Friday, April 2, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-02

தளவாய் அக்கிரஹாரத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனம் அறையில் சுப்புலட்சுமி,தன் யார், மகள், அவள் தம்பி ஆகியோருடன் வாழ்ந்து வந்தாள்.

அவள் கணவர் மணி திடீரென்று ஒரு நாள் வீட்டிற்கு வந்தார்.பாப்பாவிற்கு அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சி.சுப்புலட்சுமிக்குக் கணவனைப் பார்த்ததில் ஓர் அமைதி. சாப்பிட்ட பின்னர் எல்லோரும் உட்கார்ந்து மணி சொல்லுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

வீட்டுக்கார அம்மாள் அங்கே வந்தார்கள். மணியை அருவருப்புடன் பார்த்தாள்.“நீங்க ஜெயில்லேருந்து தானே வரேள்?“என்று கேட்கவும் ஆமாம் என்று தலையாட்டினார் மணி.

“நீங்க இங்கே தங்க முடியாது. மற்ற ஜாதிக்காராளோட சாப்பிட்டு, சேர்ந்து வாழ்ந்துட்டேள். இது ஆசாரமான பிராமணாள் வீடு. வேற இடம் பார்த்து குடும்பத்தைக் கூட்டிண்டு போய்டுங்கோ."

வந்த மாமி சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.

சுப்புலட்சுமி துடித்துப் போனாள். மணிதான் சமாதானம் செய்தார். வேலை ஒன்று தேடிக் கொண்டு சீக்கிரம் கூட்டிப் போவதாய்ச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஐந்தரை வருடங்கள் கழித்து வந்த கணவன் ஒருநாள் கூடச் சேர்ந்து தங்க முடியவில்லை. அவளுக்கு அப்பொழுது 24 வயது சாதிப் பிரிவினையை அவளும் வெறுக்க ஆரம்பித்தாள்.

மூன்று மாதங்கள் மணியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அதன் பின் ஒரு கடிதம் சந்தோஷச் செய்தியைச் சுமந்து வந்தது. மணிக்கு எட்டயபுரத்தில் அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது. சுப்புலட்சுமியைக் குழந்தையுடன் வரச் சொல்லி விட்டார். தாயைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு எட்டயபுரம் சேர்ந்தாள்.

எட்டயபுர வாழ்க்கை தொடங்கியது.

அரண்மனையின் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர் மதிப்பிற்குரிய இராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும். அவர்களைக் கவனித்துக் கொள்ள அமர்த்தப் பட்டவர்களில் மணியும் ஒருவர். தன் ஆசை மகளைக் கூட்டிப் போய் அவர்களைக் காட்ட மணி விரும்பினார்.

அவருடைய இந்த உணர்வுதான் மகள் பல பெரியவர்களைச் சந்திக்கும் காரணமாக அமைந்தது.

“பாப்பா, இவர்களை நமஸ்காரம் பண்ணு.“

அவள் நமஸ்காரம் செய்தபின் கல்கி அவளை அருகில் வரவழைத்து ஏதேதோ கேள்விகள் கேட்டார். எதுவும் இப்பொழுது நினைவிற்கு வரவில்லை.

அவர்களைப் பற்றி அவள் அம்மா கூறியிருந்தது:

“வெள்ளக்காரன் கிட்டேயிருந்து நம் நாட்டைத் திரும்ப வாங்க சண்டை போடுகிற காந்திக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.“

அவளைச் சுற்றி நடக்கும் எல்லாமே புரிந்தும் புரியாமலும் இருந்தது.அப்பொழுது அவளுக்கு வயது எட்டு.

என் ஊர்வலம் ஆரம்பித்து விட்டது. வீட்டில் என் பெயர் பாப்பா. வெளியில் சீதாலட்சுமி. எட்டயபுரத்தில் வைத்துதான் பள்ளிப் பதிவேடுகளில் “குஞ்சம்மா“ என்ற பெயர் சீதாலட்சுமியாயிற்று.

பிறந்தவுடன் தந்தை வைத்த பெயர் சீதாலட்சுமி. பள்ளியில் சேர்க்கும் பொழுது என் தந்தை இல்லாததால் என் தாயார் குஞ்சம்மா என்று பெயர் கொடுத்து விட்டார். இதன் பின்னால் எனக்குத்தான் எத்தனை பெயர்கள்.

எதற்கு இத்தனை புள்ளி விபரங்களும் சம்பவங்களும் என்ற நினைப்பு தோன்றுவது இயல்புதான். ஊர்வலத்தின் மூலவர் ஒரு பெண். அதுவும் கிராமத்துப் பெண்.வரப்போகும் அனுபவங்களை வியப்புடனோ சந்தேகத்துடனோ பார்ப்பதைத் தவிர்க்கத் தான் விதை பற்றியும், அதற்கு அப்பொழுதே இடப்பட்ட உரத்தைப் பற்றியும் கூற வேண்டியது அவசியமாகின்றது. பயிர் வளர்ந்த விளைநிலம்பற்றித் தெரிந்தால் வியப்பு மறைந்துவிடும்.

எட்டயபுரத்தில் நாங்கள் குடிபுகுந்த வீடு இன்று பாரதியார் தெரு என்று அழைக்கப்படும் தெருவில், பாரதி தன் குடும்பத்துடன் சிறிது காலம் வாழ்ந்த வீடு. என் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது.

(தொடரும்)

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

Its happy to see a blog from our own place Ettayapuram.

Do you know Veni teacher (next house of Baharthi house).

Do you know Madhanagopal sir, parthasarathy (Gayathri medicals), kannan, sathish