Friday, February 24, 2012

நினைவலைகள் 8

நினைவலைகள் -8

உங்களிடம் ஓர் செய்தி கூறுவதாகச் சொல்லி இருந்தேன். அச்செய்தியை நான் வேடிக்கையாக நினைக்கவில்லை. ஆய்வுக்குரிய செய்தியாக நினைத்தேன். கள் குடித்தல் என்பது காலம் காலமாக சமுதாயத்தில்

இருந்துவந்த பழக்கம். காபி, டீ வருவதற்கு முன்பே வந்துவிட்ட பழக்கம்.

காட்டிலே வாழும் பொழுது அவனுக்குச் சுலபமாகக் கிடைத்த ஓர்

பானம். மிருகங்களை அடித்துப் பச்சையாய்த் தான் நம் மூதாதையர்கள் சாப்பிட்டனர். இதற்காக யாரும் வெட்கித் தலை குனியவேண்டியதில்லை.

எனவே மாமிசம் சாப்பிடுவதும் கள் குடிப்பதும் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது. மனிதனின் நாகரீகமும் பண்பாடும் வளர வளர உணவு, உடை , இன்னும் பல விஷயங்களில்

மாற்றம் சிறிது சிறிதாகப் புகுந்தது.எதையும் பேசும் பொழுது , காலத்தையும் அப்பொழுது மனிதன் வாழ்ந்த முறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் பரிமாணம். அந்தக் கள் பற்றிப் பேசலாம்.

முதலில் இறக்கப்படூம் கள்ளின் பெயர் சுத்தக்கள்ளு. இதில் மிகவும் கொஞ்சமாகவே போதை இருக்கும். ஆனால் ஆண்களுக்கு இது வீரியத்தை அதிகமாக்கும். ( இன்றைய வயாகரா போல). அடுத்து சுண்ணாம்பு கலந்தவுடன் அது பதநீர். இது உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். மூன்றாவது கள்ளைப் பாடம் செய்து கொடுப்பது போதைக் கள்ளு இதுவே அதிகமான போதை தரும். இதைச் சொன்னவர் பெயர்

சுந்தரம்பிள்ளை. இவர் ஊர் நெல்லை மாவட்டம் கடம்பூரின் அருகிலுள்ள ஊர் இளவேலன்கால். இவருக்கு வயது 85க்கு மேல் இருக்கும். இவரை அமெரிக்காவில் என் வீட்டிற்கு வந்த பொழுது பார்த்தேன் பேசினேன். இந்தவயதிலும் மிக திடகாத்திரமாக இருந்தார். வேகமாக நடப்பார். இங்கு வந்தால் சும்மாவே இருக்க மாட்டார். மொழி தெரியாவிட்டாலும் இவர் சுறுசுறுப்பால் அமெரிக்கர்களும் இவருடன் பழகுவர். இவர் சுத்தக் கள்ளு நிறைய குடித்திருக்கின்றாராம். இதற்கு மேல் இதுபற்றி கேள்வி கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. அவரை நேரில் பார்த்துக் கேட்டுக் கொள்ளலாம். அல்லது புதுக்கள்ளுபற்றி ஆராய்ச்சி செய்யலாம். வயாகரா தேவை இருக்காது. இது ஓர் ஆய்வுக்குரிய விஷயம்.

அக்காலத்தில் விருந்தோம்புதலில் மாமிச உணவும் கள்ளும் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. கள்ளுண்ணாமைச் சிறப்பும் சொல்லப்பட்டிருக்கின்றது. .

இது போதும். கிராமத்தைப் பார்ப்போம்

கிராமங்களில் குடிதண்ணீருக்குக் கிணறுகள், குடிதண்ணீர்க் குளங்கள், கண்மாய்கள் உபயோகப்படுத்தப்பட்டன. சில வீடுகளில் கழிவறைகள் கட்டப் பட்டிருந்தன. இப்பொழுது இருப்பவை போல் இருக்காது

காலையில் சுத்தப் படுத்தப் பட வேண்டும். பெரும்பாலும் இருள் போகும் முன் ஊரின் எல்லைக்கு ஒதுக்குப் புறங்களே காலைக் கடன்களைக் கழிக்கும் இடங்களாக இருந்தன. இந்த இரண்டரை மாதங்களில் பெரிய அளவில் கட்டப் பட்ட வீடுகள் பார்த்ததில்லை.

வீட்டிலே சடங்குகள் சிறப்பாக நடத்துவர். பெண் பெரிய மனுஷி யானால் சடங்கு, நிச்சயதார்த்தம், திருமணம் போன்றவைகள் வீடுகளில் செய்தனர். குழந்தைக்குக் காது குத்தலுக்குக் கோயில்களுக்குப் போய்ச் போய்ச் செய்வதும் உண்டு. கிராமங்களில் ரசிக்கத் தக்க ஒன்று இருந்தது. மனிதன் இசையுடன் வாழ்வது. மொழி பிறக்காத காலத்தில் கூட ஓசை எழுப்பி , ஏதோ குரல் எழுப்பிக் கூத்தாடி மகிழ்வர். உலகம் முழுவதிற்கும் இது பொதுவானது. ஆனால் நம் தமிழன் இசையை பலவிதங்களில் பயன்படுத்தினான். தாலாட்டும் உண்டு. ஒப்பாரியும் உண்டு. ஏற்றப் பாட்டு, நாத்து நடும் பாட்டு, என்று தொழில் செய்யும் பொழுது கூடப் பாடிக்கொண்டே களைப்பின்றி பணி புரிவான்.பாடுபவர்கள் அனைவரும் கவிஞர்களே. எப்படித்தான் வார்த்தைகள் வருமோ, தடையின்றி இராகத்துடன் பாட்டு வெள்ளமெனப் பெருகி இசைப்பர். என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவர்களிடமிருந்து நாட்டுப் புறப் பாடல்கள் கற்றுக் கொண்டேன்.

அடுத்து சினிமா. இதைபற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? சில ஊர்களில் டெண்ட் கொட்டகையில் சினிமா நடக்கும். பள்ளிகளுக்கு அனுப்பப் பிடிக்காது. ஆஸ்பத்திரிக்குப் போகக் கூடத் தயக்கம். ஆனால் சினிமா மட்டும் எங்கு நடந்தாலும் போய்ப் பார்க்க வேண்டும். சினிமா ஆர்வத்திற்குக் குறைவில்லை. இறைவனைப் போல் எங்கும் நிறைந்தி ருந்தது சினிமாப்பைத்தியம். இயல், இசை, நாட்டியம் முத்தமிழல்லவா?

தமிழன் கொஞ்சம் அதிகமாகவே சினிமா மோகம் கொண்டுள்ளதை மறுக்க இயலாது. இந்தப் போக்கால் அரசுப்பீடத்திலும் அவர்களை அமர்த்திப் பார்த்து ரசிக்கின்றனர்..

கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு உண்டு. குல தெய்வங்கள் வெளியூரில் இருந்தால் குடும்பமாகப் போய் வருவர். பொங்கல் வீட்டில் வைப்பதுண்டு. கோயில்களில் சென்று பொங்கல் வைத்து வழிபடுதலும் உண்டு. கோழி, ஆடு பலி கொடுப்பதும் உண்டு.

என்னை மன்னிக்கவும். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள். ஆனால் மூடப் பழக்கங்களை வெறுப்பவள். கடவுள் பெயரால் தீமைகள் புரிந்தால் தயங்காமல் அங்கேயே சுட்டிக் காட்டத் தயங்காதவள். சாதி, மதம், மொழி, மண் இவைகளின் ஆளுமை என்னிடம் கிடையாது. “யாதும் ஊரே யாவரும் கேளீர் “ என்ற தமிழ்ப் பாடல் வெறும் பெருமைக்காகச் சொல்லுபவள் இல்லை நான். என் மதம் மனித நேயம். இறைவன் படைத்த எல்லா உயிர்களும் ஒன்றே. . எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன. என் கருத்தை பிறரிடம் திணிக்க மாட்டேன். ஆனல் சொல்ல நினைப்பதைச் சொல்லுவேன். இறைவன் படைத்த எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். கடவுள் மிக மிக உயர்ந்தவர். அவரை வியாபாரம் செய்கின்றவர்களைக் காணும் பொழுது மனம் வேதனைப் படுகின்றது.

கிராமங்களில் கூட இந்து முஸ்லீம் அப்பொழுது சண்டை போட்டுக் கொண்டதில்லை. மாமன், மச்சான் என்று சொல்லிப் பழகுவார்கள்.

சாதி உணர்வு இருந்த ஊர்களிலும் இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் பிரியமாகப் பழகுவதைப் பார்த்திருக்கின்றேன்.. மதம் இறைவனைப்பற்றி மட்டும் சொல்லும் வரையில் பிரச்சனையில்லை. அதிகார உணர்வு வந்துவிட்டால் அரசியலுக்குண்டான அத்தனை குணங்களும் இணைந்துவிடும். மதம்பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை .பின் தொடர் வேறு திசையில் பயணம் செய்ய வேண்டி வந்துவிடும். என் நோக்கம்

குடும்பம் என்ற கோட்பாடு சிதைந்து விடக்கூடாது. குடும்பங்கள் அடங்கிய சமுதாயம் அன்பும் அமைதியும் நிறைந்து இயங்க வேண்டும்.

மரணம் நடந்தால் ஊரே கூடிவிடும். கல்யாணத்திற்குப் போக முடியாவிட்டாலும் சாவுக்கு அவசியம் போயாக வேண்டும். பிறந்தவுடன் மனிதன் அழுகின்றான். வாழும் காலத்தில் என்னென்ன வதைகள் படவேண்டுமோ என்று நினைப்பிலே பிறந்ததுவோ அழுகை?1. இது கற்பனை...செத்தவுடன் மவுனம். அவன் வேதனைகள் முடிந்து விட்டன. மற்றவர்கள் அழுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தின் துணை ஒன்று துண்டித்துப் போய்விட்டது. இதுதான் வாழ்க்கை!

இரண்டரை மாதங்களும் கடந்து போனதே உணர முடியவில்லை.

பிரச்சனை கேள்விப்பட்டேனே தவிர எனக்கு யாரும் பிரச்சனைகள் கொடுக்கவில்லை. கிராமங்களில் என்னிடம் மிகவும் பிரியமாக இருந்தனர். அவர்களும் என்னிடம் தங்கள் பிரச்சனைகளைக் கூறினார்கள். என்னுடைய அணுகுமுறைகளும், என்னுடைய சரளமாகப் பழகும் தன்மையும் , வம்பு பேசிய சக அதிகாரிகள் கூட என்னை மதிக்கத் தொடங்கினர், முதலில் முகம் மலந்து வரவேற்காத என் மேலதிகாரி கூட புறப்படும் பொழுது புகழுரை பேசி வாழ்த்தி அனுப்பினர். காந்தி கிராமத்தில் ஐந்து மாதக்காலம் பயிற்சி. என்னை சமுதாயப் பணிக்குப் பொருத்தமாக முழுமையாக்கியது காந்திகிராமம்.

காந்தி கிராமம்

காந்தியின் பெயரில் இருந்ததால் என்னவோ எளிமையும் அழகும் ஒருங்கிணைந்த ஓர் அமைதிக்குடிலாக அமைந்திருந்தது. இப்பொழுது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன

அங்கே பல பயிற்சிகள் நடைபெற்று வந்தன.அனாதரவான பெண்களுக்குச் சேவை இல்லமும் இருந்தது. அந்த இடத்தையொட்டி சிறிது தள்ளி கிராமிய வளர்ச்சிப் பல்கலைக்கழகமும் இருந்தது. காந்தி கிராமத்தை அப்பொழுது நிர்வகித்து வந்தவர் டாக்டர். திருமதி சவுந்தரம் ராமச்சந்திரன் ஆவார்கள். மதுரையில் அக்காலத்தில் கோலோச்சி வந்த டி.வி.எஸ் குடும்பத்தின் மகள். மத்திய அரசிலும் அமைச்சராக இருந்தவர்கள்.காந்தீய வழியில் எல்லாம் நடந்து வந்தன

மதுரை மாவட்டத்தில் கல்லுப்பட்டியில் உயர்திரு குருசாமி அய்யா அவர்கள் தலைமையில் ஓர் பயிற்சிப் பள்ளி உண்டு. ஆனால் இங்கே

சில பிரிவுகளுக்கே பயிற்சி கொடுத்து வந்தனர்.

இவ்விரண்டு பயிற்சி நிலையங்களிலும் பயிற்சி பெற்றவர்களிடம் காந்தீய உணர்வை இப்பொழுதும் காணலாம். .எளிமையும் உழைப்பிற்குத் தயங்காத இயல்பும் இருக்கும்.

காலம் மாறிவிட்டது. இப்பொழுது இருக்கும் காந்தி கிராமத்தில் வசதிகள் வந்துவிட்டன. ஒர் கல்வி நிறுவனமாகக் காட்சியளிக்கின்றது.

எங்கள் பயிற்சி காலத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றேன்.

நான் கொடுத்துவைத்தவள். சௌந்திரம் அம்மா, அம்புஜம்மா இன்னும் பல பெரியவர்களின் நேரடி வழி காட்டலில் பயிற்சி பெற்றவள். கல்லறைக்கருகில் இருக்கும் எனக்குச் சமுதாய அக்கறை இருப்பதற்குக் காரணமே இது போன்ற பெரியவர்கள் தான்.

“பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்”

நல்லவர்களின் தொடர்பு நம்மைச் செம்மைபடுத்தும். எங்களுக்கு யாரிடமும் காழ்ப்புணர்ச்சியை அவர்கள் விதைக்கவில்லை. ஆதாயம் தேடி அவர்கள் சேவை செய்யவில்லை.. சமுதாய அக்கறையுள்ளவர்கள் அன்பையும் ஒருமைப்பாட்டையும் மக்களிடையே நிலைநிறுத்த வேண்டும்.

தொடக்கம் இனிய ராகமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் சிறிது சிறிதாக

வரலாற்றில் அபஸ்வரங்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டதை நாம் மறுத்தல் இயலாது. இயன்றமட்டும் ஆராய்வோம்.

அலைகள் வரும்

No comments: