Friday, April 30, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-10

உலகச்சுழற்சியில் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சில மாறுதல்கள் மட்டும் மனத்தை அதிகம் ஈர்க்கின்றன.

கடவுளைப் பற்றிய நம்பிக்கைகளை உடைத்தெறிந்திருக்கின்றார் காரல்மார்க்ஸ். எனவே, பகுத்தறிவு வாதம் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சாகடிக்கப்பட்ட சாக்ரட்டீஸ், மூடப் பழக்க வாழக்கங்களை ஏற்கனெவே சாடியிருக்கின்றார். அவைகளில் முளைத்த காளான்கள் தான் சாதிகள்.

தந்தை பெரியார் சொன்ன பொழுது ஏன் துடித்து எழுந்தோம்?

அவர் பேச்சு மேடைப் பேச்சல்ல; அந்த இடத்தைவிட்டுப் போகவும் தேய்ந்து போக. வீட்டுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஒலி; தன்மானத்தைத் தட்டி எழுப்பிய குரல்;நாம் புரிந்து கொள்ள முடிந்த மொழி.

அவர் பேச்சுக்கு உயிரோட்டம் அதிகம். மனிதனை மனிதன் ஒடுக்கும் கொடுமை வலியைக் கொடுக்க ஆரம்பித்தது. சமுதாயம் விழித்துக் கொண்டுவிட்டது. இந்தியாவில் வல்லபாய் படேல் அவர்களை இரும்பு மனிதன் என்பார்கள். தூங்கிக் கொண்டிருந்த மனிதனைத் தட்டி எழுப்பியவர் அன்புக்கனி வெள்ளைத் தாத்தா. அவருக்குத் தலைமகனாய் அமைந்தார்அறிஞர் அண்ணா.

இந்திய மண்ணில், உள்ளம் கவர்ந்தவர்களுக்கு உறவு கொடுத்துவிடுவோம்.

காந்தி தாத்தா,நேரு மாமா, தந்தை பெரியார், மற்றும் “அண்ணா” என்ற பெயரிலே ஓர் அண்ணா.எனக்கு இந்த உறவுகள் பிடித்திருந்தன.

அடுக்குத் தொடர் தமிழ் பிடித்திருந்தது. ஏற்கனவே உள்ளத்தை ஆட்டிவைத்த சில பிரச்சனைகளுக்கு ஊக்கம் கிடைத்தது. பேசியப்பன் கொடுத்த எல்லாப் புத்தகங்களையும் படித்தேன். அண்ணா எழுதிய "கம்பரசம்", "ரங்கூன் ராதா", கலைஞர் எழுதிய "வாழமுடியாதவர்கள்" புத்தகங்கள் படித்தேன். ஆனால் இந்தப் புத்தகங்களைவிட அண்ணாவின் பேச்சுக்கள் தாங்கி வந்த அந்த சின்னஞ்சிறு புத்தகங்கள்தான் அதிகமாக என்னைக் கவர்ந்தன. அதன் தாக்கம் என் பேச்சுக்களில் காண ஆரம்பித்தது.

எனக்குள் எப்பொழுதும் துணை இருந்தவர்கள் பாரதியும் தந்தை பெரியாரும்.

எங்கு சென்றாலும் துணிச்சல்காரி என்ற பெயரும் தொடர்ந்து கிடைத்தது.

ஒரு நிகழ்ச்சி கூற விரும்புகின்றேன்.

சாதாரணமாக ஒரே ஒரு வீட்டுக்குதான் என் தந்தை அனுப்புவார்; என் பாட்டிவீடு. அம்மாவைப் பெற்றவர்கள். என் தகப்பனார் சத்தியாகிரகப் போராட்ட காலத்தில் எங்களை விட்டுப் போயிருந்த காலத்தில் ஹோட்டலில் மாவரைத்து, வீடுகளில் சமையல் செய்து என்னையும் என் தாயையும் காப்பாற்றியவர்கள்.

ஒரு கிராம முனிசீப் மனைவியாக வாழ்ந்து சீக்கிரமே கணவரைப் பறிகொடுத்து, இரண்டு பெண்களுக்கு ஐந்து நாட்கள் திருமணம் செய்து வைத்து ஓட்டாண்டியாகி, பின்னரும் தன் ஒரே மகனுடன் மகள், பேத்தி இருவரையும் காப்பாற்ற உழைத்த ஒரு மூதாட்டி என் பாட்டி. அவர்கள்.

மதுரையில் கீழ அனுமந்தராயன் கோயில் தெருவில் ஓர் வீட்டில் ஒண்டுக்குடித்தனம் இருந்தார்கள்.

செல்லமைய்யர் வீட்டில் ஐந்து குடித்தனங்கள். எல்லோரும் உறவினர்கள். என் பாட்டியை குப்புச் சித்தி என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.

அந்த வீட்டிற்கு ஒரு விஷேசம் உண்டு. அந்த வீட்டைப் பஜனை அய்யர் வீடு என்று அழைப்பார்கள். வீட்டுக்கு நடுவில் பெரிய ஹால் ஒன்று உண்டு. அங்கேதான் வாரம் ஒரு நாள் பஜனை நடக்குமாம். பக்கத்து தெருக்களிலிருந்தும் ஆட்கள் வருவார்கள்.

அடுத்து இருந்த மேல அனுமந்தராயன் கோவில் தெருவில் குடியிருந்த வீணை சண்முகவடிவு கூட சிலசமயம் அங்கு வந்து பஜனையில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். வரும்பொழுது தன் மகள் குஞ்சமாளையும் அழைத்து வந்ததுண்டு என்று கூறுவார்கள். அந்த குஞ்சம்மாள் வேறு யாருமல்ல; இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமிதான்.

நான் அந்த வீட்டிற்குச் சென்ற பொழுது பஜனை நடத்துவது நின்று போயிருந்தது. அங்கே சீதாமாமி என்பவரை எனக்குப் பிடிக்கும்; அவருக்கும் என்னை பிடிக்கும். ஆனால், அவர்கள் கணவருக்கு என்னைப் பிடிக்காது. நான் அனாசாரமாகப் பேசுகிறேனாம். ஆமாம், வித்தியாசமாகப் பேசினேன்.

ஆமாம், மத்த ஜாதிக்காரா மேலே பட்ட காத்து நம்ம மேலே படரதே"

காத்துக்குத் தோஷம் இல்லே

அப்போ தண்ணி?"

தண்ணிக்கு தோஷம் இல்லே

தவிர்க்க முடியாதவைகளுக்குத் தனி சமாதானங்கள்!

பாட்டி,நீ சுத்தத்துக்காக எல்லாம் அலம்பறியா, அல்லது மத்தவா தொட்டுட்டான்னு அலம்பறியா? உப்பையும் சர்க்கரையும் அலம்பு பாட்டி!"

அந்த வீட்டில் நான் பொருந்தவில்லை.

சீதாமாமி என்னைத் தனியாகக் கூப்பிட்டு,“பாப்பா, காலம் மாறிண்டு வர்றது. இதுவரை பழக்கப்பட்டுட்டா. நீ சின்னப்பொண்; இப்படியெல்லாம் பேசி மத்தவா வாயிலே விழாதே!“

எனக்குத்தான் எத்தனை பெயர்கள்!

பிறந்த பத்து நாட்களில் ஹோமம் வளர்த்து எனக்கு என் தந்தை வைத்த பெயர் சீதாலட்சுமி. அவர் எங்களை விட்டு ஜெயிலுக்குப் போயிருந்த பொழுது என் தாயார்தான் முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள் அப்பொழுது வைத்த பெயர் குஞ்சம்மாள். எல்லோரும் கூப்பிடும் பெயர் பாப்பா.

மாமியின் அன்பு வார்த்தைகளுக்குக் கட்டுப்பட முயன்றேன்.

நவராத்திரி நேரம் நான் சென்றிருந்தேன். மதுரையில் கோவில்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் கூட பொதுமக்கள் பார்க்கச் சில இடங்களில் கொலு வைத்திருப்பார்கள்.

வெங்கலக் கடைத்தெருவில் தனியார் கொலுமண்டபம் ஒன்றிற்குச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பாட்டியுடன் சென்று கொண்டிருந்தேன்.

திடீரென்று யாரோ என்னைத் தொடும் உணர்ச்சி. கூட்டத்தில் தற்செயலாக நடக்கக் கூடியதுதான். நான் திரும்பிப் பார்த்தேன்; என் முதுகுப் பக்கமாய் கை வளைந்து என் தோளைத் பிடித்துக்கொண்டு ஒருவன் அசட்டுச்சிரிப்பு சிரித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தான்.

அவ்வளவுதான்! நானும் அவனை இறுகப் பிடித்து முதுகில் குத்து குத்தென்று குத்தினேன். எனக்கு எப்படி ஆவேசம் வந்தது என்று தெரியாது. குத்துப்பட்டவன் கீழே விழுந்து எப்படியோ எழுந்து ஓடிவிட்டான். அதற்குள் கூட்டத்தினர் பார்த்து விட்டனர்.

எல்லோரையும் பார்த்தேன்; ஒருவரிடமும் பாராட்டும் முகமோ இரக்க உணர்வோ தெரியவில்லை.

மாறாக ,"சே, இப்படியும் ஒரு பொண்ணா? அடங்காப்பிடாரி! கூட்டம்னா மேலே படாம போக முடியுமா?வெக்கம்கெட்டவ! கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம, ஒரு ஆம்புள்ளையத் தொட்டு அடிச்சுட்டாளே! ஏய் கிழவி, உம் பொண்ண அடக்கிவை. இல்லே,ஒரு நாள் அறுத்துக்கிட்டுப் போய்டும்."

கூட்டமே கோரஸ் பாடியது.

என் மனக்குரலில் பாரதியின் இசை:

பாதகஞ் செய்பவரைக் கண்டால்-நாம்

பயங்கொள்ள லாகாது பாப்பா

மோதி மிதித்துவிடு பாப்பா-அவர்

முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"

அவன் முகத்தில் காறித்துப்பவில்லையே என்ற குறை எனக்கு. என் பாட்டி என் கையை இறுகப் பற்றிக்கொண்டு அழுது கொண்டே கூட்டிச் சென்றார்கள்.

நானா தப்பு செய்தேன்? என்னைக் கட்டிபிடிச்சவனை நான் அடித்தது தப்பா?

வெட்கத்தை நாய்க்குப் போடச் சொன்ன பாரதியை பெரிய மனுஷன்னு ஒத்துக் கொள்ளும் இந்த சமூகம், தீமையைக் கண்டு பொங்கி எழும் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கும் பட்டம் “வெட்கம் கெட்டவள்"

மனக்கொதிப்பை என் பாட்டிக்ககாக அடக்கிக் கொண்டு மவுனமாய் நடந்தேன்.

மறுநாளே என்னை எட்டையாபுரத்திற்குக் கூட்டி வந்து விட்டார்கள். என்மேல் மிகவும் பிரியம் வைத்தவர்கள் பாட்டி. அவர்கள் மனம் வருந்தும்படி நடந்துவிட்ட சம்பவத்திற்கு வருந்தினேன். அவன் மட்டும் மீண்டும் கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அவனை அடித்திருப்பேன்.

நான் தூங்கிவிட்டேன் என்று என் பாட்டி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“குழந்தைய நினச்சா கவலையா இருக்கு. ஏன் இப்படி மாறிட்டா? பேப்பர்லே வந்திருந்தா யாராவது கல்யாணம் செய்துப்பாளா? பொண்ணா வளரலியே! அவ அப்பன் வளர்ப்பு அப்படி; பத்திரமா பாத்துக்கோ!அந்த மீனாட்சிதான் இவளுக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.“

பாவம் பாட்டி! என் புத்தி கெட்டு விட்டது என்று முடிவிற்கு வந்து விட்டார்கள்.இது அக்கிரஹாரப்பாட்டி. இதுவே கிராமத்துப் பாட்டியாக இருந்திருந்தால், எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று பேயோட்டுபவனை அழைத்துவந்து வேப்பிலை அடித்திருப்பார்கள்.

மீனாட்சி புத்திகொடுப்பாள்னா அவள் என் பக்கம் தான் பேசுவாள்! அவள் ராணியாச்சே!

நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். மேலே இடிமட்டும் பட்டிருந்தால் கூட்டத்தைக் காரணமாக நினைத்து ஒதுங்கியிருப்பேன். கட்டிபிடித்தது தற்செயல் நிகழ்வாக எப்படி நினைக்க முடியும்? சாமி கும்பிட வந்த இடத்தில் மனதில் வக்கிரம். அவனையல்லவா பெண்கள் கண்டித்திருக்க வேண்டும்?

பெண்ணே இப்படியிருந்தால் ஆண்களை மட்டும் குறை கூறிப் பயன் என்ன? புதைகுழியில் மூழ்கிவிட்ட பெண்ணின் திறன் மீண்டு வருமா?

பாட்டிக்கும் அம்மாவிற்கும் இன்னொரு கவலை. பெண்ணுக்கு 15 வயதாகிவிட்டது; யாராவது கல்யாணம் செய்து கொள்வார்களா என்று.

நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். புருஷன் என்ன தப்பு செய்தாலும் பெண்டாட்டி பொறுத்துக்கொள்ள வேண்டும். இது என்னால் முடியாதது. அதனால் அவர்கள் கவலையைப் பற்றி கவலைப்படவேண்டாம்.

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப் பீழை இருக்கின்றது,"என்று என் பாரதி குமுறினானே!

இந்தக் கொடுமை நீங்க என்ன செய்யலாம்?

ஓடி விளையாடி உற்சாகமாக இருக்க வேண்டிய வயதில் ஊர்க்கவலை! அந்தக்காலத்தில் இப்படி ஒரு பெண். அதுவும் கிராமத்தில் வளர்ந்த பெண்!

அக்காலச்சூழல்,படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், பழகிய மனிதர்கள், வளர்ந்த குடும்பம் இவைகளால் உருவாகப்பட்ட ஒருத்தி. ஆனால், பிற்காலத்தில் அவள் மேற்கொண்ட பணிக்கு உறுதியான நெஞ்சுக்கு உரமிட்ட காலம்.

மனிதனின் வளர்ச்சியில் பிள்ளைப்பருவம் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

(ஊர்வலம் தொடரும்)

Wednesday, April 28, 2010

சீதாம்மாவின் குறிப்பேடு-ஜெயகாந்தன் 05

படைப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் திறன் வேண்டும். எனக்குப் படிக்கும் ஆர்வம் வளர்ந்ததுவும் ஒரு கதையே!

பாரதி இல்லத்தில் பிறந்தது ஆர்வம்

சிறுமியாய் இருக்கும் பொழுது மாலை நேரங்களில் எங்கள் தெருவில் இருக்கும் சாம்பு மாமாவிடம் போய் உட்கார்ந்து கொள்வேன். அவர் பாரதி பாடல்களை எனக்குப் பாடக் கற்றுத்தருவார். அதுவும் பாரதி எப்படி பாடினாரோ அதே ராகங்களில், அதே பாணியில் சொல்லித் தருவார். பாட்டின் அர்த்தங்களையும் விளக்குவார். அப்பொழுது சுதந்திரம் பெறாத காலம். எனவே எங்கள் பாட்டுக்களில் வேகம் அதிகம் இருக்கும்.

கையில் ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்துச் செல்வேன். அவர் சொல்லும் பாட்டுக்களை எழுதிக் கொள்வேன். அவர் முழுப் பெயர் திரு.சாம்பசிவ அய்யர். பாரதியின் தாய்மாமன். படிக்கும் ஆர்வத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் அந்த மாமா தான்.ஆர்வம் பிறந்த இடம் பாரதி பிறந்த இல்லம்.

கல்கியின் சந்திப்பு ஆசைக்கு வித்திட்டது

பாரதிக்கு நினைவு மண்டபம் கட்டும் விஷயமாக எட்டயபுரத்திற்கு ராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும் வந்திருந்தனர். அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தனர். என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். எனவே எட்டயபுரத்திற்கு வரும் தலைவர்கள் அரண்மனையில் தங்கினால் போய்ப் பார்ப்பார். மேலும் எங்கள் ஊர் ராஜா, வரும் விருந்தினர்களைக் கவனிக்கச் சிலருக்குப் பொறுப்பு கொடுத்து வைத்திருந்தார். அவர்களில் அப்பாவும் ஒருவர்.அவர் போகும் இடங்களுக்கு என்னையும் கூட்டிச் சென்று அவர்களை நமஸ்காரம் செய்யச் சொல்லுவார். அன்றும் வழக்கம் போல் ராஜாஜி அவர்களையும் கல்கி அவர்களையும் நமஸ்காரம் செய்தேன். திரும்பி வரும் பொழுது இருவரைப் பற்றியும் அப்பா நிறைய பேசினார். அந்த வயதில் மனத்தில் பதிந்தது கல்கி கதை எழுதுகின்றவர் என்பதுதான். அதன் பின்னர் அப்பா வாங்கிப் போடும் விகடன், கல்கியைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த வயதிலேயே கல்கியின் வரலாற்றுக் கதைகளை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்.

கற்பனைத் தேரில் ஏற்றிவிட்டவன் பாரதி

பாரதி திருமணமான பிறகு எட்டயபுரம் வந்தபொழுது தான் பிறந்த இல்லத்திற்கருகில் உள்ள வீட்டில் கொஞ்ச காலம் குடியிருந்தார். அதே வீட்டில் நாங்களும் குடியிருந்தோம். என்னைக் கற்பனையில் மிதக்கப் பழக்கிய வீடு. அவன் தொட்ட இடமெல்லாம் நான் தொட்டு மகிழ்ந்தேன்

மாடியென்ற ஓர் சின்ன அறை.கற்பனையில் பாரதியுடன் அரட்டை.

கொல்லைப்புறமும் சின்னதுதான். அதனால்தான் காணி நிலம் வேண்டினானோ?அவன் நினைவுகள் என்னைத் தாலாட்டின.

ஏழு வயதில் எனக்குக் கிடைத்த விளையாட்டுத் தோழன் பாரதி

இலக்கியமும் வரலாறும் என்னைப் பிடித்துக் கொண்டன

நான் படித்த பள்ளியும் பாரதி படித்த பள்ளி. எங்கள் ஆசிரியர்களும் பாரதியைப்பற்றி அதிகமாகப் பேசுவார்கள். அந்தக் காலத்துச் சூழ்நிலையில் இருந்த சுதந்திர தாகம் அப்படி பேச வைத்தது.

துரைராஜ் என்று ஓர் ஆசிரியர். என் அப்பாவுக்குச் செல்லப் பிள்ளையானார். காரணம் அவர் நிறைய புத்தகங்கள் படிப்பார்.

என் தந்தை எனக்கு வரலாற்றுப் புத்தகங்கள் கொடுத்தால் என் ஆசிரியர் இலக்கியப் புத்தகங்கள் கொடுத்தார்.

புதுமைப்பித்தனிடம் அழைத்துச் சென்றவர் சிதம்பர ரகுநாதன்

முத்து என்று இன்னொரு ஆசிரியர் வந்தார். திரு.பாஸ்கரத்தொண்டைமான் மற்றும் தொ.மு.சி.ரகுநாதன் ஆகிய இருவரும் இவருக்குத் தாய்மாமன்களாவார். வாத்தியார் துரைராஜின் தங்கையை முத்து மணந்தார். அதனால் நெல்லைக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவரை ஒரு முறை பார்த்திருக்கின்றேன். ஆனால் ரகுநாதன் அவர்களைப் பல முறைப் பார்க்க முடிந்தது. பழகவும் முடிந்தது. அவருடைய எழுத்துவன்மை அப்பொழுது எனக்குத் தெரியாது. நான் ஒரு பள்ளி மாணவி.

பாரதியைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்பார். கல்கி கதை படிப்பதைச் சொன்னேன். அப்பொழுது அவர் எனக்குச் சில பத்திரிகைகள்,புத்தகங்களைக் கொடுத்து நான் படிக்க வேண்டும் என்று சொன்னார்.

வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டியன இருக்கும் புத்தகங்கள் என்றார். அத்தனையும் புதுமைபித்தன் எழுதியவைகள். எட்டயபுரம் சென்று அவைகளைப் படித்தேன். ஆனாலும் அப்பொழுது எனக்கு கதைபடிக்கப் பிடித்தது. புத்தகங்களைப் பத்திரமாக வைத்திருந்தேன்.

ஜெயகாந்தன் வருகை

படித்து முடித்து களப்பணிக்குச் சென்றவுடன் திடீரென்று பெரிய மனுஷியாகிவிட்டதைப் போன்று உணர்ந்தேன். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பணி. சமுதாயத்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். புதுமைப்பித்தனை மீண்டும் படிக்க ஆரம்பிக்கவும். ஜெயகாந்தனின் எழுத்துக்களும் உடன் புகுந்தன. ஏனோ அவர்கள் இருவரும் எனக்கு உறவுகளாய் உணர்ந்தேன். அப்பொழுது ஒருவர் உயிருடன் இல்லை. இன்னொருவரின் முகம் பார்த்ததில்லை

நான் செல்லும் மூலை முடுக்குகளுக்குக்கூட என் சிந்தனையுடன் அவர்கள் எழுத்துக்களும் தொடர்ந்தன

வியப்பளித்த தி.ஜ.ரா

நான் வேலைக்குப் போன இடத்தில் சோமமகாதேவன் என்ற ஓரு எழுத்தாளரும் பணியாற்றிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியவர். எல்லாம் கிராமீயக் கதைகள். அவருக்கு நாடக உலகத்திலும் பயிற்சி உண்டு. அக்காலத்தில் இத்தகைய திறனுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைகள் தரப்பட்டன. அவர் என் படிக்கும் ஆர்வம் பார்த்து இன்னொரு பெயரைக் கூறிப் படிக்கச் சொன்னார். தி.ஜானகிராமன் அவர்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான். அவர் எழுத்து எனக்கு பிரமிப்பைக் கொடுத்தது. இவர்கள் எல்லாம் மனிதர்களுக்குள் புகுந்து, உணர்ந்து பார்த்து வந்து எழுதுகின்றார்களோ என்ற வியப்பு.

இவர்களால் எனக்குள் ஓர் ஆசை உதித்தது. நானும் ஒரு நாள் மனிதமனங்களைபற்றி எழுத வேண்டும் என்பதே!

நானும் எழுத்தாளர்கள் குடும்பத்தில் ஒருத்தியானேன்

இன்னொரு எழுத்தாளரும் அங்கு வேலை பார்க்க வந்து சேர்ந்தார். அவர் பெயர் ருத்ர.துளசிதாஸ். இன்று 47 புத்தகங்களுக்குச் சொந்தக்காரர். அவர் என்னை எழுதத்தூண்டியது மட்டுமன்றி என்னை எழுத வைத்து, என் கதையைப் பத்திரிகைக்கும் அனுப்பினார். மரபுக்கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. இன்னொரு எழுத்தாளரையும் கண்டு பிடித்தார்.

ஓ.எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரிலும் அருள் சுடர் என்ற பெயரிலும் பல கதைகள் வெளி வந்திருக்கின்றன. விகடனில் என்னுடைய ஒரு கதை முத்திரை பெற்றதென்றால் அவருடைய பல கதைகளுக்கு முத்திரை கிடைத்தன. அவர் மகள் பெயருக்கு பூரணி என்று பெயர் வைத்தார். அப்பொழுது எங்கள் நண்பர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர் வெளிவந்து கொண்டிருந்தது. நாங்கள் தேனாறு என்ற கையெழுத்துப் பத்திரிகையும் நடத்திவந்தோம். நாங்களும் மதுரையில் இருக்கும் நா.பார்த்தசாரதி உட்பட சில எழுத்தாளர்களும் சேர்ந்து ஒரு சிறுகதைப் புத்தகம் வெளியிட்டோம்.

நட்புக்கு இலக்கணமாய் வந்தார்கள் மணியனும் சாவியும்

வளர்ச்சிப் பணிகளைப் பார்க்க விகடன் ஒரு பத்திரிகையாளரை அனுப்பியிருந்தது. அவர்தான் மணியன். அவரைக் கிராமங்களுக்கு அழைத்துச்சென்று சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அன்று ஆரம்பித்த நட்பு அவர் சாகும் வரை நீடித்தது. என் குடும்பத்தில் ஓர் அங்கமானார். மணியன் விகடனில் வேலை பார்க்கும் பொழுது அவருக்கு மிகவும் பிடித்தமானவர் ஜெயகாந்தன். இருவரும் கடற்கரைக்குச் சென்று உட்கார்ந்து பேசுவார்கள் என்று மணியன் கூறியிருக்கின்றார். விகடன் அலுவலகம் சென்ற பொழுது சாவியும் அறிமுகம் ஆனார். அவர் நட்புக்குரிய நல்ல மனிதர். அவரும் எனக்கு நெருங்கிய நண்பரானார்.

சாவியும் மணியனும் இரு வேறு திசைகளில் திரும்பிய பொழுதும் என்னுடன் கொண்ட நட்பைமட்டும் மாற்றவில்லை.

இந்தத் தொடரின் நாயகன் ஜெயகாந்தனை மட்டும் பார்க்க பல வருடங்களாயின. 1970ல் தான் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் படைப்புகள் 60க்கு முன்னால் என்னிடம் வந்துவிட்டன. புத்தகங்களும் அவைகளின் படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை.பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஓர் மூதாட்டி தன் நண்பர் என்று கூறுவதை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இப்பொழுது கதை சொல்லிவிட்டதால் நம்பிக்கை பிறந்திருக்கும்.

என் வாழ்க்கைப் பயணத்தில் சக பயணிகள் பலர் பத்திரிகை உலகைச் சேர்ந்தவர்கள்.அவர்களில் முதன்மையானவர்கள் மூவர்: ஜெயகாந்தன், மணியன் மற்றும் சாவியுமாவார்கள்.

ஜெயகாந்தனின் சில கதைகள் உருவானதைப்பற்றிப் நாங்கள் பேசியிருக்கின்றோம். பொதுவாக அவர் கதைகளைவிட என் அனுபவங்களைப்பற்றி அதிகம் பேசினோம். அரசியலும் பேசுவதுண்டு. என் அனுபவங்கள் ஒன்றுக்கு அவர் கூறிய கருத்துக்களைப் பார்க்கலாம்.

மோகமுள்ளின் அவதாரங்கள்

தி.ஜ.ராவின் கதைகள் எனக்குள் தங்கி என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. மோகமுள்ளில் பாலுவின் மன நிலையை யதார்த்தமாகக் கொண்டு சென்றிருந்தார். அப்படியும் இருக்க முடியுமா என்று எனக்குள் தவித்த கேள்விக்கு வேறு ரூபத்தில் ஒருவரைப் பார்க்க நேரிட்டது.

அவர் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னர் நாற்பது வயதான பெண்மணி ஒருத்தி புதிய விளையாட்டை அவருக்கு அறிமுகப் படுத்தினாள். அவருக்கு அது பிடித்திருந்தது. அந்த விளையாட்டிற்கு யார் கூப்பிட்டாலும் மகிழ்வுடன் பங்கு கொண்டார். நாட்கள் செல்லச் செல்ல வட்டம் குறுகியது. அந்த வட்டமும் புள்ளிவடிவாகி, அவரைத் தேடி வருகின்றவர்களை விடுத்து அவர் விரும்புகின்றவர்களுடன் விளையாட்டைத் தொடர்ந்தார். அந்த பட்டியலும் குறுகி , சிறுத்து மறைந்தும் போனது.

ஜே.கேயுடன் இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது. "தவறு என்று திருந்திவிட்டானோ?“என்று கேட்டேன்.

அவர் பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர் புரிந்தது.

எப்பொழுதும் சரி,தப்பு என்று நினைத்திருக்க மாட்டான். யதார்த்தமாகக் கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான்.காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன."

இது எல்லோருக்கும் பொருந்துமா?

அப்படிச் சொல்ல முடியாது. சிலர் வாழும் சூழலில் தங்களுக்கென்று ஒழுக்க விதிகளை வகுத்துக்கொண்டு இது சரி, இது தவறு என்று தங்களை மாற்றிக் கொள்பவர்களும் உண்டு. .

இப்படியும் ஓர் மனிதன்

இப்படிப் பேசிக்கொண்டு வரும் பொழுதே எனக்கு ஒருவனின் நினைவு வந்தது. அவன் பெயர் பெரியகருப்பன். மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவன். ஓர் செல்வந்தரின் அடியாள். எஜமான் காட்டுகின்ற ஆளின் கையை, காலை வெட்டி ஜெயிலுக்குப் போகின்றவன். அவன் சிறைக்குப் போயிருக்கும் காலத்தில் அவன் தாய்க்கு ஜீவனத்திற்குப் பணம் கொடுத்து விடுவார். எனவே கருப்பனுக்கு அது ஓர் வேலை. பாவ புன்ணியம்பற்றி அவனுக்குத் தெரியாது. அவனைப் பெற்றவளும் மகனின் வேலையாகத் தான் நினைத்தாள்.

சிறையிலிருந்து வரும் பொழுது முதலில் என் வீட்டிற்குத்தான் வருவான். அவனுக்கு நான்,அவன் அன்பான அக்கா. அவன் செய்வது தவறு என்று நான்தான் சொல்லிக் கொண்டு வந்தேன்

பழகிபோச்சு அக்கா. பாவபுண்ணியம்லாம் நேக்குத்தெரியாது. எஜமான் சொல்றதைச் செய்வேன்.

அவன் ஒரு அம்பு;அவ்வளவுதான்! இத்தகைய அடியாட்களைக் கொத்தடிமை என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. மனிதர்கள் இப்படியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதுதான் உண்மை.

அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போக விட்டு அவனுடன் தொடர்பில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து அவன் என்னைத் தேடி கோயமுத்தூருக்கு வந்தான். அப்பொழுது நான் கர்ப்பிணி. அவனைப் பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது

எப்படி கண்டு பிடிச்சு வந்தே?எங்கே இருக்கே? கல்யாணம் ஆச்சா?

நீங்க எங்கே போனாலும் உங்களைப் பத்தி நான் விசாரிச்சுக்கிட்டு வந்தேன். நீங்க போனப்புறம் நீங்க சொன்னது என்னை உறுத்திக்கிட்டே இருந்தது. இதே ஊரில் இருந்தா எங்க எஜமான் சொல்றதைக் கேட்டுத்தான் ஆகணும். நான் ஊரைவிட்டே போய்ட்டேன். நான் இருக்கற லட்சணத்துக்கு கல்யாணம் எதுக்கு அக்கா? இப்போ கூலிவேலை செய்து பிழைக்கறேன். நீங்க புள்ளே உண்டாயிருக்கிற விஷயம் கேள்விப்பட்டேன். பழனி கோயிலுக்குப் போய் நம்ம முருகன் சாமியை உங்களுக்காக வேண்டிக்கிட்டு பிரசாதம் கொண்டாந்திருக்கேன். இந்தாங்க!

அவன் பேச்சு என்னை நெகிழ வைத்தது. அவன் கைகளில் பிரசாதம். அந்தக் கைகளில் முகம் புதைத்து அழுதேன். குழந்தை மனமும் பாசமும் என்னை உருக்கிவிட்டது.

அந்தக் கைகள் பலரை வெட்டிய கைகள். ஆனால் எனக்கு? என் மீது பாசம் கொண்ட ஒரு குழந்தையின் கைகளா அல்லது பரிவு காட்டும் தாயின் கரங்களா?


அந்தக் கைகள் உணர்த்திய அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

சில நேரங்களில் சில மனிதர்கள்

இது கதையல்ல;இதுதான் நிஜம்

(தொடரும்)

நன்றி திண்ணை

Monday, April 26, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-09


பார்ப்பவையெல்லாம் இதயத்தில் பதிந்து விடுவதில்லை. மனம் எங்கோ லயித்து இருக்கும் பொழுது பார்வையில் படும் பல கவனத்தை ஈர்ப்பதில்லை. சில சாதரணமாகத் தாண்டிப் போய்விடும். சிலவற்றை நாம் பெரிது படுத்தாமல் தெரிந்தே ஒதுக்கி விடுகின்றோம். மிச்சமிருப்பவை எண்ணக்கிடங்கில் தங்கிவிடும். தூசிதட்டி எடுப்பதுவும் உண்டு, இல்லையெனில் தேவையில்லையெனத் தூக்கி எறிவதும் உண்டு.

எண்ணக்கிடங்கு குப்பைக் கிடங்காக மாறுவதும் உண்டு.

இத்தனையும் பெரும்பாலானோர் இயல்பு. சிலர் அவைகளை வெளிப்படுத்தும் பொழுது வியந்து போகின்றோம். அப்பொழுது கூட அவைகள் நாம் துக்கி எறிந்தவைகள் என்பதை உணர்வதில்லை.

என்னைப் பொறுத்தவரையில், குப்பைகளைக்கூடச் சுத்தப்படுத்திச் சேமித்து வைத்துக் கொள்வேன். மதுரையில் விதைத்த விதை, முளைத்துச் செடியாகியது எட்டையாபுரத்தில்தான். அதிலும் பெரும் பங்கு வகிப்பது இப்பொழுது புலம்பெயர்ந்து சென்ற இடமும், அங்கே உணர்ந்த நிகழ்வுகளும்.

எட்டயாபுரத்தையும் நடுவிற்பட்டியையும் இணைக்கும் பாதையில் அமைந்திருந்தன பள்ளியும், சினிமாத் தியேட்டரும். எங்கள் ஹோட்டல் தியேட்டரை ஒட்டியிருந்தன. அதற்கு இருவாயில்கள். முன்வாயிலும் பின்வாயிலும் தெருவை நோக்கி அமைக்கப் பட்டிருந்தன. பின் வாயிலை ஒட்டி ஒரு சின்ன ஓட்டு வீடும், குளியல் அறையும் கழிப்பறையும் கட்டப் பட்டிருந்தன. நடுவில் திறந்தவெளி முற்றமும் ஒரு சின்னத் திண்ணையும். இருந்தது.

சிலிர்ப்பைத் தரும் வயது “டீன் ஏஜ்“. கனவுகளில் மிதக்கும் காலம் பருவகாலம். மயக்கத்தில் துள்ளித் திரியும் பருவம். எனக்கோ அப்பொழுதே முதுமை காலம் தொடங்கி விட்டது.

பத்திரிகைகள் 9 வயதிலேயே படிக்க ஆரம்பித்துவிட்டேன். சிறுகதை, துணுக்குகளுடன் தொடர்கதைகளும் படித்தேன். எல்லா வார இதழ்களும் மாத இதழ்களும் கிடைத்தன. இத்துடன் தினசரிப் பத்திரிகைகள். கதைகளில் ஆரம்பித்த பழக்கம்,தலையங்கம் படித்தபின்னரே கதைகள் படிக்கும் நிலைக்கு மாறினேன். பத்திரிகையில் ஓவியங்கள், ஏன் விளம்பரங்களைக் கூட ரசிக்க ஆரம்பித்தேன். இந்த நிலையில் தான் வீடு மாற்றம் நிகழ்ந்தது.

புது இடத்தில் என் தந்தை எனக்கு இரு புத்தகங்கள் கொடுத்தார்.

ஒன்று காந்திஜியின் "சத்தியசோதனை";

இன்னொன்று வீரசவர்க்கார் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு நூல்

எரிமலை

பாரதி ஏற்கனவே படித்து விட்டேன். படிக்கிறேன் என்று என் தந்தையை நான் ஏமாற்ற முடியாது. கேள்விகள் கேட்பார். சரியான பதில் சொல்லாவிட்டால் பிரம்படி. கசை அடிகளில் நடனமாடிய கதைகள் கேள்விப் பட்டிருக்கின்றோம். பள்ளிப் பாடங்கள் சரியாய்ப் படிக்காவிட்டலும் பெற்றோரிடம் அடி வாங்கிய கதைகளும் தெரியும்.

என் தந்தை வித்தியாசமானவர். மகளுக்கு சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தார். பிற்காலத்தில் நேருஜி தன் மகளுக்கு உலக வரலாற்றைக் கடிதங்கள் மூலமாக எழுதிய செய்தி தெரியவும் என் தந்தையின் மனத்தில் எங்கிருந்து தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் இவர் கையாண்ட முறைகளால் எங்களுக்குள் இடைவெளி அதிகமாகிக்கொண்டே போயிற்று.

என் சந்தேகங்களைத் தீர்க்க இன்னொருவர் கிடைத்தார்.

எங்கள் ஹோட்டல் ஒரு சின்ன சமஸ்தானம் போல் இருந்தது. அங்கு சமஸ்தான வித்துவான்களில் இருவர் முக்கியமானவர்கள். ஒன்று நாதஸ்வர வித்துவான் நீராறு அண்ணாவி. அவர் நிகழ்ச்சிகளுக்குப் போன நேரம் போக மற்ற காலங்களில் எங்கள் ஹோட்டல்தான் வாசஸ்தலம்.

என் பாட்டுப் பயிற்சி நின்று போனது. என் தந்தை சொன்ன காரணம் “என் பெண்ணுக்குப் பெண்பார்க்கும் நிகழ்ச்சி கிடையாது. அவள் ஜாதகம் சரியில்லை. ஆண்பிள்ளைபோல் வளர்ப்பேன். B. A. வரைக்கும் படிப்பாள். விமானத்தில் பறப்பாள்.“

அக்காலத்தில் அக்கிராமத்தில் ஒரு பெண்ணின் உயர்ந்த படிப்பாக இருந்தது பெண் பட்டம் வாங்குவது, அடுத்து விமானத்தில் பறப்பது என்பதும் உச்சக்கட்ட ஆசை. பின்னால் ஒரு முறையல்ல பல முறை, பல நாடுகள் விமானத்தில் பறந்து விட்டேன்.இன்னும் பறந்து கொண்டிருக்கின்றேன்.

இந்த சோதிடம் தான் குழப்பம் ஏற்படுத்தியது. எங்கோ உருளும் உருண்டைகள் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்று புரியவில்லை. ஆனாலும் இதுபற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்பொழுது ஏற்படவில்லை.

அண்ணாவி அன்புடன் பழகுவார். அவரிடம் என் ஆதங்கங்களைக் கூறுவேன். அவ்வளவுதான்.

இன்னொருவரின் பெயர் சுப்பையா பிள்ளை. காங்கிரஸ்காரர். அவரும் எப்பொழுதும் கதர்தான் உடுத்துவார். நான் கதருடன் சீட்டித் துணியும் உடுத்த ஆரம்பித்தேன். சுப்பையாபிள்ளையிடம் என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். அவரும் அயராமல் பதில் கொடுப்பார்.

திலகர்,கோகுலே இருவரின் கோட்பாடுகளைக் கூறினார். சுபாஷ் சந்திரபோஸ் பற்றி நிறையவே சொன்னார். சிப்பாய் கலகம் முதல் அமிர்தசரஸில் நடந்த ஜாலியன்வாலா படுகொலைபற்றி வரையும் கூறினார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைகள், இந்து-முஸ்லீம் கலவரம், மகாத்மாகாந்தியின் கொலை இவைகளைப் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்ததுடன் புத்தகங்களும் படிக்கக் கொடுத்தார்.

அவர் கொடுத்த இன்னொரு புத்தகம் புதிய ஆர்வத்தைக் கொடுத்தது. அது காரல் மார்க்ஸின் பொது உடைமைக் கொள்கைகள் பற்றிய புத்தகம். லெனின் பற்றிக் கூறியதுடன் ஸ்டாலின் மேல் பிரமிப்பு ஏற்படும் வண்ணம் ஒரு இரும்பு மனிதராகச் சித்தரித்தார். அந்த பிரமிப்பு ஏற்படுத்திய ஈர்ப்பில் முதலாளித்துவம், தொழிலாளித்துவம் பற்றியும் கூறினார்.

அவருக்குத் தெரிந்ததை அவர் கூறினார்.

என் புரிதல் சக்திக்கேற்ப ஏதோ புரிந்து கொண்டேன்.

அவர் ஒருகேள்வி கேட்டார்.

மாகாளி ருஷ்யாவில் ஏன் பார்வை வைத்தாள்?அவள் பார்வை பட்டவுடன் யுகப்புரட்சி எழுந்தது என்று பாரதி கூறுகின்றார். அவர் நாட்டு சுதந்திரம் வேண்டியவர். மனித உணர்வுகளைத் தூண்டிவிடும் பாடல்கள் பாடியவர். “தனி ஒரு மனிதனுக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்“ என்று கூறுகின்றாரே. இவைகளைச் சிந்தித்துப் பார்த்தாயா?

அன்று முதல் இக்கேள்வி என் மனத்தில் தங்கி, கிடைக்கும் விடைகளை சரியா என்று சிந்திப்பேன். அவர் பதில் கூறவில்லை. என்தேடல்களுக்குக் கேள்விகளே மலையென வளர ஆரம்பித்தது.

தேடல்கள் முக்கியமானது.

சில மலர்களின் பெயர்கள் கிடைக்கவில்லை என்று அன்று பல மாதங்கள் ஒரு வீட்டில் காத்து நின்ற தமிழ்த் தாத்தாவின் தேடலில் குறிஞ்சிப்பாடல் முழுமையானது. தேடிச்சேர்த்துப் பின் தொகுக்கப்பட்டது பெரிய புராணம்.

இன்று தேடலின் திசை மாறியுள்ளது.இது காலத்தின் கட்டாயம்.

தேடலில் நான் அலுக்கவில்லை. பதிலாக அதில் ஒருவகை உற்சாகம் அடைய ஆரம்பித்தேன். இன்று வரை ஏதாவது ஒரு தேடலில் இருந்து கொண்டே இருக்கின்றேன். வெற்றிகளும் தோல்விகளும் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தேடலுக்கும் என்மேல் பிரியம். சில சமயம் தானாக அது என்னை வந்து சேரும்.

அப்படிஒரு தேடல் என்னிடம் வந்தது மட்டுமன்றி என்னை ஒரு புதிய பாதைக்கும் அழைத்துச் சென்றது. என் கடைக்கு பேச்சியப்பன் என்று ஒருவர் பால் கொண்டுவந்து கொடுப்பார். அவர் ஒரு மாட்டுக்காரர்;பால் வியாபாரி;எழுதப்படிக்கத் தெரியாதவர். ஆனால், நன்றாகச் சிந்திக்கத் தெரிந்தவர். படித்தவன்தான் அறிவாளி என்பது இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டும் மனிதனாக இருந்தார்.

சுப்பையா பிள்ளையுடன் எங்கள் நூலக அறையில் உட்கார்ந்து பேசமுடியும். ஆனால் பேச்சியப்பனுடன் என் வீட்டுக்குள் உட்கார்ந்து தான் பேசுவேன்.

அவர் நிறைய புத்தகங்கள் எடுத்து வருவார்.சின்னதாக இருக்கும். வானொலிப்பேச்சு அல்லது மேடைப் பேச்சுக்கள். அடுக்குத்தொடர் தமிழில், வாசிக்கும் பொழுதே குரலுக்கு ஓர் கம்பீரம் வரும் எழுத்துக்கள். இளைஞர்களின் மனத்தைச் சுண்டி இழுக்கும் வசீகரம் படைத்த எழுத்து. அவைகள் அத்தனையும் பகுத்தறிவு வாதங்கள்.

அந்த எழுத்துக்களுக்கும் ஒரு மூலவர் இருந்தார். அந்த வெண்தாடி மனிதர் என்னை நன்றாகவே உசுப்பி விட்டார்.எனக்குள் போராட்டம்.

என் பிஞ்சுப் பருவத்தில் என் மனத்தில் ஒட்டிவைத்த முருகன் சிரித்துக்
கொண்டிருந்தான். குடிவந்த பாரதியும் பாடிக் கொண்டிருந்தார். என்னைக் கவர்ந்த காந்திஜியும் அமைதியாக அமர்ந்திருந்தார்.இப்பொழுது நுழைந்தவர்கள் சமுதாயச்சிற்பி தந்தை பெரியாரும், அடுக்குத்தொடர்ப் பேச்சு மன்னர் அறிஞர் அண்ணாவும்.

இந்த வாழ்க்கை என் 14 வயது முதல் ஆரம்பமாகி இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.இப்பொழுது இன்னும் பலர் நுழைந்துவிட்டனர்.

நான் அரசியல்வாதியல்ல; ஆரோக்கியமான சமுதாயத்தை விரும்புகிறவள் நான். என் படிப்புணர்வும், அதன் மூலம் நான் அறிந்தவர்களும்,புரிந்துகொண்டவர்களும் என்னில் ஏற்படுத்திய தாக்கத்தினை என் அனுபவங்கள் காட்டும்.

இந்த சமுதாயம் பல சோதனைகளுக்குப் பிறகு ஓர் அருமையான அமைப்பை உருவாகிக்கித் தந்திருக்கின்றது. குறைகள் இருக்கலாம்;ஆனால்,நிறைகள் நிறைய உள்ளன. நாம் சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த நன்மைகளைச் செய்யவேண்டும்.

என்னுடைய எண்ணங்கள் சமுதாயநலப் பணிகளின் கோர்வைகள்

(ஊர்வலம் தொடரும்)

Saturday, April 24, 2010

மரத்தடியில் முக்கனிகள்-02


தெய்வப் பழம் தனி ருசியைக் காட்டிட்டுது. பொண்டாட்டியப் பாத்து விபரம் கேட்டான்.

பாவம் அந்த அம்மா! இந்தக் காலமா இருந்தா அடுக்கடுக்கா பொய் வந்திருக்கும். சினிமா,டி.வி பாக்கறாங்களே!

அந்த அம்மா உண்மையைச் சொல்லிடுத்து. விடுவானா புருஷன்?

