித்தனாய் வந்து பின் சித்தனாக்கபடுகின்றான். இங்கே ஒரு செய்தியைக் கூற விழைகின்றேன்.

திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி என்று ஒரு கிராமம் உண்டு. அந்த ஊரில் ஓர் பித்தன் தோன்றி அவனைச் சித்தனாக்கி வழிப்பட்ட சம்பவம் உண்மையில் நிகழ்ந்தது. அது செவிவழிச் செய்தியாகப் பரவி எழுத்துக்குக் கருவாகி இருக்கலாம். அல்லது தனித்தனியே இப்படி ஒத்துப் போகும் நிகழ்வுகளாகவும் இருக்கலாம். பலருக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் ஆனால் உணர்ந்து கொள்ளாமல் இருப்போம்.

ஏதோ ஒரு காட்சியைப் பார்க்கும் பொழுதோ அல்லது கேள்விப்படும் பொழுதோ ஏற்கனவே எங்கோ நிகழ்ந்ததாக அல்லது கேள்விப்பட்டதாகத் தோன்றும்,. இது இயற்கையின் விளையாட்டு. சம்பவங்கள் எங்கேங்கேயோ எப்படியோ பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. அல்லது பதிவானவை நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் புரியாத புதிர்கள் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய “ரிஷிமூலம்“ கதையைக் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே!

(தொடரும்)

நன்றி-திண்ணை

Thursday, September 9, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 20

"ஜெய ஜெய சங்கர" - இந்தத் தலைப்பில் கதை எழுதத் தொடங்கிய ஜெயகாந்தன் அப்படியே பயணம் சென்று “மனவெளி மனிதர்கள்” காணச் செல்கின்றார். பின்னர் “எந்தையும் தாயும்” மகிழ்ந்து குலாவிட முயல்கிறார். அவர் ஆரம்பித்த பயணம் “மகாயக்ஞம்” நடத்தி நிறைவுறுகின்றது. ஆம்! இத்ததனையும் "ஜெய ஜெய சங்கர"வின் தொடர்ச்சிகள்!

“ஒரு கிராமம்,ஆ! எப்பேர்ப்பட்ட கிராமம்! ஒரு குடும்பம், எவ்வளவு உன்னத ஆரிய லட்சியக் குடும்பம்! அதன் உறவுகள் என்னும் சரட்டில் ஒரு அரை நூற்றாண்டு நிகழ்ச்சியினை அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கோர்த்து ஆரமாக்குகிற உத்தியில் அறுந்து போவதற்கோ, முடிந்து போவதற்கோ இடமில்லாமல் போயிற்று”

ஜெயகாந்தன் தன் முடிவுரையில் வெளிப்படுத்தும் கூற்று. கதையாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தொடர்ந்து கொண்டே வரலாற்றை வட்டமிட ஆரம்பித்துவிட்டது. அக்காலத்திற்கே சென்று விட்டார் ஆசிரியர்.

எத்தனை பாத்திரங்கள்! எத்தனை சம்பவங்கள்! ஆசிரியரின் கனவுலகம் படிப்பவரை மிரள வைக்கின்றது. ஆன்மீகம், காந்தீயம், அரசியல், வரலாறு, இன்னும் பல கோணங்களில் தன் எண்ணங்களைப் பதிந்திருக்கின்றார். நாமும் முடிந்த மட்டும் தொடர்வோம்.

ஆதி தன் மகனை வீட்டைவிட்டுப் போகச் சொன்னதைக் கேட்ட ஆசாரிய ஸ்வாமிகள் ஒரு நீண்ட பிரசங்கமே செய்கின்றார்:

“சமூகவிஷயம் என்பது எதுவுமே ஓர் நல்ல தனி மனுஷ்யனுக்கு அப்பாற்பட்டது அல்ல; உலகில் உள்ள ஒவ்வொரு சிறிய விஷயங்களிலும் பேரண்டம் அடங்கியிருக்கிறது. நமது சமூகங்கள் என்று நாம் நினைக்கிற அவை நம்மிலிருந்து விலகி நிற்கின்றன என்பதால் நாமும் அவையும் வேறாகிவிட முடியுமா? அதன் நடுவில்தான் நாமும் இருக்கிறோம். எவ்வளவு பற்றற்று, அல்லது தனிநெறி வகுத்துக் கொண்டு நாமிருந்த போதிலும் அதன் நடுவில்தான் அதன் ஒரு அங்கமாகவே நாமும் இருக்கிறோம். நாம் வேறு அதுவேறு என்று என்றாகிவிட முடியுமா? உன் தலையில் உனக்குகந்தது என்கிற ஒரு நெறியைச் சுமந்து திரிகிறாய். இப்படித்தான் ஒவ்வொருவரும்! பறவையின் சுதந்திரத்தை அங்கீகரித்து மகிழ்ச்சி அடைகிற மனத்தை வளர்த்த மனிதர்கள், தங்களுக்குச் சொந்தமான மக்கள் விஷயத்தில் இழந்துவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. “

ஓர் ஆத்மாவின் சுதந்திரத்தைப் புரிய வைக்கிறார்;மீண்டும் தொடர்கிறார்:

“முரண்பாடுகளும்,மோதல்களும் தவிர்த்த வாழ்க்கை, கோபமற்று குளிர்ந்த மனத்தோடு அவரவர் கொள்கையில் பொருந்தி நின்று போரிட்டுக் கொள்வது...ஆமாம்; போரிடத்தான் வேண்டும். இல்லாவிட்டால் கொள்கையும் நெறியும் என்னாவது? போரிடலாம்; வாதிடலாம்; கோபமும் ஆத்திரமும் எந்தப் போராட்டத்திற்கும் உதவா .”

சத்தியமான வார்த்தைகள்! மாறுபட்ட கருத்துக்கள் வரலாம்;வாதிடலாம். தங்கள் கொள்கைகளுக்காகப் போரிடலாம். ஆனால் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துவிடக் கூடாது. அது சமுதாய அமைதியைக் கெடுத்துவிடும்.

ஆதி மனத்தில் இருந்த கோபம் மறைந்துவிடுகின்றது. மகனைப் பார்க்கும் ஆவல் துளிர்க்கின்றது.பாசத்திற்கும் குரோதத்திற்கும் இடையில் ஒரு சிறு கோடுதான் இருக்கிறது. அதை நீக்கிவிட்டால் எல்லாம் அன்பு மயம். அன்பு இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும். அமைதியை இழக்கும் வழிகளில் செல்லலாமா?

ஆதியின் அமைதிக்குடிலில் பிறந்து வளர்ந்தவன் மகாலிங்கம். அவன் ஓர் அச்சமற்ற ஆண்மகன். அவன் எண்ணங்கள் போன பாதை வித்தியாசமானது

“ஒரு குடும்பத்தின் அடிமையாக நடைவண்டி பிடித்து நடந்து கொண்டிருப்பதைவிட இந்த சமூகத்திற்கோர் அடிமையாகித் தன்னிச்சையாய்க் கைகளை வீசி நடக்கலாம் என்று தோன்றுகிறது.”

புதிய தலைமுறை தோன்றிவிட்டது. பிறரிடம் வேலைக்குப் போவது அடிமைத்தனம் என்று கூறும் தந்தைக்கு இந்தப் பேச்சு பிடிக்காமால் மகனை வீட்டைவிட்டு அனுப்பச் செய்துவிட்டது. ஸ்வாமிகளின் பேச்சு ஆதியின் மனக் கண்களைத் திறந்துவிட்டது. சுதந்திர வாழ்க்கையில் சுற்றித் திரியும் மகனைக் காண முடிவு செய்துவிட்டார்

மனவெளி இல்லம் நோக்கிப் புறப்படுகின்றார் ஆதி. அவர் மகன் மகாலிங்கம் சென்றிருக்கும் இடம்பற்றி அவர் மனைவி தேவியிடம் விசாரித்து அறிந்து கொண்டவுடன் தாமதிக்காது புறப்பட்டு விட்டார். ஸ்வாமிஜியின் அன்புக் கட்டளைக்காக மட்டுமல்ல, தன் மகனைக் காண வேண்டுமென்ற துடிப்பும் அவரைத் தூண்டிவிட்டது. மனவெளி மனிதர்களுடன் அவர் மகன் மகாலிங்கம் வசிக்கின்றான்.

தலைப்பைப் பாருங்கள்! மனவெளிமனிதர்கள்! அந்த வீட்டின் பெயர் மனவெளி இல்லம்.

அங்கே ஒளிவு மறைவு கிடையாது. போலித்தனமில்லா புனித இடம். அவரவர் கொள்கையுடன் சுதந்திரமாக வளைய வர முடிந்த இடம். கொள்கைகள் வேறாயினும் அன்பும் பண்பும் கலந்த ஓர் குடில். மாற்றுக் கொள்கையென்றால் மற்றவரைத் தாக்கித்தான் ஆக வேண்டுமென்ற தற்கால குணக்கேடு அங்கே இல்லை. புரட்சிக்காரனும் புன்னைகையுடன் தன் உறுதியில் எப்படி நிற்க முடியும் என்று காட்டும் ஓர் உன்னதமான இடம்.

நாமும் அந்த அன்புக் குடிலுக்குள் செல்வோம். குடிலுக்குச் சொந்தக்காரர் சிங்கராயர்.ஒரு காலத்தில் ஓர் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அவரின் தோற்றம் தாடி இல்லாத தாகூர் போலவும், தலைப்பாகை இல்லாத பாரதி போலவும் பிறருக்குத் தோன்றும். சுதந்திரம் பெற்ற பின் திருமணம் என்றிருந்து கொஞ்சம் வயதாகவிட்டு செல்லம்மாளை மணக்கின்றார். அவருடைய ஒரே மகன் சத்தியமூர்த்தி ஓர் புரட்சிக்காரன். அவன் ஓர் ஆசிரியராக இருந்தான் என்றாலும் மகாலிங்கத்தைவிட வயது வித்தியாசம் அதிகமில்லை. மகாலிங்கம் புரட்சிக்ககரன் இல்லாவிட்டாலும் இருவரையும் நட்பு பிணைத்திருந்தது. சத்தியமூர்த்தி புரட்சிகரமாக புத்தகம் எழுதுகிறான் என்றும் சில காரியங்கள் புரட்சிகரமாய் செய்து வருகின்றான் என்று கைது செய்யப்பட்டு இப்பொழுது சிறையில் இருக்கின்றான்.

சிங்கராயரின் பேச்சுக்கள் மூலம் அக்காலச் சூழல், சிந்தனைகள், செயல்பாடுகளை படம்பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

மகனைப்பற்றி பேசும் பொழுது மாணவர்களைப் பற்றி விளக்குகின்றார். மாணவர்கள் இந்தக் காலத்தின் அடையாளங்கள்.அவர்கள் நம்பிக்கைகளும், லட்சியங்களும் மிக உயர்ந்தவை.அதைப் புரிந்து கொள்ளளதவர்களை, அவர்கள் அலட்சியப் படுத்துகிறார்கள்.அது தப்பு என்று பெற்றோர்கள் புலம்புகின்றார்கள்.

புலம்புகிற மனிதர்களை ஒரு போதும் இளைஞர்கள் மதிப்பதில்லை. தனி நபர் சத்தியாகிரகம், காந்திஜியின் அஹிம்சை வழிப் போராட்டம் இவைகளில் ஈடுபட்டவர்களைப்பற்றியும் பேசுகின்றார்

“அந்தக் காலத்தில் தாயும் தகப்பனும் பெற்றோராகவே நமக்குத் தெரியவில்லை. .. காந்திஜியும் கஸ்தூரிபாயும் தான் நமக்கெல்லாம் சொந்தத் தாயாகவும் தந்தையாகவும் இருந்தார்கள் ?"

இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அந்தக் குடும்பத்தில் என் தந்தையும் ஒருவராக இருந்தாரே ! எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தோம். இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு இந்த நிலை!

வீட்டை மறந்து, சொந்த உறவுகளின் நினைப்பின்றி போராடிப்பெற்றது சுதந்திரம். தங்களுக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாது இருப்பதையெல்லாம் நாட்டு சுதந்திரத்திற்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள். அவர்கள் அரசியல்வாதிகளல்ல. இந்த மண்ணின் மைநதர்கள். சுயநலமற்ற மனிதர்களைக் காண்போமா என்று மனம் ஏங்குகின்றது.

அந்தத் தியாகியின் மனைவி செல்லம்மளும் மற்றும் சோசப்பு என்ற ஓர் உதவியாளரும் அவ்வீட்டில் வசித்து வந்தனர். சிங்கராயர் காந்தீயவாதியென்றால் அவர் ஒரே மகன் சத்திய மூர்த்தி ஓர் புரட்சிக் காரன் . மார்க்ஸிய சித்தாந்தக் கொள்கையுடையவன்.சத்தியமூர்த்தி சிறைக்குச் செல்லவும் மகாலிங்கம் இவர்களுடன் தங்க ஆரம்பித்து விட்டான்.

