Wednesday, February 29, 2012

நினைவலைகள் 9

நினைவலைகள் -9

காந்தி கிராமம்

காந்தியின் பெயரில் இருந்ததால் என்னவோ எளிமையும் அழகும் ஒருங்கிணைந்த ஓர் அமைதிக்குடிலாக அமைந்திருந்தது. இப்பொழுது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன

அங்கே பல பயிற்சிகள் நடைபெற்று வந்தன.அனாதரவான பெண்களுக்குச் சேவை இல்லமும் இருந்தது. அந்த இடத்தையொட்டி சிறிது தள்ளி கிராமிய வளர்ச்சிப் பல்கலைக்கழகமும் இருந்தது. காந்தி கிராமத்தை அப்பொழுது நிர்வகித்து வந்தவர் டாக்டர். திருமதி சவுந்தரம் ராமச்சந்திரன் ஆவார்கள். மதுரையில் அக்காலத்தில் கோலோச்சி வந்த டி.வி.எஸ் குடும்பத்தின் மகள். மத்திய அரசிலும் அமைச்சராக இருந்தவர்கள்.காந்தீய வழியில் எல்லாம் நடந்து வந்தன

பயிற்சிக்கு வந்தவர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலைகள் தரப்பட்டன. அதிகாலையில் எழுந்து அந்த இடம் முழுவதையும் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளைக் கொட்ட முதலிலேயெ உரக்குழிகள் வெட்டி அதில்தான் போட வேண்டும். இந்தக் குழிகளையும் நாங்கள் தான் ஏற்படுத்த வேண்டும். நீளம் அகலம், ஆழம் எல்லாவற் றிற்கும் ஒர் கணக்கு.

இந்தக் குழிகள் மட்டுமல்ல, கழிப்பறைக்கும் குழிகள் தோண்ட வேண்டும். வார்தா கக்கூஸ் என்று பெயர். குழி தோண்டவிட்டு, இரு நீண்ட அகலமான பலகைகள் குறுக்கே போடப் பட்டு. அது அறையாகித். தட்டிகள் வைத்து மறைக்கப் பட்டிருக்கும். மலம் கழித்த பின் பக்கத்தில் குவித்து வைத்திருக்கும் மண்ணை அள்ளி அதில் போட வேண்டும். இதுதான் எங்கள் கழிப்பறை. மூடப்பட்ட பின் ஆறு மாதங்களில் இது உரமாகிவிடும். குப்பைக் குழிகள், மலக் குழிகள் ஆகிய இடங்களை ஆறு மாதங்கள் கழித்துதோண்டி உரத்தை, அருகில் இருந்த வயல்களில் போட வேண்டியதும் எங்கள் பணி. அக்காலத்தில் நாங்கள் யாரும் முகம் சுளித்தது கிடையாது. சாதி, அந்தஸ்து என்ற பேச்சிற்கு இடமில்லை

காய்கறி வெட்டுவது முதல் பாத்திரம் கழுவும் வரை நாங்கள் தான் வேலை செய்ய வேண்டும். சமையலில் பாத்திரத்தை அடுப்பில் தூக்கி வைத்து இறக்கவும். மாவு ஆட்டவும் பணியாளர்கள் உண்டு. மற்றபடி எல்லாப் பணிகளும் நாங்கள் செய்வோம். இத்தனையும் முடித்துவிட்டு வகுப்பறைக்குச் செல்வோம்.

கிராம வளர்ச்சிக்கு அரசு என்னவெல்லாம் திட்டங்கள் கொண்டு வந்திருந்ததோ எல்லாவற்றையும்பற்றி எங்களுக்கு அடிப்படை

விஷயங்களைக் கற்றுக் கொடுத்தனர். மக்களிடை விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி என்பதால் முதலில் நாங்கள் அவைகளைத் தெரிந்து கொள்ள பயிற்சி அளிக்கப் பட்டது.உதாரணமாக அப்பொழுது விவசாயத்தில் ஜப்பானிய நடவு முறை அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது. அதாவது வயலில் நாத்து, வரிசையாக நட வேண்டும். நாங்களும் வயல்களில் இறங்கி நாத்து நடக் கற்றுக்கொண்டோம்.. இதே போன்று பல துறைகளைப் பற்றி வகுப்புகள் நடத்தியதுடன் நடைமுறைப் பயிற்சிகளும் கற்றுத்தந்தனர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் செல்லவேண்டும் என்பதற்கும் முறைகள் கற்றுத் தரப் பட்டன

(communication skill). படங்கள் வரைவது முதல் பொம்மலாட்டத்திற்கு பொம்மைகள் செய்து அதை இயக்கும் முறைகள் வரை பல கற்றுத்தரப்பட்டன.

பக்கத்து கிராமங்களுக்கு அழைத்துப் போய் தங்க வைப்பார்கள். எந்த வசதியும் எதிர் பார்க்கக் கூடாது. மக்களோடு மக்களாக இருக்கவேண்டும்.

பயின்றதை அங்கே செய்ய வேண்டும். வீடுகளுக்குப் போய் எப்படி பேச வேண்டும், பழக வேண்டும் என்பதும் கற்றுத்தரப் பட்டது.

ஒன்றைக் குறிப்பிட விருன்புகின்றேன். அன்று இப்படி கழிப்பறை வசதிகள் கூட இல்லாத காலத்தில் வாழக் கற்றுக் கொடுத்தது சரி. அது இந்தக் காலத்திலும் அதன்படி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

அதே நேரத்தில் இத்தகைய முறைகளில் பயின்றதால் கிராமங்களில் எங்களால் இயல்பாய்ப் பழக முடிந்தது. கிராமத்தினரும் அவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். மனம் பண்பட கழிப்பறை, உரம் அள்ளுதல் தவிர சிலவற்றிலாவது பயிற்சி முறைகள் தொடர்ந்திருக்கலாம். கல்லுரிகளிலிருந்து நேரடியாக வருபவர்கள் கிராமத்துடன் ஒன்றத் திணறுகின்றனர். பழகினால் தானே நாம் அவர்களுடன் ஒன்றி நாம் நினைக்கும் வழிக்குக் கொண்டு வர முடியும்.

காந்திகிராமத்தில் யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு உண்டு. அதுதான் சர்வோதயப் பிரார்த்தனை. பெரிய ஓலைக் கொட்டகை. மாலையில் அங்கே குறித்த நேரத்தில் போய் . சதுரமாக உட்கார வேண்டும். முன்று பக்கங்களில் பயிற்சியாளர்கள். ஒரு பக்கம் பிரார்த்தனையை வழி நடத்துபவர்கள் இருப்பார்கள். தினமும் ஒரு சொற்பொழிவும் இருக்கும். பேசுகின்றவரும் அங்கே உடக்கர்ந்திருப்பார்.

எல்லாமதங்களிலிருந்ததும் எடுத்துக்காட்டுகள் கூறி, வாழ்க்கையின் நன்னெறிகளைப் பற்றிப் பேசுவார்கள்

இங்கே ஒரு செய்தி கூற விரும்புகின்றேன். பெரும்பாலும் எங்கள் பிரார்த்தனையை வழி நடத்தியவர் செல்வி சியாமளா .அவர்கள் வேறு யாருமல்ல. நாட்டியத் தாரகை செல்வி பத்மா சுப்பிரமணியத்தின் அண்ணியாவார். சியாமளாவிற்கு அப்பொழுது திருமணம் ஆகவில்லை. பின்னர் நாட்டுப் புற இசையில் ஆய்வு செய்தார். கிராமங்களுக்குச் செல்லும் பொழுது ஆய்வில் சிறிது காலம் உடன் சென்றவர் இசைஞானி இளையராஜா அவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கின்றேன். திருமதி சியாமளா பால கிருஷ்ணன் அவர்களின் குரலை எங்களால் மறக்க இயலாது. பாடல்களும் இன்னும் ஒலித்துக் கொண்டிருகின்றது.

வி. வி. சடகோபன் அவர்கள்அப்பொழுது சங்கீத வகுப்பிற்குப் பொறுப்பானவர். அவர் ஒரு சங்கீத மேதை. என்னை எப்பொழுதும் திட்டுவார். காரணம் என் குரலை நான் கெடுத்துக் கொள்கிறேனாம். நான் முறைப்படி சில ஆண்டுகள் கர்நாடக சங்கீதம் கற்றிருந்தேன். ஆனால் சினிமாப் பாட்டுகள் தான் அதிகம் பாடுவேன். அதுவும் பாடகியின் குரலைப் போல் என் குரலை மாற்றி மாற்றிப் பாடுவேன்.ராஜேஸ்வரி என்று ஒரு பாடகர். அவரைப் போல் குழந்தைக் குரலிலும் பாடுவேன். சாதாரணமா ஐந்தரைகட்டை சுதியில் பாடி வந்தவள். மீரா சினிமாப் பாடல்களை அற்புதமாகப் பாடியவள். ஆனால் இப்படி பாட ஆரம்பித்ததால் என் குரல்வளம் போயிற்று. அவர் சொன்னது சரி. அக்காலத்தில் கொஞ்சம் மாற்றிப் பாடினாலும் வித்துவான்களுக்குக் கோபம் வந்துவிடும்.

சங்கீத உலகில் ஜி. என். பி கொஞ்சம் மாறுதலைக் கொண்டு வந்தார். நிறைய விமர்சிக்கப்பட்டார். இசைக்குயில் எம்.எஸ் அவர்களையே இராகத்திற்காக வார்த்தைகளைச் சுத்தமாகப் பாடுவதில்லையென்று கூடப் பேசினர். டி. கே பட்டம்மாள் சுத்தமாகப் படுகின்றார் என்பார்கள். அப்படி பேசுங்காலத்தில் என்னை எப்படி சகித்துக் கொள்வார்கள்.!?

எங்கள் அம்மா ( அப்படித்தான் அழைப்போம் ) காங்கிரஸ் கட்சியில் பெரிய பதவியில் இருந்ததால் அக்காலத்து பல காங்கிரஸ் தலைவர்கள் காந்தி கிராமத்திற்கு வருவார்கள். நேருஜி அவர்கள் வந்த பொழுது பக்கத்தில் நின்று பார்க்க முடிந்தது எங்களுக்குப் பெருமையாக இருந்தது.

என் வாழ்நாளில் காந்திஜியை நேரில் பார்க்க முடியாத குறை இன்னும்

எனக்குள் இருக்கின்றது. அம்மாவின் கணவரின் பெயர் உயர்திரு ராமச்சந்திரன் . அவர் ஆங்கிலத்தில் பேசினால் நாங்கள் அப்படியே வியந்து அவரைப் பார்த்துக் கொண்டு நிற்போம்.. அங்கு இருந்த ஐந்து மாதங்களும் கடுமையான உழைப்பிலும் களிப்பாக வாழ்ந்து வந்தோம். இந்தப் பயிற்சி எங்களை கிராமப் பணியில் சிறப்பாக இருக்க உதவியது. பின்னால் எங்கள் துறைக்கு ஒரு பெரும் சோதனை வந்த பொழுது காந்திகிராமப் பயிற்சி முறைகளைக் கூறிப் போராடினேன்.

இதே போன்ற ஓர் பயிற்சி மையம் கல்லுப் பட்டியில் உயர்திரு குருசாமி அய்யா தலைமையில் இயங்கி வந்தது. ஆனால் காந்திகிராமம் மாதிரி நிறைய பயிற்சிகள் இல்லை. சில பயிற்சிகளே கற்றுக் கொடுக்கப் பட்டன. என் துறையில் அடிக்கடி பல பயிற்சிகள். பல workshopsதிட்டங்கள் வரும். பொதுவாக பயிற்சி என்றால் பெண்கள் போகத் தயங்குவர். நான் தயங்கியதே இல்லை. எனவே நான் பெற்ற பயிற்சிகள் கொஞ்சமல்ல.

எங்கள் பயிற்சி முடியுங்காலத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. பயிற்சிக்கு வரும் முன்னர் எல்லோருமே குறுகிய காலம் ஏதாவது ஒரு வட்டாரத்தில் வேலை பார்த்து விட்டே வந்திருந்தனர். பல கசப்பான செய்திகள், அனுபவங்கள் எங்களில் பலரை உள்ளுக்குள் குழப்பி இருந்தன. பயிற்சியாளர்கள் பொதுப்படையாக கற்றுத்தந்தனர். ஆனால் எங்கள் கேள்விகளுக்கு விடைகள் பாடங்களில் இல்லை. அம்மாவைச் சந்தித்துப் பேசலாம் என்று சிலரிடம் கூறினேன். பெரிய இடத்தில் பேசும் விஷயமா

என்று சிலர் எதிர்க் கருத்து கூறினர். ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். என்னுடன் சிலர் வந்தார்கள்.

எப்பேர்ப்பட்ட சந்திப்பு.

எங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பொறுமையாகப் பதில்கள் கூறினார்கள். சொல்லப் போனால் கேட்காத சில பிரச்சனைகளையும் விளக்கி ,சமுதாயப் பணி செய்யப் போகின்றவர்களின் அணுகுமுறைகள்,

செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டுமென்று சொன்னார்கள்.

அர்ச்சுனனனுக்குக் கிடைத்த துரோணாச்சரியர் போல் எனக்குக் கிடைத்த

வழிகாட்டி அம்மா அவர்கள். அவர்கள் சொன்ன அனைத்தும் கூற முடியாவிட்டாலும் சில குறிப்புகளவது கொடுக்க விரும்புகின்றேன்.

அடுத்த சந்திப்பில் அவைகள் வரும்

அலைகள் மீண்டும் வரும்

No comments: