Monday, April 5, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-03


இது என் சுய சரிதையல்ல;சரித்திரம் படைக்க நான் சாதனையாளரும் அல்ல.மிகச் சாதாரணமானவள்.ஆனால் 75 ஆண்டுகள் வரலாற்றுச் சுவடுகளின் பார்வையாளர். சில நேரங்களில் பங்குதாரராகவும் வாழ்ந்திருக்கின்றேன். என் நினைவுகள் நாட்குறிப்பிலிருந்து எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.ஓர் சாமானியன் நோக்கிலும் நிகழ்வுகளை அறிந்து கொள்வது வரலாற்று ஆய்வுகளுக்கு வலு சேர்க்கும்.

இனி ஊர்வலத்தைத் தொடர்வோம்.

எட்டயபுரத்தில் முதலில் நாங்கள் குடியேறிய வீட்டில் பாரதி, சிறிது காலம் தன் மனைவியுடன் குடியிருந்திருக்கின்றார் என்று என் தந்தை கூறினார். அதே தெருவில்தான் பாரதி பிறந்த வீடும் இருக்கின்றது. இப்பொழுது அது பாரதி நினைவு இல்லம். நான் அந்தத் தெருவுக்குப் போன பொழுது அந்த வீட்டில் வசித்தவர் பாரதியின் தாய் மாமன் சாம்பசிவ அய்யர்.

என் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையிலே எங்கள் ஊர் அரண்மனை. என் முதல் தோழி தங்கப்பாண்டியனின் வீடு. .ராஜா உயர்நிலைப் பள்ளியில் சேரவும் எனக்குக் கிடைத்த முதல் தோழி. தினமும் அரண்மனைக்குச் சென்று அவர்களுடன் விளையாடுவேன். அதே போல் முதல் கார்ப் பயணமும் அவர்களுடன் அரண்மனைக் கார்ப் பயணம் தான். அது கடைசியல்ல, ஆரம்பம்.

சமீபத்தில் என் முதல் தோழியைக் காணச் சேன்றேன். எங்கள் சந்திப்பு 60 வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்தது. பார்த்தவுடன் அவர்களைக் கட்டி பிடித்துக் கொண்டு அழுது விட்டேன். அவர்கள் கண்கலங்க என்னை அரவணைத்து வீட்டுக்குள் கூட்டிச் சென்றார்கள்.

அவர்களின் கணவரிடம் என் பிள்ளைப் பருவச் சேட்டைகளைக் கூறினார்கள். சின்னப் பிள்ளைகளின் சிறுகதைகள் சுவாரஸ்யமான முத்துக்குவியல். அரண்மனைக் குமாரியின் குடும்பம்,தங்கப்பாண்டியன் என்ற தங்கம்மாளின் குடும்பம்,பார்த்து மகிழ்ந்தேன்.

மீண்டும் நினைவுகள் என்னை உருட்டியது

எட்டையயபுரம் ஒரு ஜமீன். ஜமீந்தார்களை உள்ளூர்வாசிகள் “மகாராஜா“ என்றுதான் குறிப்பிடுவோம். அழகான அரண்மனை. தர்பார்களும், கொலு மண்டபங்களும்,அந்தப்புரங்களும்,அரண்மனைக்கு முன் பெரிய திடலும்,குதிரைலாயங்களும்....சொல்லிக்கொண்டே போகலாம். இப்பொழுது அவைகள் பழங்காலச் சின்னங்களாய்ச் சிதிலமடைந்து காட்சியளிக்கின்றன.

அரண்மனையில் கொலு வைப்பார்கள்.பெரிய சரஸ்வதி சிலை,முழுவதும் தங்கம். நவராத்திரியில் ஊருக்குக் கொண்டாட்டம். தினமும் கச்சேரி. நடணம். சமஸ்தானத்திற்கென்று வித்துவான்கள். நான் பார்த்து நினைவில் இருப்பவர்கள், ஜி.என். பாலசுப்பிரமணியன் தன் சிஷ்யை வசந்தகுமாரியுடனும் வசுந்திரா தன் பெண் வைஜயந்தியுடன் வந்திருந்தார்கள்.

மகாராஜாவின் பிறந்த நாளுக்கும் இசை மேதைகளும் சினிமா நடிகர்களும் வந்திருக்கின்றார்கள்.தியாகராஜ பாகவதர்,என்.எஸ்.கிருஷ்னன்,டி.ஏ.மதுரம் ஆகியோரும் வந்திருந்தனர்.விளக்குகள் அலங்காரமும் நாதஸ்வரஓசையும் ஊருக்கே அழகைக் கூட்டும். எல்லோரும் அவரவர் வீட்டு விழாவாக எண்ணி மகிழ்வர்.நான் சுற்றிச் சுற்றி மகிழ்ந்த நாட்கள்.

மன்னர் ஆட்சியும் அரண்மனைக் காட்சிகளும்,திருவிழாக்களின் கலகலப்பும், சுவையூட்டும் கலை நிகழ்ச்சிகளும் கண்டு களிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாமன்னன் இராஜராஜன் காலத்தில் இல்லாமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தையும் இந்த அனுபவங்கள் ஏற்படுத்தியதை மறுப்பதற்கில்லை.

ஊரில் இருக்கும் உயர்நிலைப் பள்ளி, ராஜாவால் நடத்தப் பட்டுவருகின்றது. சுதந்திர தாகத்தை நினைவூட்டும் பெயரில் “பாரத மாதா” என்ற பெயர் கொண்ட திரையரங்கு அரண்மனைக்குச் சொந்தமானது.எம்.கே. தியாகராஜ பாகவதர் இந்த அரங்கில் பாட்டு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

ஊருக்கு முக்கியமானவர்கள் வந்தால் அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்து உபசரிக்கும் பழக்கம் இருந்து வந்தது. விருந்தோம்புதலில் பேரரசுகள் மட்டுமல்ல, சின்ன ஜமீன்களும் குறைந்தது அல்ல.

கல்கியைப் பார்த்து விட்டு வீடு திரும்பும் பொழுது கல்கி பற்றி நிறைய செய்திகளைக் கூறினார் என் தந்தை. என் மனத்தில் பதிந்தது ஒன்றுதான்.

கல்கி கதை எழுதுவார்.ஏற்கனவே அவர் காந்திக் கட்சி என்பதை என் தாயார் கூறியிருந்தார்கள்.

பாரதியைப் பற்றிய செய்திகள் கூறினார். பாட்டு எழுதியவர். பாப்பாக்களுக்கும் பாட்டு எழுதியவர். பாரதியின் செய்திகள் என்னை கனவுலகத்திற்கு இழுத்துச் செல்ல ஆரம்பித்தன.

சொன்ன கதை அத்தனையும்
மாலை மயக்கத்தினால் உள்ளத்தே தோன்றியதோர்
கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்.

பாரதியின் குயில் பாட்டு.

அனுபவத்திற்கு முதல் பாட்டு.

அந்த வீட்டில் ஒவ்வொவொரு இடத்திலும் பாரதியை உணர்ந்தேன். அவர் நின்ற இடம்,உட்கார்ந்த இடம்,சாப்பிட்ட இடம்,படுத்த இடம் என்று நானே நினைத்துத் தொட்டுப் பார்த்து மகிழ்வேன்.மாடியறை ஓர் சின்ன இடம். பாரதி இங்கு படுத்திருந்து தனிமையில் கற்பனைத் தேரில் வலம் வந்திருப்பானோ?நானும் கற்பனை உலகில் வாழக் கற்றுக் கொண்ட இடம் அந்த வீடு. இன்றுவரை கற்பனை உலாவை நான் நிறுத்தவில்லை!

வீட்டுப் பின்புறத்தில் ஓர் கிணறு. சில மரங்கள். காலையில் அங்கு சென்று உட்கார்ந்தால் குருவிகள் வந்து கீச் கீச் என்று சத்தம் போட்டுக் கொண்டே விளையாடிக் கொண்டிருக்கும்.இங்குதான் காணி நிலம் வேண்டும் பிறந்திருக்குமோ?

பாரதி அவசரப்பட்டு செத்துவிட்டானே! அவன் இருந்திருந்தால் எனக்கு ஓர் தாலாட்டுப் பாட்டு பாடியிருப்பானே!எத்தனை பேராசை!

நித்தமும் கனவுகண்டால் நெஞ்சத்தே சுகமுண்டாம்.
நினைப்பதுவே இன்பமென்றால் கிடைத்து விட்டால் எந்நிலையாம்.

சில வீடுகள் தள்ளி அமைந்திருந்தது பாரதி பிறந்த வீடு. அங்கே வசித்து வந்த சாம்பசிவ அய்யரைத் தேடி தினமும் சென்று விடுவேன்.

“மாமா, பாரதி கதை சொல்லுங்கோ , அவர் பாட்டு பாடுங்கோ.“

உற்சாகமாய் ஊர்வலம் தொடரும்

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

hi I too an old student of Raja Hr sec schol, Happy to meet you.

Do u know Veni teacher, madhavan sir.

தமிழ். சரவணன் said...

​தொடரட்டும் நி​னைவ​லைகள்!

சீதாம்மா said...

//hi I too an old student of Raja Hr sec schol, Happy to meet you.

Do u know Veni teacher, madhavan sir.//

துரைராஜ்-சாவித்திரி தம்பதியர் மகள் வேணி டீச்சரா? மிக நன்றாகத் தெரியும்!

ராம்ஜி_யாஹூ said...

yes, Durairaj sir's daughter, veni teacher only