Friday, July 9, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு–ஜெயகாந்தன் 13



என்னை ஈர்த்த இன்னொரு கதை - "நந்தவனத்தில் ஓர் ஆண்டி"

சத்திரத்தில் ஓர் பிச்சைக்காரனைக் காட்டி வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்தார், இப்பொழுது இடுகாட்டிற்கே அழைத்துச் சென்று விடுகின்றார். மனிதன் இறுதியில் மண்ணிலே தானே கலந்து மறைகின்றான்.

ஜெயகாந்தனின் உலா, பட்டினங்களில் பங்களாக்களைச் சுற்றுவதைவிட குப்பத்துக்கும், இது போன்ற இடங்களுக்கும் போவதில் ஓர் தனி ஆர்வம் தெரிகின்றது.

பொதுவாக ஒதுக்கப்பட்டவர்களிடத்திலும் ஒடுக்கப்பட்டவர்களிடத்திலும் தனி அக்கறையைக் காண்கின்றோம்.

இந்தக்கதை படித்தவுடன் ஏதோ ஓர் தாக்கம்; அப்படியே அமர்ந்து விட்டேன்! மனத்தை யாரோ பிசைவது போன்ற ஓர் அவஸ்தை.

என் முதுமை காரணமா? வெறுப்பும் சலிப்பும் என்னை ஆட்டிப் படைத்தது. பேசாமல் படுத்துவிட்டேன். அப்பொழுதும் மனம் சிந்தனையிலிருந்து வழுவவில்லை. கதையின் ஒவ்வொரு வரிகளும் என் நினைவில் வந்து மோதின.

கதைக்களன் ஓர் இடுகாடு.

ஏன் இப்படி எழுதுகின்றார்?

எப்படி இதனை இப்படியாகக் காணமுடிகின்றது?

ஜெயகாந்தனின் அக்கறை சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களையே சுற்றிவரும். சிக்கலான உணர்வுகளையும் கூட யதார்த்தமாகக் காண்பார். அவர் படைக்கும் பாத்திரங்களுடன் உறவு கொண்டு ஒன்றிவிடுவார். அவரைக் குறை சொன்னால் கூடப் பொறுத்துக் கொள்வார். அவர் படைத்த பாத்திரங்களைக் குறை கூறப் பொறுக்க மாட்டார்.

சம்பவங்களைவிட தனி மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். உரையாடல்கள் அவரின் இதயக்குரல். பிச்சைக்காரனின் திண்ணையும் தொழுதற்குரிய கோயிலும் இரண்டிலும் அவரால் தத்துவங்கள் காண முடியும்.

இடுகாட்டில் மனிதமனத்தைச் சித்திரமாக வரைந்த ஓவியமே "நந்தவனத்தில் ஓர் ஆண்டி."

தூரத்துப்பரர்வைக்கு அது ஓர் நந்தவனம் போல் தோன்றும். ஆனால், அது ஒரு இடுகாடு. ஆண்டியின் உழைப்பில் அது ஓர் நந்தவனம்.

அவன் பெயர்தான் ஆண்டி.அவனுக்கும் மனைவி உண்டு. மேற்கு மூலையில் பனை ஓலைகளால் வேய்ந்த ஓர் சிறு குடில் அவன் இல்லம்.

ஆண்டி ஒரு வெட்டியான்.அந்த மயான பூமிக்கு வரும் பிணங்களுக்குக் குழிவெட்டுவது அவன் தொழில். அதற்காக அவன் முனிசிபாலிட்டியிலிருந்து பெறும் கூலிப் பணம் ஏழு ரூபாய். அந்த வீடும் கொடுத்திருக்கின்றார்கள். அவனுக்கு சோகம் தெரியாது. குழிகள் வெட்டும் பொழுதும் கூடப் பாடிக்கொண்டே வேலை செய்வான். அவனைபற்றி கதாசிரியரின் எழுத்திலே பார்ப்போம்.

ஆண்டி ஒரு வித்தியாசமானவன். மகிழ்ச்சி என்னவென்றே தெரியாத மனிதர்கள் எப்பொழுதும் குஷியாகப் பாடிக் கொண்டே இருக்கும் அவனை”ஒரு மாதிரி” என்று நினைத்தார்கள்

மனிதர்களின் நினைப்புகளைக் குருபீடத்திலும் , இடுகாட்டிலும் அவர் சுட்டிக் காட்டுவது , யதார்த்தம் ஆயினும் சிலருக்கு ஆத்திரம் கொடுத்துவிடுகின்றது. ஜெயகாந்தனின் உரையாடல்களும் ,அவர் தீட்டும் காட்சிகளும் காட்டும் உள்ளுறை தத்துவங்களை சிலர் விமர்சிப்பதுண்டு. இறைவனையே விமர்சிப்பவர் நாம். ஜெயகாந்தன் சாதாரண மனிதன். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளத்தில் உணர்வதை முலாம் பூசாமல் எழுதுபவர்.

கதைக்குச் செல்வோம்.

ஆண்டி கடுமையான உழைப்பாளி. பாடிக்கொண்டே வேலை செய்வான்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

இந்தப்பாட்டிற்கு அவனுக்குப் பொருள் தெரியாது. எப்பொழுது இந்தப்பாட்டை யார் கற்றுக் கொடுத்தது என்பதெல்லாம் அவனுக்கு இப்போது நினைவில்லை. ஆனாலும் எப்பொழுதும் அவன் இதனை உற்சாகத்துடன் பாடிக் கொண்டிருப்பான்.

நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக் கொண்டு முதன் முதலில் உச்சரித்தோம் என்று கூற முடியுமா?ஆனால், ஏதோ ஒரு விசேஷ வார்த்தையைக் குறிப்பாக எண்ணினோமானால் நம்மில் எவ்வளவோ பேர் சொல்லிவிடுவோம்.

அந்த இடுகாட்டிற்கு வருவது குழந்தைகளின் பிரேதங்கள். குழி வெட்டுவது அவனுக்கு சிரமமில்லை. மற்ற நேரத்தில் அவன் உழைத்ததில் உருவானது அந்த நந்தவனம்.

பிள்ளைகளைப் பறிகிகொடுத்தவர்கள் துக்கத்துடன் வரும் பொழுது இவன் மட்டும் அதன் தாக்கம் எதுவுமின்றி மலர்ச்சியுடன் இருப்பான். எனவே மற்றவர்களுக்கு அவன் ஒரு மாதிரியானவன்தான்.

ஊராரின் புத்திர சோகம் அவனுக்குப் புரிந்ததே இல்லை.ரோஜாச்செடிக்குப் பதியன் போடுவது போல பாட்டு பாடிக் கொண்டே குழி பறிப்பான். அருகிலிருக்கும் அந்தப் பச்சிளங் குழந்தையின் பிரேதத்தைப் பார்த்தும், குழந்தையைப் பறிகொடுத்தவன் குமுறிக்கொண்டிருப்பதைப் பார்த்தும் இவன் பதறாமல் பாடிக் கொண்டிருப்பான்.’சீ! இவனும் மனிதனா?’ என்று நினத்து “இவன் ஒரு மாதிரி” என்று சொல்லுவார்கள்.

ஒரு நாள் அவன் மனைவி முருகாயி சொன்ன செய்தி அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் சொன்ன கனவை அவன் புரிந்து கொண்டுவிட்டான். அவர்களிடையே புது ஜனனம் ஒன்று தோன்றப் போகின்றது. அவன் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும் பொழுது தெருவில் போன ஓர் பண்டாரம் பாடிய பாட்டுதான் இது. அப்படியே அவன் மனத்தில் பதிந்துவிட்டது. அவனுக்கு அதன் பொருள் தெரியாது.

இருளன் மகனாய்ப் பிறந்தான். மகிழ்ச்சியில் திளைத்தான். தனது மதலையை மார்புறத்த தழுவிய ஆண்டியின் கரங்கள் ஊராரின் பிள்ளைகளின் சவங்களுக்குக் குழி பறித்தன.குழி பறித்து முடிந்த பின் நேரே தன் குடிசைக்கு ஓடுவான்; தூளியில் தூங்கும் இருளனைத் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவான்; கூத்தாடுவான்.

எத்தனையோ பெற்றோரின் ஆனந்தத்துக்கு கனவுகளுக்கெல்லாம் புதை குழியாயிருந்த அந்த இடுகாட்டில் மரணம் என்ற மாயை மறந்து ஜனனம் என்ற புதரில் மட்டும் லயித்துக் கொண்டிருந்த ஆண்டியின் வாழ்விலும் இழப்பு நேர்ந்தது.

காலம் போன ஒரு நாளில் எதிர்பாராமல், நினைவின் நப்பாசை கூட அறுந்து போன காலமற்ற காலத்தில் வாராமல் வந்து அவதரித்து, ஆசை காட்டி விளையாடி கனவுகளை வளர்த்த இருளன் எதிர்பாராமல் திடீரென்று இரண்டு நாள் கொள்ளையிலே வந்தது போல் போய்விட்டான்.

வேப்பமரத்தடியில் கட்டித் தொங்கும் வெறும் தூளியினருகே முழங்கால்களில் முகம் புதைத்து குந்தி இருக்கிறான் ஆண்டி. எங்கோ வெறித்த விழிகள்! என்னென்னமோ காட்சிகள்!! எல்லாம் கண்டவை!!! இனி காண முடியாதவை!!!!

வேலியோரத்தில் தவழ்ந்து சென்றதும்,தூளியிலிருந்து உறக்கம் கலைந்த பின் தூளிக்கு வெளியே தலையை நீட்டி தள்ளி தொங்க விட்டுக் கொண்டு கன்னங்குழியும் சிரிப்புடன் அப்பா என்ற அழைத்ததும், செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் பொழுது அவனறியாமல் பின்னே வந்து திடீரென்று பாய்ந்து புறம்புல்லி உடலைச் சிலிர்க்க வைத்து மகிழ்வித்ததும், எதிரிலிருக்கும் தட்டத்து சோற்றில் வேகமாய்த் தவழ்ந்து வந்து தனது பிஞ்சுக் கைகளை இட்டுக் குழப்பி விரல்களுக்கிடையே சிக்கிய இரண்டொரு பருக்கைகளை வாயில் வைத்துச் சுவைத்துச் சப்புக்கொட்டி கைதட்டி சிரித்ததுக் களித்ததும், நெஞ்சோடு நெஞ்சாய்க் கிடந்து இரவு பகல் பாராமல் நாளெல்லாம் கிடந்து உறங்கியதும்.............

பொய்யா? கனவா? மருளா? பித்தா? பேதைமையா?

ஆண்டியின் சித்தம் மட்டுமல்ல; படிப்பவரையும் சிலையாக்கும் இரத்த வரிகள்! குழந்தை செத்த வீட்டில் மனம் ஒலிக்கும் ஒப்பாரிப் பாட்டு இது.

இருளன் தவழ்ந்து திரிந்த மண்ணெல்லாம், அவன் தொட்டு விளையாடிய பொருளெல்லாம் , அவன் சொல்லிக் கொஞ்சிய சொல்லெல்லாம், ஆண்டியின் புலன்களில் மோதி மோதிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. தாய்மையின் துடிப்பு. இடுகாட்டு வாழ்க்கையில் அவன் கண்ட ஒரே சொர்க்கம் வீழ்ந்துவிட்டது. இழப்பின் மதிப்பு மிக அதிகம்.

அவன் இருப்பது இடுகாடு. அவன் வீட்டிலேயும் ஒரு சாவு. அபூர்வமாகக் கிடைத்த பரிசைக் காலம் அவனிடமிருந்து பறித்து விட்டது. மனம் பேதலிக்காமல் என்ன செய்யும். இனி அவன் உணர்வில் காணும் காட்சிகளை அவர் வருணிக்கின்றார்.

மார்பை அழுத்திக் கொண்டு மண்வெட்டியை எடுத்தான்.கால்களை அகட்டி நின்று,கண்களை மூடிக் கொண்டு மண்வெட்டியை ஓங்கி பூமியில் புதைத்தான்

நந்த வனத்தில் ஓர் ஆண்டி! - அந்தப் பாட்டு... அவன் பாடவில்லை

ஊரார் பிணத்துக்குக் குழி பறிக்கும் போது மனசில் அரிப்போ கனமோ இல்லாமல் குதித்துவருமே அந்தப் பாட்டு. பாடியது யார்?

மீண்டும் ஒருமுறை மண்வெட்டியை உயர்த்தி பூமியைக் கொத்தினான்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி!

மீண்டும் அந்தக் குரல்

யாரது?

புலன்களையெல்லாம் அடக்கிக் கொண்டு மீண்டும் மண்வெட்டியால் பூமியை வெட்டினான்.மீண்டும் ஒரு குரல்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
நாலாறுமாதமாய் குயவனை வேண்டி

அய்யோ, அர்த்தம் புரிகிறதே !

மண்வெட்டியைத் வீசி எறிந்துவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

தூணைப் பிளந்து கிளம்பிய நரசிம்ம அவதாரம் போன்று பூமியை, புதைகுழி மேடுகளைப் பிளந்து கொண்டு ஒரு அழகிய சின்னன்சிறு பாலகன் வெளிவந்தான்.

கைகளைத் தட்டி தாளமிட்டவாறே ஆண்டியைப் பார்த்துக் கொண்டே பாடியது சிசு!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

குரல்கள் ஒன்றாகி, பலவாகி, ஏகமாகிச் சங்கமித்து முழங்கின. அந்த மயான பூமியில்எத்தனையோ காலத்திற்கு முன்பு புதையுண்ட முதல் குழந்தை முதல் நேற்று மாண்டு புதியுண்ட கடைசி குழந்தைவரை எல்லாம் உயிர் பெற்று உருப்பெற்று ஒன்றாகச் சங்கமித்து விம்மிப் புடைத்து விகஸித்த குரலில், மழலை மாறாத மதலைக் குரலில் பாடிக் கொண்டு கைத்தாளமிட்டு அவனைச் சுற்றிச் சூழ நின்று ஆடின. வான வெளியெல்லாம் திசை கெட்டு தறி கெட்டுத் திரிந்து ஓடின.

ஆண்டி தன்னை மறந்து சிரிக்கின்றான்.

அவன் ஆசை மகனும் அந்தக் குழாமில் இருக்கின்றான். தாவி பிடிக்க ஓடுகின்றான். ஆனால் அவனோ கைக்கெட்டவில்லை

அவன் இல்லை. அவன் மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரி இருந்தனர்.

ஜீவ ஆத்மாக்களின் சங்கமம்.அங்கே பேதமில்லை!

என்னுடையது என்றும் , இன்னுஒருவனுடையது என்றும், அவன் என்றும், அதுவென்றும்,இதுவென்றும் பேதம் காண முடியாத அந்த சமுத்திரத்தில் இருளனைமட்டும் எப்படி இனம் கண்டுவிட முடியும்? ஆண்டி தவித்தான்.

அவன் சாதாரணமான மனிதன்

புனரபி ஜனனம் புனரபி மரணம்

மயான பூமியா? இல்லை! அது ஞான பூமி

தினம் தினம் மரணங்களைப் பார்த்தும் மனிதன், ஆசைகளுக்கும் பாசத்திற்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டு அல்லாடுகின்றானே! ஆம். மனிதன் அப்படித்தான்.

ஆண்டியோ தினம் தினம் குழந்தைப் பிணங்களைப் பார்த்திருந்தாலும் ஆசைக்கு மகன் கிடைத்து, பாசத்தையும் காட்டி அவனை மோசம் செய்து இருந்த ஒன்றையும் பறித்துக் கொண்டது காலம். அவனால் என்ன செய்ய முடியும் அழத்தான் முடியும்.

இப்பொழுதெல்லாம் குழந்தைப் பிணம் வரும் பொழுது அழுகின்றான். மற்றவர்களுக்கு இப்பொழுதும் அவன் “ஒரு மாதிரி “தான்.

நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்.

அன்று அவனை நினைத்ததிலாவது ஓர் அர்த்தம் கூற இயலும்.! இப்பொழுதும் இதென்ன கேலிச் சொல்?

நாம் எல்லோருமே ஒரு மாதிரிதான்

ஆண்டவனையே நம் வியாபாரத்தில் கூட்டாளியாக்குகின்றோம். சொல்லாலும் செயலாலும் படைத்தவனையே கல்லாக்கிவிட்டோம். இவனை ஏன் படைத்தோம் என்று திகைத்து நிற்கின்றான்.

நாம் ஒரு மாதிரிதான்.

நினைத்தால் ஒருவனைக் கோபுரத்தில் ஏற்றுகின்றோம். பிடிக்கவில்லையென்றால் அவனையே குப்புறத் தள்ளுகின்றோம். இயக்கம் என்றும் இலட்சியம் என்றும் தத்துவம் பேசுவோம். கோடி கோடியாய் நாம் சம்பாதிப்போம். உணர்ச்சி சொற்களை வீசி எளியவனைத் தீக்குளிக்கச் செய்வோம். உடனே அந்தப் பிணத்திற்கு மாலை சூட்டி அதிலும் வரவு பார்ப்போம்.

நாமும் ஒரு மாதிரிதான்

சுயநலமும் சுரண்டலும் கொடிகட்டிப் பறக்கின்றது. பித்தனைச் சித்தனாக்குவோம். அப்பாவியைப் பித்தனாக்குவோம். ஏமாற்றுகின்றான் என்று தெரிந்தும் ஏமாறுகின்றோம்.

ஏமாற்றுபவனும் ஒரு மாதிரி.

ஏமாறுகின்றவனும் ஒரு மாதிரி.

ஒவ்வொருவரும் தம்மை சுயதரிசனம் செய்து கொள்வோம்.

இக்கதை என்னை அழவைத்தது கொதிப்படைய வைத்தது. நானும் அழமட்டும்தானே செய்கின்றேன்

நானும் ஒரு மாதிரி.

தொடரைமட்டும் நிறுத்த முடியவில்லை.அவருடன் பயணம் செல்லப் போகின்றோம்.

(தொடரும்)

நன்றி: திண்ணை

No comments: