Thursday, July 26, 2012

நினைவலைகள் -18


நினைவலைகள்  -18

சென்னையில் கணிணி மூலமாக ஏற்பட்ட இளைஞர்களின் தொடர்பைக்
கூட ஆக பூர்வ சக்தியாக்கத் தோன்றி செயலாக்கினேன். இன்றும் அவர்கள் என்னுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள்.  என் முதுமைத் தோற்றம் அவர்கள் உற்சாகத்தைக் குறைக்கவில்லை. சிறியவர்களோ பெரியவர்களோ யாராயினும் சரி, நம் எண்ணத்தில் நமக்கே தெளிவு வேண்டும். உறுதியும் வேண்டும். என்னுடைய இந்த இயல்பிற்கு வித்திட்டது கருப்பட்டி கிராமம் தான்.

ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் மாற்றங்கள்

கருப்பட்டி கிராமத்தில் இருந்த இளைஞர்களும் கேலியும் கிண்டலும் பேசிக் கொண்டு நண்பர்களுடன் வலம் வந்தார்கள். ஆனால் பெரியவர்களைக் கண்டவுடன் ஓர் மரியாதை தோன்ற அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து வாழும் பெற்றோர்களுடன் வாழ்ந்தவர்கள். ஊரிலும் ஓர் கட்டுப்பாடு. எனவே அந்த அடக்கம் இயல்பாக அமைந்தது.

இப்பொழுது சின்னக் குழந்தைகள் உட்பட, ஏன், எதற்கு, எப்படி என்று கேள்விகள் நிறைய கேட்கின்றார்கள். பதில் தெரிந்தாலும் நாம் பதில்கள் கூறுவதில்லை. குழந்தைகள் தானகப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கின்றோம். ,

என் தங்கையின் பேரன் ராகேஷுக்கு ஆறு வயது இருக்கும். பாட்டி ஆசையாய்ப் பேரனை அணைத்து முத்தமிட்டிருக்கின்றாள். உடனே அவன் “ பாட்டி, முத்தா கொடுக்காதே. புருஷன் பொண்டாட்டிதான் முத்தா கொடுத்துப்பா” என்று கூறவும் இவள் அதிர்ந்து போயிருக் கின்றாள். இதனை அவள் என்னிடம் சொல்லிச் சொல்லி குமுறினாள்.
 இது அந்தக் குழந்தைக்கு யார் சொல்லிக் கொடுத்தது?
குழந்தை தூங்கிவிட்டான் என்று நினைத்து மங்கிய ஒளியில் அப்பா,
அம்மா கொஞ்சலைப் பார்த்ததன் விளைவா? அல்லது, ஊடகத்தாக்கமா?

குழந்தைகளும் இளையவர்கள் மட்டுமா மாறியிருக்கின்றார்கள்!? பெரியவர்களும் தாங்கள் மாறியிருப்பதை உணராமல் இருக்கின்றோம்.
குழந்தைகள் முன்னால் புருஷன் , மனைவி சண்டை .  நாமே அவர்களுக்குப் பொய் சொல்லிக் கொடுக்கின்றோம். “அப்பா கிட்டே சொல்லாதே, அப்பா கேட்டா இப்படிச் சொல்லு “ இது அம்மா.
“டேய் அம்மா கிட்டே சொல்லதே “ இது அப்பா. நம் நாடகத்தைக் சிறுவர்கள் முன் நடத்துகின்றோம்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் ஹிப்பிகளின் காலம் இருந்தது. கட்டுப்பாடற்ற , சுதந்திரமான வாழ்க்கை. வீட்டை விட்டு சிறு வயதிலேயே பையன்களும் பெண்களும் வெளியே போய் விடுவார்கள். உடை உடுத்துவ
திலிருந்து, எல்லாப் பழக்க வழக்கங்களும்  நடை முறையில் இருக்கும் பழக்க வழக்கங்களை உடைத்தெறிந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்களையும் மாற்ற ஒரு துறவி அவர்களுடன் பழக ஆரம்பித்தார். சொக்குப் பொடி போடவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் நெருங்கினர்.அவர் அணுகுமுறையே வித்தியாசமாக இருந்தது.

எதற்காகக் அழைத்தீர்கள்?
கொஞ்சம் பேசத்தான்.
எங்களுக்கு புத்திமதி பிடிக்காது.
அதற்காகக் கூப்பிடவில்லை. உங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள ஆசை
எதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்?
எங்களில் நீங்கள் வித்தியாசமாக இருக்கின்றீர்கள்.காரணம் ஏதாவது உண்டா?
ஆமாம் நாங்கள் வித்தியாசமானவர்கள் தான் எங்களுக்கு மற்றவர்களைப் பிடிக்கவில்லை
ஏன்?
எல்லோரும் போலிகள். எழுதுவது, சொல்லுவது வேறு. நடப்பது வேறு. எதற்கு இந்தப் பொய்கள் ?

பெரியவர்கள் சொல்லுவதற்கு மாறாக நடப்பவைகளைப் பட்டியல் போட்டுச் சொல்ல ஆரம்பித்தனர்.

நாங்கள் எங்கள் இஷ்டம் போல் இருக்க விரும்புகின்றோம். பொய் சொல்லி அல்ல. இப்படித்தான் நாங்கள் என்று சொல்லி நடக்கின்றோம்

பாண்ட் போட்டால் ஒரு கால் நீளம். இன்னொரு கால் குட்டை.
உடையைக் கிழித்துவிட்டுக் கொள்வது.ஆணும் பெண்ணும் மிருகங்களைப் போல் வெளிப்படையாகப் பழகுவது. எதற்கும் கட்டுப் பாடு கூடாது. மற்றவர்கள் பார்க்கின்றார்களே என்று  பார்வைக்குக் கூட மதிப்பு கொடுக்க விரும்பவில்லை. வீடு வேண்டாம். வெட்ட வெளி பொதும். இதுதான் ஹிப்பிகளின் வாழ்க்கை

துறவி பொறுமையாக எல்லாம் கேட்டார். பின்னால் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்
உங்களுக்குத் தலைவலி, உடல்வலி வருமா
வரும்
உங்கள் இஷ்டம் போல் இருங்கள். வலி வராமல் இருக்க வழி சொல்லிக் கொடுத்தால் கேட்பீர்களா?  இந்த வலி போனால் இன்னும் ஜாலியாக இருக்கலாமே

ஹிப்பிகளின் மனத்தைத் தொட்ட வார்த்தைகள்.

குடிப்பது, போதை மருந்து சாப்பிடுவது, கட்டுப்பாடற்ற வாழ்க்கையினால் வரும் வலிகள் போனால் இன்னும் சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவிக்க லாமே!
ஏதாவது மருந்து இருக்கா?

மருந்து இல்லை ஒரு நாளைக்கு ஒரு முறை கொஞ்ச நாட்கள் வாங்க. நான் சொல்றதைச் செய்யுங்க. வலி போய்விடும்

தினமும் பள்ளிக்கூடம் வர்ரமாதிரி வர எங்களுக்குப் பிடிக்காது

உங்கள் இஷ்டம்போல் எந்த நேரத்தில் வந்தாலும் சரி. ஆனால் தினமும் வர வேண்டும். உங்கள் உடம்பைச் சரியாக்கத்தானே வரச் சொல்றேன்

கூப்பிட்டு லெக்சர் அடிக்க மாட்டிங்களே. பெரியவங்க லெக்சர் கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு

லெக்சர் கிடையாது. கொஞ்ச நேரம் மட்டும் வந்துட்டுப் போங்க. அப்புறம் உங்க இஷடம் போல் போய் வாழுங்க

துறவியின் பேச்சு வென்றது. முதலில் ஒழுங்கற்று வந்தார்கள் ஆனால் தினமும் வந்தார்கள். அவர்களுக்குத் தினமும் சில பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன. சிலநாட்களில் சிறிது குணம் தெரிந்தது

அப்பொழுது துறவி மீண்டும் பேசினார்.
“தினமும் வருவதில் கொஞ்சம் வலி போக ஆரம்பித்திருக்கின்றது. இனி கொஞ்சம் குறித்த நேரத்தில் வரப் பார்க்கவும். கட்டாயம் இல்லை. குறித்த நேரத்தில் பயிற்சி செய்தால் இன்னும் குணமாகலாம்”

குறித்த நேரத்தில் வர ஆரம்பித்தார்கள்

ஹிப்பிகளுக்கு அந்த துறவியைப் பிடித்திருந்தது. அவர் புத்திமதி எதுவும் கூறவில்லை. அவர்களுடன் அரட்டையடித்தார். கொடுக்கும் பயிற்சியும் அவர்கள் உடலுக்கு நல்லதே செய்தது. விட்டுப் போன கட்டுப்பாடு களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பித்தனர். பின்னர் சில மாதங்களில் அவர் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தனர். அமெரிக்க அரசுக்கு துறவியின் செயல்பாடுகள் வியப்பையும் மகிழ்வையும் கொடுத்தது. துறவியைச் சிறப்பு செய்தது.

ஹிப்பி கலாச்சாரம் போய்விட்டது. ஆனால் பள்ளிப் படிப்பு முடியவும் வீட்டிலிருந்து வெளியில் சென்று வாழும் பழக்கம் இருக்கின்றது. 18 வயது இரண்டுங்கெட்டான் வயது. அனுபவங்கள் வேண்டும் என்று பெற்றவரும் சொல்கின்றனர் , பிள்ளையும் சொல்கின்றான். சட்டம் மட்டும் அல்ல, வாழும் முறையிலும் 18ல் சுந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

அந்தத் துறவி இந்தியாவிலிருந்து போனவர்

அவர்தான்  ஸ்ரீ சுவாமி சச்சிதானந்த சுவாமிகள்.

உயர்திரு பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மதிப்பையும் ஆதாரவையும் பெற்றவர். துறவியின் ஆன்மீகக் காரியங்களுக்கு உதவி செய்தார்.

 நடிகர் ரஜணிகாந்தின் பெரு மதிப்பைப் பெற்ற குருநாதர் சுவாமிஜி.

ஹிப்பியின் கதை அவரே சொல்லக் கேட்டேன். சென்னையில்
பகீரதன் அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிருபர்கள் கூட்டத்தில் ஸ்வாமிஜியே எல்லாம் கூறினார்கள். அப்பொழுது ஹிப்பிகளின் பிரச்சனை
உலகமெங்கினும் செய்தியாக இருந்த காலம். ஸ்வாமிஜியுடன் சில அமெரிக்க ஆண்களும் பெண்களும் வந்திருந்தனர். அவர்கள் ஹிப்பிகளாக இருந்து இப்பொழுது ஸ்வாமிஜியின் சீடர்களாக மாறியிருந்தனர். அவர்களும் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறினார்கள்.

அமெரிக்காவில் சுவாமிஜி  நிறுவிய அமைப்பின்  பெயர்
Integral yoga institute. இன்று பல கிளைகளுடன் செயலாற்றி வருகின்றது

இன்று அமெரிக்காவில் யோகாவகுப்புகளுக்குச் செல்பவர்கள் அதிகம்.
பலர் வெவ்வேறு பெயர்களில் யோகா பயிற்சி அளித்து வருகின்றனர். மருத்துவ ரீதியிலும், யோகாவும் தியானமும் மன அழுத்தத்தைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறைகின்றதாகச் சொல்கின்றனர். மதுவோ , தூக்க மாத்திரையோ இல்லாமல் தூங்க முடிகின்றது என்கின்றார்கள். அந்த அளவு விழிப்புணர்வு காணப் படுகின்றது.

இந்தியக் கலாசரத்தின் வேர்கள் ஆழமாக வேரூன்றி இருப்பதால் இந்த
நிலை இன்னும் நம்மிடை வரவில்லை. ஆனாலும் அதன் நிழல் வர ஆரம்பித்துவிட்டது.

மாறிவரும் காலத்தைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து தன் குறைகளைக் களைய முயல வேண்டும்.
பிரச்சனைகள் எல்லா வயதினருக்கும் இருக்கின்றது. விழிப்புடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். நம்மிடம் மெத்தனம் அதிகமாக இருக்கின்றது. இழப்பு வரவிட்டு அழுது பயனில்லை.
வரும் முன் காப்போம்

மீண்டும் சந்திப்போம்

Thursday, July 19, 2012

நினைவலைகள் -17


நினைவலைகள்  -17

புனிதவதி இளங்கோவன்
அண்ணியாக  இருந்தவர் தோழியானார்
நாங்கள் கருத்துக்களில் ஒன்றுபடுவதும் உண்டு. சிலவற்றில் மாறுபடுவதும் உண்டு. அது எங்கள் நட்பைப் பாதித்தது இல்லை

இளைஞர்களுக்காக நான் நினைத்த திட்டத்தைக் கூறவும் மகிழ்ச்சியுடன் ஆதரித்தார். அதுமட்டுமல்ல ஒத்துழைப்பும் தருவதாகச் சொன்னார். எனவே நாங்கள் இருவரும் சேர்ந்தே திட்டமிட்டோம். மாதம் ஒரு முறை நடக்கும் கூட்டங்களுக்கும் வந்திருந்து அவர்களே முன்னிருந்து நடத்திக் கொடுத்தார்கள் ஜூலை மாதம் 17ல் கணிணியைத் தொட்டேன். ஒருமாதத்தில் அரட்டையில் நண்பர்கள் சேர்ந்து விட்டனர். எனவே முதல் ஒன்றுகூடும் கூட்டம் ஆகஸ்டு மாதம் ஆரம்பமாகியது.

முதல் கூட்டத்தின் சிறப்புவிருந்தினர் அஸ்வத்தாமா என்ற குமணன். இவர்
வர்த்தக ஒலிபரப்பின் மூலம் இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். சென்னை வானொலியில் செய்திப் பிரிவில் வேலை பார்த்தவர். பின்னால் சொந்தத் தொழிலில் இறங்கிவிட்டார். இவர் பெயரைச் சொல்லவும் இளைஞர்கள் உற்சாகமாகி விட்டனர். சொற்பொழிவு கிடையாது. கலந்துரையாடல். விருப்பம் போல் கேள்விகள் கேட்கலாம். அந்தக் கலந்துரையாடல் சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. புனிதம்தான் பேச்சில் கலந்து கொண்டார்

அடுத்த கூட்டத்தில் தம்பதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இரு தலைமுறைகளின் கலந்துரையாடல்.இரு தரப்பும் மனம்விட்டுப் பேசினர்

மூன்றாவதில் இளவயதுப் பெண்கள் வந்தனர். விவாதங்கள் சூடாக இருந்தன. புனிதம் நடுவராக இருந்து வழி நடத்தினார்கள்

நான்காவது சிறப்பு விருந்தினராக சோதிட அறிஞர் திரு ஏ.வி. சுந்தரம் அவர்கள் வந்திருந்தார். ஐ.ஐ.டி யில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாலும் சோதிடத்தை விஞ்ஞானம் என்ற கருத்தில் ஆய்வு செய்தவர். இளைஞர்களில் பல மதத்தினர், கடவுள் மறுப்பு கருத்து கொண்டவரும் இருந்தனர். அன்றைய விவாதம் மிகவும் அருமையாக இருந்தது.


ஐந்தாவது  சந்திப்பு யாராலும் மறக்க முடியாதது. புத்தாண்டு கொண்டாட
புதிய வழி. யாஹூ சாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் உலக அளவில் சேர்ந்து விட்டனர். அவர்கள் வெளி நாட்டில் இருந்தனர். அவர்களுக்கு நான் 19 வயதுப் பெண். 2001 டிசம்பர் இரவு 11 மணிக்கு சாட்டிற்கு அவர்கள் வர வேண்டும் என்று சொல்லி இருந்தேன். சென்னை வாசிகளுக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. என் வயதைக் கூறக் கூடாது என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். என் உறவினர்கள், சில குடும்ப நண்பர்கள் குடும்பமாக வந்திருந்தனர். அன்று உணவிற்கும் ஏற்பாடு செய்திருந்தேன்.

சரியாக இரவு 11 மணிக்கு யாஹூ அரட்டை அறைக்கு
நுழைந்தோம். வம்ஸி தான் பொறுப்பு. என்னை விசாரிக்கவும் அவன் சொன்ன பதில் இப்பொழுதும் நினைக்கும் பொழுது சிரிப்பை வரவழைக்கின்றது
“மச்சி, அவ என் தங்கச்சிதான். ஒரே வெட்கம் இங்கே பக்கத்தில் குந்திகிட்டு வேடிக்கை பாக்கறா. நீ நல்லா பாடுவியாமே. பாடு.
உன் பாட்டைக் கேட்க ஓடோடி வந்துருக்கோம் ஏமாத்தாதே மச்சி”
வம்ஸியின் பேச்சில் மயங்கி பாட ஆரம்பித்து விட்டான். அவ்வளவுதான் ஒவ்வொருவராகப் பாட ஆரம்பித்தனர், புனிதமும் பாடினார்கள். அரட்டைக்கு வந்தவர்களும் உற்சாகமாகப் பாடினர். வம்ஸி தன் நண்பர்களுடன் கானா பாட்டு பாடினான்.

புது வருடம் பிறக்கும் பொழுது உலக அளவில் வாழ்த்து தெரிவித்து கொண்டு கத்தினோம். இன்றும் யாரும் அந்த சம்பவத்தை மறக்கவில்லை. மனத்தில் பதிந்த ஓர் அற்புதமான நிகழ்வு

ஆறாவது கூட்டத்திற்கு பல துறைகளிலிருந்து அழைக்கப்பட்டு வந்திருந்தனர். மறைந்த திருமதி சத்தியவாணிமுத்துவின் மகள் சித்ரா
அரசியல் சார்பில் வந்திருந்தார். மேடைப் பேச்சாளர். திராவிட மூன்னேற்றக் கட்சியில் மகளிர் அணியில் இருப்பவர். வந்திருந்த அனைவரும் ஏதாவது பணியிலோ அல்லது சொந்தத் தொழிலோ
செய்பவர்கள். அன்று நடந்த விவாதங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. ஜான், மாத்யூ  இருவரைத் தவிர யாரும் இன்னும் பணியில்
சேராதவர்கள்.

ஏழாவது கூட்டம் சோகமானது. காரணம் அதுவே அவர்களுக்குக் கடைசிக் கூட்டம். நான் மார்ச் மாதம் அமெரிக்கா புறப்பட்டுவிட்டேன்

இளைஞர்கள் பழக்கம் வெறும் சந்திப்புதானா? இல்லவே இல்லை.
பதவி ஓய்வு பெற்றபின் வெளி உலகத்திலிருந்து தள்ளி இருக்க வேண்டிய நிலை. மாறியிருக்கும் காலத்தை எனக்குக் காட்டியவர்கள் இவர்கள். அதிர்ச்சிகளும் அதிசயங்களும் உணர்ந்தேன். அவர்களும் பாசத்துடன் அம்மா வென்றோ ஆன்டி என்று அழைத்தினர். பலர் தங்கள் பிரச்சனை களைக் கூறினர்.. என்னால் முடிந்தமட்டும் தீர்த்து வைத்தேன் இவர்களில் சிலர் அவ்வப்பொழுது வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்வார்கள்

ராஜா என்றோ வருபவன் இல்லை. வீட்டின் மாடியில் குடியிருப்பவன்.
ஆசானாய் வந்தவன் நண்பனானான். பல நாட்கலில் இரவு 12 மணி வரை பேசிக் கொண்டிருப்போம். நிறைய தமிழ்க் கதைகள் படிப்பான். நல்ல சிந்தனை. எங்களுடைய அலசல்கள் பல கோணங்களில் இருக்கும்.

வேலையிலிருந்து திரும்பும் ஈஸா முதலில் என்னைப் பார்த்துவிட்டுத்தான் தன் அறைக்குச் செல்வான். என் முகம் வாடியிருந்தால் கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே வந்து உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டே செல்வான்.

ஷேக் கொஞ்சம் ஒதுங்கி இருப்பான் ஆனாலும் பாசமுள்ளவன். ஒருநாள்
திடீரென்று ஒரு பொட்டலம் கொண்டு வந்து கொடுத்தான். திறந்து பார்த்தால் இரண்டு உளுந்து வடை. அவன் சாப்பிடும் பொழுது ருசியாக இருக்கவும் என் நினைவு வந்ததாம். அதனால் வாங்கி வந்தானாம்

இவர்களில் நயினாதான் வித்தியாசமானவன். அறையைச் சுத்தமாக வைக்கும் வேலைகளை இவன்தான் செய்வான். இன்னும் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை. ஆனால் தினமும் காலையில் குளித்துவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் சென்று விடுவான். ஒரு நாள் அவனை “எங்கே காலையில் தினமும் போகின்றாய்? என்று கேட்டேன். அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து போனேன்
“பாட்டி, தினமும் புரசவாக்கம் பஸ் ஸ்டாண்டிற்குத்தான் போறேன். காலேஜுக்கு அப்பொத்தான் பொண்ணுங்க வந்து பஸ் ஏறுவாங்க.
அவங்களை வேடிக்கை பாக்கத்தான் போறேண் “

நான் சிரித்து கொண்டேன். என் வயதில் மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள்? “ஏண்டா ஒழுங்கா வேலை தேடத் தெரியல்லே. இப்படி பொண்ணுங்க பின்னாலே சுத்தினா உருப்புடுவியா? “
இந்த வயது ரசிக்கும் வயது. எதை எதை எப்போ, எப்படி சொல்ல வேண்டும் என்பதை பெரியவர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டிய காலம்.

நான் மட்டுமல்ல, புனிதமும் மாடிவீட்டுப் பையன்களுடன் ஒன்றிப் பழகினார்கள். அந்த அறை சரியான பிரம்மச்சாரி அறை. அங்கே அவர்கள் சி..டி வாங்கி கம்ப்யூட்டரில் போட்டு சினிமா பார்ப்பார்கள். சில சமயம் நாங்கள் இருவரும் அங்கு போய் அந்த குப்பை மேட்டிலே உடகார்ந்து படம் பார்த்திருக்கின்றோம்.

ராஜா எனக்கு எழுதிய கடித்தத்தில் என்னைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்து எழுதியிருந்தான். ஓர் சின்னப் பகுதியைமட்டும் இங்கு காட்ட விரும்புகின்றேன்

 “நான் எழுத அமர்ந்துவிட்டேன். .. என்ன எழுதுவது.. ? இதயம் ஆராய்
கிறது. முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும். நான் இப்போது யார்?ஒரு பாசமிகு பாட்டிக்குப் பேரனா?ஒரு எழுத்தாளரின் வாசகனா?   விமர்சகனா? ஒரு அறிவு தோழியின் தோழனா  ?இல்லை ஒரு அறிவுபூர்வ அப்பாவிக்கு ஆலோசகனா? இல்லை ஒரு மாணவியின் ஆசிரியனா?இல்லை, ஒரு ஆசிரியையின் மாணவனா?  முதலில் என் நிலையை நான் தெளிவு படுத்த வேண்டும்! எப்படி இது சாத்தியம் ? இரு உயிர்களுக்கு மத்தியில் இத்தனை உறவுகளுக்கு எப்படி சாத்தியம்?
முடிந்ததே  ,, அப்படி இருக்க முடிந்ததே 1 ஒரு பாட்டியாக, ஒரு இலக்கியவாதியாக, விமர்சகராக, மாணவியாக, ஆசிரியராக, ஆலோசகராக, அப்பாவியாக ஒரு பாட்டி. .. , அதிலும் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு மூதாட்டி என் வாழ்க்கைப்பயணத்தில் வருவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. .. ஆனால் வந்தார். அப்படி ஒரு பெண் அத்தனை உறவுகளையும் சுமந்து கொண்டு என் வாழ்வில் வந்தார் “ பாட்டிக்கு பேரன் எழுதிய கடிதம்

தலைமுறை இடைவெளி எங்களிடையே நாங்கள் உணரவில்லை. இன்றும்
அவன் என் பேரன், என் தோழன், என் ஆசான்.

ஈசனுக்குக் குருவாய் அமரும் சண்முகன் நம் வாழ்க்கையிலும் உண்டு.

மாடிவீட்டுப் பையன்கள் அனைவரும் இப்பொழுது துபாயில் வேலை பார்க்கின்றனர். என் ஆசான் என்று குறிப்பிட்ட ராஜாக்கான் தான் இன்று
கீழை ராசா என்ற புனைபெயரில் துபாய் தமிழர்கள் மத்தியில்,
தமிழ் இலக்கியக் கூட்டங்களில் கவிதை பாடிக்கொண்டு, கதை பேசிக் கொண்டு வலம் வருவதோடு, தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சாருகேசி என்ற வலைப்பூவையும் எழுதி வருகின்றான். நட்புக்கு ஓர் இலக்கணம். சிறந்த சிந்தனையாளன். அண்ணாச்சியின் அன்புத் தம்பி.

என் நினைவில்லத்தில் மணியனும் சாவியும் இருப்பதுபோல்தான் பெரிய கருப்பனும் ராஜாவும் இருக்கின்றார்கள். அது சாதனையாளர் இல்லம் அல்ல. அன்புக்குடில்.

அலைகள் இன்னும் வரும் 

Monday, July 16, 2012

நினைவலைகள் -16


                                                நினைவலைகள்  -16

பிரச்சனைகளையே பேசிக் கொண்டிருந்தால் பித்து பிடித்துவிடும். கொஞ்சம்
இறுக்கத்தைத் தளர்த்திக் கொண்டு இளைஞர்கள் பற்றி அதுவும் தற்காலச்
சூழலில் அவர்களைக் காணலாம். சங்கிலிப் பிணைப்பைப்போல் சம்பவங்கள்
இணைந்துவிடும். சிறிது நேரம் நினைவுகள் இளமை ஊஞ்சலில் ஆடட்டுமே! வேடிக்கை பார்க்கலாம். அதிலும் செய்திகள் இல்லாமலா போய்விடும்!

பரபரப்பாக இருந்த வாழ்க்கை பணியில் ஓய்வு பெறவும் சில ஆண்டுகளில்
மூட்டுவலியால் வீட்டில் முடங்கி விட்டேன்.

2001
ஆண்டு ஜுலை மாதம் மகன் அமெரிக்காவிலிருந்து வரும் பொழுது
ஒரு கம்ப்யூட்டர் எடுத்து வந்தான்
அம்மா, உங்களுக்ககத்தான் கொண்டு வந்திருக்கேன். தென்காசி போய்ட்டு வர 10
நாட்களாகும். அதற்குள் கொஞ்சமாவது நீங்க படிச்சிருக்கணும். இல்லேனா
யாருக்காவது கொடுத்துடுவேன்என்று கூறிவிட்டு எங்கள் வீட்டு
காம்பவுண்டில் பின்னால் மாடியில் குடியிருக்கும் பையன்களைக் கூப்பிட்டு
ராஜா, என் அம்மாவுக்குக் கொஞ்சம் கம்ப்யூட்டர் பற்றி சொல்லிக் கொடுங்கள்
என்றான்.

மாடிவீட்டுப் பையன்கள் என் பேத்தியின் நண்பர்கள். உடனே கற்பனையில்
போய்விட வேண்டாம். பேத்திக்கு மூன்று வயது. வெளியில் போய்விடக் கூடாது
என்று காம்பவுண்டு கதவுகளை பூட்டி இருப்போம்.இவளோ மாடிக்குப் போய் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். அதனால் இப்பொழுது அவர்களுக்கும் நான் பாட்டி. இதுவரை யாரும் என்னிடம் பேசியதில்லை. இனிமேல் பேசியே ஆக வேண்டும்

நால்வரும் பொறியியல்வல்லுனர்கள். கீழைக்கரை கல்லூரியில் படித்தவர்கள்.
ராஜாகான், ஈசா, நயினா, ஷேக், இவர்களுடன் வெளியில் தங்கி முதுகலைப்
படிப்பு படிக்கும் அப்பாஸும் அடிக்கடி வந்து தங்குவான். மாடியில் அரட்டை
சத்தம் கேட்கும். மற்றபடி இருப்பதே தெரியாமல் அடக்கமாக இருப்பவர்கள்

அன்று இரவு ஏழுமணிக்கு ஐவரும் வந்து விட்டார்கள். நான் கம்ப்யூட்டர்
முன்னால் உட்கார்ந்தேன். ராஜா என் பக்கத்தில் ஓர் நாற்காலியை இழுத்துப்
போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் மற்றவர்களும் நாற்காலி, ஸ்டூல் என்று
எடுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்கள் எனக்கு இத்தனை
வாத்தியார்களா?

67
வயது சின்னப் பெண்ணிற்கு 25 வயது கிழ வாத்தியார். சே! எப்பொழுதும்
இப்படித்தான். 17 வயதில் படித்த கல்லூரி புனித மேரிகல்லூரி.
சன்னியாசிகளுடன் தங்கினேன். 40 வயதில் ராணிமேரி கல்லூரி. சின்னச் சின்னப் பெண்களுடன் வயதானவள் நான். என் ராசி அப்படி.

ராஜா என் முகத்தைப்பார்த்து, “என்ன பாட்டி யோசனை?
பயமா? சீக்கிரம் நீங்க கத்துக்கலாம் என்றான். பாவிங்களா, பாட்டின்னு
கூப்பிட்டுகிட்டு பாடம் சொல்லிக் கொடுக்க வந்தீங்களா?

கணிணிபற்றி ஒவ்வொன்றாக ராஜா சொல்ல ஆரம்பிக்கவும் பயம் வர ஆரம்பித்தது.
தொல்காப்பியம் மனப்பாடம் செய்ய வேண்டி வந்த பொழுது படிப்பதையே
நிறுத்திவிடலாம் என்று நினைத்தவள். கணிணியும் வேண்டாம் என்று நினைக்க
ஆரம்பித்துவிட்டேன். என் எண்னங்களைப் புரிந்து கொண்டவன் போல்,
பயப்படாதீங்க, ஆரம்பத்திலே அப்படித்தான் தோணும். அப்புறம் பாருங்க,
நீங்க கம்ப்யூட்டரை விட்டு எழுந்திருக்க மாட்டிங்க என்றான் ராஜா. பாவி
எந்த நேரத்தில் சொன்னானோ , இப்பொழுது  அப்படித்தான் எப்பொழுதும
கணிணியுடன் உட்கார்ந்திருக்கின்றேன்.

அடுத்து ஒரு பெயர் வைக்க வேண்டுமாம். மெயில் ஐடியாம் . எனக்குப்
பிடித்தமானவர்களின் பெயர்களின் முதல் எழுத்தை வைத்து ஒரு பெயர் சொன்னேன்
(
மன்னிக்கவும் . பெயர் சொல்ல மாட்டேன் ). பாஸ்வொர்ட்
என் பிறந்த தேதியைக் கொடுத்தேன். Messenger  என்று ஒன்றாம் அதனையும்
ஏற்படுத்தினான்
பாட்டி , இதில் உங்களுக்குப் பிரியமானவர்கள் பெயரைப் பதிந்தால்
அரட்டையடிக்கலாம் என்று சொல்லவும் ஒரே குஷி. தனிமை பறந்துவிடும்.
அடுத்து சொன்னதுதான் என்னுடைய புது பந்தம்

பாட்டி, உங்களுக்கு, keyboard, mouse கணிணியில் கவனம், மூண்றும் ஒரே
சமயத்தில் வேகமாக இயங்க வேண்டும். அதற்கு நீங்கள் சாட்டிங்
போனால் சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம். அதனால் இப்போ உங்களை நான் சென்னை ஆன் லயன் சாட்டிங் அறைக்குக் கூட்டிப் போகப் போறேன். அங்கே
வர்ரவங்ககிட்டே நீங்க அரட்டை அடிக்கணும். நான் சொல்லச் சொல்ல நீங்க டைப்
செய்யுங்க

மனத்தில் ஒரே பரபரப்பு. ஆர்வத்தை உண்டுபண்னிவிட்டான் அடுத்து அவர்கள் பேசியதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனேன்.
பாட்டி, இங்கே உங்க சொந்தப் பெயரை சொல்லக் கூடாது, அதுக்கு தனியே பேர்
வைக்கணும்இது ராஜா
நமோசாஇது நயினா
அதென்ன நமோசா, சமோசா மாதிரி. பேரு நல்லா இல்லேஇது நான்
பாட்டி, பேரு புதுமையா இருக்கணும், உடனே பசங்க குதி போட்டுக் கிட்டு பேச
வருவாங்க. ஊர் கேட்டா ஜப்பான், இங்கே காலேஜ்லே படிக்க வந்திருப்பதா
சொல்லுங்கஎன்று அப்பாஸ் கூறிவரும் பொழுதே
 
நவாஸ் வயசு கேட்டா 19 ன்னு சொல்லணும்என்றான்
அடப்பாவிங்களா, 67 வயது பெண்மணியை 19 வயதுன்னு சொல்லணுமாம். என்ன
போலித்தனம். பொய் சொல்ல முடியாதுஎன்று கத்தினேன்.  எல்லோரும
சிரித்தார்கள்
பாட்டி, உங்க வயசை சொன்னா ஒரு பயலும் பேச வரமாட்டான். சும்மா
வேடிக்கைக்குத்தானே. அப்போத்தான் உங்களுக்கு ஸ்பீடு வரும் என்று
நிதானமாகச் சொன்னான் ஈசா
எல்லோரையும் பரிதாபமாகப் பார்த்தேன். என் நிலைமையைப் புரிந்து கொண்ட
ராஜா, “பாட்டி, நீங்க எத்தனை கதை எழுதியிருக்கீங்க. அது போல நீங்க
அனுப்பறது ஒரு பாத்திரம்னு நினங்க. பேசும் பொழுதுமட்டும் ஜாக்கிரதையாகப்
பேசுங்க. வாலுங்க, நீங்க சமாளிச்சுடுவீங்க. நான் தான் பக்கத்தில்
இருக்கேனே. நான் சொல்றதை நீங்க அடிச்சா போதும் என்று சொல்லி தைரிய
மூட்டினான்

அப்பொழுது சென்னை ஆன் லயன் சாட்டிங் பிரபலம். மெயில் ஐடி
கொடுக்க வேண்டாம். பெயர்கள் ஓடிக் கொண்டே இருக்கும். நம்மைக்
கூப்பிடறவங்ககிட்டே நாம் பேசலாம். என் கணிணி பயணம் ஆரம்பித்தது
முதன் முதலில் சென்னை ஆன் லயனில்தான்

முதலில் பேச ஆரம்பித்தவன் பெயர் வம்ஸி. பொறியியல்கல்லூரியில் கடைசி
வருடம். வயது 21. முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகத்
தயக்கம் விலகியது. உரையாடல் வேடிக்கையக இருந்ததே தவிர விரசமாக இல்லை.
விலாசம் கேட்டான் ராஜா சொல்லச் சொல்லத் நானே டைப் செய்து கொண்டிருந்தேன்.
விலாசம் இப்போ கொடுக்க மாட்டேன். கொஞ்ச நாளாகட்டும் என்று சொன்னேன்.
இன்னும் சிலர் கூப்பிட்டாலும் பதில் கூறமுடியவில்லை. என்னால் ஒருவனுக்கே
பதில் அடிக்க நேரம் ஆயிற்று. அன்று ஆரம்பித்த ஒற்றைவிரல் நாட்டியம்தான்
இன்று வரை தொடர்கின்றது. அவர்கள் சொன்னது சாட்டிங் உதவி செய்தது

அடுத்த நாளும் பயிற்சி தொடர்ந்தது. இரண்டாம் நாள் இன்னொரு புது நண்பன்
பெயர் ஜான். பள்ளிப் படிப்பை முடித்துப் பின் அலுவலகத்தில் ஒரு சாதாரண
வேலை பார்த்துக் கொண்டே. எம். சி. ஏ வரை அஞ்சல் வழிக்கல்வி மூலம் படித்து
ஒரு தொழிலையும் அமைத்துக் கொண்டு மென்பொருள் செய்து விற்பனை செய்து
கொண்டிருந்தான். உழைப்பால் உயர்ந்தவன் வயது 27. அவனை எனக்கு மிகவும்
பிடித்தது.

மூன்றாம் நாள் யாரும் வரும் முன்னர் நானே கணிணி முன் உட்கார்ந்து
அரட்டையடிக்க ஆரம்பித்தேன். மீண்டும் இரு புதிய நண்பர்கள். அன்றும்
வம்ஸியும் ஜானும் வந்திருந்தனர். எல்லோரும் தொலைபேசி எண் கேட்டார்கள்
நான் தயங்காமல் கொடுத்துவிட்டேன். நான் உட்கார்ந்தி ருக்கும் பொழுதே மாடி
வீட்டுப் பசங்க வந்து விட்டார்கள் நான் நடந்ததைக் கூறவும் பதறி
விட்டர்கள்
பாட்டி, தப்பு செய்துட்டீங்க. பசங்க வீட்டூக்கு வந்துடுவாங்க
வரட்டுமே, வந்தா, பேத்தி வெளியே போயிருக்கான்னு சொல்லிட்டுப் போறேன். எத்தனை நாள் வருவான். போரடித்து வருவதை அவனே நிறுத்திவிடுவான் என்று நான் கூறவும் பாட்டி விளஞ்ச பாட்டி என்று கூறி சிரித்தார்கள். ஆனால் நடந்தது வேறு.

வம்சிதான் முதலில் கூப்பிட்டான். பேச ஆரம்பித்து, அதிக நேரம் இருவரும்
பேசிக் கொண்டே இருந்தோம். கடைசியில் நான் யார் என்பதைக் கூறினேன்.அவன்
சொன்ன பதில் எனக்குத்தான் வியப்பை அளித்தது. என் குரலால், நான் சிறு பெண்
இல்லை என்பதை யூகித்து விட்டான். ஆனால் பேச்சு சுவாரஸ்யமக இருந்ததால்
தொடர்ந்து பேசியிருக்கின்றான்
அம்மா, நீங்கள் செய்தது சரி. வயதைச் சொல்லியிருந்தால் நிச்சயம் பேச
ஆரம்பித்திருக்க மாட்டேன். சாட்லே வர்ரவங்க கெட்டவங்க இல்லே.
பொழுது போகணும். சில சமயம் நல்ல பிரண்ட்ஸ் கிடைப்பாங்க. ஆனாலும் இப்போ
உங்க கிட்டே பேசினேனே அவ்வளவு நேரம் பேசி இருக்க மாட்டேன். எத்தனை விஷயம் பேசினோம். உங்க வீட்டுக்கு வருவேன். சொல்லிட்டு வர மாட்டேன். திடீர்னு வருவேன் என்றான்..

அடுத்துப் பேசியவன் ஜான். அவனும் உண்மை தெரிந்து அதிர்ந்து போகவில்லை.
அன்றே வீட்டிற்கு வந்தான்.
வம்சி சொன்னது போல் திடீரென்று ஒரு நாள் வந்து, “ அம்மா , ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. பசிக்குது.
குழந்தையாய் கேட்கவும் உருகிப் போனேன். இன்றும் அவன் என் செல்லக்
குழந்தையாக இருக்கின்றான்
சாட்டிங் மூலம் ஒரு மாதத்தில் எனக்குக் கிடைத்த நண்பர்கள் 27. மாடி
வீட்டுப் பையன்களையும் சேர்த்தால் எண்ணிக்கை 32 ஆயிற்று. இவர்களை
ஒன்றுபடுத்த ஒரு புதிய திட்டம் தோன்றியது.
அலைகள் இன்னும் வரும்.
.