Monday, February 11, 2013

நினைவலைகள் 22


நினைவலைகள் -22

கதை பேச நினைத்தேன். ஆனால் நாடக உலகம் பிடித்து இழுக்கின்றது.
பிறிதொரு சமயம் கதை பேசலாம்.

பெண் பாத்திரத்திற்கு ஆள் இல்லாததால் ,மனமாற்றம் நாடகம் போய் வரப்புத்தகராறு நாடகம் அரங்கேற்றினர். பெண்பாத்திரம் கிடையாது. நாடகத்தில் நடித்தவர்கள் அனைவரும் அதே வட்டாரத்தில் வேலைபார்த்து வருகின்றவர்களாகும். வெளியிலிருந்து ஆட்களைக் கூப்பிடுவது கிடையாது.

எல்லா கிராமங்களிலும் வரப்புத் தகராறு இருந்தது. அண்ணன் தம்பி சண்டைகளில்  கோர்ட்டுக்குப் போய், ,இருக்கும் சிறிய நிலத்தையும் பறி கொடுப்பார்கள்

சோமமாகாதேவன் இதிலும் மூத்தவராக வருவார். கொன்னவாய்ப் பேச்சு.
அவரைப்போல் கொன்னவாயனாக யார் நடித்தும் நான் பார்த்ததில்லை.
இந்த நாடகத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் சோழவந்தானில் நாடகம் நடக்க வேண்டிய நேரத்தில் பிரச்சனை கிளம்பிவிட்டது. நாடகத்தை நடத்தவிடவில்லை. வாடிப்பட்டி வட்டாரத்தில் சோழவந்தான் தான் பெரிய கிராமம். நாடகம் என்றவுடன் பக்கத்து கிராமங்களிலிருந்தும் ஆட்கள் வந்து விட்டனர். திறந்த வெளியரங்கு. எம். ஆர். ராதா மாதிரி எங்கள் நாடக மேடைக்குப் பெரிய அலங்காரம் இருக்காது. நாடகம் தொடங்க வேண்டிய நேரத்தில் எழுந்து நின்று ஒரே கூச்சல். அவர்கள் என்ன சொல்லி கத்தினார்கள் தெரியுமா?

 “எங்கள் எஸ் ஈ. ஓ டபிள்யூ அம்மாவை நடிக்கச் சொல்லுங்கள். அந்த அம்மா நடிக்கல்லேன்னா நாடகம் நடத்தவிட மாட்டோம் “

மைக்கில் நான் பேசி சமாதானம் செய்ய முயன்றேன். முடியவில்லை. ஆக நான் நடித்தாக வேண்டும். புதிதாக பெண் பாத்திரம் உருவாக்க வேண்டும். ரிஹர்சல் கிடையாது. என்னுடன் பேசுகின்றவர்கள் சமாளிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்

சட்டென்று ஓர் யோசனை தோன்றி உள்ளே போனேன். கொன்னவாய்ப்
புருஷன் சோம மகாதேவனுக்கு அடங்காப்பிடாரி பொண்டாட்டியாய் நடிப்பது. ஒரு சீன் போதும். மக்களைத் திருப்தி படுத்திவிடலாம்.
எங்கள் நம்பிக்கையைப் பாருங்கள்

இதுதான் சீன்

வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். வக்கீலுக்கு வீட்டிலிருக்கும் நெய்ச் சட்டியைக் கொண்டு கொடுக்க விரும்பி அதனை ரகசியமாக எடுத்து மெதுவாக நகர்கின்றான். ஏற்கனவே பொறுப்பில்லாத கணவனைத் திட்டிக் கொண்டு பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். அவன் போவதைப் பார்க்கவும் விளக்கு மாற்றை வீசி எறிந்துவிட்டு சண்டைபோட ஆரம்பித்துவிடுகின்றாள். அவன் கொன்ன வாய்ப் பேச்சும் இவளின் ஆங்காரமான் பேச்சும் ஜனங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 கோபத்தை அடக்க முடியாமல் புருஷன் அடிக்க கை ஓங்கி விடுகின்றறன். அவன்தான் தொட முடியாதே!. அவன் அடித்துவிட்டாற் போல் ஒவென்று கத்தி ஒப்பாரிப் பாட்டு பாட ஆரம்பித்துவிடுவாள்

புளியங்கொம்பைத் தேடியல்லோ
புளியங்கொம்பைத் தேடியல்லோ
புவிமேல் தவம் கிடந்தேன்
புவிமேல் தவம் கிடந்தேன்
அடி என்னைப் பெத்த ஆத்தா
நான் பிடிச்ச கொம்பு முருங்கைக் கொம்பா
போனவிதம் கண்டேனே
போனவிதம் கண்டேனே
அடி என்னைப் பெத்த ஆத்தா

இது பெரிய பாட்டு. மேடையிலேயே இட்டுக் கட்டிப் பாடினேன்
இந்த வேஷத்திற்கு பெரிய மேக்கப் தேவையில்லை. ஏற்கனவே கைத்தறி சேலைதான் உடுத்துவேன். புடவைக்கட்டைமட்டும் மாற்றினேன். பின்னால் கொசுவம் வைத்துக் கட்டினேன். தலை முடியை அவிழ்த்து சொருகுக் கொண்டை போட்டுக் கொண்டேன்..

சண்டை ஆரம்பிக்கவும் இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை உதறி
சண்டையை ஆரம்பித்தேன். நாங்கள் இருவரும் எழுத்தாளர்கள். எங்களுக்குள் எங்கள் சாமர்த்தியத்தில் போட்டி. கடைசியில் முடி அவிழ்த்து ஒப்பாரி பாட்டு ஆரம்பிக்கவும் கூடியிருந்த கூட்டம் முழுவதும் ஒரே கைதட்டல். அந்த மணித்துளிகளின் அனுபவங்களை இப்பொழுதும் மனம் அசைபோடும் பொழுது புல்லரிக்கின்றது. நாடகத்தில் நடிப்பது தனி இன்பம்.. தனிப்பட்ட திறமைகளைக் காட்டும் களம்..பார்ப்பவரும் சரி, பங்கு கொள்பவரும் சரி, இருபக்கமும் இன்பத்தைக் கொடுப்பது கூத்து.

மேடையில் ஓர் பெண் ஏறிவிட்டால் பலரின் கவனத்திற்கு வந்து விடுவாள்.
எனக்கும் சிறு சிறு சோதனைகள்  ஏற்பட்டன. ஆனால் என்னுடன் பழகிய இளைஞர்களால் அவைகள் ஆரம்பத்திலேயே பொசுங்கிவிட்டன. ஆனாலும் சில இடங்களில் தீங்கு ஏற்படும் சூழல் வரினும் என்னை அரணாகப் பாதுகாக்க என் தம்பி பெரிய கருப்பன் இருந்தான்.
என் கலைத் திறமையால் எனகேற்பட்ட ரசிகர்கள் அன்று இருந்த நிலையிலிருந்து உயர் நிலைக்குப் போயினும், அவர்கள் என்னைச் சந்தித்தபொழுது மறக்காமல் பரிவைக் காட்டினர்.

மதுரையில் நாடகம் போட வேண்டி வந்தது. இதுவரை கிராப்புறங்களில் தான் எங்கள் நாடகங்கள் நடந்து வந்தன.. வரப்புத்தகராறு நாடகம் தான். அன்று நானும் நடிப்பதாக இருந்தது. எனவே மேடையில் பின் புறத்தில் இருந்தேன். அப்பொழுது என்னிடம் எங்கள் சப் கலெக்டர் வந்து ஒரு
உத்திரவு பிறப்பித்தார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது

Twincle twincle little star

அந்தப் பாடலை ஆனந்த பைரவி ராகத்தில் பாட வேண்டுமாம். உத்திரவுகள் எப்படியெல்லாம் வருகின்றன பாருங்கள்!சங்கீதம் கற்றவள் தான். ஆனால் ராகங்களில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது.
முடியாது என்று சொல்ல என்னாலும் முடியாது

“ஸார், ஆனந்த பைரவியில் பாடினால் ராகம் மாறினாலும் மாறும். புன்னகவராளியில் பாடட்டுமா? “

“சரி” என்று தலையாட்டிவிட்டு உடனே பாடிக் காட்டச் சொன்னார். நடிப்பு, பாட்டு எல்லாம் திடீர் சோதனைகளாகத்தான் வந்தன. நான் பாடிக் காட்டினேன். அவர் சமாதானம் ஆகவில்லை. மீண்டும் இன்னொரு முறை பாடச் சொன்னார். நான் மீண்டும் பாடிக்காட்டவும் அவர் முகம் மலர்ந்தது.அன்றைய மேடையில் அதிகம் கை தட்டல்களைப் பெற்றது அந்தப் பாட்டுதான். ஆங்கிலப் பாட்டை கர்நாடக ராகத்தில் என்னைப் பாடச் சொன்னவர் திரு. டி. என் சேஷன்.,ஐ.ஏ.எஸ் அவர்கள். அவர் அப்பொழுது எங்களுக்கு சப்கலெக்டராக இருந்தார். தேர்தல் ஆணையா ளராக இருக்கும் பொழுது அவரின் கண்டிப்பான குணத்தை எல்லோரும் அறிவார்கள். அவர் இதயத்திற்குள் கனிவான சங்கீதமும் உண்டு. அவர் பெயர் கேள்விப்படும் பொழுதெல்லாம் இந்த நினைவு வரும்.

அவரைப் போல் திரு எம்.எஸ். திரவியம் , ஐ.ஏ.எஸ் அவர்களும் சப் கலெக்டரக இருந்தார். அவர் காலத்தில் எங்கள் நாடகங்களுக்கு வந்து எல்லோருடனும் தரையில் முன்னால் உட்கார்ந்து நாடகம் பார்ப்பார். அவர் தலைமைச் செயலாளரான பின்னும் பார்த்திருக்கின்றேன். அக்கால நாடகங்களைப் பற்றிப் பேசுவார். நாடகம் மிகவும் சக்தி வாய்ந்தது.

பாட்டு, நடனம், நடிப்பு என்று மேடைகளில் அடிக்கடி தோன்றியதால்
கிராமத்து மக்களிடையே எனக்கும் ரசிகர்கள் அதிகமாயினர். நான் சாதாரணமானவள். மேலும் எங்கள் நாடகங்களும் தெருக்கூத்து போல் இருந்தன.எங்களுக்கே இந்த கவர்ச்சி அலையென்றால்  சினிமாவில் இருப்பவர்களைக் கண்டு மயங்குவதில் வியப்பு ஒன்றும் இல்லை. மக்களின் மயக்கம் சினிமா மனிதர்களை ஆட்சி பீடத்தில் வைத்தது.

தொடரும்



1 comment:

Anonymous said...

வணக்கம்

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_15.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-