Monday, February 18, 2013

நினைவலைகள் -23


நினைவலைகள் 23

நாடக வாழ்க்கை இன்னும் முடியவில்லை.
ஆனால் முடியப் போகின்றது.
நாடகம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
ஆனால் ஒரு நாடகம் முழுமையாக மேடை ஏறுவதற்குள் எத்தனை பாடுபடவேண்டும் என்ற அனுபவமும் எனக்கு கிட்டியது.

வாடிப்பட்டியிலிருந்து சென்று பல ஆண்டுகள் கழித்து காஞ்சியில் ஓரங்க நாடகத்தில் நடித்தேன். அதுவும் ஓர் திடீர் ஏற்பாடு. அதற்குப் பிறகுதான் பெரும் சோதனை ஏற்பட்டது

செங்கல்பட்டு மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றி கொண்டிருந்த காலம்.
எங்கள் அமைச்சர் திரு.சி.எம் அண்னாமலை. அவர் சொந்த ஊர் காஞ்சிபுரம்.நாங்கள் மாவட்ட அளவில் பெண்களுக்கு ஓர் பெரிய மாநாடு ஏற்பாடு செய்தோம். அமைச்சருக்கு அந்த மாநாட்டிற்கு முதல்வர் கலைஞரை அழைக்க விருப்பம். கலைஞர் வர ஒப்புக் கொண்டார். கலைவவணர் அரங்கில் விழா ஏற்பாடு. அமைச்சர் என்னை நாடகம் போடச் சொன்னார். நான் முடியாது என்று சொன்னேன்

காரணங்கள் பல. இப்பொழுது மாவட்ட அளவில் அதிகாரி. எனவே நடிக்க முடியாது என்று மறுத்தேன். மேலும் சென்னையில் கலைவாணர் அரங்கில் கலைஞர் தலைமையில் நாடகம் என்றால் அது சாதாரணமாக இருக்கக் கூடாது. என்னால் மற்றவர்களைச் சேர்த்து நாடக ஒத்திகை போட முடியாது. மேலும் விழா ஏற்பாடுகளில் நான் தான் முன் நிற்க வேண்டும். விழா முடியவும் உடனே மேக்கப் போட்டு நடிக்க முடியாது. நேரம் இருக்காது என்றேன். பிரச்சனைகளை முதல்வரிடமே கூறும்படி எங்கள் அமைச்சர் சொன்னார். வேறு யாருக்கும் இந்த தர்ம சங்கடம் வந்திருக்காது

முதல்வரை நான் சந்தித்தேன். அவரிடம் பிரச்சனைகளைக் கூறிய பொழுது சிரித்துக் கொண்டார். முதலில் நாடகம் போடச் சொன்னார். மேக்கப் கலைக்காமல் விழா மேடைக்கு வர வேண்டியிருக்கும் என்றேன். பரவாயில்லை என்று சொல்லிவிட்டார். சாவியையும் அழைக்கச் சொன்னார். சினிமாக்காரரும் பத்திரிகை ஆசிரியரும் சேர்ந்து போடும் நாடகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இப்பொழுது என் திறமைக்கு சவால். சென்னை மாநாகரில் சினிமா உலகில் திறமை பெற்ற ஒருவர், பல பத்திரிகையாளர்கள், இன்னும் பல பெரிய பிரமுகர்களுக்கு முன் நாடகம்போட வேண்டும். நான்நடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. நாற்பது வயதுக்கு மேல் என்னை எப்படி நாயகி ஆக்குவது? பல வேலைகளுக்கு மத்தியில் எப்படி ஒத்திகை நடத்துவது? நாடகப் பயிற்சி இல்லாதவர்களை ஒன்று படுத்தி செய்ய இயலுமா? முதலில் மலைத்தேன். ஆனால் பின் வாங்க விரும்பவில்லை

மனோகர் ட்ரூப், சேஷாத்ரி ட்ரூப் இரண்டிலிருந்தும் நடிப்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்தேன். நாடக ஸ்கிர்ப்டை அவர்களிடம் கொடுத்தேன். அவர்களில் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்தேன். முடிந்த பொழுது மட்டும்தான் ஒத்திகையில் நான் கலந்தேன்.  நானே எழுதிய வசனங்கள் என்றாலும் அவைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அது என் குறை.ஆனால் நடிக்க வந்தவர்கள் அனைவரும் தொழில் முறை நடிகர்கள். எனவே என்னைச் சமாளித்துக் கொள்வார்கள்.

நாடக அரங்கிற்கும் பங்களா செட், வீடு செட் சேஷாத்ரி க்ரூப்பீல் வாங்க முடிவு செய்தது. ம்யூசிக்கிற்கு அப்பொழுது மேடையில் கொஞ்சம் பிரபலமான சந்திரன் க்ரூப்பை ஏற்பாடு செய்தேன். அதே போன்று லைட்,
மேடை நிகழ்வுகளை ஒழுங்காகக் கவனிக்க அனுபவம் உள்ள ஒருவரையும் ஏற்பாடு செய்தேன். நாடகம் என்றால் எளிதல்ல. இத்தனை அனுபவங்களும் இப்பொழுதுதான் எனக்குக் கிடைத்தன. வென்று காட்ட வேண்டும் என்ற தீவிரம் ஏற்பட்டு விட்டது

புதுப் புது உத்திகளும் தோன்ற ஆரம்பித்தன.
நாடக நேரம் 90 நிமிடங்கள்
முதல்வர் வரும் பொழுது வரவேற்பு உரை போல் வசனங்கள் எழுதினேன். பராசக்தி வசனங்களையும் இடையில் சேர்த்தேன். முதல்வர் உல்ளே நுழையும் பொழுதே பேச்சு ஆரம்பமாகிவிடும். அவர் உட்கார்ந்த பின்னும் பேச்சு தொடரும். அதாவது நாடக முக்கிய பாத்திரமான அம்மா பற்றி வசனம். அம்மா என்றால் எப்படி நாம் உருவகித்திருக்கின்றோம் என்று. இந்த வசனத்தை நான் தான் திரை மறைவில் வாசித்தேன்.. அம்மா பற்றிய சில வரிகள் முடியவும் அரங்கத்தில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டேன். மற்ற வசனங்களை ஒரு நடிகை வாசித்தாள்

திரை தூக்கப்படும் பொழுது முழுதாக விளக்குகள் எரியாது. நாற்காலி மேல் ஒளி விழும் அளவு ஏற்பாடு.
அரங்கத்தை நோக்கி உட்கார்ந்திருக்க மாட்டாள். அவள் பின் புறம்தான் தெரியும். ஆனால் அவள் விடும் சிகரெட் புகை மட்டும் வெளியில் வரும். ஆம் அந்த அம்மா அப்பொழுது சிகரெட் குடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவள் திரும்பி எழுந்திருக்கவும் ஒரே கைதட்டல். இடுப்பில் கைலி. காலர் பனியன். பாப் முடியலங்காரம். கையில் சிகரெட். அவள் அலட்சிய பாவத்துடன் நடைபயில்வது  , இப்பொழுதும் அவள் மேல்மட்டும் ஒளிபாய்ச்சப் படும். வசனங்கள் மைக்கில் ஓடிக் கொண்டிருக்கும். அவள் கணவன் விஸ்கி பாட்டுடன் வருவான். இருவரும் உட்கார்ந்து குடிக்க ஆரம்பிப்பார்கள்

இனி உங்களுக்கிடையில் நான் இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு
வசனங்கள் பேசுகின்றவர் நிறுத்திவிடுவார். எல்லா விளக்குகளும் இப்பொழுது எரிய ஆரம்பித்துவிடும். மாடியுள்ள பங்களா செட். கதையில் இந்த அம்மாவின் குணத்தை வசனத்தில் முதலிலேயே கூறப்பட்டு விடும். இத்தனையும் சில வினாடிகளில் முடியும். விளக்குகள் எரிய ஆரம்பிக்கவும் ஓர் கைதட்டு. தொழில் முறை நாடகமாக செய்திருந்தேன்.ஆங்கிலத்தில் ஒரு பாட்டு எழுதியிருந்து அதையும் நான் பாடினேன் repeat the song of joy என்று ஆரம்பிக்கும். வந்தவர்கள் அனைவருக்கும் வியப்பு. ஓர் அரசு நிகழ்ச்சியில் இப்படி ஒரு நாடகமா என்று ஆச்சரியப் பட்டனர்.யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை. லைட் முதல் எல்லாம் நான் சிந்தித்து ஏற்பாடு செய்தது. கதை, வசனம், டைரக்க்ஷன், நடிப்பு, இசை என்று சர்வமும் நானே

முதல் சீன் எப்படியோ அதே போல் கடைசி சீனும் உணர்ச்சி மயமாக அமைத்திருந்தேன். அந்த அம்மாவின் மகள் கொலை செய்யப் படுவாள். பதறிப்போய்க் கத்துவாள். அவலுடைய நல்ல மகன் வந்து அவள் குறைகளைக் கூறுவான். நீ அம்மாவா, நீ அம்மாவா என்ற உனர்ச்சி மிகுந்த வசனங்கள். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.