ஜெயகாந்தன் அவர் இளமைக் காலத்தில் கம்யூனிசத்தில் இருந்தவர். எனவே காந்தீயமும் கம்யூனிசமும் அவர் எழுத்தில் கைகோர்த்துக் கொண்டு வருகின்றது. கதை என்பதைவிட உரையாடல்களே அதிகம்.

மகன் தீவிரவாதியாக இருப்பதைப் பற்றிப் பேசுகின்றார் சிங்கராயர்.

“இவர்கள் மட்டும் காந்திஜி சொன்னதைக் கேட்க மாட்டார்கள். இளைஞர்கள் மட்டும் கேட்க வேண்டும் என்றால் இது என்ன நியாயம் ? ..இளைஞர்கள் பலாத்காரத்தை நம்புகிறார்கள்.அதை எப்படி தடுக்க முடியும்? “

நிறைய பேசுகின்றார்கள். இனி பேச்சு பேச்சு பேச்சு தான்

பாரதியுடன் பழகிய காலத்து நடந்தவைகளையெல்லாம் விவரிக்கின்றார். பாரதிதான் சமதர்மம், பொதுடமை ஆகிய கருத்துக்களை பரிச்சயம் செய்துவைத்த முதல் புரட்சியாளர் என்கிறார்.

காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை எழுத்தில் படிக்கும் பொழுது இப்பொழுதும் மனம் கலங்குகின்றது. அந்தக் காலத்திற்கு மீண்டும் பறந்தேன். அந்த செய்தி வானொலியில் ஒலிபரப்பப்பட்ட பொழுது நானும் என் தந்தையும் ஒரே அறையில் தான் இருந்தோம். செய்தி கேட்டவுடன் என் தந்தை மயக்கம் போட்டு விழுந்தார். நானோ ஓவென்று கத்தி அழுதேன். அங்கே இருந்த மற்றவர்கள் என் தந்தையைக் கவனித்தார்கள். ஏனோ மரணச் செய்திகள் கேட்கும் பொழுதெல்லாம் நான் அதிர்ந்து போய்விடுவேன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மையம் ஒன்றைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுதான் திருமதி இந்திராகாந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து துடித்துப் போனேன். மாரடைப்பு வந்து கைகால்கல்கள் அசைவின்றி இருந்த என் தாயாரைக் கவனித்துக் கொண்டு பங்களூரில் வாழும் பொழுது முன்னால் பிரதமர் திரு ராஜீவ் காந்தி சுடப்பட்ட செய்தி அறிந்து அதிர்ந்தேன்.

இந்த மண் எத்தனை உயிர்களைக் காவு வாங்கி இருக்கின்றது.

ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர் தொடர் என்னைப் பல வகையிலும் ஆட்டி வைத்தது.

மனவெளி இல்லத்திற்குச் செல்வோம். இவர்கள் குடும்பத்தில் சேர்ந்தவள் இன்னொருத்தியும் கூட. அவள்தான் உமா. அந்தப் பெண்ணும் ஓர் புரட்சியாளர். எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஒருத்தி புரட்சி கொடி பிடித்து பெற்றோரையும் விட்டு வெளிவந்து இந்த இல்லத்தில் குடிபுகுந்துவிட்டாள். சத்தியமூர்த்தியின் கொள்கை ஈர்ப்பில் வந்து மனவெளி இல்லத்தில் ஒட்டிக் கொண்டவள்.

மனவெளி இல்லத்தில் வெவ்வேறு கொள்கைகள் உள்ளவர்கள் இருந்தனர். கொள்கைப் பிடிப்பிலும் இருந்து கொண்டு பிறர் மனத்தைக் காயப்படுத்தாமல் ஒன்றி வாழும் தன்மையுடன் சேர்ந்து வாழ முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

காந்திஜியும் பாரதியும் அதிகமாகப் பேசப்பட்டார்கள். அரசியல் அதிகமாகப் பேசினார்கள். இந்த உரையாடல்கள் பற்றி எழுதாமல் கதையைத் தொடர விரும்புகின்றேன்.

ஸ்வாமிகளைப் பார்க்கப் போவதாக மகாலிங்கம் ஒப்புக் கொள்ளவும் ஆதிக்கு மகிழ்ச்சி. மனவெளி மனிதர்களிலிருந்து “எந்தையும் தாயும்” போகின்றார் ஆசிரியர்.

மனவெளி இல்லத்திலிருந்து புறப்படும் பொழுது சிங்கராயர் ஒரு புத்தகம் ஆதிக்குக் கொடுக்கின்றார். ஆதியின் வீட்டில் படிப்பதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு.ஆதிக்குப் புத்தகங்கள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம்.

“ஒரு மனிதனால் சாப்பிடாமலும் தூங்காமலும் கூட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக முடியும் என்றால் உணவின் மூலமும் , ஓய்வின்மூலமும் அவனுக்குக் கிடைக்க வேண்டிய சக்தியும் போஷாக்கும் அந்தப் புத்தக்த்திலிருந்தே கிடைத்துவிடும். படிப்பதும் , தியானம் செய்வதும் வேறு வேறு அல்ல ..“

ஆதியின் வாயிலாக வரும் ஆசிரியரின் கருத்து.

புத்தகங்களைப் படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவையும் நானும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன். முதுமையில் முடங்கிக் கிடக்கும் எனக்கு நண்பர்கள் புத்தகங்கள்தான்.

மகாலிங்கமும் உமாவும் ஆதியின் வீட்டிற்கு வந்தார்கள். உமாவும் வேதமும் சீக்கிரம் தோழிகளாகிவிட்டனர். அங்கும் ஒரே உரையாடல்மயம். மகாலிங்கம், உமா, வேதம் மூவரும் ஆசாரிய ஸ்வாமிகளைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார்கள்.

மகாலிங்கத்தின் வாழ்க்கை ஒருவிதமாக அமைந்துவிட்டது. தந்தையுடன் இருக்கும் பொழுது கட்டுப்பாடுகள் அதிகம். பின்னர் சத்தியமூர்த்தி தொடர்பினால் பல புத்தகங்கள் படித்து, தன்னை ஒரு நாஸ்திகன் என்று பிரகடனம் செய்து கொள்ளும் அளவுக்கு நவீன மனிதனாய் வளர்ந்திருந்தான். அந்தவிதத்தில் எள்ளளவும் குறைவில்லாதவள் உமா. அதே உமா இப்பொழுது கையில் பிரசாதத்தட்டுடன் நெற்றியில் குங்குமம் திகழ நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் வேஷதாரிகளல்ல. பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்புடையவர்கள்.

ஆசாரிய ஸ்வாமிகளை மூவரும் சந்தித்தனர். எல்லோரைப்பற்றியும் விசாரித்துவிட்டு அவர் கூறிய அறிவுரை ஒன்றுதான். ஆதி விரும்பும் ஆஸ்ரமப் பணிகளில் அவர்களும் பங்கு கொள்ள வேண்டும். தனித்தன்மையை இழக்காது ஒருங்கிணந்து சேவைகள் புரியலாம்

அந்தப் பரபிரம்மம் இல்லாத இடம் ஏது ? அவன் படைத்த உயிர்களுக்குத் தொண்டு செய்வது அவனுக்குச் செய்யும் ஆராதனை அங்கே எந்த விவாதங்களும் நிகழவில்லை.

மூவருக்குள்ளூம் ஏதோ ஓர் மன நிறைவு. அங்கே அர்த்தங்களை அனர்த்தமாக்கும் மனிதக் கூட்டம் இல்லை. சுதந்திரமாகச் சிந்திக்க முடிந்தது. இன்றைய இளைஞர்களுக்கும் வேண்டியதும் அதுதானே!

கடந்த காலத்திற்கு என் மனம் பயணம் சென்றது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரை அறிந்தவர்களுக்கு நான் சொல்வது தெரிந்த விஷயம். அவருக்குத் தன் ஊருக்கு அருகில் உள்ள கிராமங்களீல் தொழில் வளர்ச்சி வேண்டும் என்று விரும்பினார். கூட்டுறவுச் சங்கங்கள் நிறைய தொடங்க வழி காட்டினார். சம்பந்தப் பட்ட அரசு அதிகாரிகள் அனைவரையும் கூட்டி விருந்தளித்து உட்காரவைத்து என்னென்ன நலத் திட்டங்கள் இருக்கின்றன என்று விசாரிப்பார். பள்ளிக்கூடங்கள் முதல் பல வசதிகளைப் பற்றிப் பேசுவார்.வெறும் பேச்சுடன் இருக்கவில்லை. அவரால் குன்றக்குடியைச் சுற்றி இருந்த பல கிராமங்களுகு நன்மைகள் கிடைத்தன. முக்கியமாக தொழில் மையங்களும் கூட்டுறவு மையங்களும் ஏற்பட வழி செய்து கொடுத்தார்.

காவியுடை உடுத்தியவராயினும் அவருக்குள்ளும் கம்யூனிச சித்தாந்தக் கொள்கைகள் இருந்தன. “மக்கள் சேவை மகேசன் சேவை” என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்ததை நான் அனுபவத்தில் பார்த்திருக்கின் றேன். இப்பொழுது பலரும் சமுதாய நலப் பணிகளில் ஆர்வம் காட்டி வழி நடத்துகின்றனர். எனவே நம் கதையில் ஆஸ்ரமம் ஆரம்பித்து சமூக நலப் பணிகள் செய்வதை ஆசாரிய ஸ்வாமிகள் ஊக்குவிப்பது ஆச்சரியமில்லை. காஞ்சி மடத்தின் கீழ் பல சேவை இல்லங்கள் இயங்கி வருகின்றன.

இதுவரை சந்தித்தவர்களை விடுத்து சத்திய மூர்த்தியிடம் கூட்டிச் செல்லுகின்றார். சத்தியமூர்த்தி தற்போது வாழும் இடம் ஓர் சிறை. அங்கும் பல மனிதர்கள், பல சிந்தனைகள் என்று கதையை நகர்த்துகின்றார். சிறை சீர்திருந்தவேண்டும், அதன் நிலை மேன்மைப்படவேண்டுமென்று நினைக்கின்றான். அங்கும் வாழ்பவர்கள் மனிதர்கள் தானே. அவர்கள் விஷயத்தில் கொடுமையாக இருப்பவர்கள் மனுஷ குலத்தின் வெறுப்புக்கும் ,நிந்தனைக்கும் ஆளாகத்தகுந்தவர்களே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அவன் எங்கிருந்தாலும் மனிதர்களின் நலனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவன்.

அங்கே ஒரு சிறைக் கைதி, அதாவது தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருக்கும் ஒருவரைக்காட்டி அங்கும் ஒரு காட்சியை வரைந்துவிடுகின்றார் கதாசிரியர். சுதை மண்ணிலிருந்து சிற்பம் செய்யத் தெரிந்தவன். அவனுக்கு ஒரு விருப்பம். தூக்கில் தொங்க இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதற்குள் சுதை மண் கிடைத்தால் காந்தி சிலையொன்று செய்துவிட முடியும் என நினைக்கின்றான். அவன் ஆசையை சத்திய மூர்த்தியிடம் கூறுகின்றான். சாகும் வரை மவுன விரதம் காத்து மகாத்மா காந்திக்கு ஓர் சிலை எடுக்க விரும்பும் சிறைக் கைதியைக் காட்டுகின்றார் ஆசிரியர்.

சாவு நெருங்கும் பொழுதும் நினைப்பில் காந்தி வருகின்றார் என்றால் அக்காலத்தை நினைக்கும் பொழுது இப்பொழுதும் சிலிர்க்கின்றது. காந்திஜி .. காந்திஜி ..காந்திஜி.

ஏனோ இத்தொடரில் வரும் மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக, சில கொள்கைகள் உள்ளவர்களாகக் காட்டிச் செல்லுகின்றார் ஜெயகாந்தன். அவர் கற்பனையுலகு அமைதியும் ஆனந்தமும் கலந்த ஓர் சுவர்க்க பூமி. ஆசைப்படுவதாவது அர்த்த முள்ளதாக இருக்கட்டுமே! பிறக்கும் பொழுது மனிதன் கெட்டவன் இல்லை.

அந்தக் கைதியின் கோரிக்கையைக் கேட்டவுடன் சத்தியமூர்த்திக்குப் பாடத் தோன்றுகின்றது

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே

இந்தப்பாடலைப் பாடிக் கொண்டே தன் இருப்பிடம் செல்லுகின்றான் சத்தியமூர்த்தி. இங்கிருந்து பயணம் “மகாயக்ஞம்” நோக்கிச் செல்லுகின்றது.

(தொடரும்)

நன்றி: "திண்ணை"