"அதென்ன சாமி கொடுத்ததுன்னு கதை சொல்றே? என் முன்னால் இன்னொண்ணு வரவழச்சு காட்டு,"ன்னு சொல்லிட்டான்.

"சரிதான் போய்யா." என்று சமஉரிமைக்குரலில் பேச இந்தக் காலம் இல்லியே! கடவுளைக் கூப்பிட்டாங்க அந்த அம்மா. அதான் சிவன் அய்யா காத்துக்கிட்டே இருந்தாரே!

உடனே அந்த அம்மா கைய்யில் இன்னொரு மாம்பழம் வந்துடுச்சு.

புருஷன் அரண்டுட்டான். ஆம்புளங்க அவ்வளவுதான். ஜம்பமா பேசத்தான் தெரியும். பொண்டாட்டி நிமிந்துட்டா அடங்கிப் போய்டுவான்.

அப்போ அவன் ஒண்ணும் பேசல்லே.வியாபாரத்துக்குப் போனவன் போனவன் தான்; வரவேயில்லே.

புனிதம்மா வருஷக் கணக்கா காத்திருந்தாங்க. மதுரைலே இருக்கான்னு தகவல் கிடைச்சது. புருஷனைப் பாக்கப் புறப்பட்டுட்டாங்க. தைரியசாலிதான்!

கண்ணகி காலமா இருந்தா சாகுற வரை வூட்டுக்குள் இருந்திருப்பாங்க.

வூட்லேயே இருந்திருக்கலாம். அந்த அம்மாவை எலும்புப் பேயாக்கிடணும்னு சிவக்கடவுள் முடிவு செய்துட்டாரே!

புனிதம்மா போனா, அவங்க புருஷன் இன்னொரு பொண்ஜாதி பிள்ளைகளோட வந்து அம்மா கால்லே விழுந்துட்டான்.

இதுதான் சரணாகதிபோல! ஆம்புளங்க கெட்டிக்காரங்க. ஊருக்கு ஒருத்தியை மத்தவங்களுக்குத் தெரியாம வச்சுக்க முடியுது. அந்தக் காலத்துலிருந்து ஒரே கதைதான். இது மனுஷங்க விவகாரம்.

அம்மா விஷயத்துக்குப் போகலாம். புருஷன் கால்லே விழவும் துடிச்சாங்க. வூட்டுக்கு வந்து காலத்தைக் கடத்தியிருக்கலாம். நல்ல வசதி இருந்தது. ஆனால் அந்த அம்மாவுக்கு உலகமே வெறுத்துப் போச்சு.

கடவுள் கிட்டே புலம்பி அழுதாங்க. அவர்தான் காத்துகிட்டே இருந்தாரே. அந்த
அம்மாவை எலும்புப் பேயாக்கிட்டாரு. இதுவும் அவர் இருக்குற மலைக்குப் போயி ,தலைகீழா படி ஏறி சிவன் சாமியைக் கும்பிட்டாங்க.

இந்த அம்மா இப்படி ஆனதுக்கும் மாம்பழம் காரணம்னு சொல்ல வச்சுட்டாரு. விளையாடறது இந்த சாமிகள்; குற்றம் சொல்றது மத்தவங்களை!

மாங்கனி கதை முடிக்கவும் வாழையின் மனமும் கனிந்தது.

“மாங்கனி, உன் மனசு கஷ்டம் புரியாம பேசிட்டேன். மனசுலே வச்சுக்காதே. நாம சாதாரணப் பழங்க. கடவுளோட போட்டி போட முடியுமா? கவலையை விடு," என்று வாழைக்கனி ஆறுதல் கூறியது.

“எல்லாம் அந்த நாரதர் ஆரம்பிச்சு வச்சது. நமக்கும் ஒரு காலம் வரும்,“ என்று பலாக்கனி கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அங்கே நாரதர் வந்து சேர்ந்தார்.

நாரதர் முகத்தில் உற்சாகம் இல்லை.

இப்பொழுது பலாக்கனிக்கு நேரம்

"என்ன நாரதர் சாமி, கலகத்துக்கு ஆள் கிடைக்கல்லியா?" என்று அக்கறை கொண்டது போல் நாசுக்கா கேட்டது பலா.

நாரதருக்குக் கோபம் வந்தது. இந்த சாதாரணப் பழங்கள் கேலி செய்வதா? சமயம் வரட்டும் என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டார்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை,“ என்றார் நாரதர்.

“சாமி, நமக்குள்ளே என்ன சாமி, நாங்க மனுஷப் பிறவியா? சீக்கிரம் உசுரை விடற பிறவிங்க.“ என்று மெதுவாகக் கூறிவிட்டு, மேலும் தொடர்ந்து பேசியது பலா.

“சாமி, நீங்க பூலோகத்துக்கு வந்துட்டீங்க. அதுவும் எங்க நாட்டுக்கு. ஊருக்குள் போய்ப் பாருங்க. நிறைய கதை கிடைக்கும். உங்களுக்கும் பொழுது போகும்.“

நாரதர் யோசித்தார் முகத்தில் புன்னகை பிறந்தது.

“நான் போய்ட்டு வரேன்,“ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார் நாரதர்.

"எங்கே போறாரு?" என்று ஆவலுடன் கேட்டது வாழை.

பலாவோ,"வேடிக்கை பாருங்க!“ என்று மட்டும் கூறியது.

போன நாரதர் கொஞ்ச நேரத்தில் வந்தார்.

"ஊரு இப்படி கெட்டுப் போயிருக்கே, இனிமே கடவுள் கூட எட்டிப் பார்க்க முடியாது,“ என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

"என்ன நடந்தது?" என்று அப்பாவியாகக் கேட்டது மாங்கனி.

“வேறென்ன, ஊருக்குள்ளே இப்போ எல்லாரும் நாரதர்தான். கலகம் செய்ய மேலேருந்து வரணுமா? உனக்குக் கெட்டபேரு வரவச்சாரில்லே? இனிமே பூலோகம்னா அலறுவாரு. சரியான பாடம்!"

பலா முரட்டுத்தனமாக பதில் கூறியது.

மற்ற இருகனிகளும் பலாவை வியப்புடன் பார்த்தன.

“பலா, படைப்புலே, உனக்கு வெளிப்புறம் முரட்டுத்தோல். உள்ளேதான் இனிப்புப் பழம். சுலபமா எடுத்துட முடியாது. உன் புத்தியும் சுலமாப் புரிங்சுக்க முடியல்லே. இருந்தாலும் இப்போ சந்தோஷமா இருக்கு. நாம ஒத்துமையா இருந்தா போதும்,“ என்று மாங்கனி கூறியது.

மாங்கனியின் பேச்சு இனித்தது.

கதை முடிந்தது.