Friday, May 18, 2012

நினைவலைகள் 15


நினைவலைகள் -15


வாடிப்பட்டி வாழ்க்கை எனக்குப் பல பாடங்களைக் கற்பித்தது. என் திறமைகள் வளரக் காரணமாயிருந்த அனுபவங்கள் என்னிடம் ஓர் பக்குவத்தையும் ஏற்படுத்தியது. யாரும் கற்றுத்தரவில்லை. தானாகவே
அமைந்தது. ஓர் குழந்தை முதலில் தவழும். பின் எழுந்திருக்க முயலும் கீழே விழுந்து, எழுந்து நிற்கப் பயிலும். ஓடுவதும் அப்படியே.  விழும் பொழுது அழும். ஓடி இலக்கை அடைந்துவிட்டால் சிரிக்கும். அப்படித்தான் நானும் சூழ்நிலையால் உருவாக்கப் பட்டேன்.

வாடிப்பட்டி வட்டாரத்தில் கருப்பட்டி கிராமம் . புதிய அனுபவங்களின் தொடக்க பூமி. அவ்வூரில் தான் நான் முதலில் நடனம் ஆடியது. என் நாடக அரங்கேற்றமும் அங்குதான். முதன் முதலில் அந்த ஊருக்கு பஸ்ஸில் போய் இறங்கினேன். தனியாகப் போயிருந்தேன் கீழே இறங்கவும் சுற்றிப் பார்த்தேன். அருகில் ஓர் பெட்டிக்கடை. அங்கே நான்கு இளைஞர்கள்  நின்று கொண்டிருந்தார்கள். நான் இறங்கவும் முதலில் வியப்புடன் பார்த்தார்கள். பின்னால் ஏதோ பேசிச் சிரித்தார்கள்


அவர்களைச் சில வினாடிகள் தான் பார்த்தேன். உடனே அவர்களை நோக்கி நடந்தேன். சிரித்தவர்கள் அதிர்ந்து போய் விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகில் சென்று ஒரு சிறு தாளை நீட்டி, “இந்த விலாசத்திற்குப் போக வேண்டும் வீடு எங்கே இருக்கின்றது என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டேன்.நால்வரில் ஒருவன், “டேய் மணி, இது உங்கள் வீட்டு விலாசம்டா” என்றான். உடனே மணி அதனை வாங்கிப் பார்த்து “இவங்க எங்க அம்மாதான் வாங்க கூட்டிகிட்டுப் போறேன் “என்று சொன்னான். மற்றவர்களிடம் “போய்வருகின்றேன்” என்று சொல்லிவிட்டு மணியுடன் புறப்பட்டேன்.  அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் ஏறத்தாழ என் வயதுதான் இருக்கலாம். நடந்து போகும் பொழுதே அவர்கள் நால்வரின் விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

பெற்றோர்கள் விவசாயிகள். பள்ளிப் படிப்பு முடிந்தபின் ஊரிலேயே இருந்து தந்தைக்கு உதவிகள் செய்து வந்தனர். குடும்பத்தில் பெரியவர்கள் இருந்ததால் இவர்களுக்கு வேலைச் சுமை குறை. கூப்பிட்ட குரலுக்கு பிள்ளை. வேலை இல்லாத நேரங்களில் நண்பர்கள் கூடிப் பேசுவார்கள்.
மணியின் வீடும் வந்து விட்டது. மணியின் தாயார் செல்லம்மாள் மாதர் சங்கத்தின் தலைவி. வீட்டுக்குள் நுழைந்து என்னை அறிமுகுகப்படுத்திக் கொள்ளவும் முகமலர்ந்த வரவேற்பு கிடைத்தது. உடனே மணியை நோக்கி அவன் அம்மா, ‘டேய் போய் செண்பகம் அக்காவைக் கூட்டியா “ என்று சொல்லவும் மணி புறப்பட்டுவிட்டான். செண்பகம் மாதர் சங்கத்தின் கன்வீனர். அந்த கிராமம் கொஞ்ச வசதியான ஊர். ஓரளவு படித்தவர்களும் இருந்தனர். வெளியூருக்குப் போய், கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பையன்களும் உண்டு. ஆனால் பெண்கள் யாரும் ஊரைவிட்டுப் போய் படிக்க ஆரம்பிக்கவில்லை.

செண்பகம் வந்துவிட்டாள் நான் அவளுடன் வீடுகள் பார்வையிடப் புறப்பட்டேன். சட்டென்று ஏதோ நினைவிற்கு வந்து மணியிடம்,
“மணி, உன் சினேகிதப்பசங்களை  2 மணிக்குக் கூட்டிட்டு வரியா?”என்று கேட்டேன். முதலில் அவன் விழித்தான். “கொஞ்சம் பேசணும்,உங்க ஊர்லே உங்களை மாதிரி பசங்களுக்கு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு நினைக்கறேன். அது சம்பந்தமா பேசணும்” என்று நான் கூறவும் அவன் முகம் மலர்ந்து “சரி “என்று கூறினான். பின் செல்லம்மா பக்கம் திரும்பி, “உங்க வீட்டு முன் வாசல்லே உட்கார்ந்து நாங்க பேசலாமா?” என்று கேட்டேன். உடனே அவர்களும் “எங்க ஊருக்கு நல்லது செய்ய வந்திருக்கீங்க. தாராளமா கூட்டி வச்சுப் பேசுங்க. சும்மா ஊரைச் சுத்திக்கிட்டு அலையறானுங்க. ஏதாவது வேலை கொடுங்கண்னு” ஆலோசனயும் கூறினாள் செல்லம்மா

என் பணிப்பட்டியலில் இது கிடையாது. இதை நினைத்து அந்த ஊருக்கு வரவில்லை. திடீரென்று தோன்றியது சொன்னேன். அவ்வளவுதான்
செண்பகத்துடன் சில வீடுகளுக்குச் சென்று பெண்மணிகளைச் சந்தித்து வழக்கம் போல் பேசிவிட்டு செல்லம்மா வீட்டிற்குத் திரும்பும் பொழுது மணி ஒன்றாகி யிருந்தது. சாப்பிட்டுவிட்டு மணியின் நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். இதற்கிடையில் செல்லம்மாவிடம் ஊர் நிலவரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

இளைஞர்களின் மனப்போக்கைப் புரிந்து அவர்களின் மனித சக்தியை
எப்படி சமுதாய நலனுக்குப் பயன்படுத்த முடியும் என்று கற்றுக் கொடுத்தது கருப்பட்டி கிராமம்

மணியின் நண்பர்கள் வந்தார்கள். அவர்களின் பெயர்கள் செல்வன், ராமன், பெருமாள்.  முதலில் சாதாரணமாக அரட்டையடித்தேன். பேசப் பேச, தயக்கம் போய் அவர்களும் சரளமாகப் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது கிரிக்கெட் வளராத காலம்.  விளையாட்டுகள் பற்றிப் பேசும் பொழுது ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சினிமா பற்றிப் பேச ஆரம்பிக்கவும். உற்சாகமாக உரையாடினர். அவர்களையே என்னென்ன கிராமத்திற்குச் செய்யலாம் என்று திட்டம் தீட்டச் சொன்னேன்.

கிராமங்களில் பண்டிகைகள், திருவிழாக்கள் வரும். அத்துடன் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜி நாள், பாரதியின் நினைவு நாள் என்று பல முக்கியமான தினங்கள் வரும். எனவே அவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று கூறினேன்.  குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தலாம், அவர்களையும் சிறு கலை நிகழ்ச்ச்களில் பங்கு பெறச் செய்யலாம் . பேச்சுப் போட்டிகள் நடத்தி சிந்தனா சக்தியை வளர்க்கலாம் என்றெல்லாம் சொன்ன பொழுது மகிழ்ச்சியுடன்
ஏற்றுக் கொண்டார்கள். அப்படியே அவர்களை சமுதாயப் பணிக்குக் கொண்டு வந்து விடலாம். வெட்டிப் பேச்சில் மனித சக்தி வீணாவதை நான் விரும்பவில்லை.
உழைக்கும் மனிதனுக்கு களைப்பை நீக்கும் வடிகால் கூத்து. உலகில்
எல்லாப் பகுதிகளிலும் வரவேற்கும் கலை கூத்து. சொல்லப்பட வேண்டிய செய்திகளைக் கூத்தின் வாயிலாக எளிதில் வெளிப்படுத்த முடியும்.

எப்படி இளைஞர்களுடன் என்னால் இவ்வளவு எளிதாகப் பழக முடிந்தது?
என்னைப்போன்று பலரை உருவாக்கிய பெருமை என் ஆசிரியர் கே. பி. எஸ் நாரயணன் அவர்களைச் சாரும். நான் படித்தது ஆணும் பெண்னும் சேர்ந்து படிக்கும் பள்ளிக்கூடம். அதுவும் ஓர் சின்ன கிராமத்தில் இருந்த
பள்ளிக்கூடம். என் வகுப்பில் நான் ஒருத்திதான் பெண். என் வகுப்பு மாணவர்களுடன் தயங்காமல் பழகுவேன். சந்தேகம் வரின்  வகுப்பறை யில் பையனின் அருகில் சென்று கேட்டுக் கொள்வேன். கேலி, கிண்டல் கிடையாது. 65 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின் ஓர் சின்ன கிராமத்தில் ஆண், பெண் பள்ளிக்கூடத்தில் எத்தகைய ஆரோக்கியமான சூழல். பெருமையெல்லாம் ஆசிரியர்களுக்கே உரித்தாகும்

ஆசிரியர் , மாணவர் உறவு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சியோ வீழ்ச்சியோ அதற்கு அஸ்திவார
மாக ஆகும் காலம் கல்விப் பருவம். காலச் சுழற்சியில் அடிபட்ட உறவுகளில் ஆசிரியர், மாணவர் உறவும் ஒன்று

இளைஞர்களின் சங்கங்கள் என்று கருப்பட்டி, மட்டப்பாறை இரு இடங்களில்தான் தொடங்கினேன். என்னுடன் பணியாற்ற வேண்டிய ருத்ர துளசிதாஸ் அப்பொழுதுதான் பணியில் சேர்ந்தார். இனி அவர் அப்பொறுப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். .என்னுடய மேடைப் பேச்சு, பாட்டு, நாடகம் இவைகளால் இளைஞர்களின் பற்றும் கிடைத்தது
மட்டப்பாறையில் எனக்கு வர இருந்த சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்த இளைஞர்கள் கூட்டம். இசையும் கூத்தும் மிகவும் சக்தி வாய்ந்தவை.

காலம் எவ்வளவு மாறிவிட்டது. எழுதும் பொழுதே இக்கால நினைவுகள் வந்து மோதுகின்றன ஐம்பது ஆண்டுகளில் இளைய தலைமுறையில் மாற்றங்கள்

காலம் மாறியிருந்தாலும் சூழலைப் புரிந்து கொண்டு மனித சக்தியை ஒருங்கிணத்து ஆக்க பூர்வமான பல காரியங்கள் செய்ய இயலும்.
ஆனால் மனிதன் சுயநலப்பேயிடம் மாட்டிக் கொண்டிருக்கின்றான்.
பொருளாசைப்படுகின்றவன் மட்டுமல்ல, நமக்கு எதுக்கு வம்பு என்று தன் அமைதிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து ஒதுங்கின்றவனும் சுயநலக்காரன்தான். ஒவ்வொருவருக்கும் சமுதாய அக்கறை வேண்டும். முடிந்த ஏதோ இன்று இரண்டாவது சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும்.

இப்போது எனக்குள்ள வயதைப் பார்த்து, சிலர் என்னிடம் “ உங்களுக்கு இக்கால இளஞர்கள்பற்றித் தெரியாது” என்று கூறுகின்றார்கள். சமூக நலப் பணியில் ஓய்வுக்கு வயது கிடையாது என்பது போல் நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு எப்படி சாதி, மதம், மொழி, நாடு என்று கிடையாதோ
எல்லாவயதினர்க்கும், ஆண், பெண் என்ற இருபாலார்க்கும் செய்ய வேண்டும்.. சுவையான அனுபவம் ஒன்றைக் கூறப் போகின்றேன்

இக்கால அனுபவம்., இக்கால இளைஞர்களுடன் என் தொடர்பு, உங்களை ரசிக்கவைக்கும் காட்சிகள் காணலாம். நான் கணிணி எப்படி கற்றுக் கொண்டேன் என்பதைச் சொன்னாலே போதும்.. என் இளைஞர் படை உலகம் முழுதும் இருக்கின்றார்கள். பெரியவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. என்னுடன் அன்புடனும் அக்கறையுடனும் ஏன், ஜாலியாகவும் பழகுவது இளைஞர்கள் தான். . கொஞ்ச நேரம் கிராமத்திலிருந்து சென்னை நகர் போகலாம்.
தொடரும் 

Monday, May 14, 2012

நினைவலைகள் -14


நினைவலைகள் -14

அந்தக்காலத்தில் பெண் படிப்பதும் , படித்த பின் வேலைக்கு வருவதும் , அதிலும்  இதுபோன்று பயணங்களுடன் கூடிய பணி செய்வதும் மிக மிகக் கடினம். வன விலங்குகள் நிறைந்த கானகத்தில் வரும் உலா போன்றது.

என்னுடன் மேரி, ஜெம்மா என்ற இரு கிராமசேவிக்காக்கள். இருவரும் காதலில் சிக்கினார்கள். உடன் வேலை பார்ப்பவர்களுடன் தான். தங்கி இருப்பதோ தனிமையில். மனத்தை மட்டும் இழக்கவில்லை, தன்னையும் இழந்துவிட்டார்கள்.ஒரு சம்பவம் கூற விரும்புகின்றேன்

மேரிக்கும் அவள் காதலன் சபாபதிக்கும் சண்டை வர ஆரம்பித்தது.
மாதாந்திரக் கூட்டம் வந்த மேரி ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்துவிட்டு இடையிலேயே சென்று விட்டாள். அந்தக் கடிதம் கிழே
விழுந்து இன்னொருவன் கையில் மாட்டியது
“உங்களை நம்பி ஏமாந்து விட்டேன். எனக்கு நீங்கள் துரோகம் செய்துவிட்டீர்கள். இனி உயிருடன் இருக்கப் போவதில்லை. தூக்குப் போட்டு சாகப் போகின்றேன் “இதுதான் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது

கடிதத்தை எடுத்தவன் பயந்து போய் அதனை எங்கள் அதிகாரியிடம் கொடுத்துவிட்டான். அவரும் பதறிப்போய் என்னைக் கூப்பிட்டு,
“உடனே போங்கம்மா.எதாவது செய்யறதுக்குள்ளே போய்க் காப்பாத்துங்க”
என்று பதட்டத்துடன் சொன்னார்.
“ஸார், ஒண்ணும் ஆகாது. கடிதத்தை சபாபதி படிச்சுட்டான். கடிதம் கசங்கி இருக்கு பாருங்க. கோபத்தில் கசக்கிச் சுருட்டி எறிஞ்சிருக்கான். சீக்கிரம் கூட்டத்தை முடியுங்க. இவன் நேரே அவகிட்டே தான் போவான். அவளும் இவன் வருவான்னு காத்துக் கிட்டு இருப்பா. சரியாய்டும்.”

அதிகாரிக்குப் பூரண திருப்தி வரவில்லை. எனினும் சீக்கிரம் கூட்டத்தை முடித்துவிட்டார். சபாபதி விரைந்து வெளியில் செல்வதைப் பார்த்தேன்
கதை இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மறுநாள் காலையில் சபாபதியும் மேரியும் என் வீட்டிற்கு வந்தனர்.வந்தவுடன் வாயில் கதவைச் சாத்தினான். என்னைப் பார்த்து கத்த ஆரம்பித்தான். நான் தான் அந்தக் கடிதத்தை எடுத்து அதிகாரியிடம் கொடுத்து அவன் மானத்தை வாங்கி விட்டேனாம். நிறுத்தாமல் சத்தப் போட்டு திட்டிக் கொண்டிருந்தான். என் தாயார் அழ ஆரம்பித்து விட்டார்கள் சட்டென்று இடுப்பில் மறைவாக வைத்திருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த வந்து விட்டான். . மேரி உடனே பாய்ந்து அவனைக் கட்டிப் பிடித்து நிறுத்தினாள். அவள் அப்படி செய்யாமல் இருந்திருந்தால் எனக்கு கத்தி குத்து விழுந்திருக்கும். நான் பயப்படவில்லை. அவர்களை உட்கார வைத்துப் பேசினேன்.மேரியின் காதலைக் கூறி சபாபதியை அவளைச் சீக்கிரம் மணந்து கொள்ளும்படி புத்திமதி கூறினேன்.இதுபோன்ற தாக்குதல்கள் என் வாழ்க்கையில் பல கண்டிருக்கின்றேன். போராளி போராட அஞ்சலாமா?

சபாபதி விரும்பினாலும் அவனால் மேரியைத் திருமணம் செய்து கொண்டிருக்க முடியாது. இருவரும் சாதியும் மதமும் வேறு. சமூகத்தை
மீறும் துணிச்சல் அன்று கிடையாது. செய்தி பரவி விட்ட காரணத்தால்
சபாபதிக்குச் சொந்தத்தில் திருமணம் செய்துவைத்துவிட்டார்கள்.. ஏற்கனவே மேரியைக் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வைத்திருந்தேன். எனவே அவள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஜெம்மாவின் காதலும் தோல்வியில் முடிந்தது. இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டனர்.இப்படி எத்தனை எத்தனை பெண்கள் என் துறையில் அன்று இருந்தார்கள் !

நாங்கள் மூவரும் எவ்வளவு சந்தோஷமாக வேலை பார்த்து வந்தோம். தீபாவளி வந்தால் முதல் நாளே என் வீட்டிற்கு வந்து விடுவார்கள். அதிகாலையில் எழுந்திருந்து குளித்து முடித்து, புத்தாடை அணிந்து,
பலகாரம் சாப்பிடவுடன் மதுரைக்குப் பறந்து விடுவோம். காலைக் காட்சியிலிருந்து தொடர்ந்து நான்கு காட்சிகள் சினிமா பார்ப்போம். இரவுக் காட்சி முடியவும் மதுரை பஸ் ஸ்டாண்டிற்கு வந்து உட்கார்ந்து கொள்வோம். காலையில் 4 மணி பஸ்சில் வாடிப்பட்டி திரும்புவோம்.
உற்சாகமான வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.

எங்கள் பணியைப் பார்வையிட வரும் மேலதிகாரிகளில் சில மனித மிருகங்களும் இருப்பர். அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டமும் உண்டு. சிலர் தங்கள் கற்பை இழந்து கதறியதும் உண்டு. பெண்கள் நலம் காக்க வந்த பெண்களே தங்கள் பெண்மையை இழக்கும் பரிதாப நிலை அன்றிருந்தது. இன்று நாகரிகம் என்ற போர்வையில் பெண்மையின் சூதாட்டம் நடக்கின்றது

பெண்கள் நலனையே நினைத்து வந்ததால் குடும்[பத்தின் ஒரு பாகமான
ஆண்மீது ஏனோ மனத்தில் கோபம் இருந்துவந்தது. இப்பொழுதும் கூட இருக்கின்றது. ஆனால் வாடிப்பட்டியில் இருக்கும் பொழுது இன்னொரு அனுபவம் கிடைத்தது. அப்பொழுது முதல் கொஞ்சம் என் பார்வை நடுநிலைப் பக்கம் போக ஆரம்பித்தது. அதுவரை பெண் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்தவள் குடும்பம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். பல குடும்பங்கள் சேர்ந்ததுதானே சமுதாயம். எனவே என் அக்கறை சமுதாய நலத்தின்மேல் செல்ல ஆரம்பித்தது.

எனக்கு மாதவி என்று ஒரு தோழி. மதுரையில் அறிமுகமானோம். ரயில்வே ஆஸ்பத்திரியில் நர்ஸாகப் பணியாற்றி வந்தாள் அவள் வீடு சென்ற பொழுது எனக்கு அறிமுகமானவர் ரத்தினம். அவர் அப்பொழுது ஈரோட்டில் நல்ல பதவியில் இருந்தார். ஏற்கனவே மணமானவர். அவரிடம்
டைப்பிஸ்டாக வேலை பார்த்தது மாதவியின் அக்கா. . ஏழைக் குடும்பம்.
தன் வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்திருக்கின்றாள். ரத்தினத்திற்கு மாதவியிடம் ஈர்ப்பு தோன்றியிருக்கின்றது. அவள் வீட்டார் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை அடிக்கடி வீட்டிற்குக் கூப்பிட ஆரம்பித்திருக்கின்றனர். அவர் பணக்காரர். அந்தக் குடும்பத்திற்க்காக நிறைய செலவழித்தார்.

மாதவியுடன் உறவு நெருக்கமானது. அவர்கள் வீட்டினரும் அதனை ஆதரித்தார்கள். அவளை நர்ஸுக்குப் படிக்க வைத்தார். இப்பொழுது வேலையும் கிடைத்துவிட்டது. மனைவியின் அனுமதியுடன் அவளை மணக்க இருந்தார். மாதவியும் அவள் வீட்டாரும் ஏற்கனவே ஒப்புக் கொண்டதுதான்.

ஆனால் மதுரையில் புது சிநேகிதன் மாதவிக்குக் கிடைத்துவிட்டான். எனவே ரத்தினத்தை அலட்சியம் செய்ய ஆரம்பித்தாள். கொஞ்சம் விபரம் கேள்விப் பட்டவுடன் ரத்தினம் வாடிப்பட்டிக்கு வந்தார். என்னை அவசரமாக மதுரைக்குக் கூப்பிட்டார். விபரம் சொல்ல வில்லை. மாதவி வீடு பூட்டிக் கிடந்தது. தான் வந்திருப்பதைக் கூறாமல் மாதவி வேலை பார்க்குமிடம் சென்று சாவி வாங்கி வரச் சொன்னார். நான் தனியே சென்று சாவி வாங்கி வந்து கதவைத் திறந்தேன். கட்டிலில் அவள் துணியும் இன்னொரு ஆடவன் துணியும் கிடந்தன. மேலும் இன்னொரு ஆடவனின் வருகைக்கு நிறைய சாதனங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பார்த்த ரத்தினம் ஓ வென்று அழ ஆரம்பித்தார்.பல ஆண்டுகள் பந்தம்.

மாதவி வரவும் சண்டை பெரிதானது. அவளைக் கொன்றுவிட முயற்சி செய்தார். எப்படியோ தடுத்தேன். மாதவியின் இரட்டை வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. போலித் தனம் எனக்கு பிடிக்காது. ரத்தினத்திடம் நேரிடையாகச் சொல்லிவிட்டு அவள் இன்னொருவருடன் நேசம் வைத்துக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. மன்னித்துவிடலாம். அன்று அவள்  கொடூரமாகப் பேசியதிலிருந்து, ஒரு பெண் பணத்திற்காக எப்படியெல்லாம் பேயாக மாறுகின்றாள் என்பதைக் கண்முன்னால் பார்த்தேன்.

இப்பொழுது எனக்கிருந்த அவசரப் பணி கொலையைத் தடுக்க வேண்டும். ரத்தினத்தை அங்கிருந்து கூட்டிச் சென்று விடவேண்டும். எப்படியோ முயன்று வெளியில் கூட்டி வந்து விட்டேன். அவரை மதுரையில் விட்டு வாடிப்பட்டிக்குத் திரும்ப மனமில்லை. ஏற்கனவே அவர் தவறு செய்தவர். ஓர் குடும்பம் இருக்க இன்னொரு குடும்பம் அமைக்க நினைத்தது சரியல்ல. இப்பொழுது கொலை செய்து குற்றவாளியானால் அவர் மட்டுமல்ல, அவர் குடும்பமே பாதிக்க பட்டுவிடும். அவரை அவ்வளவு எளிதில் சமாதானப் படுத்த முடியவில்லை. எப்படியோ முயன்று அவரை அவர் ஊர் பஸ்சில் ஏற்றிவிடும் வரை உடன் இருந்தேன்

பல கொலைகள் திடீரென்று ஏற்படும் உணர்ச்சி வேகத்தில் செய்வது. கொஞ்சம் தாமதித்தால் உணர்ச்சிகள் அடங்கும் பொழுது கொலை வெறியும் அடங்கி விடுகின்றது. ரத்தினமும் கொஞ்சம் கொஞ்சமாக
தெளிவடைய ஆரம்பித்தார். ரத்தினமும் மாதவியும் இருவருமே தவறு செய்தவர்கள். வீட்டுப் பெண்ணைப் பழக விட்டு ஆதாயம் தேடிய மாதவி குடும்பத்தைப்பற்றி  என்ன சொல்வது.?

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தெரிந்தும் தெரியாமலும் சில தவறுகளைச் செய்து விடுகின்றோம். அதன் பாதிப்பு அதிகமானால் பழியை யார் மீது, எதன் மீது போடுவது என்று மனம் அலைபாயும்.

எதிர்பார்க்காத சூழலால் எனக்கு வந்துவிட்ட பொறுப்பு. ஓர் மனிதனின்
சோதனைக் காலத்தில் அன்புடன் வழி நடத்த  உறவுகள்,நட்புகள் தேவை
ரத்தினத்தின் நட்பு ஓர் தொடர்கதை. அவரை அழிவிலிருந்து மீட்டுவிட் டேன் என்று அடிக்கடி கூறுவார். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகள், இழப்புகளின் பொழுது நல்ல நண்பராக இருந்தார். ஆம் அவர் இப்பொழுது இல்லை

இந்த சம்பவத்திற்குப் பின் இரு பக்கமும் பிரச்சனைகளைப் பார்த்தேன். அக்காலத்தில் நான் உணர்ந்தது பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பவள் பெண் என்பதுதான். இருப்பினும் நான் அவசர முடிவு எடுக்க மாட்டேன். என் வேகத்தில் கொஞ்சம் விவேகம் கலந்தது. பள்ளிப் படிப்பைவிட அனுபவங்கள் கற்றுக் கொடுக்கும் படிப்பினைகள் நிறைய. நாம் தான் புரிந்து தெளிவடைய வேண்டும்.
என் பணிக்காலத்தில் இளைஞர்களையும் சமுதாயப் பணிக்குப் பயிற்றுவித்தது வாடிப்பட்டியில்தான். இளைஞர் என்று கூறும் பொழுது இப்பொழுது நான் இருக்கும் 75ஐ நினைத்துவிடாதீர்கள். அப்பொழுது எனக்கு வயது 21
தொடரும்


Tuesday, May 8, 2012

நினைவைகள் -13


நினைவலைகள்  -13

விரியும் அறிவுநிலை நாட்டுவீர் -அங்கு
 வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் -நல்ல
 தீரப் பெருந்தொழில் பூட்டுவீர்

வீட்டுப் பொந்துக்குள் ஒழிந்து கொண்டால் வீரப் பெண்ணாகிட முடியுமோ?பாரதி உள்ளுக்குள் வாழ்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றான் அவன் இன்னும் சொல்லுகின்றான்

பாதகஞ் செய்பவரைக் கண்டால் -நாம்
  பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா -அவர்
  முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா

அவன் தாலாட்டில் வளர்ந்தவள் நான்.
பாவம் இந்த மக்கள்!. புதிதாகக் கண்டால் மிரளுகின்றார்கள்.
வதந்தி! அது தீயெனப் பரவும். கிசு கிசுவிற்கு தனிச் சுவை. அதிலும் அடுத்தவனைபற்றி கேள்விப்படும் பொழுது ஒர் உற்சாகம்! வம்பு பேசுகின்றவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தமும் சீராகுமாம்.. ஆனால் அவர்கள் பேசும் வம்புத் தீ அடுத்தவர்க்குப் பாதிப்பை, அவமானத்தை உண்டு பண்ணுகின்றதே! விஷயத்திற்கு வருகின்றேன். என்னைப்பற்றி இரு செய்திகள் கிளப்பிய புகைச்சல்

என் அலுவலகத்தில் உடன் பணி புரியும் சில ஆண்களுடன் சேர்ந்து சினிமா பார்க்கப்போய் விட்டேன். ஒரு பெண் இப்படி கண்ட ஆண் பக்கத்தில் உட்கர்ந்து சினிமா பார்க்கலாமா?
52 ஆண்டுகளுக்கு முன்னால் சமுதாயத்தின் பார்வை.
5400 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்!? அக்கினி பிரவேசத்தின் பொழுது ராமனின் நெருப்பு வார்த்தைகள் எனக்கு சீற்றத்தைக் கொடுத்தது. இராவணனின் பார்வைபட்டதாலே சீதையின் பத்தினித்தனம் போய்விட்டதா என்று எழுதியவள்தான் நான்.
இன்றைய சூழல் எப்படி மாறிவிட்டது?இந்த மாற்றம் தோன்ற எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்கின்றன!. ஆனால் இப்பொழுது காலச் சக்கரத்தின் வேகம் அதிகம்
 வேலைக்குச் செல்லும் பொழுது சில நேரங்களில் ஜீப்பில் செல்வோம். அதிகாரி முன்னால் உட்கார்ந்திருப்பார். பின்னால் ஆறு பேர்கள் உட்கார்ந்திருப்போம். உடல் படுகிறதே என்று சொல்ல முடியாது.
பிற ஆடவர்களுடன் வெளிச்செல்வது சமுதாயத்தால் அன்று ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அடுத்தது பார்ப்போம்

இன்னொரு செய்தி வித்தியாசமானது. ஒரு ஆண்பிள்ளையை நான் அடித்துவிட்டேன்.சினிமாவிற்கு நான் தனியாகச் சென்றிருந்தேன். அந்த நாளில் அதிகமாக சினிமா பார்ப்பேன். நான் வளர்ந்தது சினிமாக் கொட்டகையைச் சேர்ந்த கடைக்கருகில் தான். ஆரம்ப காலத்தில் பி. யூ. சின்னப்பா பிடிக்கும். பொதுவாகக் குழந்தைகளுக்கு சண்டை போடும் நாயகர்களைப் பிடிக்கும். எ,.ஜி.ஆர், அவர்கள், இப்பொழுது ரஜினி அவர்கள் எல்லோரும் சண்டை நாயகர்கள். . சினிமாப்படம் ஓடிக் கொண்டிருந்தது. பின்னால் யாரோ என் சீட்டில் கால் வைத்து சேட்டை செய்வது போல் இருந்தது. பின் திரும்பி முறைத்தேன். மீண்டும் தொடல். வளையலில் கோர்த்திருந்த பின்னை எடுத்துக் குத்தினேன். கால்களை இழுத்துக் கொண்டான். ஆனால் மீண்டும் அதே சேட்டை செய்யவும் என் பொறுமை போய் விட்டது. எழுந்து திரும்பி நின்று அவனை ஓங்கி அடித்து விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் உடனே என்னை சமாதானப் படுத்தி உட்கார வைத்தனர். அடிபட்டவன் எழுந்து போய்விட்டான். இதுதான் நடந்தது. நான் தனியாகப் போனது முதல் குற்றம். அடுத்து ஓர் ஆண்பிள்ளையைத் தொட்டு அடித்தது இரண்டவது குற்றம்.
நான் அடக்கமில்லதவள். கெட்டவள். இதுதான் வதந்தி.

நான் பேசாமல் விட்டிருக்கலாம். வதந்தியை ஆரம்பித்தவள் நல்லவள் இல்லை. இது போன்று சிலரைப் பற்றிப் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். ஒரு நாள் எந்தப் பெண்ணாவது வதந்தியின் சூட்டைத் தாங்காது தன் உயிரை முடித்துக் கொள்ள நேரலாம். இவள் அடக்கப் பட வேண்டும். அதற்கு நான் தான் லாயக்கு.

என் வீட்டுத் திண்னையில் உட்கார்ந்திருந்தேன். அந்தப் பாதையாகத்தான் வாய்க்காலுக்குத் தண்ணீர் எடுக்கப் போகவேண்டும். அவள் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கூப்பிட்டேன். நான் கூப்பிடவும் சிரித்துக் கொண்டே அருகில் வந்தாள். உட்காரச் சொல்லி, அரட்டை அடித்தேன்.
திடீரென்று வதந்தி பற்றி கேட்டேன். அவளைக் குறை கூறாமல் கேட்டதால் அவள் நல்லவள் போல் மற்றவர்கள் பேசுவதாகக் கூறினாள். நானும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் விடைபோல மெதுவாகப் பேசினேன் .பேசப் பேச அவள் முகம் மாறியது.
“சினிமாக்கொட்டகையிலே என்ன செய்ய முடியும் ( அந்தக்காலத்தில் இக்கால லீலைகள் கிடையாது.)நம்மூர் வாய்க்கால்கரைகளுக்குக் காலையில் மூணு மணிக்கே போறாங்களே. அங்கே போற சில பொம்புள்ளங்க எதுக்குப் போறாங்கண்னு தெரியும். ஒரு நாள் டார்ச், காமிராவுடே வருவேன்னு சொல்லு. படம் புடிச்சு ஊருக்கு காட்டுவேன். அவங்களும் சினிமாக் கொட்டகைக்கு ஆட்களை அனுப்பட்டும் நான் என்ன செய்யறேன்னு படம் பிடிக்கட்டும். ரெண்டையும் ஊர்லே காட்டலாம்.
நான் சும்மா சொல்ல மாட்டேன். மானத்தை வாங்கிருவேன். வாயப் பொத்திகிட்டு இனிமேலாவது இருக்கச் சொல்லு. இன்னொருதரம் பேசினதாக் கேட்டேன்னா நான் சொன்னபடி செய்வேன்”

அவள் பதறிவிட்டாள். அவளுடைய கள்ள உறவு வாழ்க்கை அது.
அவளைப் போல் சிலர் இத்தகைய வாழ்க்கை நடத்துவது கேள்விப் பட்டிருக்கின்றேன். இவளும் வம்பு பேசுகின்றவளா என்று தோன்று கிறதோ? பெண்களைச் சந்தித்தால் வம்பு பேசும் பொழுது கேட்க வேண்டிய நிலை. பிறகுதான் புத்தி சொல்ல முடியும்.. முகம் செத்து எழுந்தவள்,” இனிமேல் அவுங்க பேசாம நான் பாத்துக்கறேன்.  கோபபடாதீங்க “ என்று சொல்லிவிட்டுப் போனாள். இனி பயப்படுவாள்

சரோஜா அழகான பெண். இளம் விதவை. பத்தாவது வரை படித்தவள்.
அவர்கள் குடும்பங்களில் இது அதிகமான படிப்பு. அவளுடைய ஊர் ராஜபாளையம். வாடிப்பட்டியில் திருமணம். பதினெட்டில் கல்யாண்ம் இருபத்தைந்தில் கணவரைப் பறி கொடுத்தாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். எல்லாம் வார இதழ் மாத இதழ். நான் பக்கத்தில் குடி வரவும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. தினமும் வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவளுடைய நாத்தனார் கோமதி மகளிர் மன்றம் கன்வீனர். நான் வருவதற்கு முன் ஆரம்பித்த மகளிர் மன்றங்கள்.
அங்கும் பெரிய கூட்டங்கள் நடக்காது. வதந்தி வரவும் அவள்தான் பயந்தாள். அவள் கணவர் வீட்டார் என் வீட்டிற்கு வரக் கூடாது என்று தடை போட்டு விடுவார்களோ என்று அஞ்சினாள். அவளுக்காகவும்தான்
நான் அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்தது.

கூட்டுக் குடும்பம் அமைப்பு இருந்த காலம். எப்படி, எதற்காக கூட்டுக் குடும்பம் வந்தது என்று கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சமுதாயம், குடும்பம் என்ற அமைப்புகள் தோன்றியகாலம். தொழிகள் பயில கல்லூரிகள் கிடையாது. தலைமுறை தலைமுறையாகத் தொழில் செய்வார்கள் அவர்களுக்கு ஒரு பெயர் இருக்கும். அதுவே சாதி பெயராகவும் ஆகியிருக்கின்றது. சில நேரங்களில் தொழில் மாறும் பொழுது பெயரும் மாறும். எனவே வீட்டுத் தலைமைக்குக்கீழ் குடும்பம் இயங்கிக் கொண்டு வந்தது. அப்பனுக்குப் பின் பிள்ளை தொழிலை எடுத்துக் கொள்வான். இப்பொழுதும் சில இடங்களில் சில குடும்பங்கள் பரம்பரைத் தொழில் என்று தொடர்ந்து செய்வதைப் பார்க்கலாம்

சொத்தும் குடும்பப் பெயரில் இருக்கும். பெரியவர்களை சிறியவர்கள்
பாது காப்பார்கள். எனவே பிள்ளைகளைச் சார்ந்து நிற்கும் நிலை.
பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் கூட்டுக் குடும்பம் வசதியாக இருந்தது. .அந்த நாட்களில் கணவன் ,மனைவி என்று அவர்களுக்குத் தனி அறை கிடையாது. கணவன் மனைவியின் கலப்பு எப்பொழுது என்று கூட மற்றவர்களுக்குத் தெரியாது. அபூர்வமானது இந்த சங்கமம். குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் கூடினால் இத்தகைய பிள்ளை பிறக்கும் என்ற சாஸ்திரத்தை நம்பினர். அதற்கும் முன்னால் குழந்தை பிறப்பிற்காக மட்டுமே கூடுதல் என்றும் சொல்லி வந்தனர். சொல்லப் போனால் என் காலத்தில் கூட அப்பா, அம்மாவிற்குள் இப்படி உறவு இருக்கும், இதனால் குழந்தை பிறக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. எனவே இத்தைய குடும்ப வாழ்க்கையால் கூட்டுக் குடும்பம் அமைந்ததில் சோதனை வந்ததில்லை.

இப்பொழுது நிலை என்ன? வெவ்வேறு படிப்பு. வெவ்வேறு தொழில்கள். தொழிலுக்காக ஊர்விட்டு ஊர் மாற்றம். ஊடகங்களின் வருகையால்
மன மாற்றங்கள். புலம் பெயர்ந்த வாழ்க்கையில் இல்லத்தின் மாற்றம்.
கூட்டுக் குடும்பம் சலசலக்க ஆரம்பித்து விட்டது. வீட்டுப் பெண் பேச ஆரம்பித்துவிட்டாள். அடங்கிப் போகும் குணமும் மாற ஆரம்பித்து விட்டது. கூட்டுக் குடும்பத்தில் சண்டைகள். பொருளாதார நெருக்கடி., கணவன், மனைவி சேர்ந்து படுக்கும் பழக்கம்., எனவே இடம் பற்றாமை. பல காரணங்கள் இன்று சோதிக்க ஆரம்பித்துவிட்டன .

பாசத்திலே, பழமையின் பழக்கத்திலே தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பிற்கும், திருமணத்திற்கும் இருப்பதைச் செலவழித்து விட்டுத் திணரும் பெரியவர்கள் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பிள்ளைகளைத் திட்டுவது சரியல்ல. இது காலத்தின் மாற்றம்  கூட்டுக்  குடும்ப அமைப்பு ஆட்டம் கண்டு விட்டது. இனி என்ன செய்யப் போகின்றோம்? இன்றைய தலைமுறையைத் திட்டிக் கொண்டிருக்கின்றோம்.
இது நம் இயலாமை. இந்த மாற்றங்கள் முதியோரை மிகவும் பாதிக்கின்றது.
வருங்காலம் எப்படி இருக்கும்? இனி என்ன செய்யப் போகின்றோம்? புலம்பிக் கொண்டிருப்பதால் பிரச்சனை தீரப் போவதில்லை. சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.  எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்
பன்னாட்டுத் தொழிற்சங்கம் ஒன்றில் மகிளிர்நலக்குழு உறுப்பினராக நான்காண்டுகள் பொறுப்பேற்றிருந்தேன். பல நாடுகளில் பெண்களின் வாழ்க்கைபற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சுவிட்ஸர்
லாண்ட்டில் உள்ள ஜெனிவாவிற்குச் சென்றிருந்தேன். எங்கள் தலைவி
ஆன்பார்வொர்டு அவர்கள் ஒன்று கூறினார்கள்.
 “இந்திய கலாச்சாரத்தில் எங்களைப் பிரமிக்க வைத்தது உங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை. ஆனால் அது இப்பொழுது உடைந்துவிட்டது. வருத்தத்திற்குரியது “
மறுக்க முடியாத உண்மை. கூடு கலைந்தது மட்டுமன்றி குடும்பத்தின் அஸ்திவாரமும் பலஹீனமாகிக் கொண்டு வருகின்றது. இன்று மயக்க நிலையில் இருக்கின்றோம். மனம்விட்டுப் பேசுவோம்

அலைகள் இன்னும்வரும்