Friday, April 23, 2010

எண்ணங்கள் ஊர்வலம்-08

எண்ணங்களின் பயணத்தில் அவ்வப்பொழுது மனம் லயித்து அங்கேயே தங்கிவிடுகின்றது. Time Machine எதுவுமின்றி அக்காலத்திற்கே போய் விடுகின்றேன். தோல்விகளைக் கூடச் சுவையாக உணர்கின்றேன்.

என் நண்பர்கள் கூறுவார்கள்: "உனக்கு வயதாகியிருக்கலாம். ஆனால் நீ பேசும்பொழுது உன் பேச்சில் இளமை இருக்கின்றது.

மூளைக்கு வேலைகள்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வளமான சிந்தனைகள் சீரிளமைகாக்கும். தோல்விகளில் மூழ்கி விடாமல், சிறிய வெற்றியாயினும் அதனை நினைத்து உற்சாகம் கொள்ளுதல் மனத்திற்குச் சத்துணவு. என் சிறிய சாதனைகளையும் நினைத்து மகிழ்வதால், என் உடல் தளர்ந்த பொழுதும் மனம் இளமையின் வலிவுடன் இருக்கின்றது.

முதல் வெற்றியும் முதல் தோல்வியும் ஒரே இடத்தில் கிடைத்தன.

என் தோழியின் வீட்டு வாயிற்படியில் உட்கார்ந்து விட்டேன். அவள் பெற்றோருக்கு என்னை மிகவும் பிடிக்கும்.

வாசலில் உட்கார்ந்த என்னைப் பார்த்துத் தவித்துப்போனார்கள். அவர்கள் மிகவும் அமைதியானவர்கள்.ஊர்ப்பழி வந்தால் மகளுக்குத் திருமணம் ஆகாதே என்ற பயம்.

இராமபிரானே ஊர்ப்பழிக்கு அஞ்சி தன் ஆசைமனைவியை அக்கினியில் குதிக்கவைக்கும் பொழுது, கிராமத்து மனிதன் என்ன செய்ய முடியும்?

வேடிக்கை பார்க்க சிலர் வந்து விட்டனர்.

வந்தவர்களுக்கும் எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆச்சரியம் என்னவெனில் வந்தவர்களில் சிலர் என்பக்கம் பரிந்து பேசினர். சில மாதங்களுக்குள் மனிதமனம் மாறிய விந்தை உணர்ந்தேன். என் தோழியின் அப்பாவும் மகளைப் பள்ளிக்கு அனுப்ப ஒப்புதல் கொடுத்து விட்டார். உடனே அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து என் தோழியின் கையால் உணவு உண்டேன்.

அவள் முகத்தைப் பார்த்தேன். ஜீவனில்லாச் சிரிப்பைக் கண்டேன். அப்பொழுது அதன் அர்த்தம் தெரியவில்லை. சில மாதங்களில் புரிந்த பொழுது திடுக்கிட முடிந்ததேயொழிய கையாலாகாமல் நின்றுவிட்டேன்.

அவளுக்குத் திருமணம் நிச்சயமாகி விட்டது!

அவள்கவிதை மனத்திற்குச் சமாதி கட்டப் பட்டுவிட்டது.

திருமணமானால் கவிதை போய் விடுமா என்று கேட்கத் தோன்றும் . எங்கள் காலச்சூழல் அப்படி!

காலத்தைச் சொல்லும் பொழுது என் தாயின் காலம் நினைவிற்கு வருகின்றது.

ஒரு பெண் பூப்படையும் முன் திருமணம் செய்துவிட வேண்டும் என்று பிராமணச் சமுதாயத்தின் கட்டுப்பாடு. என் பெரியம்மாவுக்கு ஐந்து வயதில் திருமணம். அவர்கள் 21 வயதில் கணவனை இழந்தார்கள். அவர்கள் மிகவும் அழகானவர்கள் நீண்ட கூந்தல். கணவனை இழக்கவும் அவர்கள் கூந்தல் மழிக்கப்பட்டது.

உண்பதிலிருந்து உறங்குவது வரை கட்டுப்பாடுகள்.

என் தாய்க்கு 12 வயதில் திருமணம். அக்காலத்தில் ஐந்து நாட்கள் திருமணம். பெண் பாட்டு கற்றிருக்க வேண்டும். பெண் பார்க்கும் சடங்கில் பெண் பாடிக்காட்ட வேண்டும். அவளுக்குப் பேசத்தெரிந்திருக்கிறதா, கூந்தல் நீளமானதா, சரியாக நடக்கத் தெரிகிறதா, ஏன், அடுப்பு பற்ற வைக்கத் தெரிகிறதா என்றெல்லாம் பரிசோதிப்பார்கள்.

பெண்ணைச் சந்தைமாடாக நடத்திய காலத்தில் பிறந்தவள் நான்.(திருமணத்திற்குப் பின் எத்தனை நாட்கள் பெண்ணைப் பாடச் சொல்லிகேட்டிருக்கின்றார்கள்?). என் தாயின் திருமணத்தின் பொழுது 13 ரூபாய்க்கு ஒரு பவுனும், ஒரு ரூபாய்க்கு 12 படி அரிசியும் விற்ற காலம். ஒரு சல்லிக்கு ஒரு கூறு கடலை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். ஓட்டைக் காலணாக்கள் சேர்த்து மாலை கட்டி விளையாடியிருக்கின்றேன். எரிச்சலும் இன்பமும் கலந்த கலவை உணர்வுகள்.

என் தோழிக்குத் திருமணமாகிச் சென்றுவிட்டாள். அடுத்து மீனாட்சி சடங்கானபின்னும் பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். பெண் பூப்படைவதைச் சடங்காகிவிட்டாள் என்றும் கூறுவதுண்டு.

எப்படியோ கிராமத்திலும் பெண்கல்விக்குத் தடை நீங்கியது. தொடர்ந்து கற்கின்றார்களா என்பது வேறு பிரச்சனை. முட்டுக்கட்டை நீக்கப்பட்டதே பெரிது. எங்கள் வீட்டில் ஒருத்தியாய் இருந்த முத்துவிற்கும் திருமணமாகி கோயில்பட்டிக்குச் சென்றுவிட்டாள். பிரிவுகளின் வலியையும் புரிந்து கொண்டேன்.

என் மனத்தை மிகவும் பாதித்த செய்தி அண்ணல் மகாத்மா காந்தியின் மரணச்செய்தி.

அதிலும் அவர் கொலை செய்யப்பட்டது தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியாக இருந்தது. வானொலியில் செய்தி அறிவித்த பொழுது என் தந்தை உடனே மயக்கம் போட்டு விழுந்தார். அவர் விழுந்ததைக்கூட உணரமுடியாமல் அருகில் மலைத்துப் போய் நின்று கொண்டிருந்தேன். அதிர்ச்சி முதலில் ஊமையாக்கிப் பின்னர் அழவைத்தது. கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என் தந்தையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

ஓர் நல்ல மனிதரை ஏன் சுட்டுக் கொன்றார்கள்? இரண்டுங்கெட்டான் வயது. புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவேசம் தோன்றியது. என் பார்வையின் வட்டம் பெரிதானது. ஒவ்வொரு செயலையும் ஊன்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.

இதுவரை தோன்றாத எண்ணங்கள் தோன்றலாயின. அதுவும் என் வீட்டில்
ஆரம்பித்தது. என்னை உருவாக்கியதில் என் தந்தை பெரும் அக்கறை எடுத்துக் கொண்டார்;மறுக்கவில்லை.ஆனால் அவருடைய இன்னொரு முகம் தெரிந்த பொழுது எழுந்த கோபத்தைப் பாசத்தால் அழிக்க முடியவில்லை.

என் தந்தைக்கு முன் கோபம் அதிகம். எதற்கெடுத்தாலும் பிரம்பெடுத்து அடிக்க ஆரம்பித்து விடுவார். என்னைவிட என் தாயார்தான் நிறைய அடிகள் வாங்கியுள்ளார். அவர் சொன்னவுடன் செய்துவிட வேண்டும். இல்லையென்றால் அடி. நான் தவறு செய்து அடி வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது என் தாயார் குறுக்கே விழுந்து நிறைய அடிகளை வாங்கிக் கொள்வார்.

“பெண்ணை வளர்த்திருக்கிறாயே, கொஞ்சமாவது அடக்கம் இருக்கா?" இப்படி ஒரு பழியை என் தாயின் மேல் போடும்பொழுது என் தந்தையை முறைத்துப் பார்ப்பேன். “என் மகளைஆண்பிள்ளை போல வளர்ப்பேன் “ என்று என்னை முரட்டுத்தனமாக வளர்த்தது என் தந்தை!

புகழ் வந்தால் தந்தைக்கு, பழி வந்தால் தாய்க்கா? என்னடா உலகம்?

மனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. இவ்வளவு அடி வாங்க விட்டு என் தாயார் தந்தைக்குக் கீழே விழுந்து நமஸ்காரம் செய்து,"குழந்தையை மன்னிச்சுடுங்கோ," என்று கெஞ்சுவார்கள். அப்பொழுதும் திட்டிக் கொண்டே தந்தை போவார். நான் பெரிதாகத் தப்பும் செய்திருக்க மாட்டேன். எனவே அவர் கொடுத்த தண்டனை நியாயமற்றது என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். அடி வாங்கிக் கொண்டே கீழே விழுந்து வணங்கும் என் தாயின் அசட்டுத்தனம் எரிச்சலைக் கொடுத்தது. பலமுறை இதைப் பார்க்கவும் என் ஆத்திரம் கூடியது.

ஏமாற்றுபவர், ஏமாறுபவர் இருவர் மீதும் கோபம் வந்தது.

இன்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு இதனை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது இங்குள்ள சூழல்கள், விதிகளை ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. இங்கு பிள்ளைகளை அடிக்க முடியாது. போலிஸ் வந்து விடும்.

பெற்றோரின் வன்முறைச் செயல்கள் பிள்ளைகளை எப்படி மாற்றிவிடும் என்பதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உளவியல்படி மனிதனின் பெரும்பாலானக் குணங்கள் பிள்ளைப் பருவத்தில் பதியப் படுகின்றன.

என் காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களைத் தலையில் குட்டுவார்கள்; கிள்ளுவார்கள்; பிரம்படி கொடுப்பார்கள்;பெஞ்சுமேல் நிற்க வைப்பார்கள்! இங்கே மாணவர்களைத் தொட்டால்கூட குற்றமாக்கி விடுவார்கள்.

என் காலத்து ஆசிரியர்களை இக்காலத்தில் கற்பனையில் கொண்டுவந்து ரசித்தேன். இந்த வயதிலும் இப்படி ஒரு அற்ப சந்தோஷம்.

மற்ற குடும்பங்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டேன். வீட்டுக்குக் குடித்துவிட்டு வரும் ஆண்கள், பொண்டாட்டி பிள்ளைகளை அடிக்கும் ஆண்கள், மனைவி இருக்கும் பொழுதே இன்னொரு பெண்ணுடன் வாழும்ஆண்கள்,செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் ஆண்கள் எனக்குள் ஏற்கனவே தோன்றியிருந்த கோபத்தை மேலும் வளர்த்தனர்..

அப்பாவும் அம்மாவும் உடலுறவு கொண்டு பிள்ளையைப் பெறுவார்கள் என்றுகூட எங்கள் காலத்தில் தெரியாது. அப்பாவித்தனத்துடன் வாழ்ந்த காலம். இன்று பிரமிக்கத்தக்கச் சூழலில் குழந்தைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அக்காலத்தில் யார் எதைச்சொன்னாலும் நம்புவோம். மூடப்பழக்கங்களுக்கு அதுவும் ஒரு காரணம். அர்த்தமற்ற அச்சங்கள் அவைகள் வளர்வதற்கும் காரணம் என்பதையும் மறத்தல் கூடாது.

முரண்பாடுகளை உணரத் தொடங்கிய பொழுது எனக்கு வயது 14. இனிமையைச் சுவைக்க வேண்டிய பருவத்தில் கசப்பான நிகழ்ச்சிகளைப் பார்க்கப் பார்க்க மனக்கசப்பும் வளர ஆரம்பித்தது. பேச்சுக்கும் செயலுக்கும் மாறுபாடாக நடக்கும் பல பெரியவர்களின் நிழலாட்டம் என்னைப் போராளியாக உருவாக்க ஆரம்பித்தது. இந்நிலையில் எங்கள் குடும்பம் இடம் மாறியது. வெளி உலகம் பற்றிய செய்திகள் அறியும் சூழலுக்குள் நுழைந்தேன்.

இந்த வயதிலேயே உலக அரசியல் தொடங்கி உள்நாட்டு அரசியல் வரை கற்க ஆரம்பித்தேன். நிமிர்ந்து நின்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

ஊர்வலத்தின் உற்சவத்திற்கு அச்சாரம் போட்ட அனுபவங்கள் பெற புதிய குடிலுக்குச் சென்றேன்

(ஊர்வலம் தொடரும்)

1 comment:

கலகலப்ரியா said...

ம்ம்... அருமையான பகிர்வு.. தொடரட்டும்.. உங்க போராட்டம்... :)