முதலில் நான் நடிக்க நினைத்தது வேறூ. புடவைத் தலைப்பைக் கிழித்துக் கொண்டு ஓடவேண்டும். நானோ ஓடாமல் , புடவையைக் கிழித்துக் கொண்டு  பயங்கரமாயப் பைத்தியக்கார சிரிப்பை சிரித்துக் கொண்டே கீழே விழுந்து உருண்டேன். என்னை மறந்து இப்படி நடித்தேன். பாத்திரத்துடன் அப்படி ஒன்றிப்போனேன். அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது.ஆம், நான் நடிப்பின் உச்சத்திற்குப் போய்விட்டேன்.

இடையில் ஒரு வேடிக்கையும் சேர்ந்தது. அரங்கத்தில் மறைவாக நின்று கொண்டு நாடகத்தைப் பார்த்து வந்த பத்து வயது சிறுவன் அம்மா என்று மேடைக்குள் ஓடி வந்து விட்டான். ஆம் அவன் என் மகன். போலீஸ் வந்து அவனைக் கூட்டிச் சென்றது

நாடகம் முடியவும் வேகமாக அங்கிருந்து விலகினோம். கூட்டத்திற்கு மேடையைச் சீராக்க வேண்டும். கலைஞர் மேடைக்கு வந்துவிட்டார். ஏதோ ஓர் குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதைப் போல் சாதரனமாக ஏற்பாடுகளைக் கவனித்தார். அரிதாரம் கலைக்காமல் விழா நிகழ்ச்சிகளைக் கவனித்தேன். முதலில் ஓர் சிரிப்பு கலைஞர் முகத்திலும் சாவி முகத்திலும் கண்டேன். அன்று கலைஞரின் பேச்சு முழுவதும் நாடகம்பற்றித்தான் இருந்தது. வசனங்களை அவ்வளவு அழகாக விமர்சித்தார். சினிமாவிற்கு வசனம் எழுதியே வாழ்க்கையில் முன்னுக்குவந்தவரல்லவா. ஆம் அவர் ஒரு கலைஞர். அவரை நான் அப்படித்தான் இன்றுவரை பார்க்கின்றேன்

“ ஓர் சாவித்திரியை நாம் இழந்துவிட்டோம். நடிப்பு உலகத்திற்கு இவள் வந்திருக்க வேண்டும்” கலைஞர் சாவியிடம் கூறி சாவி என்னிடம் கூறியது. வசிஷ்ட்ர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம். கிடைத்தது போல் ஓர் மன நிறைவு. ஓர் முதல்வர் முன், அதிலும் ஓர் கலைஞர் முன், மேலும் சென்னையில் முக்கியமான கலைவாணர் அரங்கில் தலை நகர பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மாநில அளவு அதிகாரிகள், பிரமுகர்கள், பெண்மணிகள் முன் நாடகம் போடுவது எளிதல்ல. மிகச் சிறந்த அனுபவம். இன்றும் மனம் அந்த கணங்களை எண்ணி மகிழ்கின்றது. இனிப்பான நினைவுகள்.

மேடை நாடகத்தில் என்ககேற்பட்ட பெரிய சவாலில் வென்றேன். அதுவே
நான் நடித்த கடைசி நாடகம். என் நாடக வாழ்க்கை அன்று முடித்துக் கொண்டேன். சிகரம் சிகரமாக இருக்கட்டும். மீண்டும் அந்த நாடகத்தைப் போடச் சொல்லி பல இடங்களிலிருந்து வேண்டுகோள் வந்தது. நான் மறுத்துவிட்டேன். ஒரு நாள் அனுபவம் போதும். அந்த ஒரு நாளுக்காக நான் உழைத்தது மூன்று மாதங்கள்.

என்னால் முடிந்ததா? ஆம் முடிந்தது. வென்றேன்

எனது பத்திரிகையுலகு தொடர்பினால்தான் அரசு, அரசியல் இரண்டிலும் உயர் நிலை மனிதர்களிடமும் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பத்திரிகை பலம் வாய்ந்தது. அதைப் பகைத்துக் கொள்ள விரும்பமாட்டார்கள். முடிந்த மட்டும்பத்திரிகை ஆதரவு பெற்றிட முயல்வர்.

பட்டிக்காட்டுப் பெண்ணிற்கு எப்படி பத்திரிகையுலகத்தில் செல்வாக்கு கிடைத்தது? சில கதைகள் வெளிவந்தால் செல்வாக்கு என்று அர்த்தமா?
வாடிப்பட்டிக்கும் தலை நகருக்கும் தூரம் அதிகம். எப்படி ஒரு சாதாரண பெண்ணால் சாதிக்க முடிந்தது?
நாம் அந்தக் காட்சியைப் பார்க்காமல் இருக்கலாமா?
இனி சீதாவின் பத்திரிகை உலக சகாப்தம் பார்க்கப் போகின்றோம்.
தொடரும்


No comments: